ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் , முறுகல் நிலை தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் நேற்று (30.03.2016) இரவு 10 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இத் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் தாக்குதல் சம்பத்தினை 2ம் வருட பெரும்பான்மை இன மாணவர்கள் 150 பேருக்கு மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள் 07 பேர் மீதான கொடூர தாக்குதலாக மேற்கொண்டுள்ளனர். இக் கொடூர தாக்குதலில் காயமடைந்த 07 தமிழ் மாணவர்களும் தற்போது பதுள்ள பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் 2ஆம் வருட மாணவர்கள் 4 பேரும், 3 ஆம் வருட மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு மாணவன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் திருகோணமலை வளாகத்திலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்ற போதிலும் பெரும்பான்மை மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமையே இவ்வாறன நல்லாட்சியின் நல்ல செயல்கள் தொடர காரணமாக அமைகின்றது. எனவே நல்லாட்சி அரசின் ஜனாதிபதியும் பிரதமரும், உயர் கல்வி அமைச்சர் ஊடாக இவ் விடயத்தில் கவனம் எடுத்து ஜனாதிபதியின் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்ட துணை வேந்தரின் கண்காணிப்பில் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பான்மை மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இன்று நடைபெறும் டி20 உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளை தவிர பெரும்பாலும் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண வருவது இல்லை. ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் தாங்கள் குறிவைக்கப்படலாம் என்ற பயம்தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் டோனியின் மனைவியும் அவரது மகளும் (ஷியா) இன்று போட்டியை நேரில் காண மும்பை வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஷியா கிரிக்கெட் விளையாட்டை ஓரளவு புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், டோனிக்கும் இது உந்துசக்தியாக இருக்கும் என்றும் ஷியாவின் மாமா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டோனியின் சொந்த நகரமான ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாட தயாராகி விட்டார்கள்.
வவுனியாவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை கடந்த செவ்வாய்கிழமை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தம்மால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வன்னி மன்னின் ஏற்றமிகு வவுனியா நன்னகரின் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஐயனார் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா நிகழும் மங்கள கரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பூரணை புட்கலை சமேதே ஐயனார் மற்றும் பரிவார நூதன மூர்த்திகளுக்கும் காலை 08மணி 45நிமிடம் வரையுள்ள இடப லக்கின சுபமுகூர்த்தத்தில் மகாகும்பாபிசேக பெரும் சாந்திவிழாவும் கிரியைகளும்நடைபெறும்.
இவ் அற்புத ஐயனார் கோவில் மூலவரின் கண்களில் இருந்து 19.08.2001 ஆவணி முதல் ஞாயிறு அன்று மூலவரின் கண்கள்அகல விரிந்து காணப்பட்டதுடன் கண்களில் இருந்து கண்ணீரும் வடிந்த அதிசியம் நிகழ்ந்ததும் நோய், பிணிகளை நீக்கும் கோவில் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் நட்டயீடு செலுத்துமாறும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார்.
அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபதாக இருந்தார்.
இதில் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் கந்தையா சித்திவிநாயகம் என்ற வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
சம்பவம் நடைபெற்ற தினம் தனக்கு 14 வயது என்றும் வடமராட்சி பாடசாலையொன்றில் படித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது..
சம்பவம் நடைபெற்ற தினமாகிய கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை நாலு நாலரை மணிபோல் பூக்கள் பறிப்பதற்காக பற்றைகள் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருந்த போது, எதிரியான கந்தையா சித்திவிநாயகம் பாதையில் நின்றிருந்தார்.
அவர் எனக்கு குடிப்பதற்கு ஜுஸ் தந்தார். அதை வாங்கிக் குடித்தேன். சில நிமிடங்களில் எனக்கு மயக்கம் வந்தது தெரிந்தது. அப்போது எதிரி எனது கையைப் பிடித்ததை உணர்ந்தேன். அதற்குப் பின்னர் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. உணர்வற்று நான் மயங்கிவிட்டேன்.
பின்னர் ஐந்து ஐந்தரை மணிபோல் நான் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, எனது உடலில் இரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டேன்.
நான் அணிந்திருந்த ஆடைகள் குலைந்திருந்தன. எனது உள்ளாடையைக் காணவில்லை. சட்டை மற்றும் பாவாடையின் பொத்தான்கள் கழற்றப்பட்டிருந்தன.
