வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஏ- வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஏ9 பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்துடன் மோதிப் படுகாயமடைந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் தோணிக்கல்லைச் சேர்ந்த எஸ்.சுலக்சன் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருசாந்தன் என்ற மற்ற மாணவர் தொடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவைக்கு அண்மித்து இடம்பெற்ற இந்த விபத்துத் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டாரின் டோகாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கட்டாரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்று இரவு பயணிக்கவிருந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் பணிப் பெண்களே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா சென்றிருந்த வேளை ஜீப் வண்டி கவிந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் இடம்பெற்ற வேளை ஜீப்பில் அறுவர் பயணித்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.
நேற்று பிரபல தமிழ் இணையத்தளமான தமிழ்வின் இணையத்தளத்தில் “மாணவர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு மது அருந்திய ஆசிரியர்கள்” என்ற தலைப்பில் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி தொடர்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல இணையத்தளங்கள் இச் செய்தியை பிரசுரித்திருந்தன.
இச் செய்தி தொடர்பாக வவுனியா நெற் இணையத்தளத்தை தொடர்புகொண்ட பாடசாலை அதிபர் திரு.தனபாலசிங்கம் அவர்கள்,
இச் செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். அடிப்படை ஆதாரமற்ற இச் செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இச் செய்தியால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட நலன்விரும்பிகள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இது போன்ற தவறான செய்திகளை வெளியிட்டு பாடசாலையின் கல்வி வளர்ச்சியை தடுக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இச் செய்திக்கு மறுப்பு அறிக்கையை இவ் இணையத்தளம் வெளியிடாதுவிடின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற் கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.
வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (30.01.2015) கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.ஜீ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆ.நவரத்தினராசா (செயலாளர்-அருள்மிகு அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலயம்) அவர்களும், திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) (நகரசபையின் முன்னாள் உப நகரபிதா) அவர்களும், திரு. ஏ.எம்.ஜனாப்.சுபைர் (உடற்கல்வி- உதவிப் பணிப்பாளர்) அவர்களும், திரு.செ.அன்னலிங்கம் (உரிமையாளர் குகன் -மோட்டர்ஸ்), கௌரவ விருந்தினராக திரு.ப.சிவகெங்காதரன்(பழைய மாணவர், ரேஸ்ரி கூல்பார் உரிமையாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முள்ளியவளை சுதர்சனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவாகிய ”அனுபவி ராசா” எனும் குறும்படம் 29.01.2015 அன்று பிப 3.00 மணியளவில் மு.முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது. மு.குமுளமுனை ம.வி அதிபர் கமலகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வைத்தியர் சிவதாஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக முள்ளியவளை இலங்கை வங்கி முகாமையாளராகிய திரு ஆனந்தராஜ் அவர்களும், முள்ளியவளை ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் திரு நிமலச்சந்திரன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வரவேற்புரையினை செல்வி சுதர்சுயா வழங்க. வாழ்த்துரையினை வித்தியாலய அதிபர் திரு ஜெயவீரசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். ‘குறும்படத்தின் ஆதரவும் முக்கியத்துவமும்’ எனும் தலைப்பில் ஊடக நண்பர் திரு ஜெயராஜ்அவர்கள் உரையாற்ற சிறப்புரையினை வைத்தியர் சிவதாஸ் அவர்கள் வழங்கினார்.
வாழ்த்துரையில் அதிபர்.. ” சுதர்சன் பாடசாலைக்காலத்திலேயே கலை உணர்வு நிரம்பப்பெற்றவன்” எனும் பொருள்பட கருத்திட்டார். ஜெயராஜ் தனதுரையில் ” எமக்கு கதை சொல்ல கற்பனை தேவையில்லை. எமக்கான கதை கனக்கவே இருக்கிறது எனவும் ஈரானிய படங்களை எடுத்துக்காட்டி கருத்துரைத்திருந்தார்.
வைத்தியர் சிவதாஸ் தனதுரையில்.. மனங்கள் மாறவேண்டும். கறுப்பு அல்லது வெள்ளை எனும் பிடிவாதப்போக்கில் சற்று மாற்றம் தேவை எனவும். எமது படைப்புக்களுக்கும் வெளியீடுகளுக்கும் ” எண்ணிக்கை அவசியமில்லை.. நல் எண்ணங்களே அவசியம் ” என்றார்.
மிகவும் அழகான முறையில் பாடசாலை மண்டபத்தில் வெளியிடப்பட்ட ‘அனுபவிராசா’ எனும் கதையானது.. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் ஊர் உறவுகள் காசு கேட்பதை மையமாக வைத்து தயாரிக்கப் பட்டிருக்கிறது. இப்படத்தில் ஓரிடத்தில் ” ஊரில இருக்கேக்க எங்கள கணக்கெடுக்க மாட்டினம். வெளிநாடென்டோன புதுப் புது உறவுகள் வருகினம்” இப்படி பேசப்படுகிறது. இது உண்மையில் வெளிநாட்டிலிருக்கும் ஒவ்வொருத்தரின் ஆதங்கமாகவே இருக்குமென எண்ணுகிறேன்.
