50 வயதுடைய வகுப்பாசிரியர் 10 வயது மாணவியை கணனி அறைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து கம்பளை நீதிமன்ற நீதிவான் சாந்தனி மீகொட வகுப்பாசிரியரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள மகாவித்தியாலயம் ஒன்றிலேயே நிகழ்ந்துள்ளது.
தமது வகுப்பில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவரை வகுப்பாசிரியர் அழைத்து “உனது சகோதரர் குற்றம் புரிந்துள்ளார். அது தொடர்பாக உன்னிடம் விளக்கமாகக் கூறுகின்றேன். கணனி அறைக்குள் போ” என தெரிவித்துள்ளார். சிறுமி அங்கு சென்றதும் ஆங்கிலப் பாடத்திற்குப் பொறுப்பான வகுப்பாசிரியர் அவ்வறைக்குள் சென்று சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளார்.
வகுப்பாசிரியரின் இச் செயல்குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆசிரியரைக் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட் டார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தினை தடையின்றி முற்று முழுதாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
மின்சார நெருக்கடி தொடர்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை விளக்கமளிக்கும் மாநாடொன்று நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பங்காளதேஷில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு வைத்தியசாலையில் ‘லிப்ட்’ ஒப்பரேட்டராக பணி புரிந்தார்.
உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர். உடலுறவிலும் ஈடுபட்டனர். ஒரு கால கட்டத்தில் சோனாலியை திருமணம் செய்ய ஷிபான் மறுத்துவிட்டார்.
மேலும் இவருடனான உறவை ரகசியமாக அவரது லப்டப்பில் பதிவு செய்து இருந்தார். அது போன்று பல பெண்களுடன் வைத்திருந்த உறவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சோனாலி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று குளிர்பானத்தில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து ஷிபானுக்கு சோனாலி கொடுத்தார். அதை குடித்ததும் ஷிபான் மயங்கி விழுந்தார்.
உடனே, அவரது கையை சோனாலி கயிற்றால் கட்டினார். பின்னர் அவரது குரல் வளையை கத்தியால் அறுத்து கொலை செய்தார். அதன் பிறகும் அவர் மீதான ஆத்திரம் தணியவில்லை.
ஷிபானின் மார்பை கத்தியால் வெட்டி பிளந்தார். உள்ளே இருந்த அவரது இதயத்தை வெட்டி வெளியே எடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து சோனாலியை பொலிசார் கைது செய்தனர்.
பிறகு அவர் மீது குல்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் ஷிபானுக்கு பெரிய இதயம் இருக்க வேண்டும் என கருதினேன். அதன் அளவை பார்க்கவே வெளியே எடுத்தேன் என்றார்.
இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொடூர கொலை செய்த சோனாலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
பொதுவாக வங்காள தேசத்தில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் விதிவிலக்காக அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டதாக அரசு சட்டத்தரணி கூறினார்.
சென்னையில் கடந்த 27ம் திகதி தங்கம் விலை ஒரு பவுன் 21 ஆயிரத்து 664 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு 8 உயர்ந்து 21 ஆயிரத்து 504 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு 232 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 736 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.29 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,717–க்கு விற்கிறது.
தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.435 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.20 ஆகவும் உள்ளது.
கழுகு ஒன்றை துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காலி பொலிஸில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே குறித்த சந்தேகநபர்கள் பற்றிய தகவல் வௌியானது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். சாவகச்சேரி மரவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடி குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரினால் இவை மீட்கப்பட்டுள்ளன.
யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சாவகச்சேரி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவை மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி,
தற்கொலை அங்கி ஒன்று, 04 கிளேமோர் குண்டுகள், வெடி மருந்துகள் அடங்கிய 03 பொதிகள், 09 மில்லிமீற்றருடைய துப்பாக்கி ரவைகள் 2 பக்கட்டுக்கள் (சுமார் 100 ரவைகள்) ஆகியன உட்பட இரண்டு பக்கட் பட்டரிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கடந்த யுத்த காலத்தின் போது மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது மகனை இரானுவத்தினர்தான் பிடித்துச் சென்றனர். எனது மகன் இறக்கவில்லை எனது மகனை மீட்டுத் தாருங்கள்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் வவுனியாவில் இடம்பெற்றுவருகின்றது.
இதில் சாட்சியமளிக்கையிலேயே தாய் ஒருவர் இக் கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,
சிவசுப்பிரமணியம் இராசமலர் ஆகிய தான் 2 பிள்ளைகள், கணவருடன் நெடுங்கேனி பகுதியில் வசித்து வருகின்றேன்.
