உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக சனீதா பற்றீசியா ஜெபரட்ணம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள திருச்சபை ஒன்றில் இவரது பதவிப்பிரமாணம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப் பதவியேற்பு நடைபெற்ற போதிலும் ஏற்கனவே உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இன்று 8ம் திகதி பாடசாலை ஆரம்பமாக உள்ள நிலையில் இவ்விரு விடயங்களும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வவுனியா பூங்கா வீதியில் இன்று ( 08.09.2016) காலை 9.45 மணியளவில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வைரவப்புளியங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் மன்னார் வீதியிலிருந்து மின்சாரசபை வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைப்பேசியின் சார்ஜர் வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவனின் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனாவை சேர்ந்த Xiao Zhuo(12) என்ற சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது காட்சிகள் தெளிவாக தெரியாத காரணத்தால் தொலைக்காட்சி வயரினை கழற்றி மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளான்.
அதன்படியே, தொலைக்காட்சி வயரினை கழற்றி கொண்டிருக்கையில், அருகில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைப்பேசியின் சார்ஜர் வெடித்து சிதறியுள்ளது.
இதில், அச்சிறுவனின் வயிறு, முகம் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், இவனது கைவிரல்கள் மோசமாக சேதமடைந்துள்ளது.
அறுவை சிகிச்சையில் இவனது நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன, சார்ஜர் வெடித்ததில் சிறுவனின் 4 விரல்கள் பறிபோய்விட்டதே என அச்சிறுவனின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் நோயாளி ஒருவர் என்னுடைய ஒரு ரூபாயை எனக்கு கொடுத்தே ஆக வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்த சஞ்சய் மாளவியா என்பவர் தன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்று புற நோயாளிகள் பிரிவில் ஒரு ரூபாய் கொடுத்து பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அவசர பிரிவினை நாடியுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படவே தான் செலுத்திய பதிவுக்கட்டணம் ஒரு ரூபாயை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு புறநோயாளி பிரிவு அதிகாரிகள் ஒரு ரூபாய் திருப்பி தர முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மிகுந்த மன வேதனையுடன் இருந்த மாளவியா அப்பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருந்த முதல்வர் அலுவலகத்திற்கு சென்று நடந்ததை கூறி எனக்கு எனது ஒரு ரூபாயை பெற்றுத் தருமாறு புகார் அளித்துள்ளார்.
இதன் பின்பு, புகாரினை ஏற்று கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் ஊழியர்களை, சஸ்பெண்ட் செய்யுமாறு, சுகாதார துறைக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.
இது குறித்து மாளவியா கூறியதாவது, எனக்கு ஒரு ரூபாய் வாங்க வேண்டும் என்பது நோக்கமல்ல. அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார்.
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் இன்று பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய வீரய்யா செல்வமணி என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இன்று காலையில் தோட்ட வேலைக்கு சென்று பகல் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால் பகலுணவிற்காக இவரை தேடிச்சென்ற வேளையிலேயே கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளனர்.
வட கொரியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
வட கொரியாவின் டியூமென் ஆற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் அருகேயுள்ள மியூஸன், ஹோயர்யோங் பகுதிகளும் தொடர் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதுவரையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. 44,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள பகுதிகளில் மக்களைத் தொடர்பு கொள்வது மிகவும் சவாலாக உள்ளதாகவும் தாற்காலிக முகாம்கள், உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை முக்கியத் தேவைகளாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் 9,000 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை, 10,000 ஹெக்டெயர் பரப்பிலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளதாக வட கொரிய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் முதன்முறையாக கடற்கரைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், இராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர்.
ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் செல்வதைக் காட்டிலும் 12 மடங்கு அதிவேகமாக அருகில் சென்று மீட்கும் வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ செயற்படும். இவை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
இந்த ரோபோ தொடர்ந்து 130 கிலோமீ்ட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் சக்திவாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சிவப்பு நிறத்தில் இரப்பர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களை கடலில் சிக்கியவர்கள் எளிதில் அடையாளம் காண முடியும்.
இவை கடலில் தத்தளிப்பவர்களின் அருகில் சென்றவுடன் சிறிய படகுபோன்று விரியும் தன்மையுடையது. இவற்றை தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் மீட்புக் குழுவினர் இயக்க முடியும்.
கடலில் சிக்கியவர்கள் இப்படகில் ஏறியவுடன் கரைக்கு இந்த ரோபோ படகு திரும்பும். இந்த ரோபோ மூலம் ஒரே நேரத்தில் 5 பேரை மீட்க முடியும்.
