ரஷ்யாவின் பயணிகள் விமானம், கடந்த மூன்று நாட்களுக்கு முன், எகிப்தின் சினாய் பகுதியில், மர்மமான முறையில், நொறுங்கி விழுந்தது.
அதில் பயணித்த, 224 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த விமானத்தை தங்கள் அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ் அமைப்பு அறிவித்தது.
எனினும் ரஷ்யா இதனை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஐ.எஸ். அமைப்பிடம் கிடையாது என்று ரஷ்யா கூறியது.
இந்த நிலையில் ரஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதரத்தை ஐ.எஸ். அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. எனினும் இந்த வீடியோ ஆதாரத்தையும் ரஷ்யா ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆதாரம் போலியானது மட்டுமல்ல, நகைப்புக்குரியதும்கூட என ரஷ்யா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வவுனியா உயர் தொழிநுட்பவியல் மாணவர்கள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்த மாணவர்கள், ஜனநாயக நாட்டு அரசே மாணவர்களை தண்டிப்பதுதான் நல்லாட்சியா? உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவை பட்டபடிப்புக்குரிய சமத்துவத்தை கொடு! போன்ற சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 80 சதவீதமானவை போலியான முகநூல் பக்கங்கள் தொடர்பானது எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் புகைப்படங்களை முகநூலில் தரவேற்றும் போது, தெரிந்த நண்பர்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளுமாறும், இதுவே பாதுகாப்பான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் இலங்கையில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாகவே பதியப்பட்டு வருகின்றது. குறிப்பாக பெண்கள், இவ்விடயத்தில் சற்று அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்டும் கிரிகைகள் நேற்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குருக்கள் திரு.கிஸ்ணபவன், பரிபாலனசபை தலைவர் திரு.இ.குகதாசன், திரு.இ.சபேசன், திரு.கு.மகேந்திரன் மற்றும் பக்த்த அடியார்களும் கலந்து ஆரம்பித்து வைத்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய துணைத்தூதுவர், யாழ்ப்பாண அலுவலகர் திரு.ஆ.நடராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், சி.சிவமோகன், வடமாகணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன், கரைதுரைப்பற்று பிரதேச செயளாளர் திரு.தினேஸ்குமார், அரசாங்க அதிபர் பிரதிநிதி திருமதி பவாணி, திட்டப்பணிப்பாளர் கச்சேரி முல்லைத்தீவு திருமதி உ.முனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் முந்தியடித்துக் கொண்டு தங்கத்தை போட்டு அடிக்கல்லை நாட்டினார்கள்.
இன்று (03.11.2015) காலை புதுக்குளம் வீதி சாஸ்திரிகூழாம்குளம் பகுதியில் மாட்டுடன் மோதிய வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
வேகமாக பயணித்த வாகனம் சந்தி ஒன்றில் திரும்ப முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததால் சேதமடைந்ததுடன் இவ் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், இரண்டு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்-நல்லுறவுக்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்தியலிங்கம் நேற்று 02.11.2015 திங்கட்கிழமை வவுனியா வர்த்தக சங்கதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வன்னிபாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் சிறப்புரை வழங்கியபோதே இதனை குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் சிறுவர், பெண்கள் நலன்களுக்கான அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குறைபாடு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இது அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் உள்ள பொதுவான குறைபாடு என்று தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற வடமாகாண சபைக்கு மீள்குடியேற்ற நடவடிக்கையில் கருத்து தெரிவிப்பதற்கோ செயற்படுவதற்கோ உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ஒரு முஸ்லிம் அமைச்சரே இருந்தார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டுக்கு அவரே பொறுப்பாவார் என்று தெரிவித்த அமைச்சர் சத்தியலிங்கம், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு மாகாண சபையின் அனுசரணையுடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இப்போதைய மத்திய அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
நேற்று (02.11.2015) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வேளையில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் இன மத மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வடக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த பொழுது நாலரை வருடங்கள் யுத்தத்துடன் நிறைவடைய மிகுதி ஆறுமாத காலப்பகுதியில் மெனிக்பாம் முகாம்களில் இருந்த தமிழ் மக்களை தான் குடியேற்ற அரும்பாடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும்எனவும் குறிப்பிட்டார் .
அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் மையம் என்று சொல்லக் கூடிய வவுனியா மாவட்டத்திலே மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோதும், 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி என்று கேட்ட போதும், ஜனநாய ரீதியாக நடந்த தேர்தல் காலங்களிலும், உரிமைக்கான போராட்ட காலங்களிலும் வவுனியா வர்த்தக சங்கம் செய்த உதவிகளை மறந்துவிட முடியாது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இந்த நாட்டில் நிரந்தரமான சாமாதானம் மற்றும் அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
இந்த ஆண்டிலே ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என இரு தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் நாட்டிலே ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆட்சிமாற்றம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை. அதற்காக நாம் இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். நீங்கள் எமக்கு வழங்கியிருக்கும் பணி மிகவும் கடினமான பணி. எமது மக்களின் விடிவிற்காக நாம் இன்னும் பல தடைகளை தாண்டி செல்லவேண்டியுள்ளது.
குறிப்பாக எங்களுக்கு முன்னால் பல வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல் கைதிகளின் பிரச்சினை இருக்கின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது எதிர்வரும் 7 ஆம் திகதி தான் தெரியும். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஒரு பாராதூரமான, இந்த நாட்டின் அரசியலை பாதிக்கின்ற விளைவு ஏற்படும் என நினைக்கின்றேன்.
அதுமட்டுமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் இந்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் அரசுடான பேச்சுக்கள், உறவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏனெனில் கடந்த 10 வருடகாலமாக இந்த நாட்டிலே மாற்ற முடியாது என்று இருந்த ஒரு இருண்ட யுகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் தான் மாற்றியமைத்தவர்கள்.
