ஒரு நிமிடத்தில் 802 முறை கை தட்டி உலக சாதனை படைத்த இளைஞர் – (வீடியோ இணைப்பு )

faster clapper

ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளை தட்டி சாதனை படைத்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் செய்தது தான்.

கடந்த 2003ம் ஆண்டில் கென்ட் என்ற பிரான்சை இளைஞர் நிமிடத்திற்கு 721 முறை கை தட்டியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பிரையன் என்ற இளைஞர், கென்ட்டை விட கூடுதலாக 81 முறை கை தட்டியுள்ளாராம்.
இவர் சமீபத்தில் யூடியூப்-ல் தனது கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதனை இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

விளையாட்டாக வீடியோவை வெளியிட்ட இளைஞர், தற்போது தான் இதன் அருமை புரிந்து கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளாராம்.

துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் போர் விமானத்துடன் மோதாமல் தப்பியது..!

துபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வானில், போர் விமானம் ஒன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட விபரம் தற்போது தெரியவந்துள்ளது. வெறும் 3.5 செக்கன்களில் இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு நெருக்கமாக எமிரேட்ஸ் விமானத்தை நோக்கி போர் விமானம் வந்திருக்கிறது!

எமிரேட்ஸ் விமானத்தில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்திருக்கிறது. இதுவரை பலதரப்பட்ட உள்ளக விசாரணைகள் செய்யப்பட்டு, இப்போதுதான் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான விஷயங்களை விசாரணை முடியுமுன் வெளியே தெரிவிப்பதில்லை.

துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம், இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. அது டேக்-ஆஃப் செய்து 16 செக்கன்களில் மேலெழுந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த வான் பகுதியில் போர் விமானம் ஒன்று அதிவேகத்தில் தாழப்பறந்து இந்த விமானம் மேலெழும் பாதையில் வந்தது.

துபாய் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்தவர்கள் எமிரேட்ஸ் விமானிக்கு, அவரது பாதையில் எதிரே போர் விமானம் வருவதை உடனே அறிவித்தனர். ஆனால், மேலெழுந்து கொண்டிருந்த நிலையில் போயிங் 777 விமானியால் அந்தக் கணத்தில் விமானத்தை திருப்ப முடியாது.

இந்த நிலையில், போர் விமானத்தின் விமானி எதிரே வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தை கண்டவுடன் சடுதியாக தனது விமானத்தை திருப்பியதில், இரு விமானங்களும் தப்பித்தன. விமானம் திருப்பப்படாது இருந்திருந்தால், 3.5 செக்கன்களில் இரு விமானங்களும் வானில் மோதியிருக்கும்!

தற்போது விசாரணை முடிந்து General Civil Aviation Authority (GCAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் குடைக்குள் காதல் செய்யத் தடை..!

யாழ். மாவட்டத்தில் ஒரு குடைக்குள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஜோடியாக இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டால் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் ஓடிச் சென்ற காதலர்களைப் பிடித்து வருமாறு பொலிஸார் முறைப்பாட்டாளர்களிடமே தெரிவிக்கின்றனர் என்றும் பிரதேச சபை ஒன்றின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் விரும்பிச் சென்றால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

“கொழும்பு காலிமுகத்திடலில் (கோல்பேஸ்) ஒரு குடைக்குள் ஆணும், பெண்ணும் இருந்தால் பிரச்சினையில்லை. இங்கு அப்படி இருக்க முடியாது. அது தென்னிலங்கை கலாசாரம். இது வடபகுதி கலாசாரம். இதனைப் பாதுகாக்க வேண்டும்´´ என்று கூட்டத்தில் கலந்து கொண்டோர் குறிப்பிட்டனர்.

விரைவில் திரைக்கு வரும் ‘உ’ திரைப்படம் ..!

விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய ‘உ’ என்ற தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வடபழனியில் நடைபெற்றுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.

பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய உ படத்தை ஆஷிக் இயக்குகிறார். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அதி வேக வலையமைப்பை அறிமுகம் செய்யும் தென் கொரியா..

5G network

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவின் நிறுவனமான சம்சுங் மின்னல் வேக 5G கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1GB தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் சம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென சம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை தென்கொரியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான எஸ்.கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா வலையமைப்பினை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வழமையான எல்.டி.இ. வலையமைப்பின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் தரவுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது. மேலும் இது 3 ஆம் தலைமுறை வலையமைப்பினை விட 10 மடங்கு அதிக வேகமானதென எல்.டி.இ சுட்டிக்காட்டியுள்ளது.

