வவுனியா தெற்கு வலய மாணவர்களின் கள ஆய்வு செயற்பாடு நாளை ஆரம்பம்..!

chemistry

வவுனியா தெற்கு வலய கள கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு, தெற்கு வலய உயர் தர உயிரியல் பிரிவு மாணவர்களினால் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கள கற்கை நிலையத்தின் முகாமையாளர் ஏ. ஜெய்கீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரியல் பிரிவு மாணவர்களின் கள ஆய்வினை விருத்தி செய்யும் நோக்குடன் முதற் கட்டமாக வவுனியா தெற்கு வலயத்தின் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 35 மாணவிகளும் வவுனியா வடக்கு வலயத்தின் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் 12 மாணவர்களும் இக் கள ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் நாளை வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள கடற்கரை சாகியத்தையும் அதனை அண்டிய பிரதேசத்தினையும் ஆய்விற்கு உட்படுத்தவுள்ளனர் என தெரிவித்தார்.

இதேவேளை, ஓமந்தை பிள்ளை நேய பாடசாலை செயற்பாடுகள் சிறந்த கற்றல் கற்பித்தல் சூழல் மற்றும்; அறிவூட்டல் செய்றபாடுகள் தொடர்பான கல்வி சுற்றுலா ஒன்றினை வவுனியா தெற்கு வலய கல்வி உத்தியோகத்தர்களும் பாடசாலை அதிபர்களும் மேற்கொள்ளவுள்ளனர்.

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தீருமதி செ. அன்ரன் சோமராஜா தலைமையில் எதிர்வரும் திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் திருகோணமலை, சம்மாந்துறை ஆகிய வலய பாடசாலைகளுக்கு செல்லும் இவர்கள் அப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளனர்.

இக்கல்வி சுற்றுலாவில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்வரும் சனிக்கழமை காலை 10.30 மணிக்கு முன்பாக வலயக் கல்வி அலுவலகத்தில் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

புத்தளம் அரசாங்கப் பணியாளர்கள் அமைதி ஊர்வலம்..!

இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் அரச அதிகாரி ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரசாங்க பணியாளர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

உதவி அரசாங்க அதிபர் மாலிக் என்பவரும் அவரது வாகன ஓட்டுனரும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாம் இந்த அமைதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்ததாக கற்பிட்டி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரான முஹமட் ஜனாப் கூறினார்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பில் தான் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி மாலிக் தெரிவித்தார்.

தனது உடல்நிலை தேறி வருவதாகவும், தனது ஓட்டுனரின் நிலைமையே மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

எவரும் தன்னை தாக்கியதற்கான காரணம் எதனையும் கூறவில்லை என்று கூறிய மாலிக் அவர்களிடம், யானைகள் பிரச்சினை தொடர்பில் மக்கள் ஆத்திரமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு பிரதேச செயலர் என்ற வகையில் தன்னால் அந்த விடயத்தில் செய்யக் கூடியவை மிகவும் குறைவே என்றும் அரசாங்க உயர்மட்டத்தில் ஒரு முடிவு எடுத்து செய்யப்பட வேண்டிய விடயங்களே அதிகம் இருப்பதாகவும் கூறினார்.

யானைகள் – மனிதன் முரண்பாடு என்பது இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

putalam

வெள்ளத்தில் பலியானோரின் சடலங்கள் நூற்றுக்கணக்கில் எரிப்பு..!

வட இந்தியாவில் வெள்ளத்தில் பலியானவர்களை ஒட்டு மொத்தமாக எரிக்கும் பணிகள் நடக்கின்றன. வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 800க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர்.

மோசமான காலநிலையால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து கோயில் நகரான கேதாரநாத்தில் குறைந்தபட்சம் 200 சடலங்களாவது ஒன்றாக எரிக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்துக் குறித்து தொண்டர் அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

வெள்ளம் ஆரம்பித்து 11 நாட்கள் ஆன பின்னரும், இமாலய மலையின் பல பாகங்களில் அகப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் பேர் வரையிலானோர் இதுவரை தமது இடங்களில் இருந்து வெளியெற்றப்பட்டிருக்கிறார்கள். மலைகளில் அகப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் மீட்பதற்காக இராணுவம் ஹெலிக்கொப்டரைப் பயன்படுத்துகிறது.

செவ்வாயன்று நடந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிக்கொப்டரின் விபத்தில் 20 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தராகாண்டில் இந்த வருடத்தில் மழைக் காலத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்ட கடுமையான மழை, கடந்த 80 வருடங்களில் பெய்த மிகவும் பெரிய மழையாகும்.

