தெலுங்கு பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், ஆலி. இவர் அடிக்கடி நடிகைகளை பற்றி வர்ணித்து, பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம். நடிகைகளின் அங்க அசைவுகள் பற்றி ஆலி வர்ணனை செய்து, அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்கள், தெலுங்கு பட உலக நிகழ்ச்சிகளில் ஏற்கனவே நடந்துள்ளன.
ஒரு பட விழாவில் அவர், நடிகை சமந்தா பற்றி வர்ணனை செய்தபோது, அவரை சமந்தா நேரடியாகவே எச்சரித்தார். இதேபோல், அனுஷ்கா பற்றி ஆபாசமாக பேசி, ஆலி பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சைஸ் ஜீரோ’ பாடல் வெளியீட்டு விழாவில் இந்த சம்பவம் நடந்தது. அந்த விழாவில் ஆலி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பில்லா (தெலுங்கு) படத்தில் இருந்தே நான் அனுஷ்காவின் கால்களுக்கு ரசிகர். சோனல் சவுகான் தொடைகளை விட, அனுஷ்காவின் தொடைகள் அழகானவை’’ என்று அவர் கூறினார்.
இவ்வாறு அவர் பேசும்போது, அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். சபை நாகரீகம் கருதி அனுஷ்காவும் புன்னகைத்தார். ஆனால் விழா முடிந்ததும் அவர், நடிகர் ராணாவை சந்தித்து ஆலி மீது புகார் செய்தார். உடனே ராணா, ஆலியை அழைத்து எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது. ‘‘இனிமேல் நடிகைகள் பற்றி வர்ணித்து இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடாது’’ என்று ஆலியிடம், ராணா எச்சரித்ததாக தெரிகிறது.
அனுஷ்காவின் கால்களை பற்றி ஆலி வர்ணனை செய்ததும், அவரை ராணா அழைத்து எச்சரித்ததும், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகளும் ஆலியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், இதுபற்றி ஆலியின் மனைவி சுபைதா கூறும்போது, ‘‘என் கணவர் ஆலி நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். அவர், அருகில் அமர்ந்திருப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று விரும்புபவர். நகைச்சுவை உணர்வுடன்தான் அவர் பேசியிருக்கிறார். அதை தமாசாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், அனுஷ்காவின் கால்கள் பற்றி பேசியதற்கு ஆலி மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ‘‘ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அப்படி பேசினேன். தவறான நோக்கத்தில் பேசவில்லை. என்றாலும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நடிகைகள் பற்றி இவ்வாறு பேச மாட்டேன்’’ என்று நடிகர் ஆலி கூறியிருக்கிறார்.