இச் சேவையானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடு பூராகவும் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது.

உலகில் வேகமான வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே 4G எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்: அஞ்சலி..!

கற்றது தமிழ், அங்காடி தெரு படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் அஞ்சலி.
இதன் பின் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார்.

ஆனால் கிளாமர் செட் ஆகவில்லை, எனவே மீண்டும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சி பொம்மையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் நல்ல கதையம்சம் உடைய படங்கள் ஒரு சில நடிகைகளுக்கு தான் கிடைக்கும்.

அதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி.

நான்கு பாடல்கள், இரண்டு காட்சிகளில் வந்து தலைகாட்டுகிற நடிகை என பெயர் எடுக்க விரும்பவில்லை.

அஞ்சலி என்றால் நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க அரசியல் யாப்பு நகல் சந்திரிக்காவிடம் கையளிப்பு..!

ஐக்கிய தேசியக் கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியல் யாப்பின் நகல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர மாவத்தையில் உள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்தில் வைத்து இன்று காலை இந்த அரசியல் யாப்பு நகல் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் நாளை ஒரு வழி (one way) போக்குவரத்து ஒத்திகை..!

மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிகல் சந்திவரை, டெக்னிகல் சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழி போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் நாளை 29ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இத்தினங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை வீதி மற்றும் ஆமர்வீதியில் இருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தையில் பஞ்சிகாவத்தை வீதிக்குள் நுழைந்து எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு அருகில் தெற்காக திரும்பி டெக்னிகல் சந்தியில் வலது பக்கம் திரும்பி புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

காமினி சுற்றுவட்டம் மற்றும் புஞ்சி பொரளை திசையில் இருந்து ஆமர் வீதி, மாளிகாவத்தை பகுதிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக டெக்னிகல் சந்திக்குச் சென்று தெற்காக திரும்பி சங்கராஜ மாவத்தை வீதியில் பயணித்து ஆமர் வீதி, மாளிகாவத்தையை அடைய முடியும்.

புறக்கோட்டை மற்றும் நீதிமன்ற திசையில் இருந்து காமினி சுற்றுவட்டம் அல்லது பொரளைக்கு வரும் வாகனங்கள் நேரடியாக சங்கராஜ சுற்றுவட்டம் வரை சென்று அங்கு பஞ்சிகாவத்தை வீதி ஊடாக மருதானை பாலம் சந்திக்கு வந்து புஞ்சி பொரளை அல்லது காமினி சுற்றுவட்டம் திசைக்குச் செல்ல முடியும்.

டெக்னிகல் சந்தியில் நீதிமன்ற வீதி மற்றும் பாலம் சந்தியை தாண்டி காமினி சுற்றுவட்டம் திசைக்கு வாகனங்களை செலுத்த முடியும்.

மாளிகாவத்தை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ சுற்றுவட்டத்தை தாண்டி பின் ஆமர்வீதி திசைக்குச் செல்ல முடியாது. அவ்வாறு வரும் வாகனங்கள் பெந்தாராம வீதி, பபாபுள்ளே வீதி ஊடாக கிரேன்பாஸ் மாவத்தை வழியாக ஆமர் வீதியை வந்தடைய முடியும்.

எனவே எதிர்வரும் இரு தினங்களில் மேற்கூறியவாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

கனடாவில் இந்துக் கோவில் உடைப்பு – குற்றவாளிகள் கமராவில் பதிவு..

Canada

கனடாவில் இந்துக் கோவில் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் திகதி சிலர் அடித்து உடைத்து சென்றுள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள இரகசிய கேமிராவில் இருவர் பேஸ்போல் மட்டையை வைத்துக்கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்துவிட்டு மட்டையை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே பொலிசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி..!

கட்டுநாயக்க – கொவின்ன கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து உங்களால் சிரிக்காமல் இருக்க முடியுமா? (வீடியோ)

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்களால் சிரிக்காமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.

வட மாகாணத்திற்கும் புதிதாக தாவரவியல் பூங்கா..!

முப்பது வருட யுத்தம் நிறைவு பெற்ற வட மாகாணத்தில் புதிதாக தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.எதிர் வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தாம் இந்த பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றுகிறது. எனவே உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களை மேலும் அதிகரிப்பதற்கு தாம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹங்செல்லை ,ஹம்பாந்தோட்டை ,மிரிஜ்ஜவிலை ஆகிய பகுதிகளிலும் தாவரவியல் பூங்காக்கள்  அமைக்கப்படும் என்றும் இந்த பூங்காக்களுக்குத் தேவையான மிருகங்களை ஜப்பான் கொரியா சீனா தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நேற்று முந்தினம் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றார் இந்த நிகழ்வின் போதே அமைச்சர் மேற்படி தகவலை தெரிவித்தார்.

