இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் இரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக ரவீந்திர ஜடேஜா மணக்கோலத்தில் குதிரையில் அழைத்து வரப்பட்ட போது, சில அடி தூரத்தில் நின்ற அவரது உறவினர்களில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கு வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ராஜ்கோட் புறநகர் பொலிஸ் அதிகாரி கூறும் போது, ‘அந்த நபர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிய உரிமம் பெற்றிருக்கிறாரா இல்லையா என்பது குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தினோம்.
விசாரணைக்கு பிறகு எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம். துப்பாக்கிக்கு லைசென்ஸ் வைத்திருந்தாலும் கூட தற்காப்பு நடவடிக்கையை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாகும் என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அர்துனா பகுதியைச் சேர்ந்தவர் காந்திலால் கதாரா (வயது 36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி குஜராத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் காதலியின் தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து காதல்ஜோடியினர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது காதலியின் தந்தை மற்றும் சிலர், காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.
தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றினர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஈக்வடோரில் ஏற்பட்ட மிகக்கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 233 பேர் உயிரிழந்துள்ளனர் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிகவும் நெருக்கடியான சூழலில் அனைவரும் அமைதியுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்டின் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து கூடுதல் தகவல்கள் வரும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கடந்த நூறாண்டுகளில் 7.0 அளவுகொண்ட பல நிலநடுக்கங்களை ஈக்வடோர் எதிர்கொண்டுள்ளது என்றாலும், இந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகளை இப்போதுதான் நாடு எதிர்கொள்கிறது என அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகக்கடும் நிலநடுக்கத்தால் பாதிகப்பட்டுள்ள தென் அமெரிக்க நாடான ஈக்வடோரின் வடபகுதியிலுள்ள கரையோரப் பிரதேசங்களுக்கு 10,000 துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன.
கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பொலிஸார் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்துள்ள பல பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் மையம்கொண்டிந்ருந்த பகுதிக்கு அருகிலுள்ள நகரான பெதர்னாலேவின் மேயர் தமது நகரம் முற்றாக அழிந்து போயுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தை அடுத்து, 130 பின்னதிர்வுகள் உணரப்பட்டன என நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை மீட்பேன் என்பது ஜெயலலிதாவின் கபட நாடகம் என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தேர்தல் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா தொடங்கிய நாளிலிருந்து, என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசாவிட்டால் அவருக்கு பேசிய மன நிறைவே இருக்காது போலும். ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அவர் எழுப்பும் பிரச்சினைகளின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சிதான்.
வாக்களிக்கப் போகும் முன்னர், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளையும் படிக்கட்டும், நான் அவற்றிற்கு அன்றாடம் தருகின்ற விரிவான பதில்களையும் படிக்கட்டும், எது உண்மை, யார் பக்கம் நியாயம் என்று தெளிவடையட்டும். அருப்புக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா, ‘கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
20.4.1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? ‘கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாக தெரியவில்லை’ என்று, மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போலப் பேசியது அவைக் குறிப்பில் இன்னமும் இருக்கிறது.
இந்த பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக அம்மையார் (ஜெயலலிதா) இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், கச்சத்தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாகப் புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்.
கச்சத்தீவைத் தாரை வார்க்க தி.மு.க. எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. தாரை வார்க்க உடன்படவும் இல்லை என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார்.
1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போதே, பொதுக்குழுவில், ‘இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை, பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்து விடக்கூடாது என்று தமிழக தி.மு.க. அரசு பல முறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும்கூட, அதனை அலட்சியப்படுத்திவிட்டு மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவதாகும்’ என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
21.8.1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், ‘இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது’ என்பதாகும்.
தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத்தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார்.
1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதல் 5 ஆண்டுகளாக ஜெயலலிதாதானே ஆட்சியிலே இருக்கிறார். இவர் ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்கு தனது நீண்ட பேச்சில் இப்போதாவது ஜெயலலிதா பதில் கூறியிருக்கலாமே. ஏன் பதில் இல்லை?
23.7.2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், கச்சத்தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காயவைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம். அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம் என்று இப்படியெல்லாம் அன்றைக்கு குத்தகை இறையாண்மை என்று எழுதியவர் தான் இன்றைக்கு அருப்புக்கோட்டை கூட்டத்தில் என்னைப் பார்த்து கேள்விக்கணை தொடுக்கிறார்.
ஜெயலலிதா ஏற்கனவே ஒரு முறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். ‘கச்சத்தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்’ என்று அவரே வெளியிட்டிருக்கிறார்.
கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்றும், கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா அவ்வளவையும் திரை போட்டு மறைத்து மூடி விட்டு, கச்சத்தீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீட்பேன் என்றும் தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது தான் உண்மையான கபட நாடகம், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் மற்றும் ஜீவா தலைமையிலான தஞ்சை வாரியர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பு செய்ய முடிவு செய்தது. துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தஞ்சை அணி 6 ஓவர்களின் முடிவில் 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
84 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சிங்கம்ஸ் இலக்கை மிக சுலபமாக எட்டி வெற்றிக் கோப்பையை வெற்றிபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நேற்று (16.04.2016) நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற கரபந்தாட்டத் தொடரில் புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.
இறுதிப்போட்டியில் புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து குளவிசுட்டான் செல்வா விளையாட்டுக்கழகம் மோதியது.
புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகம் 2-0 என்ற செட் அடிப்படையில் வெற்றிபெற்று வவுனியா வடக்கு பிரதேச செயலக சம்பியனாகியது.
தெலுங்கு சினிமா இயக்குனர் பூரி ஜெகநாத் மீது விநியோகஸ்தர்கள் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத். விஜய் நடித்த போக்கிரி படத்தை இயக்கியவர். இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகன் வருண்தேஜ் நடித்த லோபர் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார்.
இந்த படத்துக்கான ஆந்திரா தெலுங்கானா விநியோக உரிமையை அபிஷேக், சுதிர், முத்தியாலா ராம்தாஸ் ஆகியோர் வாங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்கான பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 3 பேரும் ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இயக்குனர் பூரி ஜெகநாத் அலுவலகத்துக்கு சென்றனர். படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தரும்படி தகராறு செய்தனர்.
அதற்கு அவர் நான் படத்தின் இயக்குனர் மட்டுமே என்று கூறினார். ஆனாலும் ஆவேசம் அடைந்த விநியோகஸ்தர்கள் பூரி ஜெகநாத்தை தாக்கினர். மேலும் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர்.
உரிய இழப்பீடு தராவிட்டால் உங்களது அடுத்த படத்தை எந்த தியேட்டரிலும் ஓட விட மாட்டோம் என்று மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து பூரி ஜெகநாத் பஞ்சாரஹில்ஸ் பொலிஸில் புகார் செய்தார். பொலிசார் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது எனக்கு கிடைத்த கௌரவம் என்று எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் 2.ஓ. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள அக்சய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். எமி ஜக்சனும் இந்த படத்தில் நடிக்கிறார்.
நேற்று இரவு எமி ஜாக்சன் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் “ வேறு புகைப்படங்களில் நான் இந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் இருந்தது இல்லை.
ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது மிகப் பெரிய கௌரவம் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வவுனியா கலாச்சார மண்டத்தில் நேற்று (16.04.2016) காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இன் நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்ஸிம் சகோதர, சகோதரிகளுக்காக அர்ப்பணம் செய்யும் முகமாக விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வட கிழக்கிலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், இணக்க சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக் கலந்துரையாடலில் புதிய ஆட்சி மாற்றத்ததுடன் மாற்றத்திற்கான நிலைமாறு நீதிக்கான அரசின் செயற்பாடுகள், இணைப்பாளர் நீதிகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சினுடைய கலந்துரையாடல் சுருக்கம், நிலைமாறு நீதிக்கான அறிமுகம், தேசிய கலந்துரையாடலுக்கான சிறுகுறிப்பு ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.
கடந்த 14.04.2016 புத்தாண்டு தினமன்று இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் அக்கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றாக இருந்து உரையாடிக்கொண்டிருந்த சமயம் முச்சக்கரவண்டியில் வந்த 4 பேரடங்கிய குழுவினர் அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடாத்தியதாகவும் அதன்போது முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் இரும்பு பைப், பொல்லு என்பன கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 4 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல மணிநேரம் இரு குழுக்களும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளதாகவும் அதன் காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளதாகவும் பின்னர் பொலிசாரின் தலையீட்டையடுத்து சில இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச் சம்பவத்தில் பாலகிருஷ்ணன் துசாந்தன் (22 வயது), சிவராசா ஜெயதீபன் (25 வயது), யோகராசா பார்த்தீபன் (28 வயது) யோகராசா சுதர்சன் (24 வயது) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு குழுவினரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
யோகராசா பார்த்தீபன் (28 வயது) என்பவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட போது அவரை காப்பாற்ற முயன்ற விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (16.04) மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கினிகத்தேனை வழியாக ஓடும் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 36 வயது மதிக்கதக்க பெண் நீரில் அடித்துச்செல்லும் நிலையை கண்ட விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த நிலையில் பெண்ணை காப்பாற்றிய விமானபடை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த விமானபடை வீரர் கினிகத்தேனை யட்டிபேரிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க எஸ்.டீ.மனுக்க இஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த வீரரின் சடலம் தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் உயிர் தப்பிய குறித்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிக்சசைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிக்கொண்டது.
இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுடன் கச்சதீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டப் போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோதே தமிழக முதலமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
1991ம் ஆண்டு தாம் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் கச்சதீவை மீட்பதற்காக மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும், ஜெயலலிதா இதன்போது கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தாலும், அவர்களின் படகுகளை மீளக் கையளிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சதீவை மத்திய அரசாங்கம் இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவு செய்த போது அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி, வாய்மூடி மௌனியாக இருந்தார் என்றும் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இடைக்கால தடையுத்தரவைப் பெற்றிருந்தால், கச்சதீவு இலங்கை வசம் சென்றிருக்காது எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் கச்சதீவைப் பெற்று பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இது தவிர, கச்சதீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அப்போதைய மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தமை குறித்தும் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என ஜெயலலிதா மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு கச்சதீவு வழங்கப்பட்டதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எவ்வித பங்குமில்லை என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கடந்த 2015ம் ஆண்டில் 4 இலட்சத்து 36 ஆயிரத்து 65 டொலர் சம்பாதித்துள்ளனர் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து 81 ஆயிரத்து 472 டொலர் வருமான வரி செலுத்தி உள்ளனர்.
ஒபாமா தம்பதியர் தங்களது மொத்த வருமானத்தில் 14.7 சதவீதம் தொகையை 34 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.