2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறான ஒரு புகைப்படத் தொகுப்பு..
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறான ஒரு புகைப்படத் தொகுப்பு..
பதுளை ரில்பொல என்னும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. வீடுகளின் மீது பாரியளவில் மண் சரிந்து வீழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட பெண் தாதியொருவர் தம்மை காப்பாற்றுமாறு வெளியில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அடிக்கடி அழைப்பினை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதி ஒருவரே இவ்வாறு உதவி கோரி வருகின்றார். இராணுவத்தினரும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ளது. கிறிஸ்தவரான நயன்தாரா, கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார்.
இதை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணி விமானத்தில் ஏற அவர் சென்னை விமான நிலையம் சென்றபோது, தன்னுடன் 5 சூட்கேஸ்களையும் எடுத்து சென்றுள்ளார்.
ஆனால் சூட்கேஸ்களை ஏற்ற நேரமில்லாத காரணத்தால், அவற்றை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று விமான ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
அவர்களிடம் நயன்தாரா சமாதானம் கூறியும் சூட்கேஸ்களை ஏற்ற அவர்கள் மறுத்து விட்டனர். இதனிடையே நயன்தாரா கொண்டுவந்த கைப்பையை மட்டும் விமானத்தில் கொண்டு செல்ல ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
வேறு வழியில்லாமல் கைப்பையுடன் கொச்சி புறப்பட்டுள்ளார்.
ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்யின் அட்டூழிங்களை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் ஜோர்டான், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் போர்புரிந்து வருகின்றன.
இந்நிலையில் வடக்கு சிரியாவில் தாழ்வாக பறந்த ஜோர்டான் நாட்டு போர்விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ். ஐ. எஸ், அதை ஓட்டிச் சென்ற Mu’ath Safi Yousef al-Kaseasbeh என்ற விமானியை நிர்வாணமாக்கி பிணைக்கைதியாக பிடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் விமானியின் இரு படங்கள், அவரது நிர்வாண படம் ஒன்று மற்றும் அவருடைய ராணுவ அடையாள அட்டையையும் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
தற்போது தீவிரவாதிகளின் பிடியில் உள்ள விமானியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ” கவிதைப்பட்டறையும் கவிச்சமரும் ” எனும் நிகழ்வு கடந்த 22.12.2014 நடைபெற்றுள்ளது. பிரதம விருந்தினராக முல்லைமாட்ட அரச அதிபர் திரு வேதநாயகம் கலந்து கொண்டார்.
அத்துடன் துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் குருபரனின் ஒழுங்கமைப்பில் கலாசார உத்தியோகத்தர் பிரதீபன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
கவியரங்கம் மற்றும் கவிச்சமருக்கு பண்டிதர் பிரதீபன் தலைமைதாங்க.. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிப்பதிவாளர் ரௌசி, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் வினோத், மற்றும் சைவப்புலவர் திலகானந்தம், வன்னியுர் செந்தூரன், முல்லைத்தீபன் ஆகியோர் வழங்கினர்.
கவிச்சமரை வன்னியுர் செந்தூரனும் முல்லைத்தீபனும் முழக்கினர். தொடர்ந்து நடந்த பட்டிமன்றத்திற்கு துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன் தலைமை தாங்கினார். செயலக உத்தியோகத்தர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் மத்தியில் சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் நன்றியுரையினை பிரதேச செயலக கணக்காளர் சோ.பிரபு வழங்கி நிகழ்வை நிறைவு செய்திருந்தார்.
மழையினால் பாதிக்கப்பட்ட வவுனியா மக்களுக்கு உதவ முன்வருமாறு அரச சார்பற்ற நிறுவனங்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால், செட்டிகுளம் பீடியாபார்ம் மற்றும் மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்களில் 10 அடிக்கும் மேலாக வெள்ளநீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான சி.சிவமோகன், இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
1975ஆம் ஆண்டு, படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு செட்டிக்குளம் பீடியாபார்ம் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இன்று 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் அங்கு வசித்து வருகின்றனர்.