கோயிலுக்குச் செல்வது ஏன்?

Hindu Temple

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு.

ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும். ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும்.

கருவறையில் இருக்கும் விக்ரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும்போது, காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு, காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு, சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது.

இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால் தான், அங்கு செல்லும்போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துதான் அவ்வைப்பாட்டி “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று அழகாக சொல்லி வைத்தார் .

இலங்கையில் உரப் பற்றாக்குறை: கவலையில் விவசாயிகள்

இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள்.

உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது.

ஆயினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற உரத்தின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம் கூறுகின்றார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, ஒரு ஏக்கருக்கு 106 கிலோ யூரியாவும், 30 கிலோ எம்.ஏ.பியும், 35 கிலோ டி.எஸ்.பியும் மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.

இப்போது யூரியா 64 கிலோவாகவும், பொட்டாஷ் 16 கிலோவாகவும், ஃபாஸ்பேட் 16 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பூபாலசிங்கம் கூறுகின்றார். இது விவசாயத் தேவைக்குப் போதாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதேநேரம், நெல் பயிரிடுவதற்கு மட்டுமே விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படுகின்றது.

வெங்காயம் போன்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளுக்கு உரம் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை என்று கூறும் பூபாலசிங்கம் வெளிச்சந்தையில் உரத்தை வாங்குவதற்கும் வழியில்லை எனவும் கூறுகிறார்.

வெளிச்சந்தையில் உரம் கிடைப்பதில்லை என்றும் அதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக பூபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.

முன்னர் ஒன்றுக்குப் பதினைந்து என்ற விகிதத்தில் விளைந்த வெங்காயம், உரம் இல்லாத காரணத்தினால், ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து என்ற விகிதத்தில்தான் அறுவடை செய்ய முடிகின்றது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

நாட்டின் உரத் தேவைகள் இன்னும் இறக்குமதியிலேயே தங்கியிருக்கின்றன. இதனால் விவசாயத் தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக நேர்ந்திருக்கின்றது.

உள்நாட்டில் உரத் தயாரிப்பு தேவையான மூலப் பொருட்கள் இருக்கிறது என்றும், இலங்கையிலேயே உர உற்பத்தியை மேற்கொள்ள முடியுமாக இருந்தால், இந்தப் பிரச்சினைகக்கு ஓரளவுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் என்று கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதரத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

(BBC)

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பூங்காவன திருவிழா..!

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்காவன திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இயற்கை வளங்களை கொண்டு தாயரிக்கப்பட்ட அழகிய பூஞ் சோலையில் விநாயகர் எழுந்தருளிய விநாயகருக்கு திருஊஞ்சல் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து தவில் நாதஸ்வர கச்சேரியும், வயலின் கச்சேரியும் இடம் பெற்றது. சிறப்பு நிகழ்வாக வான வேடிக்கைகள் முழங்க வவுனியா நகரின் பிரபல ஆசிரியர்களின் ஒன்றினைவில் சித்தி விநாயகர் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் சர்வ தேச இந்து இளைஞர் பேரவையினால் சிறப்பு பட்டி மன்றம் இடம் பெற்றது.

பெரிய புராணத்தில் பெரிதும் விஞ்சி நிற்பது ஆண்டவன் சோதனையா, அடியார் சாதனையா என்ற தலைப்பில் புதுகுடியிருப்பு கலாசார உத்தியோகத்தரும் பண்டிதருமான வி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

ஆண்டவன் சோதனை என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் அ.லோகேஸ்வரனும் இந்து நாகரிக ஆசிரியர் சிவ.கஜனும் அடியார் சாதனை என்ற தலைப்பில் புவியியல் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனும் மூத்த கணித ஆசிரியர் ல .சதீஸ் அவர்களும் வாதாடினர். இறுதியில் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவர் இக் கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிட தக்கதாகும்.

DSC01888

 

 

வடிவேலு படத்தின் தலைப்பு மாற்றம்..!

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் நாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நகைச்சுவை கலந்த மற்றொரு படத்தில், நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார்.

டி.இமானின் இசையமைப்பில், வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள்.