தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மைதானம் நேற்று (02.03) புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது.
இன் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார், பாடசாலை ஆசிரியர் திரு.டி.உமாசுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு.முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு.சஞ்சீவன் மற்றும் , சேமமடு கிராம முக்கியஸ்தர்கள், என பலர் கலந்துகொண்டனர்.
இப் பாடசாலை மாணவர்களினதும், பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்திக்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களாலான உதவிகளை நேரடியாகவோ அல்லது கழகத்தின் ஊடாகவோ உதவ முன்வரவேண்டும் என தமிழ் தேசிய இளைஞர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மைத்திரிபால தலமையிலான அரசாங்கம் ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த மக்களிற்கான நூறுநாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதுடன் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் அரசியல் கலாச்சாரத்தை விடுத்து வடக்கு கிழக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீளவும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகின்றோம் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐம்பது நாட்கள் கடக்கின்ற நிலையில் உருப்படியான எந்த நன்மைகளையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு என்ற போர்வையில் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலைஅடைகின்றோம்.
ஏனெனில் முன்னைய அரசாங்கம் கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கு உள்ளிட்ட பாரியளவு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்தது. அத்தகைய அனைத்து திட்டங்களையும் மீளாய்வு செய்வதாயின் நூறு நாட்கள் அல்ல ஐந்து வருடங்கள் கடந்தாலும் புதிய அரசினால் முடியாது.
இந்நிலை தொடருமாயின் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அபாயம் உருவாகும். எனவே நல்லாட்சி என்பது அபிவிருத்தித் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதில் மாத்திரம் தங்கிவிடவில்லை அதனை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.
ஆகவே வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதிய அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
எமது கட்சியால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சனைகளை நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என புதிய அரசை கோருகின்றோம்.
யுத்தம் முடிவடைந்து ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் தமிழ் மக்கள் அகதிமுகாங்களில் வாழ்கின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது.
இதற்கு நல்ல எடுத்துக்காட்டு வவுனியா பூந்தோட்டம் அகதி முகாம் மற்றும் சிதம்பரபுரம் அகதிமுகாம்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் இங்கு வாழுகின்ற மக்களின் காணி உரிமம் மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகளை தங்களின் தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்தி வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
எனவே நூறு நாள் வேலைத்திட்டத்திற்குள் இந்த மக்களின் வாழ்வியல் அடிப்படை பிரச்சினைகள் தீர்ப்பதற்கான நடவடிக்கையை புதிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் அந்த மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான தெருவோர உண்ணாவிரதப் போராட்டத்தை நானும் எனது கட்சியும் முன்னெடுக்கும் சூழல் உருவாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் இன்றைய தினம்(02.03.2015) சிறப்பாக சப்பர திருவிழா இடம்பெற்றது .
இன்றுமாலை ஆறுமணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எழுமணிளவில் உள்வீதி வலம்வந்து பின்னர் எட்டுமணியளவில் கருமாரி நாகபூசணி அம்பாள் அழகிய சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் மீண்டும் ஒன்பது மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தாள் .
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முதலாம் திகதி வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இம்முறை தமிழகத்திலிருந்து 112 வள்ளங்களில் 3945 பேரும் இலங்கையிலிருந்து 265 வள்ளங்களில் 3744 பேரும் வருகை தந்திருந்தனர். இம்முறையே அதிகூடிய பக்தர்கள் கலந்து கொண்டதாக இலங்கை கடற்படை மற்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவைப் பாதையும் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகளின் பின் கொடி இறக்கமும் இடம்பெற்றது.
இலங்கை சார்பில் யாழ். குரு முதல்வர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நெடுந்தீவு பங்குத் தந்தையும் இந்தியாவின் சார்பில் பாளையங்கோட்டை அருட்தந்தை ஜோ மிக்ஸ் மற்றும் இராமேஸ்வரம் பங்குத்தந்தை அருட் திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர்.
யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் வழிகாட்டலில் இலங்கை கடற்படையினரின் பூரண ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வருடாந்தத் திருவிழாவில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன, வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் திஸாநாயக்க, இந்திய துணைத் தூதுவர் வை.கே. நடராஜ், முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளதுடன் யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வந்த பக்தர்கள் ஆலய வழிபாட்டிற்கு கடலில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் உயிர் காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சுமார் 8 ஆயிரம் அடியார்களின் பாதுகாப்புக்காக பெருந்தொகையான படையினரும் பொலிஸாரும் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததால் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 130 ற்கும் அதிகமான அருட்சகோதரிகளும் அருட் தந்தையர்களும் இலங்கையிலிருந்து 30ற்கும் அதிகமானோரும் வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழ்நாட்டு பெண் ஒருவரின் ஏழு பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இது தொடர்பில் கச்சதீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
கணனியில் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பென்டிரைவ்கள் சில சமயங்களில் வேகம் குறைவாக இயங்கும். இச்சந்தர்ப்பங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1. பென்டிரைவ் ஆனது எப்போதும் NTFS வடிவில் கோப்புக்களை சேமிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு பென்டிரைவினை போர்மட் செய்யும் போது NTFS கோப்பு வகையினை தெரிசெய்து, Quick Format என்பதை நீக்க வேண்டும்.