பெருக்கெடுத்த ஆறுகள், அந்த மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களையும் அடித்துச் சென்றுவிட்டன.

இலகுவில் சென்றடைய முடியாத பகுதிகளில் இருந்து பலியானவர்களின் எண்ணிக்கை கிடைக்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்க இராணுவத்திலிருந்து 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டம்..!

அமெரிக்க இராணுவத்தில் 2017க்குள் 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க இராணுவ தளபதி, ரேமான்ட் ஓடிர்னோ கூறியதாவது:

அமெரிக்காவில், நியூயார்க் உலக வர்த்தக கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஈராக் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், ஏராளமான இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜெர்மன் நாட்டின் ஏழு பகுதிகளில், 4,500 வீரர்கள் பணியில் உள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து, ஏராளமான வீரர்கள் அடுத்த ஆண்டு தாயகம் திரும்ப உள்ளனர்.

எனவே இராணுவ செலவை குறைக்கும் வகையில், வரும், 2017ம் ஆண்டுக்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க உள்ளோம்.

இதன் மூலம் தற்போதுள்ள 5.7 லட்சம் வீரர்கள், 4.9 லட்சமாக குறைக்கப்படுவர். இவ்வாறு ரேமான்ட் கூறினார்.

பிரபாகரனோடு மன்னார் ஆயரை ஒப்பிட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்..!

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமை தொடர்பாகவும், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் குரல் கொடுத்து வந்தார்.

தற்போது பொதுபல சேன என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். தற்போது தமிழ் மக்கள் மீது அவர்களின் செயற்பாடு ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்குடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு பக்க பலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றமையினை பொது பல சேன அமைப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் எதிரொலியாக அரச தரப்பில இருந்து தொடர்ச்சியாக மன்னார் ஆயருக்கு எதிரான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதன் ஒரு அங்கமாக பொதுபல சேன என்ற பேரினவாத அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் தமிழர் என்பதினால் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். மன்னார் ஆயருக்கு எதிராக குரல் கொடுக்க சிங்கள ஆயர்கள் முன்வர வேண்டும் என குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் எகோபித்த பிரதி நிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் ஆயர் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். ஆன்மீக பணி செய்கின்றவர்கள் தன் மக்கள் சார்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் குரல் கொடுக்க கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் அயருக்கு எதிராக பொது பல சேன அமைப்பு முன் வைத்துள்ள கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் நைஜீரியா, கென்யா பிரஜைகள் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு கடற்கரையில் வைத்து நைஜீரியா மற்றும் கென்யா நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கியிருக்க இவர்களிடம் விசா இருக்கவில்லை என நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயாக மாறிய இளைஞர் – (வீடியோ இணைப்பு )

 

நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நாயாகவே மாறியுள்ளார்.

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார்.

இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவருக்கு பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில் அவரை “நாய் மனிதன்” என்றே அனைவரும் அழைக்கின்றனராம்.

d2 d1

43

கண்டியில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்..!

5baby

கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதுடைய கர்ப்பிணித் தாய் இன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.

மடவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய்க்கு நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இவ் ஐந்து குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கண்டி வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியாவில் ஒன்பது வயது சிறுமி மீது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் – விளக்கு வைத்த குளத்தில் சம்பவம்

child abuse

வவுனியா ஓமந்தை விளக்கு வைத்த குளத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதையடுத்து அந்தச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் வைத்திய கவனிப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வந்துள்ளதாவது,

பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தனது தாயாருக்கு புதன்கிழமையன்று வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் பாலைப்பழம் ஆய்வதில் உதவி செய்து கொண்டிருந்தாராம். அப்போது தாயுடன் இருந்த கைக்குழந்தை நித்திரை கொண்டதனால் அதனை வீட்டில் தொட்டிலிலிட்டு வருமாறு தாயார் இந்தச் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

குழந்தையை தொட்டிலிலிட்டு அதனை நித்திரை கொள்ளச் செய்த போதே சந்தேக நபராகிய வயோதிபர் வந்து சிறுமியை பலவந்தப்படுத்தியுள்ளார். அப்போது சிறுமி அபயக்குரல் எழுப்பியதையடுத்தே இந்தச் சம்பவம் பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரைப்பற்றிய அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?

SRILANKA

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நாளை மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ்

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிவரை முன்னேறியது. இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் வலுவானவையாக காணப்படுகின்றன. இந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால், எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.

