வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 11ல் கல்விகற்கும் மாணவி செல்வி சங்கவி கனகரட்ணம் 09.07.2016 அன்று கல்வி அமைச்சு, இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் வட மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (Print Script Writing ) போட்டியில் தரம் 11ல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது .
இவர் பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலைஅதிபர் திருமதி.க.பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும், வலயக்கல்விப் பணிப்பாளர்
திருமதி. S.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இவர் ந.கணகரட்ணம் (ஆசிரியர்), திருமதி, க. யசோதா (ஆசிரியர்) ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும்.
நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதேநேரம், அதிகமாகச் சாப்பிடுவது, மூளையின் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்கு வழிவகுக்கும்.
புகை பிடிப்பது, மூளை சுருங்கவும், அல்சைமர் வியாதி ஏற்படவும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவது, புரதம் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு போதுமான அளவு ஒட்சிசன் கிடைக்காவிட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாதபோது, மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. போதுமான அளவு தூங்காமல் இருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு தூங்கினால் போர்வைக்குள் கார்பன்டையொக்சடை் அதிகரிக்கும். சுவாசிக்கும் ஒட்சிசன் அளவு குறையும்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும். உடல்நிலை சரியான பிறகு மூளைக்கு வேலை கொடுப்பதே நல்லது.
உலகபுகழ் பெற்ற சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு அவற்றிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் இந்த குழுவினரால் ஆராயப்படவுள்ளது.
இதனை அடுத்து ஓவியங்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள் தொடர்பில் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தொல்பொருளியல் திணைக்களம் கூறியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்வி மற்றும் விசேட ஆற்றல்களை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள புதிய தொடர்மாடிக் கட்டிடங்களில் வசிக்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்கள் தொடர்பில் இதன் முதற்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் 10,000 இற்கும் அதிகமான மாணவர்கள் காணப்படுவதாக இந்த செயற்றிட்டத்தின் ஆலோசகர் சுனிமல் ஜனரஞ்சன குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாணவர்களை இலக்கு வைத்து பல செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுனிமல் ஜனரஞ்சன தெரிவித்துள்ளார்.
நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் வசமுள்ள வட்ஸ் அப் தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்ட் செய்து 3வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என அப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வட்ஸ் அப்பில் உரையாடல்களை நாம் அழித்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது ‘Clear all chats’ மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது.
அதை 3வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து ‘வட்ஸ் அப் ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் வட்ஸ் அப் உரையாடல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவைச் சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்ற Samia, மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர், இரண்டாவது கணவருக்கு தகவல் தெரிவித்தோடு மட்டுமல்லால், உடற்கூறு சிகிச்சையை செய்து முடித்த பின்னர் அவளது உடலையும் அடக்கம் செய்துள்ளனர்.
இதனை அறிந்த Kazam, எனது மனைவியின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது, அவளை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளனர், ஏனெனில் எங்களது திருமணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படியாவது அவர்களது மகள் என்னைவிட்டு பிரிந்து, தங்களிடம் வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர், ஆனால் இது நடக்கவில்லை, இதனால் கோபம்கொண்ட அவர்கள் அவளை கௌரவ கொலை செய்துள்ளனர் என்று பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், உடற்கூறு பரிசோதனையில் Samia கழுத்தில் 7.2 இன்ச் அளவுக்கு காயம் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி அவரது வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனையை பார்த்த பின்னர் கூட பொலிசார், Samia- யின் குடும்பத்தினரிடம் சிறு விசாரணையை நடத்திவிட்டு, அவர்கள் குடும்பத்தார் சொல்வது போன்று இது இயற்கையான மரணம் தான் எனக்கூறி இந்த விசாரணையை முடித்துள்ளனர்.
ஆனால், தனது மனைவியின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது எனக்கூறிய Kazam, உடற்கூறு பரிசோதனையை ஊடகங்களுக்கு காட்டியதோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என புகார் அளித்ததையடுத்து பாகிஸ்தான் துப்பறியும் துறை இந்த மரணம் தொடர்பான விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையில், உடற்கூறு பரிசோதனையில் Samia தாக்கப்பட்டதற்கான ஆதாரத்தினை அடிப்படையாக கொண்டு, Samiaவின் தந்தை மற்றும் அவரது முதல் கணவரை பொலிசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இதில், Samia வின் முதல் கணவர் Mohammed Shakeel தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
தனது மனைவியின் இறப்பு குறித்து Kazam கூறியதாவது, அவளை அளவுக்கு அதிகமாக நேசித்த எனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, அவள் இல்லாத வாழ்க்கையால் துவண்டு போயுள்ளேன், அந்த வலியினை விவரிப்பதற்கு கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அவளுக்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு போராடுகிறேன் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் கௌரவ கொலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் நெவில் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஓகீபே ஆகிய இருவரும் சேர்ந்து இலங்கை அணியின் வெற்றிக்கு தடை கல்லாக இருந்தனர்.
அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து தோற்கும் தருவாயில் இருந்தது.அப்போது 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நெவில்,கீபே ஆட்டத்தை சமநிலை செய்யும் நோக்கில் விளையாடிவந்தனர்.
