உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற வினோஜ் யசங்க , கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கனடாவின் வான்கூவர் நகரில் மது போதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை உயிரிழந்த இளைஞர் கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயர் கல்விக்காக சென்ற இளையர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த இளைஞனின் உடல் நேற்றியதினம் (11) இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலிநகரில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் (10-07-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மல்லாவி பொலிஸார் – குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில், சந்தேக நபர்கள் 4 பேரும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் (11-07-2023) கைது செய்திருந்தனர்.
அவர்களில் மூவர் நேற்றும், ஒருவர் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த கொலைக்கு இடியன் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னே மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதன்படி, பெண்களுக்கான 1,500 மீற்றர் போட்டியில் அபேரத்ன 04 நிமிடம் 14.39 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் லெகாம்கே 60.93 மீற்றர் தூரத்தை எறிந்து இலங்கைக்கான புதிய சாதனையை படைத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அபேரத்ன தலைமையிலான 13 பேர் கொண்ட இலங்கை தடகள அணி, ஜூலை 09 ஆம் திகதி பாங்காக் சென்றுள்ளது.இந்த அணி ஜூலை 12 முதல் 16 வரை பாங்காக்கில் உள்ள சுபச்சலசை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது.
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 2 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதனை தொடர்ந்து கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார். கண்கள், வாய் எரிவதாக கூறிய சமோதி எழுந்து நீர் இடத்திற்கு சென்றுள்ளார்.
தனக்கே ஏதோ நடக்கப்போவதாக அவர் தாயிடம் கூறிய நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக வந்த தாதி அவரை மருத்துவமனை படுகைக்கு கொண்டு சென்றவுடன் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பலாம் என கூறப்பட்டதன் பின்னர் 2 ஊசிகள் ஏற்றப்பட்டதன் பின்னணி தொடர்பில் குழப்பமாக இருப்பதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இறுதியான தங்கையின் உடலை பார்க்கும் போது வயிற்று பகுதி வீக்கம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு எவ்வித உடல் உபாதைகளும் காணப்படவில்லை. ஊசியிலேயே மர்மம் உள்ளதென குடும்பத்தினர் குறிபபிட்டுள்ளனர்.
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(12.07.2023) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 610,466 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,540 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,850 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,800 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை – ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டது என்று கூறியுள்ளார்.
அதனால் காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார் .உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேக நபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த A1 தொழினுட்பமானது மிக விரைவில் பல்வேறு துறைகளுக்குள்ளும் தாக்கம் செலுத்தவுள்ளதாக சர்வதேச தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சிகிரியாவில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் வெவ்வேறு ஆடைகளுடன் வரையப்பட்டிருந்தால் எவ்வாறு இருந்து இருக்கும்.
என்ற கற்பனையில் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என குறிப்பிட்டு சில ஓவியங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் பல்கலைக்கழ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12.07.2023) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி ஆடைகளை அழுத்த மின்னழுத்தியைக் கையாண்டபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு இவர் பொத்தபிட்டிய அலகல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
சிகிச்சையின் போது அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் தெரிவித்துள்ளார்.”எனது குழந்தைக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். முதலில் கொட்டாலிகொடவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10 ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தனர்.
அதன் பிறகு எனது மகள் ICU வில் இருந்து 17 ஆம் நம்பர் வாட்டுக்கு மாற்றப்பட்டார். சுமார் 3.30 மணியளவில், என் மகளுக்கு சேலைன் கொடுத்தார்கள்.அதன் பிறகு இரண்டு மருந்துகளை ஊசி மூலம் மகளுக்கு செலுத்தினர்.
பின்னர் குழந்தையின் கண்களில் ஏதோ நடந்தது, எதோ நடக்கப்போகிறது என்று என் மனம் சொன்னது. அதன் பிறகு என் மகள் பாத்ரூம் போய் சின்க்கில் தலையை வைத்தார்.பின்னர் உடல் நீலமானது, கைகால்கள் நீலமாகி, என் குழந்தை சரிந்து விழுந்தார். நான் அலறியதும், தாதியர்கள் வந்து வாட்டுக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.
