வடமாகாண விளையாட்டு திணைக்கழகத்தால் நாடாத்தப்படும் வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டி நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மா.வித்தியாலையத்துக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் முதலாவது விளையாட்டு போட்டியாக வேகநடை போட்டியை யாழ்பாண விளையாட்டுத்துறை மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.அருள்செல்வன் மற்றும் பருத்தித்துறை நகரசபை தலைவர் சபா ரவீந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்கள் வயது வேறுபாடின்றி கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
இதில் வெற்றியீட்டிய ஆண் போட்டியாளர்கள்..
1ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.சந்திரவேந்தன்
2ம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.றசிகரன்
3ம் இடம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ரங்கன்
பெண்கள் பிரிவில்..
1ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கனகேஸ்வரி
2ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சுதர்சினி
3ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கோகுலவதனி
இதில் கே.கனகேஸ்வரி பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
2010ம் ஆண்டு கே.கோகுலவதனி 20 கிலோ மீற்றரை 2மணித்தியாலம் 10 நிமிடம் 57 செக்கன்களில் கடந்து சாதனை படைத்தார்.
இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வேகநடைப் போட்டியில் கே.கனகேஸ்வரி 2மணித்தியாலம் 10 நிமிடம் 37 செக்கன்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
இதில் மாவட்ட ரீதியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டம் 1ம் இடத்தையும் பெண்களில் வவுனியா மாவட்டம் 1ம் இடத்தையும் 2ம் இடத்தை மன்னார் மாவட்டம் பெற்றுக் கொண்டன.
வவுனியாவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)வவுனியா மன்னார்-மதவாச்சி வீதி நேரியகுளம் சந்தியில் இன்று(02.03) காலை 6.30 மணியளவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று காலை வவுனியா நேரியகுளம் சந்தியில் மண் ஏற்றும் டிப்பர் மற்றும் லொறி என்பன வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் டிப்பர் தலைகீழாக கவிழ்ந்ததுடன் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஜெனீவா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமர்விற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து நேரடியாக ஜெனீவாவுக்கு சென்றுள்ளார். இவர் தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட கூட்டத் தொடரில் பங்குபற்றும் அமைச்சர் சமரவீர, இதில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசாங்கம் நால்லாட்சி மற்றும் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு, புலம்பெயர் குழுக்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.
வவுனியா, குருமன்காடு லக்சுமி திருமண மண்டபத்தில் நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் நாடுகளின் சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சியின் செயற்குழு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு யாழில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை எரிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கூட்டமைப்பின் பேச்சாளராகிய ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் தமிழரசுக் கட்சியின் செயற்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது.
கடந்த 21 ஆம் திகதி யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்பாட்டத்தின் போது திடீர் என இந்த உருவப் பொம்மை எரிக்கப்பட்டிருந்தது. இதன் போது அவ்விடத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆ.ர்எல்.எப். கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அதனை இன்று வரை எதிர்க்கவில்லை.
தமிழரசுக் கட்சி ஆராய்ந்ததில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வாகனத்திலேயே சுமந்திரனின் உருவப் பொம்மை கொண்டுவரப்பட்டதாக அறிய முடிகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உபதலைவர் சதீஸ் அவர்கள் சுமந்திரனின் கொடும்பாவியை எரித்தார். இதனை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கிறது.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயற்குழு முடிவெடுத்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தனக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் என்னும் பதவியைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார். உருவப் பொம்மை எரிந்தமையை நியாயப்படுத்தியும் வருகிறார்.
இதனை தமிழரசக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கும் அதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற செயற்குழு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் கடமை புரிந்து விட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சேனாதீர (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். குருநாகலைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிலின் ரத்தம் ஏலத்திற்கு வரவுள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இடுப்பெலும்பு முறிவு சிகிச்சைக்காக மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பரிசோதனைக்காக சர்ச்சிலின் ரத்தத்தில் சில துளிகள் எடுக்கப்பட்டது. இந்த ரத்தத்தை பாட்ரிசியா என்ற பெண் தாதி தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்தார். இந்நிலையில், அவர் இறந்த பிறகு தற்போது அந்த ரத்தம் ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சர்ச்சிலின் 50வது ஆண்டு நினைவு தினம் இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. அதைமுன்னிட்டு , டோர்செட்டில் அடுத்த மாதம் நடைபெறும் ஏல நிகழ்ச்சியில், இந்த ரத்த மாதிரியும் ஏலம் விடப்படுகிறது. இது 600 பவுண்ஸ் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலி நாட்டில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலி நாட்டை சேர்ந்த வாலென்டினா மவுரேய்ரா (14) என்ற சிறுமி, ‘சிஸ்டிக் பைபிரோசிஸ்’ என்னும் மரபணு நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவளது நுரையீரல் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயின் கடுமையை குறைக்க அவளால் உரிய சிகிச்சை பெற முடியவில்லை.