கால்கள் விரிந்து ஆடைகள் விலகி அரை நிர்வாணமாக இருந்ததை உணர்ந்தேன். எனது பெண் உடலில் இரத்தம் வடிந்திருந்தது. அப்போது எதிரியை அங்கு காணவில்லை.
எதிரியான சித்திவிநாயகத்தைத் தேடி அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. அங்கிருந்து திரும்பி வந்தபோது வழியில் எதிரி சித்திவிநாயகத்தை வழியில் கண்டேன்.
நீங்கள் தானே எனக்கு ஜுஸ் தந்தீர்கள் எனக்கு என்ன நடந்தது? என்னை என்ன செய்தீர்கள்? எனக் கேட்டேன்.
அதற்கு அவர் முதலில் நான் என்ன செய்தனானோ? என கேட்டுவிட்டு, பின்னர் எனது கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, “அம்மா ஆக்களுக்குச் சொன்னால் குடும்பத்தில் ஒருவரையும் உயிருடன் பார்க்கமாட்டாய். அக்காவிற்கும் இப்படித்தான் செய்வேன்” என கூறினார்.
சிறிது காலத்தின் பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எனக்கு பெண்குழந்தை பிறந்தது என கூறினார்.
இந்த வழக்கு டிஎன்ஏ இரத்த பரிசோதனை அறிக்கையுடன் முக்கியமாகத் தங்கியுள்ள வழக்கு என்ற காரணத்தினால், அந்தப் பரிசோதனைகளை நடத்திய ஜீன் டெக நிறுவன சிரேஸ்ட விஞ்ஞானி குடாலியனகே நந்திக்க சிறியந்த பெரேரா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்து, சாட்சியமளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாகிய ஹம்சிக்காவின் விஞ்ஞான ரீதியான தாய் பாதிக்கப்பட்ட பெண் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
விஞ்ஞான ரீதியான தந்தை எதிரியான கந்தை சித்திவிநாயகம் எனவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது டிஎன்ஏ ஆய்வின் மூலம் 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எதிரியாகிய சித்திவிநாயகமே தந்தையாவார் என தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார்.
வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தான் உடலுறவு கொண்டதை ஏற்றுக்கொண்டு எதிரியாகிய கந்தையா சித்திவிநாயகம் கூண்டில் ஏறி சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது:
இந்தப் பெண் தன்னுடைய விருப்பத்துடன்தான் என்னுடன் வந்து பழகினார். தனக்கு மண்ணீரல் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் 18 வயதில் தான் இறந்துவிடுவேன் எனக்கூறி அவர் என்னுடன் நெருங்கிப் பழகினார்.
எனது மனைவி கோவிலுக்குச் செல்லும் வேளைகளில் என்னைக் கவரக் கூடிய விதத்தில் ஆடைகள் அணிந்து வந்து என்னைத் தூண்டியதன் விளைவாகவே நான் அவருடன் உடலுறவு கொண்டேன் என்றார்.
விசாரணiயின் முடிவில் எதிரியைக் குற்றவாளியென மன்று கண்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் தனது தண்டனைத் தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:
பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாணவி – ஒரு சிறுமியாக இருந்தபோது, பாலியல் வல்லுறவின் மூலம் எதிரி அவரை தாயாக்கியுள்ளார்.
இதனால் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பதினான்கு வயது மாணவியைத் தாயாக்கிய கொடூரமான குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே பொருத்தமாகும்.
இருப்பினும் குற்றம் புரிந்த போது எதிரிக்கு 62 வயது. இப்போது அவருக்கு 69 வயது. பாதிக்கப்பட்டப் பெண் எதிரிக்கு ஒரு பேத்தி மாதிரியானவர்.
அத்தகைய சிறுவயதுடைய பெண்ணுக்கு, பலாத்காரமாக – மோசடியான முறையில் ஜுசுக்குள் போதை மருந்திட்டு, அதனை குடிக்கக் கொடுத்து, அவரை எதிரி மயக்கியுள்ளார்.