நெடுங்கேனியிலிருந்து செல் தாக்குதல் காரணமாக 2007ம் ஆண்டு அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தோம். எனது மூத்த மகனை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர். அங்கிருந்து எனது முத்தமகன் சிவசுப்பிரமணியம் சிவதீபன் தப்பித்து வந்து எம்முடன் இணைந்து கொண்டார்.
விடுதலைப் புலிகளின் கண்களுக்கு தெரியமால் எனது மகனை அந்த யுத்தகாலத்திலும் பாதுகாத்து வந்தேன். யுத்தம் உக்கிரமானதன் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த சமயத்தில் இரானுவத்தினர் எனது மகனை மறித்து நாங்கள் விசாரணை செய்த பின்னர் உங்கள் மகனை விடுவதாகத் தெரிவித்தனர்.
நாங்கள் மகனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததும் இராமநாதன் முகாமிற்கு எம்மை அழைத்துச் சென்றனர். இதுவரை எனது மகனைக் காணவில்லை. எனக்கு மூன்று பிள்ளைகள். எனக்கு இவர் தான் மூத்தமகன்.
தற்போது கஸ்டத்தின் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். நான் பிச்சை எடுத்து சரி சந்தோசமாக வாழமுடியும். எனது பிள்ளை மட்டும் எனக்குப் போதும். உங்களது மகன் இறந்து விட்டார் என நீங்கள் நினைகின்றீர்களா என ஆணையாளர் வினவியபோது எனது மகனை உயிருடன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன், எனது மகன் இறக்கவில்லை, எனக்கு எனது மகன்தான் வேண்டும் இறப்புச் சான்றிதல் இல்லை எனத் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீடுகளுக்கான விண்ணப்பப்படிவத்தை கையளிப்பதற்காக வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் கையொப்பத்தை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று(30.03.2016) காலையில் இருந்தே முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பிரதேச செயலகம் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் விண்ணப்பப்படிவத்தில் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையொப்பத்தை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு அதிகளவான மக்கள் செல்கின்றனர்.
இதன்காரணமாக மக்களைக் கட்டுப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் விண்ணப்பத் திகதி முடிவடையவுள்ளதனால் மக்களின் நலன்கருதி கடமையை செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உரிமைக்காகப் போராடிய ஒரு இனத்தை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தி அவர்களின் உயிர், உடைமை ஆகியவற்றிற்கும் அழிவுகளை ஏற்படுத்திவிட்டு சர்வதேச சமூகம் வழங்கும் நிவாரணங்களையும் தட்டிப்பறிக்கும் முயற்சியில் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது.
புதிதாக அமைக்கவுள்ள 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
எமது உரிமைக்கும் தற்காப்பிற்குமான ஆயுதப்போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் 2009இல் சர்வதேச ஒத்துழைப்புடன் ஆயுதமுனையில் மௌனிக்கப்பட்டது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீரவில்லை என்பதை உணர்ந்துகொண்ட சர்வதேச சமூகம் தமது தவறுகளை மூடிமறைக்க மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தது.
இதன் முதற்கட்டமாக இந்தியா வடக்கு,கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளைக் கட்டித்தருவதற்கு முன்வந்தது. ஆனால் கடந்த அரசு அதனை தனது இராஜதந்திர அணுகுமுறையினூடாக நாட்டின் சகல பகுதியினருக்கும் என்று மாற்றியமைத்தது.
யுத்தம் முடிவடைந்த கையுடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையினால் இன்னமும்கூட முற்றுப்பெறாமல் இழுபறிபடுகிறது.
இந்திய அரசாங்கம் அறிவித்ததைப் போன்று 50,000 வீடுகளையும் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கினால் சேதத்தின் விபரம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே முன்னைய அரசாங்கம் தனது இராஜதந்திர நடவடிக்கையினூடாக அத்தகைய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியது.
தற்போது 21 இலட்சம் பெறுமதியான 65,000 உருக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு வெளிநாட்டுக்கடன் உதவியுடன் அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அத்திட்டத்திலும் பயனாளிகளைத் தெரிவு செய்யும் படிவத்தில் கேட்கப்படுகின்ற கேள்விகளையும் உற்றுநோக்கும்போது கடந்த அரசாங்கத்தின் அணுகுமுறை இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கின்றதா என்ற சந்தேகம் மிகவும் வலுவாக எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் தரம் ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்துகையில், பயனாளிகள் தெரிவு எமது மக்களை மேலும் குழப்பியுள்ளது. அதேநேரம் தற்போதும் இடம்பெயர்ந்த முகாமில் இருக்கின்றீர்களா என்றவொரு வினா கேட்கப்பட்டுள்ளதே தவிர பொதுமக்களின் இழப்பீடு தொடர்பாக எவ்விதமான தரவுகளையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இவ்வாறானதொரு கேள்வியால் முகாமில் இல்லாத இழப்பைச் சந்தித்தவர்கள் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத நிலையும் உள்ளது.