குறும்பட வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 29.01.2015 அன்று சுதர்சனின் தாயாரின் பிறந்த நாளென்பதால்.. தாயாரின் கைகளால் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 மாணவர்களுக்கு இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வைத்தியர் சிவதாஸ் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து.. நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்தவர் எனும் வகையில் சுதர்சன் சார்பாக என்னால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் ஏற்கனவே வெளியிடப்பட்ட தூரதேசம் குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடி இரண்டு மணித்தியாலைய நிகழ்வு ஐந்து மணிக்கு நிறைவு கண்டது. அது மன நிறைவையும் தந்தது.
பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது.. முல்லைமாவட்டத்தில் குறும்பட வெளியீடுகள் மிகக்குறைவே. களம், கதை, கரு, காட்சிப்பொருள் அதீதமாக முல்லைமண்ணில் நிரம்பப்பெற்றிருந்தாலும் போதிய தொழில் நுட்ப வளங்கள் மற்றும் தொழில் நுட்பவியளாளர்கள் இன்மையே இதற்குக் காரணம் எனலாம். ஆனாலும் எம்மவருக்கு இதில் எவ்வளவு ஆர்வம் இருக்கென்பதுவும் கேள்விக்குறியே..
பொதுவாகவே ஒரு படைப்பை வெளியிடும் படைப்பாளி இரண்டு விடயத்தையே அதீதம் எதிர்பார்ப்பதுண்டு. 01 மனமுவந்த பாராட்டு. 02 அப்படைப்பிற்கான அங்கிகாரம். ஆனால் இதில் ஒன்றையேனும் நம்மவர்களால் அப்படைப்பாளிக்கு தாராளமாக வழங்க முடிகிறதா என்பதுவும் கேள்விக்குறியே…?
மனதளவில் நொந்து நூலாகிப்போயிருக்கின்ற எம்மவரை தரமான படைப்புக்களாலும்.. நல்ல கலைகளாலும் ஓரளவிற்கேனும் ஆற்றுப்படுத்த முடியும் என்பது என் திண்ணம். அதி வேகமாய் சுழலும் வாழ்க்கைச்சக்கரத்திலும் அன்றாடம் நிகழும் மன உழைச்சல்களுக்குள்ளும் நல்ல நூல்களை வாசிப்பதும் நல்ல படைப்புக்களை பார்ப்பதும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் என்பது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் அதுவே எம் மனப் போராட்டத்திற்கான ஓர் வடிகால்களாகவும் இருக்கும் என்பதை சில வேளைகளில் மறந்து போகிறோம்.
சேவை மூப்பின் அடிப்படையிலேயே பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசராக, சிரேஸ்ட நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்பட்டமை சேவை மூப்பின் அடிப்படையிலாகும். நீதியரசர் சிறிபவனே இன்று நாட்டில் சேவையாற்றி வரும் நீதியரசர்களில் சிரேஸ்டமானவர்.
அரசியல் அமைப்பு திருத்தங்களின் பின்னர் பிரதம நீதியரசர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அதுவும் சேவை மூப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
ஓய்வு பெற்ற நீதவான்களின் குழு ஒன்றை அமைத்து பிரதம நீதியரசர் நியமனம் குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்ட விதம் பிழையானது என ராஜித சேனாரட்ன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கற்றல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக சிறியளவு நிதியுதவியினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை வழங்கியது.
இவ் நிகழ்வு நேற்று(30.01) தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் இவ் உதவியினை தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவியின் தாயாரிடம் வழங்கி வைத்தார்.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், ஊடகப் பிரிவைச்சேர்ந்த திரு செ.சுகந்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“கோவில்குளம் இளைஞர் கழகம்” எனும் பெயரில் கலை, கலாசார, சமூக அபிவிருத்தி திட்டங்களில் இயங்கிவந்த எமது கழகம் பெரியோர்கள், கல்விமான்கள், சமூக நலன் விரும்பிகளின் வேண்டு கோளிற்கிணங்க எமது இளைஞர் கழகமானது “தமிழ் தேசிய இளைஞர் கழகம்” எனும் பெயரில் 29.01.2015 தொடக்கம் இயங்கவுள்ளது.
குறித்த கிராமத்தின் பெயர் கொண்டு ஆரப்பிக்கப்பட்ட எமது கழகம் இன்று வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்லாது பல மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அங்கத்தவர்களை கொண்ட ஒரு கழகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
எமது ஆலோசகர்கள் மற்றும் இளைஞர்களின் துடிப்பானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை சொற்ப காலத்தில் முன்னெடுக்கப்பட்டதினையும், திட்டங்களாக மக்கள் நலன் கருதிய செயற்பாடுகளான பேரூந்து தரிப்பு நிலையங்கள் அமைத்தலும், புனரமைத்தல், நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை, பாடசாலைகளுக்கு தேவையான எம்மால் இயன்ற பௌதீக வளங்களை வழங்கியமை, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் வழங்கியமை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர், முதியோர் இல்லங்களுக்கான உதவிகள் மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை மக்கள் வெகுவாக பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
இவ் செயற்பாடுகளை பன்முகப்படுத்துவதே எமது கழகத்தின் பிரதான நோக்கமாகும். கிராம, நகர இளைஞர்கள் பலர் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வந்துள்ளமையினாலும், பல்கலைக்கழகங்கள், கல்வியற் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பலர் எமது கழகத்தில் இணைந்து செயலாற்ற கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது கழகமானது “தமிழ் தேசிய இளைஞர் கழகம்” எனும் பெயரில் இயங்கவுள்ளது.