அவ்வாறான மயக்க நிலையில் அந்த சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு அவருககுக் குழந்தை பிறப்பதற்குக் காரணமாக இருந்த எதிரிக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சமுதாயத்தில் பாலியல் குற்றம் அதிகமாக நடக்கும்போது, நீதிமன்றங்கள் கருணை அடிப்படையில் தண்டனை வழங்குவது குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்து விடும். அத்துடன், பாலியல் வல்லுறவு குற்றச் செயல்கள் புரிபவர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்புக்கள் தண்டனைகளில் அச்சமில்லாத நிலை காணப்படுவதற்கும் ஏதுவாகிவிடுகின்றது.
இந்த வழக்கில் 14 வயதில் 62 வயதுடைய வயோதிபரினால், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிய கொடூரமான அவலச் செயலுக்கு, பாதிக்கப்பட்ட பெண் ஆளாகியிருக்கின்றார்.
அந்தப் பெண்ணின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுவிட்டது. 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் மீது விசேடமாக மாணவிகள் மீது பாலியல் வல்லுறவு குற்றம் புரிவது பாரதூரமாக அளவுக்கதிகமாக சமுதாயத்தை மிரட்டும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனால், சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இந்தச சம்பவங்கள் அமைந்துவிடுகின்றன.
இந்த நிலையில், நீதிமன்றங்கள் பெண்களினதும், சிறுவர் சிறுமிகளினதும் அதியுச்ச சட்டத்தின் மேலான பாதுகாவலராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த வழக்கில் வழங்கப்படுகின்ற தீர்ப்பானது, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
எதிரி தரப்பு சட்டத்தரணியின் கருணை விண்ணப்பத்தையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுக்கத் தவறவில்லை.
தீர்ப்புக்கு முதலில் திகதியிட்டபோது நஞ்சருந்தி தற்கொலை முயற்சி செய்த எதிரி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதான வைத்தியசாலையில் கடந்த 15 நாட்களாக் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரண்டாவது முறையாக தீர்ப்பு வழங்குவதற்கான திகதியாக இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்டபோதும், எதிரிக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் சில மணி நேரங்களில்கூட அவருக்கு மரணம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
எனவே எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி மரண படுக்கையில் இருக்கின்ற நிலையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கருணை விண்ணப்பம் செய்துள்ளார். இதனையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.
இந்த வழக்கின் எதிரி 69 வயதில் நஞ்சருந்தியதன் காரணமாக வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். 14 வயதில் மாணவியாக இருந்து போது மானம் பறிபோன நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தையுடன் நீதிகோரி நீதிமன்றில் நிற்கின்றார்.
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள எதிரிக்கு அதியுச்ச தண்டனையாக 20 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.
ஆயினும் எதிரியின் நிலைமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்பவற்றை மன்று மிகவும் கவனமாக ஆய்வு செய்து, பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தமைக்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்குகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பின் காரணமாக பிறந்துள்ள குழந்தைக்கும் நட்டயீடாக எதிரி 20 லட்சம் ரூபா செலுத்த வேண்டும்.
இந்த நட்டயீட்டைக் கட்டத் தவறினால் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் சில மணித்தியாலங்களில் கூட, மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையில் எதிரி வைத்தியசாலையில் இருப்பதாக வைத்தியசாலையன் பதில் பணிப்பாளர் அளித்த சாட்சியத் தகவலை மன்று மீண்டும் பரிசீலனை செய்து ஆட்கடத்தல் குற்றத் தண்டனையாகிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிரி ஏக காலத்தில் அனுபவிப்பதற்கு மன்று அனுமதி அளிக்கின்றது என தெரிவித்தார்.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த எதிரி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கான முயற்சியின் பின்னர் வைத்தியசாiயில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட பெண் 9 வருடங்ளின் பின்னர் தனக்கு நீதி வேண்டும் என கோரி குழந்தையுடன் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இதேபோன்று மறுபுறத்தில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரி தன்னை மாய்த்துக் கொள்வதற்காக நஞ்சு அருந்தியிருந்தாலும், அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என நஞ்சுடனும், அவருடைய வயோதிபத்துடனும் வைத்தியசாலையில் மருத்துவர்களின் போராட்டம்.
சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவரைத் தாயாக்கிய பாரதூரமான குற்றம் புரிந்தவருக்கு அவருடைய வயோதிபத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்ட்ட பெண்ணின் மானத்திற்கான போராட்டத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நீதி வழங்குவதற்காக நீதிமன்றத்தில் போராட்டம்.