எனவே, இணைய தளத்தில் தனது வீடியோவை வெளியிட்டாள். அதில், சிலி அதிபர் மிச்செலி பாசெலெட்டுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
எனது தம்பி இதே நோயினால் 6 வயதில் உயிரிழந்தான். அதே நோய் தற்போது என்னையும் தாக்கியுள்ளது. நோயின் தாக்கத்தால் கடும் அவதியுறும் நான் உயிரை விட அதிபர் அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதனைத் தொடர்நது, அதிபர் மிச்செலி பாசெலெட் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்துள்ளார். நோயினால் அவதியுறும் அவளுக்கு ஆறுதல் கூறிய அவர் சிறுமி உயிரை விட அனுமதிக்க முடியாது என்றும், மேலும் அவரது சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் அடைத்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்கார புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில், உலகக்கிண்ண தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 47.2 ஓவர்களிலே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 312 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திரிமன்ன (139), சங்கக்கார (117) ஆகியோர் சதம் அடித்து இலங்கை அணிக்கு கைகொடுத்தனர்.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சங்கக்காரா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகசதம் அடித்தவர்கள் வரிசையில் விராத் கோலி (22), கெய்ல் (22), கங்குலி (22) ஆகியோர்களை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சங்கக்காரா இதுவரை 377 இன்னிங்ஸிகளில் விளையாடி 23 சதங்களை எடுத்துள்ளார். சச்சின் (49), பொண்டிங் (30), ஜெயசூரிய (28) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் 230 வறிய, மற்றும் பெரும்பாலானோர் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு அங்குள்ள அமைப்புகள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி ,சமூக அறவாரியத்தின் அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் 01.03.2015 இன்று மாணிக்கம் பண்ணை பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சத்தின் செட்டிகுளம் இணைப்பாளர் தயான், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ம.செந்தூரன், செயலாளர் ரா.சங்கர், சனசமுக நிலைய தலைவர் ச.சதாசிவம் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வி.சுந்தரம் உட்பட படிவம் 1,2,3,4 இன் அமைப்புகளின் தலைவர்கள் , உறுப்பினர்கள் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
வவுனியா வடக்கு கல்வி வலயப் பாடசாலைச் சாரணர்களின் நட்புறவு பாசறை நிகழ்வு இன்று(01.03) வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பாசறை நிகழ்வில் வவுனியா வடக்கு பாடசாலைகளைச் சேர்ந்த 150 சாரண மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் கேகாலை மற்றும் திருகோணமலையில் இருந்தும் சாரணர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் சாரணர் முகாமை அமைக்கும் நிகழ்வில் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி சாரணர் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டைவிட்டு வெளியே சென்ற 10 வயதுடைய சிறுமி நாளை திங்கட்கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்ப்படுத்திய பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் 10 வயது மதிக்கதக்க பாடசாலை சிறுமி வீட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரியாமல் 28.02.2015 அன்று பிற்பகல் பஸ்ஸில் சென்ற போது குறித்த பஸ்ஸில் இருந்த சாரதியும் நடத்துனரும் சந்தேகப்பட்டு இந்த மாணவியை நோர்வூட் பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின் நோர்வூட் பொலிஸார் விசாரணை செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் 50 ரூபாய் இருந்ததாகவும் விசாரணை செய்த போது தனது தந்தை மதுபானம் அருந்திவிட்டு தொடர்ச்சியாக தன்னை துன்புறத்துவதாகவும் இதனால் மனவேதனையடைந்து வீட்டில் இருந்து வெளியே செல்ல முற்பட்டதாக சம்மந்தப்பட்ட சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறுமி பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவராவார். 01.03.2015 அன்று குறித்த சிறுமியின் பெற்றோர்களை நோர்வூட் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
தந்தையின் துன்புறுத்தலால் குறித்த சிறுமியின் 14 வயதுடைய அண்ணன் கடந்த வருடத்தில் இவ்வாறு வீட்டை விட்டு கொழும்புக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.
கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவ்கரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.
நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது எனப் பார்ப்போம்.
கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தா லும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது.
இதற்குத் 20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்.
சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.
இது மட்டுமில்லாமல், இன்று பெரும்பாலான அலுவலகங்கள் செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் இயங்குவதால் சுற்றுப்புறக் காற்றைக் காட்டிலும் ஏசி அறையிலிருக்கும் காற்று வறண்ட தன்மையுடன் இருக்கும். இதனாலும் கண்கள் வறண்டுபோகும். இப்படி இருக்கையில், நீங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவது மிகவும் அவசியம்.
அதிலும் 20 நிமிடத்துக்கு ஒரு முறை மெதுவாக 10 தடவை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஈரப்பதம் கூடும், கண் தசையின் அழுத்தம் குறையும் என்பது வைத்தியர்களின் அறிவுரை. கண்கள் உலர்ந்து போவதாக உணர்ந்தால், ஒரு நாளில் இரண்டு முறை கண்கள் மீது தண்ணீரை அடித்துக் கழுவுவது நல்லது.
கணினியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் சருமம், கண்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவர் என்றால் ஒளியைப் பிரதிபலிக்காத லென்ஸைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற ஒளி அமைப்பு கண்களைப் பாதிக்கும்.
நாற்காலி அமைப்பும் மிகவும் முக்கியம். கணினி வைக்கப்பட்டிருக்கும் மேசையும், நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலியும் சவ்கரியத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது.
கணினித் திரையின் மேல்புறம் உங்கள் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது பார்வையிலிருந்து 10 முதல் 15 டிகிரி வரை கீழே இருத்தல் நல்லது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 20 முதல் 24 அங்குலம் தொலைவில் கணனித் திரையை வைப்பதும் முக்கியம்.
அதிக ரெசல்யூஷன் கொண்ட, ஒளியைப் பிரதிபலிக்காத எல்.சி.டி. (L.C.D.) திரைகளைப் பயன்படுத்துவது அவசியம். திரையின் அளவு குறைந்தபட்சம் 19 அங்குலம்வரை இருப்பதும், வெளிச்சம் கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் பார்வைக்குச் சவ்கரியமாக இருப்பதும் முக்கியம்.
கணினித் திரையின் பின்புறத்தில் ஜன்னல் இல்லாமல் பக்கமாக இருப்பதும் நல்லது. சுவரின் நிறம் முதற்கொண்டு கண்களைக் கூசச் செய்யும் ஒளிவீச்சை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். ஒருவருக்கு நல்ல பார்வைத் திறன் இருந்தாலும், கணினியை நோக்கிப் பார்வையைக் குவிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவர்கள் சரியான கண்ணாடியைப் பரிந்துரைத்துக் கண்களைப் பாதுகாப்பார்கள்.
சட்டவிரோதமான முறையில் வீசா எதுவுமின்றி நாட்டுக்குள் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 85 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு சுமத்ராவின் பெல்வானா பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 310 சட்டவிரோத குடியேறிகளை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். படகுகளின் மூலம் குறித்த சட்டவிரோத குடியேறிகள் இந்தோனேசியாவை சென்றடைந்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆப்கானிஸ்தான், மியன்மார், பாலஸ்தீனம், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெற்றது.
சம்பவத்தில் கெருடாவிலைச் சேர்ந்த செல்வராஜா ரவீந்திரன் (28), சிவகுமார் சோபன்(27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.
சோபன் என்பவர் கெருடாவிலில் கடை நடத்திவருபவர் என்றும், இன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் எதிரே மறைந்திருந்த குழுவினர் இவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டனர். விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 22வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலாவதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பாக அதிரடியாக ஆடிய ரூட் 121 ஓட்டங்களைக் குவிக்க, 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து 309 ஓட்டங்களை விளாசியது.
இதன்படி 310 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமான சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.
ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை இன்று பதிவு செய்த அவர், உலகக் கிண்ணப் போட்டிகளில் சதமடித்த இளம் வயது இலங்கை வீரர் என்ற பெருமையையும் தனதாக்கினார்.
மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலஹரத்ன டில்ஷான் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.
பின்னர் திருமானவுடன் ஜோடி சேர்ந்த குமார் சங்கக்கார அதிரடியாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனது 23வது சதத்தை விளாசினார்.
47.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 312 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்த இலங்கை வெற்றி வாகை சூடியது.
திருமான 139 ஓட்டங்களுடனும் சங்கக்கார 117 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
87 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.