இனி வரும் காலங்களில் “சாதனை மண்ணில் சரித்திரம் படைப்போம்” என்ற மகுட வாசகத்துடன் மக்களுக்கான மக்கள் சேவையில் மகிழ்ச்சி அடைய எமது இளைஞர்கள் எம்மோடு தொடர்புகொள்ள முடியும்.
நன்றி.
ஊடக மற்றும் இளைஞர் தொடர்பக செயலணி,
தமிழ் தேசிய இளைஞர் கழகம்.
e-mail- [email protected]
phone -0094766644059
0094775058672
0094770733719
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஶ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அவர், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் 27.03.2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக அவர் பொறுப்பேற்றார்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக ஶ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் தலைகளை வெட்டி கொல்பவர்கள் அரசர்களாக நியமிக்கப்படுவார்கள் என கடவுள் உத்தரவிட்டதாக கூறி 20 குழந்தைகளை கொன்று குவித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast)தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐவரி கோஸ்ட்டின் யோபோகான் (Yopougon) என்ற பகுதியில் Drissa Coulibaly என்ற நபர் தண்ணீர் பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்களை கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான்.
அவன் அளித்த வாக்குமூலத்தை கேட்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்து, அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிராமத்தை சுற்றி பல குழந்தைகளின் உடல்கள் தலை, கை, கால் உள்ளிட்ட உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கொலையாளியிடம் தீவிரமாக பொலிசார் விசாரித்த போது, குழந்தைகளின் தலைகளை வெட்டி கொல்ல கடவுள் தான் தனக்கு உத்தரவிட்டார் என்றும், அப்படி செய்தால் தன்னை கடவுள் அரசனாக்குவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும் இதுவரை தான் மூன்று குழந்தைகளின் தலைகளை வெட்டி கொன்றுள்ளதாகவும், இதை செய்ய ஒரு கும்பலே இருப்பதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த 3 மாதத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக கிராம மக்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்குனர் Brindou M’Bia கூறுகையில், பெரும்பாலான குழந்தைகள் உறுப்புகளற்ற நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தை சுற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மூட நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்களால் நிகழும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐவரி கோஸ்ட்டின் உள்துறை அமைச்சர் Hamed Bakayoko வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர் சம்பவங்களை தடுக்க, அப்பகுதியில் குழந்தைகளை கொல்லும் கும்பலை பிடிக்க சுமார் 1500 பொலிசார்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் குமார் சங்கக்காரா நிலை நாட்டியுள்ளார்.
ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கொரி அன்டர்ஸனின் பிடியை எடுத்ததன் மூலம் இந்த சாதனை சங்கக்காரா தனதாக்கிக் கொண்டார்.
37 வயதான சங்கக்காரா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 473 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இவற்றில் 377 பிடிகள் மற்றும் ஸ்டம்பிங் முறையிலான 96 ஆட்டமிழப்புக்களும் உள்ளடங்கும்.
இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை சங்கக்காரா முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். தவான் 38 ஓட்டங்களை எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் நிதானத்துடன் விளையாடிய ரஹானேவும் 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஷமி 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
வெற்றிக்கு 201 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பெல்லும், மொயீன் அலியும் களமிறங்கினர்.
இருவரும் பெரிதும் சோபிக்காத நிலையில் அடுத்தடுத்து 10 மற்றும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த டெய்லர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். ஆனால் அடுத்து வந்த ரூட் (3), மோர்கன் (2), பொபாரா (4) பின்னியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 66 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டெய்லர் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் 67 ஓட்டங்கள் குவித்த பட்லரும் ஆட்டமிழந்தார்.
எனினும் பொறுமையாக விளையாடிய வோக்சும், பிராடும் ஆட்டமிழக்காமல் 46.5 ஓவரிலேயே 201 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது.
வரும் பிப்ரவரி 1 ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
தினமும் காலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது உதவியாளர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அப்பொழுது அங்கு இடம்பெறும் சம்பவங்கள் நிகழ்வுகளிலும் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார்.
இன்று (30.01) 3.40 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவை உடைந்து விழுந்தமையால் பாரிய வாகன நெரிசல் நிலவியது. இதனால் வீதியைக் கடப்பதில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்
இதற்கு முன்னரும் இக் கடவை பல தடவைகள் உடைந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன். பொதுமக்கள் வீதியைக் கடப்பதில் சிரமங்களுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
இந்த விபத்து இன்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதிக்கு சென்ற மாணவர்களை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 2016 ஆண்டு உயர்தர விஞ்ஞானப்பிரிவில் பயிலும் கிருஷாந்தன், துதக்ஷன் ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.