2. பென்டிரைவின் ஐகனில் Right Click செய்து Properties சென்று Tools டப்பில் “Check Now” என்பதன் ஊடாக பென்டிரைவில் உள்ள வழுக்களை நீக்க வேண்டும்.
3. Properties சென்று “Hardware” டப்பில் உள்ள Device policy மாற்றியமைத்தல்.
4. நீண்ட காலப் பயன்பாட்டிற்கு பின்னர் Format செய்து மீண்டும் பயன்படத்துதல்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த கும்பலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகேஷ் சிங் என்பவர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
பலாத்காரம் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் பிபிசிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், இரவில் வெளியில் செல்லும் பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும், பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தூண்டும் காரணமாக உள்ளதாகவும் எனவே இவ்விடயத்தில் பெண்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
பலாத்கார சம்பவத்திற்கு ஒரு ஆணை விட பெண் தான் முக்கிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த பெண் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது ஒரு சிற்றூந்தில் பயணம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவருக்கு லிஃப்ட் வழங்குவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பேருந்தினுள் அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது இரும்பு தடியை கொண்டு அந்த பெண்ணை பலமாக தாக்கினர்.
இதனால் படுகாயமடைந்த அந்த பெண், இரண்டு வார போராட்டத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை எழுப்பிய இந்த சம்பவத்தை பற்றி முகேஷ் கூறுகையில், அந்த பெண் அன்று இரவு நாங்கள் பலாத்காரம் செய்ய முயன்றபோது சண்டை போடாமல் இருந்திருந்தால் நாங்கள் அவ்வாறு கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்கள் அந்த பெண்ணை கொன்றது விபத்து என்று குறிப்பிட்ட மகேஷ், பலாத்காரம் செய்யும் போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்க கூடாது, என்றும் அமைதியாக பலாத்காரத்தை அனுமதித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அமைதியாக அனுமதித்திருந்தால் அந்த பெண்ணை தாக்கியிருக்க மாட்டோம், அவரது ஆண் நண்பனை மட்டுமே தாக்கியிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு கௌரவமான பெண் இரவு 9 மணிக்கு மேல் சாலையில் சுற்றி திரியமாட்டார் என்றும் ஆணும் பெண்ணும் சமம் இல்லை. பெண் என்பவள் வீட்டை பராமரிப்பவளே அன்றி தவறான ஆடைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் டிஸ்கோ பார் என்று அலைபவள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ், இந்த விடயத்தில் மரண தண்டனை வழங்குவது பெண்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
அதாவது முன்னெல்லாம் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால், அவள் யாரிடமும் நடந்ததை கூறமாட்டாள் என்று உயிரோடு விட்டுவிடுவார்கள்.
ஆனால் மரண தண்டனை அறிவித்தால் பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகள் அவர்களை கொன்று விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகேஷ் தான் அந்நேரத்தில் வாகனம் ஓட்டியதாகவும், பலாத்காரத்தில் ஈடுபடவில்லை என்று வாதிட்டதை ஏற்காத நீதிபதி, டி.என்.ஏ சாட்சிகள் அவருக்கு எதிராக உள்ளதாக தெரிவித்ததோடு இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தாததும் தவறு என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் பேய் ஒன்று ஓடி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. டிஸ்னிலேண்ட் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் பேய் ஒன்று ஓடியாடி விளையாடியுள்ளது. இந்தக் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பான இந்த வீடியோ, கடந்த 2009ம் ஆண்டு இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வீடியோவை நபர் ஒருவர் மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்து வரும் நபர்கள், அந்த பூங்காவில் என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை என கூறியுள்ளனர்.
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்க லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை- இங்கிலாந்து அணிகள் நேற்று வெலிங்டன் மைதானத்தில் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 309 ஓட்டங்களை குவித்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச பந்து வீச்சாளர் சுரங்க லக்மலை அழைத்தார் இலங்கை அணித்தலைவர் மத்யூஸ். அப்போது துடுப்பாட்டக்காரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி நேராக பந்தை வீசினார் சுரங்க லக்மல்.
இதையடுத்து களநடுவர்கள் உடனடியாக அவருக்கு எச்சரிக்கை விடுத்து சரியாக பந்தை வீசுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர் நடுவர்களின் எச்சரிக்கையையும் மீறி, அடுத்த பந்தையும் அதே பாணியில் வீசினார்.
