ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிர் தப்பிய விமானி, 12 மணித்தியாலங்கள் மரமொன்றில் தங்கியிருந்துள்ளார்.
ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு கிழக்கே 30 கிலோமீற்றர் தொலைவில் மரங்கள் அடர்ந்த பகுதியொன்றில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறிய விமானமொன்று வீழ்ந்தது.
இச்சம்பவத்தில் விமானி உயிர் தப்பினார். எனினும், விமானத்துடன் அவர் மரங்களுக்கிடையில் சிக்கிக்கொண்டார். தரையிலிருந்து சுமார் 30 மீற்றர் (98 அடி) உயரத்திலுள்ள மரத்தில் இவ்விமானி இருந்தார்.
இரவு நேரத்தில் அவரை கீழே இறக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது, அவர் தரையில் வீழ்ந்து விடக்கூடிய ஆபத்து இருந்தது. எனவே, விடியும் வரை மீட்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் சுமார் 12 மணித்தியாலங்கள் மரத்தின் மேலேயே தங்கியிருந்தார் இவ்விமானி.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. 118 தரவரிசைப் புள்ளிகளுடன் இலங்கையுடனான டெஸ்ட் தொடரைத் தொடங்கிய அவுஸ்திரேலியா 0-3 என தொடரை இழந்தது.
இதையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி, 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு சென்றது. இதனால் 112 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
அவுஸ்திரேலிய அணியின் தோல்வி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ததால் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியது.
அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி வெற்றிபெறாவிட்டால் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறும்.
இலங்கை அணியைப் பொருத்தவரை, 85 தரவரிசைப் புள்ளிகளுடன் இந்த தொடரைத் தொடங்கியது. 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவை வென்றதால் தற்போது 95 புள்ளிகளுடன் தென்னாபிரிக்காவை முந்தி 6வது இடத்தைப் பிடித்தது.
நமக்கு நாமே பயணம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியிட்ட விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சட்டசபையில் இன்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் பற்றி பேசினார். அவர் கூறுகையில், “நமக்கு நாமே” பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க. துணை தலைவர் துரைமுருகன் எழுந்து, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சபாநாயகர் அதை ஏற்க மறுத்து விட்டார். யார் பெயரையும் குறிப்பிட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசாததால் அவர் பேசியதை நீக்க வேண்டியதில்லை என்றார்.
இதனால் தி.மு.க.வினர் மேலும் ஆவேசம் அடைந்தனர். துரைமுருகன் கூறுகையில், “நமக்கு நாமே” என்ற ஒரு திட்டத்தை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தவர் எங்கள் தலைவர். எனவே அவர் பெயரை குறிப்பிடாமல் பேசினாலும் அது அவரைத்தான் குறிக்கும்.
எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதை அனுமதித்தால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இது போல பேசுவார்கள். சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இப்படி நடந்து கொண்டால் சபையின் நேரம்தான் வீணாகும் என்றார்.
சபாநாயகர்:- யார் பெயரையும் குறிப்பிட்டு ஒருமையில் சொல்லி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் அவர் அப்படி பேசவில்லை.
(இவ்வாறு விவாதம் காரசாரமாக நடந்தபோது சட்டசபைக்குள் மு.க.ஸ்டாலின் வேகமாக வந்தார்)
மு.க.ஸ்டாலின்:- நமக்கு நாமே திட்டம் பற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதற்கு உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால் இந்த பயணம் தமிழ்நாடு முழுவதும் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
(இவ்வாறு கூறி விட்டு முன்பு முதலமைச்சர் இதுபற்றி பேசியது பற்றியும் ஸ்டாலின் உதாரணத்துக்கு குறிப்பிட்டார்)
சபாநாயகர்:- முதலமைச்சர் பற்றி மு.க. ஸ்டாலின் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. முதலமைச்சர் அவ்வாறு பேசவில்லை.
ஓபன்னீர்செல்வம்:- தேவை இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி உள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசியது எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
சபாநாயகர் :- எதிர்க்கட்சி தலைவர் முதல்-அமைச்சர் பற்றி பேசியதை இங்கு பதிவு செய்ய முடியாது.
உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து சபாநாயகருக்கு எதிராக உரக்க கோஷம் போட்டனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச வாய்ப்பு கேட்டனர்.
ஆனால் சபாநாயகர் யாருக்கும் பேச வாய்ப்பு தர முடியாது என்றார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் உட்காராமல் நின்று கொண்டே கோஷமிட்டனர்.
இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
ஆனாலும் சபை காவலர்கள் நான்கு புற வாசல் வழியாக சபைக்குள் திபு.. திபு…வென வந்தனர். முதலில் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கினார்கள்.