கடந்த நாற்பது ஆண்டு காலமாக இக்கிராமத்துக்கான போக்குவரத்து பாதைகள் அமைத்துக்கொடுக்கப்படாமை, மின்சாரம், வீடு, மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமை, காட்டு யானைகளின் தொல்லை, போர்ச்சூழல் என்று பல்வேறு பிரச்சினைகளின்போது இடம்பெயரா இம்மக்கள், இன்று வெள்ளப்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள மேட்டுநில காட்டோரங்களில் தற்காலிக குடில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
அத்துடன் இம்மக்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கையகப்படுத்தியிருப்பதால், அமைச்சர் கையகப்படுத்தியுள்ள தமது காணியை மீள பெற்றுத்தருமாறும், ஏனையவர்களுக்கும் குடியிருப்பதற்கு பொருத்தமான மாற்றுக்காணிகளை வழங்குமாறும், இப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், செட்டிக்குளம் பிரதேசத்தில் வடகாடு, கண்ணாட்டி, கணேசபுரம், துட்டுவாகை கந்தன்குளம் கிராமங்களிலும், மன்னார் சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் கிராமங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
வெள்ளநீரால் பெருந்தொகையான வயல்நிலங்களும், மேட்டு நிலப் பயிர்களும் அழிவடைந்துள்ள நிலையில், தொழில்களை இழந்து சேறும் சகதியுமாக உள்ள தற்காலிக கொட்டில்களில் வசித்துவரும் மக்களுக்கு, உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டுமென சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு நுளம்புவலைகள், பாய்கள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு, கருணை உள்ளம் கொண்டோரை விரைந்து உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்தேக்கத்தின் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீா்தேக்கங்களின் நீா்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கிச்செல்லகூடிய அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனா்.
இதேவேளை காசல்ரீ நீா்தேக்கத்திலும் நீரீன் மட்டம் உயா்ந்துள்ளது. மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக 1 மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
எனினும் அதன் பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்ட பின் போக்குவரத்து வழமைக்கு மாறியது. தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவிக்கின்றார்.
செட்டிகுளம் – பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளன.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்து, தாம் முன்பு இருந்த இடத்திலிருந்து ஒருகிலோ மீற்றர் தொலைவிலுள்ள பளைய பீடியாபாம் காட்டுப் பகுதியில் தறப்பால் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
கொட்டும் மழைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் குழந்தைள் மற்றும் பெண்கள் முதியவர்கள் உட்பட 54 பேர், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக கொடிய விஷப் பாம்புகள், யானைகள் அதிகம் காணப்படும் காட்டுப் பகுதிக்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவர்கள் தங்கியிருக்கின்றார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை குறித்த மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தறப்பால்கள் மற்றும் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாத்தறை, திக்வெல்லயிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட நீர்கொழும்பு, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 14 பேரை மாத்தறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வான் ஒன்றில் இவர்கள் திக்வெல்லைப் பிரதேசத்துக்கு வந்துள்ளதாகவும், வான் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
வவுனியா மருத்துவமனையின் பெண் நோயியல் வைத்தியர் சந்தன ஹேரத்தின் பொறுப்பில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. இப் பிரசவம் குறித்து குறித்த தாயார் கருத்து தெரிவிக்கையில்..
குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு 3 பெண் குழந்தைகளைக் கடவுள் வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்று வருகின்றேன். வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகின்றன. கணவர் ஒரு விவசாயி.
அண்மையில்தான் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைத்தது. மாதம் பத்தாயிரம் ரூபா சம்பளமாகக் கிடைக்கின்றது. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகி 7 மாதங்களாகின்றன.
எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது பெரும் கவலையாக இருந்தது. இதனால் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பெரும் பணச்செலவு செய்து வைத்தியம் செய்தோம்.
நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், யுத்தச் சூழலில் சிக்கியிருந்த எங்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலிலேயே அந்த வைத்தியசாலையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஆயினும் எங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. பின்னர் நாங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் டாக்டர் சந்தன ஹேரத் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தேன்.