இந்த ஜனாதிபதியும், பிரதமரும் தெற்கில் இருக்கின்ற இனவாதிகளுக்கும், சலசலப்புக்களுக்கும் பயந்து அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்படாவிட்டால் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதே சரீதியிலும் அரசுக்கு அழுத்தங்கள் ஏற்படும். எனவே, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இருக்கிறது. இதன் மூலமே வடக்கும், தெற்கும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் கடந்த மாதம் அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டது. இதற்கு தெலுங்கானாவில் உள்ள அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா எனும் முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மனிதர்களுக்கு சிலை அமைப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே அப்துல்கலாம் சிலையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.
மேலும் ஐதராபாத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களின் சிலைகளை உடனே அகற்றாவிட்டால் அவற்றை நாங்களே இடித்து தள்ளுவோம் என்றும் அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள 6 முஸ்லிம் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா அமைப்பின் கோரிக்கையை ஏற்க தெலுங்கானா அரசு மறுத்து விட்டது. இது தொடர்பாக தெலுங்கானா துணை முதலமைச்சர் முகம்மது அலி கூறியதாவது:–
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றே முஸ்லிம் தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. மாநில அரசு எந்த மத அடிப்படையிலும் செயல்படுவதில்லை. தலைவர்கள் இந்த சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளை போற்றும் வகையில்தான் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் கூட முஸ்லிம் தலைவர்களுக்கு சிலை அமைக்கபட்டுள்ளது. எனவே ஐதராபாத்தில் இஸ்லாமிய தலைவர்களுக்கு சிலைகள் இருப்பதில் எந்த தவறும் இல்லை, என்றார்.
உயர்தரப் பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை வருகின்ற சனிக்கிழமை 07 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த செயன்முறைப் பரீட்சைக்கு சுமார் 5074 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். விண்ணப்பித்த பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை அவர் அவரது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று வரையில் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் 011 2784208 / 011-2784537 / 011 3188850 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்ந்து வரும் அடை மழை காரணமாக வீதிகள், பாடசாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி நீதவான் ஶ்ரீநித் விஜேசேகரவால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த பெண்ணை 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி – பலகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 72 வயதான தந்தையை நாய்க் கூட்டில் தங்க வைத்ததாக கூறப்பட்டு பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தந்தையை அடன்பிடிய முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த குறித்த மனுவில், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த டென்டரை தாமே முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 101 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரிய நிறுவனம் ஒன்றுக்கு அந்த டென்டர் வழங்கப்பட்டதாகவும், தமது நிறுவனத்திற்கே டென்டரை வழங்க வேண்டும் என, அரச தொழிநுட்ப மதிப்பீட்டு சபை பரிந்துரை செய்திருந்த போதிலும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட டென்டர் சபை பிரதிவாதிகளுக்கு அதனை வழங்கியதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது.
இதன்படி மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வவுனியா வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையுடன் நில்லாமல், நாடளாவிய ரீதியில் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் நேற்று (02.11.2015) திங்கட்கிழமை நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்க ஒழுங்கு செய்யபட்டிருந்த நிகழ்வில் பட்டியலிட்டுக்காட்டினார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உடனடியாகவே அப்போதைய அரச அதிபராக இருந்த கே.கணேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உதவியதாகவும்,
இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இருந்த மக்களுக்கு அவசர உதவிகளை அரச செயலகத்தின் ஊடாக வழங்கியதாகவும், தொடர்ச்சியாக முப்பது நாட்கள் சமைத்த உணவினை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும், மலையகத்தில் கடந்த வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தை மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று வழங்கி, அத்தியாவசிய உதவிகளை வழங்கியதாகவும்தமக்கென ஒரு நிரந்தர கட்டிடம் இல்லாத வேளையிலும் வர்த்தகர்கள் அங்காங்கே கூடி மேற்படி சமூகசேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (02.11.2015) இடம்பெற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிக முக்கியமான நான்கு கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளது. அவையாவன..
1. வவுனியா வர்த்தகசங்கத்துக்கு நீண்டகாலமாக சொந்தமாக ஒரு கட்டிடம் அமைப்பதற்குரிய காணித் துண்டொன்றை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை என்பன இணைந்து வர்த்தக சங்கத்தை அமைக்க ஏதுவாக காணியொன்றை பெற்றுத்தர ஆவண செய்யவேண்டும்.
2. வவுனியா குடியிருப்பு பகுதியில் அதிரடிப்படையின் வசமுள்ள கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பாவனைக்கு பெற்றுத்தர வேண்டும். அக்கட்டிடத்தை பெற்றுகொள்வதன் மூலம் ஏழை எளிய மக்களின் கலாசார நிகழ்வுகளை குறைந்த வாடகையை செலுத்தி நடாத்த கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கபட்டது.
3. வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதி தொடக்கம் வவுனியா நகரில் உள்ள பள்ளிவாசல் சந்தி வரையான கடை (பசார்) வீதி நடைபாதை மற்றும் வடிகால்கள் புணரமைக்கப்பட வேண்டும்.
4. வவுனியா வர்த்தகர்கள் காசோலை மோசடி காரணமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இக் காசோலைகள் தொடர்பிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொலிசாரிடம் செல்லும்போது, அவர்கள் அது சீட்டுக் கொடுப்பனவுடன் சம்பந்தப்பட்டதெனக் கூறி அதில் கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டி, வர்த்தகர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ள இந்த காசோலை மோசடி தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் துரித கதியில் நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மற்றும் வடமாகாண அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வவுனியாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வேண்டுகோள்விடுக்கபட்டது.