வவுனியா கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் குடும்ப நிலை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் தபாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் குறித்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து இது தொடர்பில் முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்துலண்டனைச் சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவரின் உதவியுடன் குறித்த குடும்பத்திற்கான சுயதொழிலுக்குரிய கோழி வளர்ப்பதற்கான கூடு, கோழிகள் மற்றும் விவசாயத்திற்கான ஊக்குவிப்புக்கள் என்பன குறித்த நிர்மலாதேவியின் குடும்பத்திற்கு அண்மையில் சித்திரைப் புதுவருட தினத்தன்று கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜனால் வழங்கி வைக்கப்பட்டது.
அவ்வகையில் இவ்விடயத்தை தமக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் அவ்வுதவியினை வழங்கிய லண்டனைச் சேர்ந்த குறித்த நண்பருக்கும் கலைமகள் நற்பணி மன்றத்தின் சார்பில் பாலச்சந்திரன் சிந்துஜன் தனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்தார்.
பாறைகளின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால், ஒரு அழகிய பாறையை ஒரு பெண்மணி திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமின்(51) பாறையை திருமணம் செய்ததன் மூலம் இந்த உலகை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.இவருக்கு பாறைகள் என்றால் மிகவும் பிரியம். ஹாங்ஹாங்கில், ஒரு கண்காட்சியில் உள்ள பண்டையகால பாறைகளைப் பார்த்த பிறகுதான் இவருக்கு பாறைகளின் மீது அதீத காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனிமையில் வாழ்ந்து வந்த அவர் தற்போது ஒரு பாறையை திருமணம் செய்துள்ளதாக, உலகுக்கு அறிவித்துள்ளார்.அவர் கூறும்போது “நான் தனியாக இல்லை. ஒரு பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த பாறை மிகவும் அழகானது. அந்த பாறை என்னுடனே எப்போதும் இருக்கும். மேலும் எனக்காக அது காத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.மேலும் “ பாறையை திருமணம் செய்து கொண்ட பிறகு, காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று டிராசி எமின் கூறியிருக்கிறார்.
ஸ்பெய்னைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 தினங்கள் சிக்கியிருந்த பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. 56 வயதான லூஜி மார்குவெஸ் எனும் இவர், ஒரு மீனவராவார். அண்மையில் இவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். புயல் காரணமாக அவரின் படகு கவிழ்ந்தது.
ஸ்பானிய கரையோர காவல் படையிரனால் லூஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆச்சரியகரமாக, சில தினங்களின் பின் லூஜி மார்குவெஸ் மீண்டும் வீடு திரும்பினார்.தான் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 3 தினங்கள் இருந்து உயிர் பிழைத்ததாக அவர் தெரிவித்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புயலில் தனது படகு கவிழ்ந்த பின்னர் இராட்சத திமிங்கிலம் ஒன்றினால் தான் விழுங்கப்பட்டதாக லூஜி மார்குவெஸ் தெரிவித்தார். “திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் கடும் இருளாக இருந்தது.
அனைத்தும் கறுப்பாகத் தெரிந்தன. நீர் புகாத எனது கைக்கடிகாரத்தின் ஒளி மூலம் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த சிறிய மீன்களை இனங்கண்டு அவற்றை பச்சையாக உட்கொண்டு நான் உயிர்பிழைத்தேன்.இறுதியில் திமிங்கிலம் என்னை வெளித்தள்ளியது” என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் உயிர்ப்பிழைத்தமை ஓர் அற்புத நிகழ்வு என லூஜி மார்க்குவெஸின் மனைவி பெனலொப் தெரிவித்துள்ளார்.
ஆனால், லூஜி மார்குவெஸின் கூறும் விடயங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால் வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எவ்வாறெனினும், திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்ட ஒருவர் உயிர்ப்பிழைத்தாகக் கூறப்படும் முதல் சம்பவம் இதுவல்ல.1890களின் இறுதியில் முற்பகுதியில், ஆர்ஜென்டீனாவுக்கு அருகிலுள்ள பாக்லாந்து தீவுகளுக்கு அருகில் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் பார்ட்லி என்பவர் திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டு 18 மணித்தியாலங்கள் அதன் வயிற்றுக்குள் இருந்து உயிர்தப்பியதாக ஒரு கதை உள்ளது.
அத் திமிங்கிலம் மலச்சிக்கலினால் இறந்த நிலையில், ஜேம்ஸ் பார்ட்லி அதன் வயிற்றுக்குள் இருப்பதை திமிங்க வேட்டைக்காரர்கள் அறியாத நிலையில் அத் திமிங்கிலத்தை வெட்டியபோது ஜேம்ஸ் பார்ட்லி உயிர்தப்பியதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாய்வாளரான எட்வர்ட் டேவிஸ், மேற்படி கதைக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
முகத்தை சுத்தப்படுத்துவதில் முகம் கழுவும் விதமும் மிகவும் முக்கியமானது. ஆனால் பலர் முகம் கழுவுகிறேன் என்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்திக் கழுவுவார்கள்.
இப்படிக் கழுவுவதால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
• எப்போதுமே சருமத்திற்கு ஏற்றவாறான ஃபேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்தது.