இதை கண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். அப்போது யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி சபை காவலர்கள் மீது வீசினார்.
காவலர்களின் தொப்பியையும் பறித்து வீசினார்கள். இதனால் சபை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
என்றாலும் சபை காவலர்கள் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி சபைக்கு வெளியில் கொண்டு வந்தனர். பிறகு தரையில் ஸ்டாலினை உட்கார வைத்தனர்.
அதன் பிறகு துரைமுருகனையும் குண்டுகட்டாக தூக்கி வந்து ஸ்டாலின் அருகே இறக்கி வைத்தனர். இப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றினார்கள்.
இதனால் சபை முழுவதும் பரபரப்பு நிலவியது.
அவைக்காவலர்கள் வெளியேற்ற தொடங்கியதும் அவையில் இருந்த தி.மு.க உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் வெளியேற மறுத்தனர். அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்கள் முயற்சி செய்தனர்.
அப்போது துணைத்தலைவர் துரைமுருகன் நெஞ்சை பிடித்தபடி இருக்கையில் சரிந்து உட்கார்ந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். இருக்கையில் சிறிது நேரம் சாய்ந்து படுத்து இருந்தார்.
உள்ளே இருந்த தி.மு.க.வினர் தொடர்ந்து அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினரையும், காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள்.
வெளியே வந்த தி.மு.க உறுப்பினர்கள் ‘காப்பாற்று… காப்பாற்று …ஜனநாயகத்தை காப்பாற்று’ என்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதன்பிறகு அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்டு செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று சபை நடவடிக்கைகள் முடிவடைவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விவாதத்துக்கு நாளை பதில் அளிப்பார்கள் என்றும் அறிவித்தார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான ஒரு பெண் போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைபாடு அளித்துள்ளார்.நித்திரையில் நான் இருந்த போது பெரிய உருவம் கொண்ட போக்கிமோன் என்மீது படுத்திருந்ததை உணர்ந்தேன். உடனடியாக நான் துள்ளி குதித்து கட்டிலில் இருந்து இறங்கியதும் அது மறைந்து விட்டது.
இருப்பினும், எனது படுக்கை அறைக்குள் போக்கிமோன் கதாபாத்திரங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை எனது கைப்பேசியின் மூலம் என்னால் பார்க்க முடிகிறது என அந்தப் பெண் தனது முறைப்பாட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அமலா பால் மைனா படத்திற்கு பிறகு செம்ம பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து இயக்குனர் விஜய்யையும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டார்.இந்நிலையில் இவரின் நடிப்பு ஆசையால் விவாகரத்து வரை சென்றது எல்லாம் பழைய கதை, இதனால், பல இயக்குனர்கள் இவரை ஒதுக்குகிறார்கள் என்பதும் நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
தற்போது இவரின் ஒரே ஆறுதல் வடசென்னை படம் மட்டும் தானாம், இதை தவிர இவர் கையில் வேறு எந்த படங்களுமே இல்லை என்பது தான் உண்மை.
பிரபல நடிகையான ராதாவின் மகளாக சினிமாவில் நுழைந்தவர் கார்த்திகா. கே.வி. ஆனந்த் அவர்களின் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஆனால் எல்லா மொழிகளிலும் ஒன்று, இரண்டு படங்களை நடித்த அவருக்கு இப்போது பட வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.இனி பட வாய்ப்புகள் கிடைக்காது என்று முடிவு செய்த கார்த்திகா, ஹிந்தி மெகா சீரியலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் 5 வயது சிறுவன் பசி மிகுதியால் தனது கரடி பொம்மையை விற்பனை செய்வதற்காக சாலையில் நடந்து செல்பவர்களிடம் அதனை வாங்கிகொள்ளுமாறு கேட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகியோ மாகாணத்தில் உள்ள சுரங்கப்பாதையில் நின்றுகொண்டு 5 வயது சிறுவன் ஒருவன் தனது கரடி பொம்மையை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளான். னால், சாலையில் நடந்துசென்றவர்கள் யாரும் அந்த கரடி பொம்மையை வாங்கவில்லை, இந்நிலையில் அந்த பாதையில் நடந்து வந்துகொண்டிருந்த Steve Dunham என்ற பொலிஸ் அதிகாரி அச்சிறுவனை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என சத்தமிட்டுள்ளார்.