இராட்சத அலையிலும் செயற்படும் வகையில், ரேடியோ அலைக்கற்றைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை நடத்தினர். இசபெல்லி டினோரி என்ற பெண்ணுக்கு இந்த சிகிச்சை நடத்தப்பட்டது. நாய் கடித்ததால் டினோரியின் முகம் விகாரமாக மாறிப்போனது. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன.
இந்த முகமாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில், பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. நீண்டகாலம் அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை இன்று தான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமாற்று சிகிச்சையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து, பெண்ணொருவரை ஏமாற்றிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் நியூஸிலாந்தில் வசிப்பவர் எனவும், இலங்கை வந்தவேளையே இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்றையதினம் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் இவரை ஆஜர்படுத்தியவேளை நாளை வரை (08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தினம் தினம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான குற்றம் இழைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த விஷேட பயிற்சி அளிக்கப்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பச்சூரை சேர்ந்தவர் ஞானசேகரன். காரைக்காலில் உள்ள ஒரு பிரபல வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்தியப்பிரியா என்கிற சனா (வயது 27). இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது அவருடன் படித்த நைஜீரியாவை சேர்ந்த இப்ராகிம் இசாக்குடன் (32) பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
முதலில் நண்பர்களாக பழகி வந்த அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் பச்சைக்கொடி காட்டினர். அதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன.
நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகள் பச்சைநிற பட்டுப்புடவையும், மணமகன் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். இந்து முறைப்படி மணமகளின் கழுத்தில் அவர் தாலிகட்டினார்.
இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மணமகன் இப்ராகிம் இசாக், நைஜீரியாவில் உள்ள கடுவா சாங்கோ சமாரு சாரியாவை சேர்ந்தவர். இவரது தந்தை பால்பிண்டார் இசாக், அங்குள்ள அகமதுபெல்லோ பல்கலைக்கழகத்தில் பேரா சிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் மைமூனா இசாக், அங்குள்ள ராணுவ கல்லூரியில் நூலகராக உள்ளார்.
மணமகன் இப்ராகிம் இசாக் நைஜீரியாவில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். மணமகள் சத்தியப் பிரியா காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். திருமண விழாவில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.
குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் மீது எதற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் குருணாகல் பகுதியில் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது வீதியில் இருந்த யாசகர் ஒருவர் தனக்கு பண உதவி செய்யுமாறு குறித்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண் யாசக கேட்ட நபர் மீது எச்சில் துப்பி தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை அவதானித்த சில இளைஞர்களே இவ்வாறு யுவதியின் மீதும் அவருடைய காதலன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நடுவீதியில் பெண்ணொருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டமைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிவந்தவாறு உள்ளன.
வவுனியாவில் இன்று(07.09.2016) காலை பத்தினியார்குளம் கமக்கார அமைப்புக்கள், விவசாயிகள் இணைந்து பேராறு குடிநீர் விநியோகத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு உறுதியளிக்கப்பட்ட வயல் காணிகளை வழங்கக்கோரி வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்று வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை மகஜரினை கையளித்தனர்.
இத் திட்டத்திற்கு 167 ஏக்கர் வயல்க் காணி சுவீகரிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தினால் கடந்த 2013ம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட நிலையில் தமக்கு மாற்று வயல் காணிகள் ஒருவருடத்திற்குள் வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டதுடன், கமக்கார அமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
எனினும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து கமக்கார அமைப்பு, விவசாயிகள் இணைந்து மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், தமது கோரிக்கை மனுவினையும் கையளித்தனர்.
மனுவினைப் பெற்றுக் கொண்ட அரச அதிபர் இன்று மாலைக்குள் கமக்கார அமைப்பின் கோரிக்கைக்கு பதில் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.
இப்பேரணியில் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தானேயில் இந்து முதியவரின் இறுதிச்சடங்கை முஸ்லிம் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானே மாவட்டத்தில் தனது மனைவியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த வாமன் கடம் என்ற 65 வயது முதியவர் நேற்று காலமானார்.
அவரது மனைவி அடக்கம் செய்ய பொருளாதார வசதியும், ஆள் உதவியுமின்றி கண்ணீரில் தத்தளித்துள்ளார்.
இதை கேள்விப்பட்ட மும்ப்ரா பகுதியை சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள், தங்களது கைப்பணத்தை செலவிட்டு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து உதவி உள்ளனர்.
மேலும் பிணத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சுடுகாடு வரை கொண்டு சென்று தகனம் செய்துள்ளனர்.
இதுதொடர்பான தகவல் வெளியானதும் மும்ப்ரா- கால்வா பகுதி எம்.எல்.ஏ.வான ஜித்தேந்திரா அவ்ஹாத் என்பவர் இந்த செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.