• முகத்தைக் கழுவும் போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியுடனோ இருக்கும் நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே மிதமான நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தியே முகத்தைக் கழுவ வேண்டும்.
• குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.
• முகத்தில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று முகத்தை கடுமையாக தேய்த்துக் கழுவக்கூடாது. மேலும் கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.
• மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிலர் கிளின்சர், டோனர், மாய்ஸ்சுரைசர் போன்ற செயல்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த செயல்கள் அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம்.
• தயிர் அல்லது பால் சிலருக்கு கெமிக்கல் பொருட்கள் பிடிக்காது. அத்தகையவர்கள் தயிர் அல்லது பால் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். அதற்கு தயிர் அல்லது பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த செயலுக்கு பின் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சோப்பு தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்.
நவீன தொழில்நுட்பத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் மேலும் பல ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.இந் நிறுவனமானது கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பைபர் புரோட்பேண்ட் சேவையினை அமெரிக்காவின் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது கூகுள் லூன் எனப்படும் பலூன் மூலமான இணைய இணைப்பினை வழங்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மற்றுமொரு திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றது.
அதாவது ஒளிக் கற்றையினூடாக (Beam) வயர்லெஸ் முறையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அதி வேக இணைய இணைப்பினை வழங்குவதாகும்.இது தொடர்பான தகவலை கூகுளின் அக்செஸ் (GoogleAccess) தலைமை அதிகாரியான Craig Barratt உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதுடன், இவ் இணைய வேகமானது 1 Tbps இலும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவிருக்கின்றார். இதை தொடர்ந்து 2.0 படத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.இந்நிலையில் திருச்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார்.
அதனால், நாங்கள் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவு தரவிருக்கின்றோம் என அறிவித்துள்ளார்கள். ரஜினி, உங்கள் தனிப்பட்ட விருப்பமான கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்துக்கொண்டு ரசிகர்கள் இப்படி செய்வது அவருக்கு மேலும் தலைவலியை தான் கொடுக்கும் என சிலர் கூறி வருகின்றனர்.
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்ய மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தற்போது வரை 1710 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 164 பேர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகளாகும்.
நேற்று மாத்திரம் 78 மோட்டார் சைக்கிள் சாரதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முச்சக்கர வண்டி சாரதிகள் 62 பேர், கார் சாரதிகள் 14 பேர் மற்றும் வேன் சாரதிகள் 07 பேரும் இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்ய பொலிஸாரால் கடந்த 10ம் திகதி முதல் நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கை அதிவேகப் பாதையில் புத்தாண்டு தினத்தை ஒட்டிய மூன்று நாட்களுக்குள் மட்டும் மூன்று கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூன்று நாட்களுக்குள் மட்டும் ஐந்து லட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரத்து 23 வாகனங்கள் தெற்கு அதிவேகப் பாதையில் பயணித்துள்ளது.
ஏப்ரல் 15ம் திகதி மட்டும் ஒரேநாளில் ஒருகோடியே 70 லட்சம் ரூபா தெற்கு அதிவேகப் பாதையின் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
அதிவேகப் பாதை வருமானத்தில் இது ஒரு சாதனையாகும். பொதுவான நாட்களின் வருமானத்தை விட 34 வீத வருமான அதிகரிப்பாகும்.
புத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் அதிவேகப் பாதையில் 100க்கும் அதிகமான வாகனங்கள் எஞ்சின் கோளாறு காரணமாக இடைவழியில் செயலற்று நின்று போயிருந்த நிலையில் அவற்றை பாதையை விட்டு அகற்றுவது பெரும் திண்டாட்டமாகிப் போயுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு காலப்பகுதியில் இம்முறை மிகவும் குறைவான விபத்துக்களே பதிவாகியுள்ளது.
சுமார் 25 விபத்துச் சம்பவங்கள் மட்டுமே இம்முறை நடைபெற்றிருந்ததுடன், 2 பேர் அதன் காரணமாக காயமுற்றிருந்தனர்.
அதிலும் பெரும்பாலான விபத்துக்கள் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்படும் போது வலது புறமாக தாண்டிச் சென்று குறுகிய தூரத்திற்குள்ளாக மீண்டும் இடது பக்கமாக முறையற்ற வகையில் வழித்தடத்தை எட்ட முயன்ற போது நேர்ந்துள்ள விபத்துக்களாகும்.
அதிவேகப் பாதையில் ஒரே ஒருநாள் மட்டும் சுமார் 300 மீட்டர்கள் வரையான வாகன வரிசையொன்று உருவாகி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் போது வாகன வரிசைகளை நாடிச் சென்று வரி அறவிடப்பட்டதன் காரணமாக குறுகிய நேரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துக் கொள்ள முயன்றதாக அதிவேகப் பாதை செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஒபனாயக தெரிவித்துள்ளா
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் கடந்த முப்பது வருடங்களாக தங்கியிருந்த 194 குடும்பங்களுக்கு நாளைய தினம் (19.04.2016) தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும், 60 பேர்ச் காணித் துண்டுகள் வழங்கப்படவுள்ளன. இப் பகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வடமாகாணசபை ஏற்கனவே, 13.5 மில்லியன் ரூபாவை, வவுனியா பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளது.