இத்தகைய நிலைமையிலேயே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
லிங்ஷான் நகரிலுள்ள தாய்பிங் உயர் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி ஆசிரியரின் தகாத நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் அங்கிருந்த மாணவர்களால் படமாக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தகைய தகாத நடவடிக்கை குறிப்பிட்ட பாடசாலையில் இடம்பெற்றுள்ளதை லிங்ஷான் நகர அரசாங்கத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தப் பாடசாலையின் ஆய்வுகூடத்தில் கடமையாற்றி வந்த ஹுகோ என்ற அந்த ஆசிரியர் மனநலம் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மேற்படி ஆசிரியரின் பாலியல் வல்லுறவு முயற்சி நடவடிக்கையின் போது, சம்பவ இடத்திற்கு வந்த ஏனைய ஆசிரியர்கள் அந்த ஆசிரியரின் பிடியில் சிக்கியிருந்த மாணவியை விடுவித்தனர். அந்த மாணவிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த அந்த ஆசிரியரின் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர ரெடியாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என கூறப்பட்டது.
ஆனால், தெறி சென்ஸார் முடிந்துவிட்டது, படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிட்டது, படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் என பல வதந்திகள் உலா வந்தது.
இதைக் கவனித்த அட்லீ, தெறி படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறிவிட்டார்.
பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகின்றது.
ஏற்கனவே பிரேதப் பரிசோதனை அறிக்கை, கலாபவன்மணியின் முக்கிய உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனை ஆகியவற்றின் முடிவுகள் பெறப்பட்டுள்ளது. அதில் கலாபவன்மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கலாபவன்மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க தனிப்படை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் கலாபவன்மணியின் மனைவி நிம்மி கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ்சென்னிதலாவுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார் அதில் தனது கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை விரிவாக விசாரணை நடாத்தி கண்டறிய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த நிலையில் கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய பரிசோதனை கூடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் கலாபவன்மணியின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவியாக இருக்கும் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
வன்னி மாவட்டத்தில் 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனோர் ஆணைக்குழுவிற்கு 1660 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போழுதும் 1049 நபர்களே சாட்சியமளித்தனர்.
இவ் ஆணைக்குழுக்கு புதிதாக 306 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணையாளர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று(30.03) இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நிறைவடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ஆணையாளர்..
25,26,27ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற காணமல் போனோர் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு 874 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் 457 பேர் மட்டுமே சாட்சியமளித்திருந்தனர். புதிதாக 110 பேர் தங்களது உறவுகளை காணவில்லை என சாட்சிமளித்தாகவும்,
28ம் திகதி மன்னாரில் நடைபெற்ற காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கு 257 பேருக்கு அழைப்பு விடுத்த போதும் 170 பேர் மட்டுமே சாட்சியமளித்திருந்தனர். புதிதாக 41 நபர்கள் சாட்சிமளித்திருந்தனர்.
29,30ம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்ற ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு 529 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த போழுதும் 421பேர் மட்டுமே ஆணைக்குழுவிற்கு சாட்சிமளித்திருந்தினர். புதிதாக 155 நபர்கள் சாட்சிமளித்திருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் பதவி விலக வேண்டும் என்பதை கேள்வியுற்ற சிறுமி ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்றை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த காணொளியை அலாபாமாவை சேர்ந்த அந்த சிறிமியின் பாட்டி கப்ரீனா ஹரிஸ் முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.
`பரக் ஒபாமா பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார், நான் புதிய ஜனாதிபதியை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை’, என அச்சிறுமி சொல்லி அழுவது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் சிறுமியை ஆறுதல் படுத்தும் வகையில் வீடியோவிற்கு பராக் ஒபாமாவும் பதில் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
`சிறுமியை கண்ணீரைத் துடைக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எங்கும் செல்லப் போவதில்லை. நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும் நான் அவளைப்போல ஒரு அமெரிக்க பிரஜையாக இங்கேதான் இருப்பேன். அவள் வளர்ந்ததும் என்னுடன் சேர்ந்து வேலை செய்யலாம். அவளது கடிதங்களுக்காக காத்திருப்பேன். நாம் எமது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடுவோம்’, என ஒபாமா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் தற்போது அந்த சிறுமியின் கனவு நனவாகியுள்ளது. அண்மையில் அந்த சிறுமியை வௌ்ளைமாளிகைக்கு அழைத்துள்ளார் ஒபாமா. அது தொடர்பான காணொளியும் வௌியிடப்பட்டுள்ளது.