இவர்கள் இருவரும் தொடர்ந்து 22 ஓவர்களில், ஓட்டம் எதும் எடுக்காமல் களத்தில் விளையாடி வந்தனர். நெவி 115 பந்துகள் சந்தித்து 9 ஓட்டங்கள் மட்டும் எடுத்து டி சில்வாவின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார்.
இவருக்கு சிறப்பாக துணைகொடுத்து ஆடிய ஓகீபே ஹெராத் பந்து வீச்சில் அட்டமிழந்தார்.இவர் 98 பந்துகள் சந்தித்து 4 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.
இந்த ஜோடி 178 பந்துகள் சந்தித்து 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தவுடன் இலங்கை அணி வெற்றி பெற்றது.
மேலும் அவுஸ்திரேலிய அணியினர் 63 வது ஓவரிலிருந்து 88.3 ஒவர் வரை ஒரு ஓட்டங்கள் கூட எடுக்கவில்லை.
இதனால் அவுஸ்திரேலியா அணி 154 பந்துகள் சந்தித்து ஒரு ஓட்டங்கள் கூட எடுக்காமல் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், அம்லா ஆகிய இருவரும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 253 பந்துகள் சந்தித்து 27 ஓட்டங்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடியா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவின் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்ராக் – 8, பலாசோர் 7, குர்தா 6, ஜெய்பூர் 3, நயகரா 2, கேந்த்ரபாரா, சம்பல் பூர், கோயின்ஹார் மற்றும் மயூர் பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசும் ஓடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. ஆனால் இந்த படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வாக்குவாதம் முற்றி திருச்சி சிவாவின் கன்னத்தில் சரமாரியாக சசிகலா புஷ்பா அடிக்கும் நிலை வரை சென்றுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தனர்.
சசிகலா புஷ்பா கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் விமர்சித்தாலும் தமக்கு கோபம் வரும் என்றார். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றவர், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
தி.மு.க, எம்.பி. திருச்சி சிவா அ.தி.மு.க., ஆட்சி குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் தவறாக விமர்சி்த்தார். அதனால் அவர் கன்னத்தில் அறைந்தேன். அதில் அவர் கழுத்து செயின் அறுந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், சசி்கலா புஷ்பா என்னை காரணம் இன்றி திடீரென தாக்கினார். என் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. எதற்காக கைகலப்பில் ஈடுபட்டார் என புரியவில்லை என அவர் கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் முன்னிலையில் தமிழக எம்.பி.க்கள் மோதலில் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது இது குறித்து அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை.
இதனை கடைப்பிடிப்போர் அன்றைய தினம் உணவை சுருக்கி கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள நகுலேஸ்வரர் ஆலயத்திலும் அதற்கு அருகில் தற்போது விடுவிக்கப்படாமல் உள்ள பாதாள கங்கை எனப்படும் ஆதி நகுலநாதன் ஆலயம் அமைந்திருந்த திருத்தம்பேஸ்வரத்திலும், சடையம்மா மட புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் ஈழத்து திருச்செந்தூர், உச்சிப்பிள்ளையார், கிருஸ்ணன்கோவில் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொள்வது தொன்று தொட்டு வரும் வழமையாகும்.
கீரிமலைப் பகுதியில் தற்போது பல இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சில மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட ஆலயங்களில் சைவ மக்கள் தமது புனித கடமையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை நிலைநாட்டும் கொள்கையுடைய இந்த அரசு குறித்த விடயம் தொடர்பாக சாதகமான நிலைப்பட்டை மேற்கொள்ளுமாறு சைவ மதத்தவர் சார்பாக வேண்டுகிறோம் என்றுள்ளது.
அம்பாறை – தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (30.07) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கிடையே சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கணவன் வேறு பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்குக் காரணம்.
இதன்படி மோதல் முற்றிய நிலையில் கோவம் கொண்ட மனைவி வீட்டில் உள்ள கோடாரியை எடுத்து கணவனின் மீது தாக்கியதில், அவரின் கழுத்து மற்றும் தலையில் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுமார் 2500 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த காலப்பகுதியில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
சேறு மற்றும் நீர் நிலைகளை அண்மித்து தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எலிக் காய்ச்சல் காரணமாக சிலருக்கு நுரையீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் டொக்டர் பபா பலிஹவடன மேலும் கூறினார்.
நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களில் 25 வீதமானவர்கள் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளை பெறுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் HIV தொற்றுக்குள்ளான 4200 பேர் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 128 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் 39 மில்லியன் பேர் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு 25 இலட்சமானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகுவதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 79 நாடுகளில் HIV தொற்று பரவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்நான்காம்நாளானநேற்று(30.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து காமதேனு வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல் பந்தவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
86 ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 353 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்துடன் 176 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
268 ஒட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவி கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்மித் 55 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் ஹேரத் 5 விக்கட்டுகளையும், சந்தகன் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக குசால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
அதிவேகமாக யாழ் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சற்று முன்பு ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டு அருகிலுள்ள பற்றைக்காணிக்குள் பாய்ந்து போய் நிற்கிறது.
உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கான காரணத்தை பொலிசார் சம்பவ இடத்திலிருந்து விசாரித்தும் வருகின்றனர்.