போரில் பல்வேறு உள்ளக இடப்பெயர்வுகளைச் சந்தித்து வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி எதிர்காலத்திற்காகச் சேமித்திருந்த அனைத்தையும் இழந்து ஒதுங்குவதற்கு கொட்டில்கூட இல்லாத நிலையில் எமது மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக மிகவும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
உறவினர்களையும் தமது அன்பிற்குரியவர்களையும் கணவரையும் மனைவியையும் பிள்ளைகளையும் தாய் தந்தையரையும் இழந்து இருந்த சொத்துக்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நிவாரணத்தை அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்று வழங்க வேண்டியது பொறுப்பு மிக்க அரசாங்கத்தின் கடமை.
ஆனால் குளறுபடிகள் நிறைந்த விண்ணப்பத்தை எங்கு பெற்றுக்கொள்வது என்று தெரிவிக்காமல், யாரிடம் கையளிப்பது என்பதை அறிவிக்காமல் எமது மக்களை மீண்டும் மீண்டும் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவதுதான் நல்லாட்சியா?
அதுவொருபுறமிருக்கையில் பொதுமக்களை தமது சொந்தக்காணிகளில் மீளவும் குடியேற்றி அதிலேயே அவர்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்படவேண்டும். தற்போது ஒருவிட்டுக்கு செலவிடப்படும் 21 இலட்சத்தில் நிரந்தமான கல்வீடுகள் இரண்டு கட்டமுடியும். அது பரம்பரை ரீதியாகவும் மக்களுக்கு பயன்தரவல்லது. அவ்வாறான செயற்பாட்டை தவிர்க்கும் இந்த அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?
வன்னி மாவட்டத்திற்கு மட்டும் ஏறக்குறைய 40 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கான வீட்டினை நேர்மையாக வழங்க இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
பொதுமக்களின் இழப்பீடு குறித்த உண்மையான தொகை தெரிந்துவிட்டால் தாம் சர்வதேசரீதியில் மீண்டும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் பயனாளிகளைக் குறைத்துக் காட்டுவது எந்தவிதத்திலும் நன்மை பயக்காது.
உண்மையான புள்ளிவிபரங்கள் அனைத்து உதவி வழங்கும் நாடுகளிடமும் இருக்கின்றன. ஆகவே அரசாங்கம் தயக்கமின்றி உள்ளது உள்ளபடி பயனாளிகளைத் தெரிவுசெய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு அத்தியாவசிய தேவையான வீட்டை எமது சூழலுக்கேற்ப, எமது பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு அமைய கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும். அல்லாவிடில் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களுடன் வீதியில் இறங்கி போராடநேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்த வாரஇறுதிச் சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வவுனியா பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், நகரசபைச் செயலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்கள், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள அமைப்புகள், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழுள்ள நிறுவனங்கள், சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்கள், குடிசைக் கைத்தொழிலாளர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் சந்தைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவே இவ்வாறான வாரஇறுதிச் சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தமிழ் சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து மாதாந்தம் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாறான வாரஇறுதிச் சந்தையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.
இதுதொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஐவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா நகரின் மத்தியில் ஏ9 வீதியின் போக்குவரத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது
இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவருக்கே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
‘மனிதத்துவத்துக்கு எதிரான அரச வன்முறைகள், குற்றங்கள், படுகொலைகளினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தி, 2009ம் வருடத்துக்குப் பின்னரான காலங்களில் அதிதீவிரமாக போராடிக்கொண்டிருக்கும் இலாபநோக்கற்ற, ‘மக்கள் நலன்-தேசவளப்பாதுகாப்பு செயல்பாட்டு’ சிவில் சமுக மனித உரிமைகள் அமைப்பாகிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,
தனது கடந்தகால செயல்பாடுகள் – நடவடிக்கைகளை குழு விமர்சனத்துக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் – நிர்வாக ஒழுங்கமைப்புகள் தொடர்பில் தீர்மானித்தலுமாகிய ‘மீள்தகவமைவுக் கலந்துரையாடலை’ கடந்த 26.03.2016 சனிக்கிழமை அன்று நிகழ்த்தி,
பிரஜைகள் குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்களை வசதிப்படுத்தி நெருக்கடிகளை நிவர்த்திக்கும் நோக்கத்தில், செயலாளர், உபசெயலாளர், தலைவர், உபதலைவர், பொருளாளர், ஊடகப்பேச்சாளர் உட்பட 11 உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவையும், பிரதேச இணைப்பாளர்களையும் மீளத் தெரிவுசெய்து கட்டமைத்துள்ளதாக குழுவின் ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா அறிவித்துள்ளார்.