அதற்கு அச்சிறுவன், எனக்கு மிகவும் பசிக்கிறது, அதனால் எனது கரடி பொம்மையை விற்று உணவு வாங்கப்போகிறேன் என கூறியுள்ளான். இதனைக்கேட்டு பரிதாபப்பட்ட பொலிஸ், அச்சிறுவனை அருகில் உள்ள கடைக்கு அழைதது சென்று உணவு வாங்கிகொடுத்துள்ளார்.அதன் பின்னர் அச்சிறுவனை அவனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார், அங்கு சென்றவர் சிறுவனின் வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வீடு மிகவும் குப்பைகள் நிறைந்தும், ஆல்கஹால் பாட்டில்கள் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்களில் பூனைகள் சிறுநீர் கழித்தும் வைத்துள்ளது.
இதுகுறித்து அச்சிறுவனின் தாயாரிடம் விசாரித்ததில், எனது குழந்தைகளை நன்றாக தான் பார்த்துக்கொள்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார், ஆனால் இதனை காதில் வாங்கிகொள்ளாத பொலிஸ் , காவல் நிலையம் வந்து உங்கள் விளக்கத்தை தெரிவியுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார்.இதனால் கோபம் கொண்ட அத்தாயார், Franklin காவல் துறையின் முகநூல் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது மகன் தனது சகோதரர்களுடன் விளையாடுவற்காக வெளியில் செல்வான், அதுபோன்று தான் இப்போதும் சென்றுள்ளான், மேலும் எனது மகன்களுக்கு உணவு கொடுக்காமல் வளர்க்கவில்லை, பொலிசார் என்மீது அபாண்டமாக பழிபோட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர், தற்போது இக்குழந்தைகள் அனைவரையும் Warren குழந்தைகள் நல மையம், இக்குழந்தைகளின் உறவினர்கள் வீட்டில் ஒப்படைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை இத்தம்பதியினர் குழந்தைகளை சந்திக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புகையும் பொங்கும் நுரையுமாக பலத்த ஓசையுடன் கொட்டிக்கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி, திடீரென உறைந்து பனிக்கட்டியானால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு காட்சியை கற்பனை செய்துதான் பார்க்க முடியும் அல்லவா? ஆனால், நிஜத்திலே சீனாவில் நடந்திருக்கிறது. படங்களுடன் வெளியாகி இருக்கும் இந்த அற்புதமான இயற்கை தரிசனம், வடக்கு சீனாவில், ஹெபாய் மாகாணத்தில் உள்ள, தாய்ஹாங் மலை அருவியில்தான்.
இந்த மலை அருவியின் வெப்பநிலை -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை குறைந்துவிடுவதால், தொடர்ந்து கொட்டும் அருவியானது, அப்படியே உறைந்து, நீர் கொட்டுகிற நிலையிலே வெண்பனி கீற்றுகளாக நிற்கிறது. இது ஜனவரி மாதத்தில் சில நாட்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த கொள்ளை அழகை தரிசிக்க, சுற்றுலாப் பயணிகள் மொய்த்து வருகின்றனர். இது அருவியாக விழும் நாட்களைவிட, உறைந்து காணப்படும் நாட்களிலே பார்வையாளர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
அருவியில் குளிக்க முடியவில்லையே என்ற கவலைக்குப் பதிலாக உறைந்திருக்கும் காட்சியை புதிய இயற்கை வடிவமாக பார்க்கின்றனர். மலைமீது நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சலுக்குப் பதிலாக பேரமைதி நிலவுவதையும் மக்கள் ரசிக்கின்றனர்.மலைமீது பொங்கி பளிச்சிடும் வெண்பனி போலவே, பார்ப்பவர்கள் முகமும் மகிழ்ச்சியில் மாறுகிறது என்றால் அது மிகை அல்ல.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான குஷல் சில்வா (0), திமுத் கருணாரத்ன (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அத்துடன் தொடர்ந்து ஆடுகளம் வந்த குஷல் பெரேரா (16), குஷல் மென்டிஸ் (1), மெத்தியூஸ் (1) ஆகியோரும் அவ்வளவாக சோபிக்கவில்லை.
எனினும், பின்னர் ஜோடி சேர்ந்த தினேஸ் சந்திமால் (132 ஓட்டங்கள்) மற்றும் தனஞ்சயடி சில்வா (129) ஆகியோர் சதமடித்து அசத்தியதோடு, இலங்கையை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், பின் வந்த வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறமுடியாது அடுத்தடுத்து வௌியேற, இலங்கை அணி 355 ஓட்டங்களைப் பெற்ற வேளை சகல விக்கெட்டுக்களையும் இழந்து, தனது முதலாவது இன்னிங்சை நிறைவு செய்தது.
அவுஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிச்சல் ஸ்ராக் 5 விக்கெட்டுக்களையும் நாதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு, டேவிட் வோனர் 11 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அடுத்ததாக களத்தில் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மார்ஷ்சுடன் ஸ்டீவன் சுமித் கைகோர்த்தார்.