6 ஆவது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர்10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் முதலாம் பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் (6 புள்ளி), இங்கிலாந்து (6புள்ளி), இரண்டாம் பிரிவில் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தன.
நடப்பு சம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி நியூசிலாந்து தான். சுப்பர் – 10 சுற்றில் இந்தியா (47 ஓட்டங்கள் வித்தியாசம்), அவுஸ்திரேலியா (8 ஓட்டங்கள்), பாகிஸ்தான் (22 ஓட்டங்கள்), பங்களாதேஷ் (75 ஓட்டங்கள்) ஆகிய அணிகளை புரட்டியெடுத்து கம்பீரமாக அரையிறுதிக்கு வந்திருக்கின்றது.
இதுவரை நான்கு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய போதிலும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, நியூசிலாந்து பிரமாதமாக விளையாடி இருக்கின்றது.
அந்த அணியின் வெற்றிகளை அலசி ஆராய்ந்தால் சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக இருப்பது புரியும். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் இதுவரை 20 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள். சுப்பர் 10 சுற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அணியாக நியூசிலாந்து திகழ்கின்றது.
ஒட்டுமொத்தமாக அவர்களது பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 5.97 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மற்ற அணிகளை காட்டிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னர் (9 விக்கெட்), சோதி (8 விக்கெட்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. துடுப்பாட்டத்தை எடுத்துக் கொண்டால் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் மட்டுமே அரைச்சதம் அடித்திருக்கிறார். என்றாலும் ஒருங்கிணைந்த அணியாக முதல்முறையாக இறுதி சுற்றை அடையும் வேட்கையுடன் இன்றைய அரையிறுதியில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்திலேயே மிகச்சிறப்பாக உள்ளது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தென்னாபிரிக்கா (2 விக்கெட் வித்தியாசம்), ஆப்கானிஸ்தான் (15 ஓட்டங்கள்), இலங்கை (10 ஓட்டங்கள்) ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.
இதில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ஓட்டங்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக துரத்தியடித்து உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (168 ஓட்டங்கள்), ஜோஸ் பட்லர் (123 ஓட்டங்கள்), ஜேசன் ரோய் (105 ஓட்டங்கள்), மோர்கன் உள்ளிட்டோர் துடுப்பாட்டத்தில் மிரள வைக்கக்கூடியவர்கள்.
எனவே நியூசிலாந்தின் சுழலுக்கும், இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் இடையிலான மோதலாகத் தான் இன்றைய போட்டி அமையும்.
2 ஆவது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதில் சுழற்பந்து வீச்சின் தாக்கமும் இருக்கும்.
நேற்று(28.03.2016) மன்னார் மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண் அகழ்வதாகவும்,
இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படா நிலையில் அப்பகுதி மக்கள் நேற்றுக் காலை வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான இ.சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டதன் அடிப்படையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் அப்பகுதியை பார்வையிட சென்றபொழுது உரிய இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மணல் ஏற்றியக்கொண்டிருந்த நிலையில் அவதானிக்கப்படது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள தம்பனைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு உரிய இடத்துக்கு அழைத்து உரிய வாகனத்தை சோதனையிட்டபோது இப்பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி மண்ணகழ்வு மேற்கொண்டு வாகனங்கள்ளில் ஏற்றப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆவணசெய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். இவ்விடத்திற்கிற்கு மன்னார் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.மடவல்ல வருகைதந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே இந்திய வீரர்களுக்காக தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படித்தியுள்ளார்.
தன் உடல் அழகால் தனது ரசிகர்களை மெய்சிலிரிக்க செய்யும் விதமான விடயங்களில் மிகவும் பிரசித்திபெற்ற பூனம் பாண்டே, ஆறாவது இருபதுக்கு 20 உலககோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றபோது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் .
இதேபோன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் டுவிட்டரில் பூனம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு ஒரு பரிசு” இதில் தனிப்பட்ட முறையில், ”கோலி, இது உனக்கு தான்” என்று கூறி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.