அதன்போது எனது குழந்தைக்கு என்ன மருந்து வழங்கீனர்கள் என கேட்டேன். ஆனால் இன்று குழந்தை இல்லை. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். என் குழந்தைக்கு வேறு எந்த நோயும் இல்லை” என தாய் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி யுவதியின் மரணம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.யுவதியின் சடலம் தொடர்பில் தடயவியல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.
இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.
ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொட்டாவ மத்தேகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவர் கடந்த மாதம் 22ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு தனது ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையை வழங்க சென்ற போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கிளையில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
அவிசாவளை, ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேக நபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை சப்ரைஸ் செய்வதற்காக காரை திருடியதாக குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கடுவெல, பிரதேசத்தை சேர்ந்தவராவார்.ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண சடங்கிற்காக கடந்த 7 ஆம் திகதி தந்தை, தாய், மற்றும் இரு ஆண் பிள்ளைகள் லண்டனில் இருந்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வத்திராயன் வடக்கைச் சேர்ந்த குருபரன், வெண்ணிலா தம்பதிகளும் அவர்களின் 9 வயது மற்றும் 6 வயது மகன்களுமே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.கடந்த 7 ஆம் திகதி அவர்கள் வருகை தந்த நிலையில், விடிந்தவுடன் தந்தையும் தாயும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.
எனினும், இரண்டு சிறுவர்களும் தமது அம்மம்மா, அம்மப்பாவுடன் வத்திராயனில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.இந்த நிலையில், சம்பவ தினத்தன்று கடற்கரை கிராமமான வத்திராயனில் உள்ள அவர்களது பேரன் வீட்டில் சிறுவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர்.
மாலை வேளையில் அம்மப்பாவுடன் கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.சுட்டித்தனம் நிறைந்த சிறுவர்கள் இருவரையும் அவர்களது அம்மப்பா பாதுகாப்பாக கடலில் நீராடச்செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.பின்னர் வீட்டு வேலைகளில் அவர் மூழ்கியிருந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
சிறிது நேரத்தின் பின்னர் அவர்களை தேநீர் பருகுவதற்கு அழைத்தபோது, குருபரன், வெண்ணிலா தம்பதிகளின் இரண்டாவது மகனான குருபரன் ஆரிஸ் அங்கு இருக்கவில்லை. பதறிப்போன உறவினர்கள் குறித்த சிறுவனை தேடி அலைந்துள்ளனர்.
இருப்பினும், சிறுவன் கிடைக்கவில்லை. லண்டனில் பிறந்து முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்த அந்த சிறுவனுக்கு அந்த பிரதேசம் எந்தவகையிலும் பரீட்சயமானது அல்ல. ஊரிலுள்ளவர்களையும் அவருக்கு தெரியது.
இந்த நிலையில், உறவினர்கள் ஒன்றிணைந்து தேடும்போது, அண்மையிலுள்ள ஊரான மருதங்கேணி கடற்கரையில் சிறுவன் கடல் நீருடன் அடித்துவரப்பட்டு கிடப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக சிறுவனை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, உறவினர்கள் சிறுவனின் கால்தடத்தை அவதானித்தபோது அவர் தனியாக நடந்து கடலுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போதே கடலில் மூழ்கி ஆரிஸ் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.லண்டனில் இருந்து தாய் தந்தையுடன் தமது உறவினர்களையும், சொந்த மண்ணையும் பார்ப்பதற்கு வந்த அந்த பிஞ்சு உயிரை கடல் அன்னை தன்பால் எடுத்துக்கொண்டால். இரண்டு குழந்தையிகளுடன் பல கனவுகளுடன் வந்த அந்த தாய் தந்தை ஒரு குழந்தையை பறிகொடுத்து தவிக்கின்றனர்.