புதிய தலைமைக்குழுவின்
செயலாளராக திரு.தி.நவராஜ்
உபசெயலாளராக திரு.கு.இராஜேந்திரகுமார்
தலைவராக திரு.கோ.ராஜ்குமார்
உபதலைவராக திரு.நா.நடராசா ,
பொருளாளராக (கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்க முன்னாள் தலைவி) திருமதி.பே.பாலேஸ்வரி,
ஊடகப்பேச்சாளராக திரு.அ.ஈழம் சேகுவேரா,
குழுவின் இணைப்பாளராக திரு.எஸ்.றொஹான் ராஜ்குமார்,
நகரப்பகுதி இணைப்பாளராக திரு.த.கோணேஸ்வரன்,
கல்மடு மற்றும் பூம்புகார் பகுதிகளின் இணைப்பாளராக திரு.க.பழனிநாதன்,
நெடுங்கேணி பிரதேச இணைப்பாளராக (கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தலைவி) திருமதி.கா.ஜெயவனிதா அவர்களும்,
ஏலவே கடிதங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துரையாடலில் சமுகமளித்தவர்களின் ஒருமித்த சிபாரிசுவோடு (வாக்களிப்பு ஏதுமின்றி) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,
புதிய தலைமைக்குழுவில் உறுப்புரிமை பெற்றுள்ள செயல்பாட்டாளர்கள் தமது பொறுப்புகள் – கடமைகளை 26.03.2016 இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தமது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை மூலமாக சகல பிரஜைகளுக்கும் அறியத்தந்துள்ளனர்.
நேற்று (29.03.2016) காலை 5.50 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனரைக் கைது செய்து இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். இதனைக் கண்டித்து இன்று தனியார் பேரூந்தின் சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எமது தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனரைத் தாக்கவில்லை. தனியார் பேரூந்தில் ஏறிய பயணிகளை இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் வழிமறித்து இ.போ.சபை பேரூந்தில் ஏறுமாறு பணித்ததன் காரணமாக இ.போ.சபை ஊழியரை எவ்வாறு எமது பேரூந்தில் ஏறும் பயணிகளை நீங்கள் எவ்வாறு இ.போ.ச பேரூந்திற்கு அழைப்பிர்கள் என இ.போசபை நடத்துனரை தள்ளிவிட்டதாகவும், இ.போ.ச நடத்துனர் போலியான காரணத்தினைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார் எனவும் தனியார் பேரூந்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்தின் ஊழியர்கள் ‘எமது சாரதி, நடத்துனருக்கு சரியான தீர்வு வேண்டும்’, ‘பக்க சார்பற்ற நீதி வேண்டும்’, ‘இணைந்த சேவை வழங்கு’ என பாதாதைகளை எந்திய வண்ணம் கவனயீர்ப்புப் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
முதலாம் குருக்குத்தெருவில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்தின் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட போதும் இலுப்பையடிச் சந்தியில் தரித்து நிற்கும் உள்ளுர் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஒமந்தையில் இன்று (30.03.2016) சற்றுமுன் டிப்பர் மீது வான் மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து சென்ற டிப்பர் வாகனம் பாதையில் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட போது வவுனியாவிருந்து பயணித்த வான் டிப்பர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஒமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
தேசிய விருதுப் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசியவிருது தேர்வுக்குழு உறுப்பினர் என்பது பெரிய சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து கங்கை அமரன், அண்ணனா, தம்பியா என்ற உறவுமுறையெல்லாம் இங்கு கிடையாது. நாங்கள் வெறும் தமிழுக்காக மட்டும் அங்கு அமரவில்லை. எல்லா மொழிகளுக்கும் நாங்கள் பார்த்தாக வேண்டுமே தவிர நிஜமான கலைஞனாக எல்லா மொழிகளுக்குமிடையே பார்த்துதான் தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.