இதைத் தொடர்ந்து 4 பந்துகள் வீசியிருந்த நிலையில், அவரை பந்து வீசக்கூடாது என்று தடுத்த களநடுவர்கள், போட்டி ரெஃப்ரி டேவிட் பூனிடம் இது குறித்து புகார் அளித்தனர்.
இதனிடையே, லக்மலின் செயலுக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி நடத்தை விதிமுறைகளின் 1வது பிரிவின்கீழ் இது மிகப்பெரும் தவறு மற்றும் தடை செய்யப்பட்ட பந்து வீச்சு முறையாகும்.
இதுகுறித்து டேவிட் பூன் கூறுகையில், “அது ஒரு ஆபத்தான மற்றும் நியாயப்படுத்த முடியாத பந்து வீச்சாகும்” என்று தெரிவித்துள்ளார்.
தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்து, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில், இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் கலாச்சார அலுவல்கள் ராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்த மாபெரும் சமாதான இசை விழா நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இசைவிழாவில் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் விஜித் களுகல்ல, உதவி மாவட்ட செயலாளர் கே.ரங்கநாதன், பிரபல பாடகி வனஜா சிறீனிவாசன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் உட்பட அமைச்சு அதிகாரிகள், கலைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
அரச இசைக்குழுவினரின் தமிழ், சிங்கள பாடல்கள் பிரபல பாடகர்களால் இசைக்கப்பட்டன. இங்கு உரையாற்றிய அமைச்சர்,
இன்று நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. இன, மத பேதங்களின்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒரே தாய் மக்களென்ற உணர்வு ஏற்படுகின்றபோது நிச்சயம் அமைதியும் சமாதானமும் தானாகவே மலரும். எவற்றினாலும் சாதிக்க முடியாதவற்றை இசையினால் சாதிக்க முடியும்.
அதனால் தான் புதிய அரசின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இத்தயை எந்த இனத்திற்கோ மதத்திற்கோ சொந்தமில்லாத இசை நிகழ்வை நடாத்துகின்றோம் எனத்தெரிவித்தார்.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 6 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்திபெறாது உயர்தரத்திற்குத் தோற்றியுள்ள மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கணித பாடம் சித்திபெற வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த உயர் தரத்தில் தோற்றுவதற்கு கணித பாட சித்தி கட்டாயமில்லை என்றாலும், தொழில் வாய்ப்பு, தொழிற்பயிற்சிகள், ஏனைய கற்கை நெறிகளை கற்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ கணித பாடம் அவசியம் என்று கோரப்படும் பட்சத்தில் கணிதம் பாட சித்தி அவசியம் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தனது வாகனத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்தே அவர் தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ காயங்களுக்குள்ளான நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வவுனியா கற்குளம் மக்களால் இன்று(02.03) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா கோவில்குளம் சந்தியில் ஒன்று கூடிய 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களை கற்குளம் பிரதேசத்தில் குடியேற்றியபோது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் மக்கள் வாழ முடியாத சூழலில் நிரந்தர வீட்டுத்திட்டத்திலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்த இம் மக்கள் தமக்கான நிரந்தர வீட்டை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந் நிலையில் தாம் வாழும் கிராமத்தின் பதிவை உறுதிப்படுத்துங்கள், மக்கள் வசிக்க கூடிய வீடுகளை அமைத்து தாருங்கள், எமது கிராமத்திற்கான வீதிகளை புனரமைத்து தாருங்கள், அபிவிருத்தி திட்டங்களில் எம்மையும் இணைத்து கொள்ளுங்கள் என்ற பதாதைகளையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் ”புதிய நோக்கில் சங்க இலக்கியம்” எனும் தேசிய கருத்தரங்கு ஒன்று 28.2.2015 அன்று பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஒழுங்குசெய்த இந்நிகழ்வினை தமிழ்த் துறைத்தலைவரும் பேராசிரியருமான மகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர், பதில் துணைவேந்தர், கலைத்துறைப் பீடாதிபதி போன்ற அதிதிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்விற்கான ஆதார சுருதி உரையினை முனைவர் சா.உதயசூரியன் (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம்,ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓய்வுநிலைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக் கருத்தரங்கின் ‘புதிய நோக்கில் சங்க இலக்கியம்’ எனும் தலைப்பினை மேலும் வலியுறுத்தி, அத்தலைப்பினைச் சார்ந்து பல்வேறு தலைப்புக்களில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் ஆய்வரங்குகளும் நடாத்தப்பட்டன.
உண்மையில், ஈழத்து இலக்கியத்துறையின் சமகால அரும் பெரும் பொக்கிஸங்கள் ஒருங்கேயமர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தியதும், சங்கத்தமிழ் நின்று முழக்கமிட்டதனையும், கருத்துரைகளுக்கான விளக்கவுரைகளைத் தந்தமையும், நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாக இளவல்களுடன் ஒன்றித்துப் போனதும் ஈழத்து இலக்கியத்தடத்தில் ஒரு பெறுமதியான பதிவாகவே இருக்கும்.