இந்த துயர சம்பவம் பெற்றோர்கள் அனைவரும் தமது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.ஆரிஸ் என்ற இந்த அழகிய குழந்தையின் இழப்பு வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய,உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலையத் தளபதி எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் (11.07.2023) வீட்டிற்கு சென்று குழந்தையை பொலிஸாரிடம் அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
பத்து வயது குழந்தையை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிரமான போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பனாவல தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கட்டளைத் தளபதி, பெண் உப பொலிஸ் பரிசோதகர் லியனகே, பொலிஸ் கான்ஸ்டபிள் 15447 ஸ்ரேயந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் சமூர்த்தி , முதியோர் கொடுப்பனவுக்களுக்காக முதியவர்கள் உட்பட ஏனையோரை கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் சமூர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் சமூர்த்தி அலுவலகர்களினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் எவ்வித முன்னாயத்தங்கள் மற்றும் சீரான ஒழுங்கமைப்பு இல்லாமல் மக்களை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அழைத்து கொடுப்பனவுகளை வழங்குவதுடன் காலை 8.30 மணிக்கு சென்றால் மாலை 4.00 மணிக்கே கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதுடன் சில சமயங்களில் அடுத்த தினம் வருமாறும் பணிக்கின்றனர்.
இதனால் முதியோர்கள் உட்பட மக்கள் காலை சென்று ஒருநேர உணவுடன் ஒருநாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலமை காணப்படுவதுடன் சிலர் இரண்டு தினங்களும் அலைக்கழிய வேண்டிய நிலமையினை அதிகாரிகள் உருவாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ் கொடுப்பனவுகளை கிராம பிரிவுகளின் அடிப்படையில் அப்பகுதிகளிலுள்ள பொதுநோக்கு மண்டபங்களில் வழங்கியிருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது எனவும் அதிகாரிகளின் அசமந்த போக்கே இவற்றிக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் இவ்விடயத்திற்கு தொடர்பான அதிகாரியினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியிலிருந்து பணத்தினை பெற்றே தாம் வழங்குவதாகும் அங்கு பதிவினை மேற்கொண்டு பணத்தினை பெற்று வருவதினாலேயே இந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நெளுக்குளம் கிராம பிரிவிலுள்ள நான்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்களையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த பகுதி சமூர்த்தி உத்தியோகத்தர் தனிச்சையாக செயற்படுவதாகவும் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சமூர்த்தி விடயங்கள் தொடர்பில் எமக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்குவதில்லை மேலும் குறித்த அதிகாரியில் அசமந்த போக்கான செயற்பாட்டினால் பல தடவைகள் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்று தினங்களாக சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுக்களுக்காக மக்களை அலைக்கழிப்பது தொடர்பில் எம்மிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர் என தெரிவித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மொத்த குடும்பத்தையும் பெரும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர், கொலை வழக்கில் இருந்து தப்ப புதிய காரணம் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
அவரது காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்றால், அவர் மீதான கொலை முயற்சி வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய மருத்துவரான 42 வயது தர்மேஷ் பட்டேல், வேண்டுமென்றே தனது டெஸ்லா வாகனத்துடன் 250 அடி பள்ளத்தில் குதித்ததாகவும், தனது குடும்பத்தினரை கொலை செய்யும் முயற்சி அது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது நீதிமன்றத்தை நாடிய அவர், உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். அப்படியான சூழலில், அவருக்கு சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டு, அவர் சிகிச்சையை நிறைவு செய்தால், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படும் என்றே கூறுகின்றனர்.
மருத்துவர் தர்மேஷ் பட்டேல் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதால், அதன் காரணமாக கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவரது சட்டத்தரணி குழு தற்போது புதிதாக உளவியல் சிகிச்சை தொடர்பான புதிய கதையுடன் களமிறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
முதலில் தமது டெஸ்லா வாகனத்தில் பிரச்சனை இருந்தது என சாதிக்க முயன்று தோல்வி கண்டுள்ளார் மருத்துவர் பட்டேல். ஆனால், ஜனவரி மாதம் விபத்து நடந்த பின்னர், பட்டேலின் மனைவி மீட்புக்குழுவினரிடம், இந்த விபத்து திட்டமிட்டு தமது கணவரால் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் இருந்து பட்டேலின் மனைவியும் இரு பிள்ளைகளும் உயிர் தப்பியிருந்தனர். தற்போது பட்டேல் கோரும் உளவியல் சிகிச்சை தொடர்பில், முன்னர் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் அவர் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சிகிச்சை அனுமதி அளிக்கும், பட்டேல் விவகாரத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் அனுமதிக்கப்படலாம் என கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற கோரிக்கைகள், பெரும்பாலும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே நம்புகின்றனர்.