நிறைந்த ஆலோசனைகளும் சிகிச்சையும் அங்கு கிடைத்தது. மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைத்தது. இதனையடுத்து இப்போது 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
வைத்திய சிகிச்சையின்போதும், பிரசவத்தின்போதும் வைத்திய நிபுணரும், ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர் பணியாளர்களும் என்னை நன்றாகக் கவனித்தனர். எனக்கு மூன்று குழந்தைகள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னைப் போலவே இந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த இன்னும் இருவருக்கும் பிள்ளை பேற்றுப் பலன் கிடைத்திருக்கின்றது.
குழந்தைகள் கிடைத்துள்ள போதிலும் எனது ஆசிரிய பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். அதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பிள்ளைகளுடன் தங்கியிருந்து எனது பயிற்சியைத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளேன்.
ஒரு வருடத்திற்கும் அதிக காலம், யாழ்ப்பாணத்தில் வீடு எடுத்து மூன்று குழந்தைகளையும் பராமரித்து வளர்ப்பதற்குப் போதிய பொருளாதார வசதி எனக்கு இல்லை என்பதுடன், அது சிரமமான காரியமாக இருந்தாலும் அதனைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
எனது முயற்சிக்கு எனது கணவரினதும், குடும்ப உறவினரதும் சரீர உதவியும், சமூக சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் பொருளாதார உதவியும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
இந்தப் பிரசவம் குறித்து கருத்து வெளியிட்ட பெண் நோயியல் வைத்திய நிபுணர் சந்தன ஹேரத்:
பிள்ளைப்பாக்கியம் என்பது இறைவனின் கொடையாகும். பிள்ளைப் பாக்கியம் தாமதமாக உள்ளவர்கள் அல்லது கிடைக்காதிருப்பவர்கள், தங்கள் மீதும், தங்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை மீதும் நம்பிக்கை வைத்திருப்பது முக்கியமாகும். அது மட்டுல்லாமல், தெய்வத்தின் மீதும், அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று பெண் குழந்தைகளை சுகமாக ஈன்றெடுத்திருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்த வவுனியா பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் டாக்டர் கே.அகிலேந்திரன், இந்த வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளை ஆரம்பித்து பொது மக்களின் பலதரப்பட்ட வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
இங்குள்ள வைத்திய சேவைகளையும், அவற்றுக்கான வாய்ப்புக்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என கூறினார்.
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்காரணமாக 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, தென்கிழக்கு தென் மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் அபாயகரமானதாகவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பன் கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் நாவுல பிரதேசத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நிலவும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து சில மாவட்டங்களில் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் பாரிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரவின் பிரதான ஆர் எம் எஸ்.பண்டார தெரிவித்தார்.
இன்று கிறிஸ்துமஸ் உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வண.பிதா சத்யராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
கடும் மழை பெய்தபோதும் பெருந்திரளான மக்கள் ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டதை காணக் கூடியதாக இருந்தது.
இன் நிகழ்வுகள் அனைத்தையும் மகாராஜா குழுமத்தின் சக்தி வானொலி நிறுவனம் நேரடியாக சக்தி FM வானொலியில் ஒலிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
-கஜேந்திரன்-
கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்
யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்ல. அவர் கி.மு. 6க்கும் கி.பி. 30க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின் கணிப்பாகும்.
யேசு கிறிஸ்து பிறந்தது மர கொட்டகையில் அல்ல. ஒரு குகையின் உள்ளே என்பது பல பைபிள் பண்டிதர்களின் வாக்காகும்.
‘மூன்று அறிவாளர்கள்’ குழந்தை யேசுவை வழிபட்டனர் என்று கதைகளில் கூறப்பட்டாலும், பைபிளில் எண்ணிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. மத்தேயூவின் நல்வாக்கில் அறிவாளர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
3 அரசர்கள் 12 நாள் அவகாசத்தில் குழந்தை யேசுவை கண்டுபிடித்தமையால், கிறிஸ்துமஸ் என்பது 12 நாட்களாக கொண்டாடப்படுகிறது.