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாம் கடந்த முப்பது வருடங்களாக இயங்கி வருகின்றதுடன், இந்த முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களுக்கே, அந்தப் பகுதிக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படவுள்ளன.
எக்காரணத்திற்கொண்டும் வட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்ட வட் வரி, மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் வட் வரியை ஒரு ரூபா கூட அதிகரிக்க விடமாட்டேன் என ஜனாதிபதி தற்போது கூறியுள்ளார்.
இந்த வட் வரி அதிகரிப்பால் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடமாட்டேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஜெட் என்ற அந்த பயணிகள் விமானம் நேற்று சுவிஸில் உள்ள ஜெனீவா நகரிலிருந்து லண்டனில் உள்ள Heath-row விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முயன்றுள்ளது. இந்த விமானத்தில் 5 விமான குழுவினர் உள்பட 137 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஓடுதளத்தை நோக்கி விமானம் தரையிறங்க முயற்சித்த அதே வினாடி, எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
விமானம் தரையிறக்கப்பட்டதும் இந்த விபத்தை குறித்து பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
தரையிறங்கும் விமானத்தின் மீது ட்ரோன் போன்ற சிறிய விமானங்கள் மோதினால் பெரும்பாலும் ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஆனால், ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்தின் ஏதாவது ஒரு பக்க என்ஜினில் மோதினால், அது விமானத்தையே சாய்த்துவிடும் அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.
விமான நிலையப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து ட்ரோன் விமானங்களை இயக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக பயணிகள் விமானத்தின் மீது ஒரு ட்ரோன் விமானம் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தன்று சிறுமியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் ராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கடந்த 14ம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியொருத்தியுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் சிறுமியை சந்திப்பதற்காக கலென்பிந்துனுவெவ சென்றுள்ளார்.
அதன் பின்னர் குறித்த சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு இளைஞர் தப்பிச் சென்று விட பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் அநுராதபுரம் மாவட்டத்தின் மஹ இலுப்பள்ளமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 28 வயதான அவர் ராணுவத்திலிருந்து தப்பியோடி வந்து தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய -இஹல ஓமத்த திகல கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த ஒரு மாதமாக காணாமல் போயுள்ளதாக தெரியவந்தள்ளது.
கடந்த மாதம் 13ம் திகதியில் இருந்து தமது மகளை காணவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் எல்பிட்டிய மற்றும் ஊரகஹா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்வதற்காக கம்பளை பாலமருகே பஸ்ஸுக்காக காத்திருந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்தவர் அவருக்கு செவ்விளநீரில் மயக்கமருந்து கலந்து பருகக் கொடுத்து பணம், தங்க மோதிரம் என்பன சூறையாடப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இளம் குடும்பஸ்தர் தெரிவிக்கையில்,
சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துக்கு கம்பளை புடவைக் கடையொன்றில் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு புசல்லாவைக்கு வருவதற்காக கம்பளை பாலமருகே பஸ்ஸுக்காக காத்திருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தாங்கள் புசல்லாவைக்கு செல்கிறோம் எனக் கூறி அவரை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்துள்ளனர்.
புசல்லாவைக்கு வரும் வழியில் செவ்விளநீரை அவருக்கு பருக கொடுத்துள்ளனர். அதனை பருகி சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர் அவரிடமிருந்த வெளிநாட்டு நாணயம், (டொலர்) கையில் அணிந் திருந்த மோதிரம் மற்றும் புதுவருடத்திற்கென வாங்கி வந்த புது உடைகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு ஆள் நடமாட்டமற்ற இடத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டார் புதுஉடை வாங்கச் சென்றவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற போது மயக்க நிலையில் இருந்தவரை உடனடியாக மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
செவ்விளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை ஏமாற்றியது பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.
இவ்வாறான சம்பவம் கம்பளை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் இது குறித்து பொது மக்களும் பயணிகளும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மன்னார் வீதியில் நேற்று (17.04.2016) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கர வண்டியின் பின் பக்கமாக மோதியதில் துவிச்சக்கர வண்டியை ஓட்டிவந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன் நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர் ராமன் ராமலிங்கம் என்ற 57 வயது குடும்பஸ்தராவார்.
மோட்டர் சைக்கிலில் பயணித்தவர் பாதுகாப்புக் கவசத்தின் பட்டி அணியாது அதிக வேகத்தில் பயணித்த பொழுது தலைக்கவசம் காற்றில் தூக்கி ஏறிய முயன்ற சமயத்தில் தலைக்கவசத்தில் ஒரு கையை பிடித்தவாறு சென்று துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது மோதியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய வரலாற்றினை குறிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு நேற்று (17.04.2016) வைபவரீதியாக வவுனியா பிரதேச செயலாளர் உதயராசாவினால் காலை 10.30மணியளவில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மேலும் ஆலய பிரதம குருவினால் மாவட்டச்செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆச்சாரியார்கள், மற்றும் ஐயனார்பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.