நிலைத்து ஆடிய இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை திணறடித்தது.
மார்ஷ் 130 ஓட்டங்களையும் ஸ்மித் 119 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, இன்றைய மூன்றாம் நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த ஆஸி. 379 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை சார்பில் அபாரமாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 24 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்க இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.
அந்த அணி சார்பில் குஷல் சில்வா அதிக பட்சமாக 115 ஓட்டங்களை விளாசினார்.
இந்தநிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, தனது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஆட வாய்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து 324 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோனர் மாத்திரம் சிறப்பாக ஆடி 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் சற்று முன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்த ஆஸி அணி 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன்படி 163 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 7 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.
இன்றய போட்டி மற்றும் தொடரின் ஆட்டநாயகனாக ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி முதல் முறையாக அவுஸ்திரேலிய அணியை வயிட் வோஷ் முறையில் தோற்கடித்தமை சிறப்பம்சமாகும்.
வவுனியா மன்னார் வீதியில் இன்று (17.08.2016) மதியம் 12.30 மணியளவில் முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கில் விபத்து ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மன்னார் வீதியில் அமைந்து பிரதேச செயலகத்திற்கு அருகே தரித்து நின்ற முச்சக்கரவண்டி வீதிக்கு ஏற முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளனாது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.
இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சோம்பேறிகள் என ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.
இவர்கள் சராசரி நாளாந்தம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு நான்கு காரணங்களை முன்வைப்பதாகவும் குறித்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எல்.எம்.ஆர்.பீ என்ற இலங்கை மர்கட் ஆய்வு பியுரோ நிறுவனமே இந்த ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதில் 80 வீதமானோர் நேரமின்மையால் தினசரி கடமைகளை செய்ய தவறுவதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளதுடன், 45 வீதமானோர் பயம், குறித்த காரியத்தை தம்மால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியுமோ என்ற சந்தேகத்தினால் செய்யாமல் இருப்பதாகவும் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த வேலைகளை செய்ய முயற்சித்து தோல்வியடைந்தோர் 38 வீதமும், குறித்த நாளாந்த கடமையை அல்லது வேலையை செய்வதற்கு தெரியாதவர்கள் 26 வீதம் என்றும் குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(17.08.2016) காலை ஆரம்பமானது.
செயலணிக் குழுவின் முன் ஆஜராகிய பொதுமக்கள் தமது குறைபாடுகளை வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் வெளியிட்டதுடன், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
செயலணியின் அமர்வு இன்று ( 17.08.2016) காலை 8:30 தொடக்கம் மாலை 4.30 மணிவரை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியா நெற் செய்திகளுக்காக வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் படி குறித்த மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தி செல்லப்பட்டார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டனர்.
இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பட்ட நிலையில் அதிலிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கடத்தப்பட்ட யுவதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிராதான சந்தேகநபர் இந்த வாகனத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்ட யுவதியையும் பிரதான சந்தேக நபரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் 25 பாதுகாப்புக் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாளை இடம்பெறவுள்ள மஞ்சள் திருவிழாவிலிருந்து விஷேட திருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகின்றனர். எனினும், ஆலயத்திற்கு திருடர்களும் வருகைத் தருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்களுக்காக 500 பொலிஸார் கடமையில் ஈடுப்டுத்தப்பட்டுள்ள நிலையில் 25 பாதுகாப்பு கண்காணிப்புக் கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்று அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரை ஆலயச் சூழலில் பாதுகாப்புப் பலப்படுத்தபட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மடுவில் இருந்து பெரிய மடு ஊடாக கிளிநொச்சிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் காட்டு யானைகள் மத்தியில் மாட்டிக்கொண்டனர்.
எனினும் பெரிய மடுவைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கர வண்டி பெரிய மடுவை அண்மித்த போது, முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை சீர்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது எதிர்பாராத விதமாக காட்டு யானைகள் கூட்டமாக, முச்சக்கர வண்டியை நோக்கி படையெடுத்தது. இதனை அவதானித்த அவர்கள் பெரிய மடுவை அண்மித்த பகுதியை நோக்கி ஓட்டமெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முச்சக்கர வண்டியை சீர்செய்து அந்த குடும்பத்தை கிளிநொச்சி அனுப்பி வைத்துள்ளனர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 21ம் திகதி தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட உள்ளது.
தேசிய பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உத்தேச பரீட்சை வினாத்தாள் அச்சிடல், விநியோகம் செய்தல், அது குறித்து கலந்துரையாடுதல், வகுப்பு நடாத்துதல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடையை மீறுவோர் தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 1911க்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 0112421111 என்ற இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.