அறிவாளர்களுக்கு யேசுவின் இருப்பிடத்தை காட்டிய “பெத்தலகேம்” நட்சத்திரம் ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோளாக இருந்திருக்க கூடும் என வானியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தின் “கிறிஸ்டிஸ் மேஸீ” (Cristes Maesse) எனும் சொற்றொடரிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் கிறிஸ்துவின் கூட்டம் (Christ’s Mass) ஆகும்.
கிறிஸ்துமஸின் சுருக்கமான X-மஸ் என்பது மதத்திற்கு முரணானது அல்ல. கிரேக்க மொழியில் X என்பது யேசுவை குறிக்கும் குறிசொல்லாகும்.
அமெரிக்க புராதனவாதிகள் நன்றி நவிலும் நாளை (Thanks Giving Day) கிறிஸ்துமஸை விட முக்கியமான பண்டிகையாய் கொண்டாட முயன்றார்கள்.
கி பி 440 ம் ஆண்டு வரை, டிசம்பர் 25 ஆனது யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை.
கிறிஸ்துமஸ் பாடல்கள்
13ம் நூற்றண்டில், அசிசியின் புனித ‘ஃபாதர் ஃப்ரான்சிஸ்’ என்பவர் அறிமுகப்படுத்தும் வரை, “காரோல்” (Carols) எனப்படும் கிறித்துவ ஞானகீதம் தேவாலையங்களில் பாடப்படவில்லை.
“வஸைலிங்” (Wassailing) எனப்படும் ஆங்கில சம்பிரதாயதிற்கேற்ப, அக்கம்பக்கத்தோர் நல்வாழ்விற்கு பாடப்பட்ட வாழ்த்துப்பா தான் பின்னர் “காரோல்” எனப்படும் கிறித்துவ ஞானகீதம் ஆகியது.
கிறிஸ்துமஸின் போது பாடப்படும் புகழ்பெற்ற “ஜிங்கிள் பெல்ஸ்” (Jingle Bells) பாடல் தான் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்ட முதல் பாடலாகும். ஜெமினி 6 எனும் விண்கலத்தில் பயணம்செய்த “டாம் ஸ்டாஃபர்ட்” (Tom Stafford) மற்றும் “வாலி சிறா” (Wally Schirra) ஆகிய விண்வெளி வீரர்கள், இந்த பாடலை டிசம்பர் 16, 1695 ல் ஒலிபரப்பினார்கள்.
கிறிஸ்துமஸ் தகவல்கள்
ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் திகதி பரிசுகள் வழங்கும் பழக்கமுள்ள “சின்டர்க்ளாஸ்” (Sinterklass) என அழைக்கப்பெற்ற ‘புனித நிகோலாஸ்’ அவர்களை பற்றிய நெதர்லாண்டின் நாட்டுப்புற கதையிலிருந்து தான் கிறிஸ்துமஸ் புகழ் “சான்டா க்ளாஸ்” (Santa Claus) தாத்தா பிறந்தார்.
உலகத்தின் மிக உயரமான 221 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 1950 ம் ஆண்டு வாஷிங்டன் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டது.
கிறிஸ்துமஸ் மரத்தின் அநேக பகுதிகள் உண்ணத் தகுந்ததாகும். குறிப்பாக அதன் கூர் முனை இலைகள் விட்டமின் “சி” சத்துக்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னால், கிறிஸ்துமஸ் மரம் சுமார் 15 ஆண்டுகள் வளர்க்கப்படுகிறது.
சுற்றுசூழல்வாதி ஆகிய அமெரிக்க அதிபர் “டெடி ரூஸ்வெல்ட்” (Teddy Roosevelt) 1912 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறுவுவதை தடை செய்தார்.
12 ஆம் நூற்றண்டில் ஃப்ரென்சு கன்னிகாஸ்த்ரீகள் ஏழைகள் வீட்டு வாசலில், காலுறையின் உள்ளே பழங்கள், உலர் பழங்கள் மற்றும் சிறிய ஆரஞ்சு சுளைகள் வைத்து கதவில் மாட்டிவிட்டு வந்த பழக்கம், பின்னர் காலுறையின் உள்ளே ஆரஞ்சு சுளைகள் வைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரபாக மாறிவிட்டது.
பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பிட்டு, தொன்மையில் திராட்சை மற்றும் திராட்சை ரசமான மதுவை கொண்டு செய்யப்படும் “சூப்” ஆக தான் இருந்தது.
1938 இல் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உருவாக்கபட்ட கண்டுபிடிப்பு தான் “ருடால்ஃப்” (Rudolph) எனப்படும் சிவந்த மூக்கு கொண்ட பனி கலைமான்.
நம் பூமியில் கிறிஸ்துமஸ் எனும் பெயர் கொண்ட இரு தீவுகள் உள்ளன. ஒன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள (முன்னர் “கிறிட்டி மாட்டி” என அழைக்கப்பெற்ற) கிறிஸ்துமஸ் தீவு. மற்றொன்று இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு.
இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடல் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
ரஜினி, விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான அரசியல் பிரமுகர்களும் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு கே.பாலச்சந்தரின் இறுதி ஊர்வலம் இன்று 3 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கிளம்பியது. குடும்ப மரபுப்படி இறுதிச்சடங்கு நடந்து முடிந்தபின் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு வழியாக பெசன்ட்நகர் சென்றடைந்தது. அங்குள்ள மின் மயானத்தில் கே.பாலச்சந்தரின் உடல் மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பாலச்சந்தருக்கு கண்ணீர் மல்க பிரியா விடைஅளித்தனர்.
கமல் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கே.பி தான். இவர் தற்போது உத்தம வில்லன் இசை கோர்ப்பு பணிக்காக அமெரிக்காவில் உள்ளார். இன்று யாரும் எதிர்ப்பாராத வகையில் கே.பி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்செய்தியை கேட்ட அடுத்த கனமே இவரின் மற்றொரு சிஷ்யரான ரஜினி வந்து மரியாதை செலுத்தி சென்றார்.ஆனால், கமல் வெளி நாட்டில் இருப்பதால் இன்று மதியம் வருவார் என கூறப்பட்டது. நாளை நடப்பதாக இருந்த இறுதி சடங்கு இன்றே நடந்ததால் கமலால் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தம் தான்.
கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் அதை ரீமேக் செய்தார். கமல், ரதி நடித்தனர்.
இப்படம் வெளியாகி இந்தி பட உலகையே கலக்கியது. இந்தி பட உலகில் ராஜ்கபூர் எடுத்த ‘பாபி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை பெற்ற படமாக இது அமைந்தது. இந்தி பட உலகினர் பாலச்சந்தரை வியந்து பாராட்டினார்கள். மும்பையில் இளைஞர்கள் படத்தை பார்த்து பைத்தியமாகி அங்குள்ள கடற்கரையில் நாயகன், நாயகி பெயரை இருநூறு மீட்டர் தூரம் மணலிலேயே எழுதி வைத்து வியக்க வைத்தனர்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானாலும் அதில் அவருக்கு சிறிய வேடம்தான். ‘மூன்று முடிச்சு’ படம்தான் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னால் அவரிடம் பாலச்சந்தர் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடிக்கிற பயிற்சியை செய்து கொண்டு வா. அதை சரியாக செய்தால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று நிபந்தனை விதித்தாராம். ரஜினியும் அப்படியே பயிற்சி எடுத்து நடித்தார். ரஜினியின் அந்த ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பிறகு ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் அதே சிகரெட் ஸ்டைல் இடம் பெற்றது.
ஒஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். இந்த படத்தை அவரது கவிதாலயா பட நிறுவனம்தான் தயாரித்தது. இயக்குனர்கள் விசு, மௌலி, அமீர்ஜான், இசை யமைப்பாளர்கள் மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி போன்றோரும் பாலச்சந்தர் தயாரித்த படங்கள் மூலம்தான் அறிமுகமானவர்கள்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய பாலச்சந்தர், நமது இளைய சமுதாயத்தினர் அதிகமாக மது அருந்துவதாக படங்களில் காட்டுகிறார்கள். இந்த போக்கு அபாயகரமானது. நாம் இதை மாற்ற வேண்டும். படங்களில் இளைஞர்கள் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றார். பாலசந்தர் விடுத்த கடைசி வேண்டுகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.