மேலும் எமது அணியின் தொடக்க வீரர் திலகரட்ன டில்ஷான் சம்பியன் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட உபாதை காரணமாக இத்தொடரில் விளையாடமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது. எனினும் அணியில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்கிறோம். இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடையா ?

Annakodiyum Kodiveeranum Movie Wallpapers

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரவிருக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த ரகுபதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் “அன்னக்கொடியும் கொடி வீரனும்”. அந்த படத்திற்கான பூஜை கடந்த ஓராண்டுக்கு முன் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் போடப்பட்டது. பட பூஜையில் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலச்சந்தர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வரும் 28 ஆம் திகதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தில் வெவ்வேறு இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதுபோல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் மாவட்டங்களில் சாதி மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி ரகுபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மைக்ரோசொப்ட் பரிசை வெல்ல வேண்டுமா ?

microsoft

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சொப்ட் நிறுவனம், விண்டோஸ் மென்பொருட்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளியிடும் நடவடிக்கையில் மைக்ரோ சொப்ட் இறங்கி உள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத்தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட மென்பொருட்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் மென்பொருளில் புகுந்து வாடிக்கையாளர்களின் 2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல், ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கணனிகளில் விண்டோஸ் மென்பொருள்தான் இருந்தது.

இதனால் விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோ சொப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது. இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்திட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோ சொப்ட் தெரிவித்துள்ளது.

மேலும் மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக 6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை 59 லட்சமாகும். இனி வரும் காலங்களில் விண்டோஸ் மென்பொருள்கள் அனைத்தும் இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடவும் மைக்ரோ சொப்ட் திட்டமிட்டுள்ளது.

 

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு??

wikileaks

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி செய்துள்ளார். எனினும் ஸ்னோடெனை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ரஷ்யாவுக்கு தற்போது சட்ட ரீதியான அனுமதி இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெனிசுவெலா கூறியுள்ளது.
உலகை காப்பதற்கு வெளியிடப் பட்ட தகவலுக்காக இந்த இளைஞனை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தெரிவித்தார்.

ஸ்னோடென் தனது குடிவரவு எல்லைக்குள் வராத நிலையில் அவர் மீது உள்நாட்டு நீதிமுறையை பிரயோகிக்க முடியாது என ரஷ்யா விபரித்துள்ளது. எனினும் ஸ்னோடனுக்கு உதவுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை அது முழுமையாக நிராகரித்தது.

திருமண பந்தத்தில் இணைந்தனர் ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி (படங்கள் இணைப்பு)

இன்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்.

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-1 tamil-actor-gv-prakash-saindhavi-marriage-2
tamil-actor-gv-prakash-saindhavi-marriage-10

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-9

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-7

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-5

ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..

வாய்கால் தண்ணீரில்
மூழ்கிக் குளித்து
வரும் சிறுநீரையும்
கலக்க விட்டு
மேல் தண்ணீர் விலக்கி
இருகைகள் இணைத்து
அள்ளிப் பருகுவேன்
அப்போது புது
உற்சாகம் என்னுள்
பிறக்கும்..

இப்போ
கூல்வாட்டர் குடிக்கின்றேன்
குனிர் காய்ச்சல்
அடிக்கின்றது…

ஒல்லித் தேங்காய்க்கு
பூவரசம் தடி சீவி
கொம்புகள் அமைத்து
முள்முருக்கம் சோத்தியிலே
வண்டி செய்து
தங்கையை அதில் அமர்த்தி
வெட்ட வெளி வெயில் எல்லாம்
இழுத்து திரிவேன்
இன்னும் விளையாட வேண்டும்
இரவு வரக்கூடாது என்பேன்…

இப்போ
ஏசிக்கார் கதவை
திறந்து எட்டிப்பார்த்தாலே
எனக்கு லேசாக
தலைவலிக்கும்…

குண்டு மணி கோர்த்து
தங்கைக்கு அணிந்து
பனை ஓலையில் செய்த
மணிக்கூடு நான் அணிந்து
வயல் காட்டு வைரவர்
கோவிலுக்கு
வடை மாலை சாற்றுதற்கு
வண்டிகட்டி அப்பாவோடு
நாம் போவோம்…

பூஜை முடிந்ததும்
மூக்கு வரை உண்பேன்
முடியவில்லையன்றால்
மூன்று துள்ளுத்துள்ளி
முழுவதையும் செமிக்க
வைப்பேன்…

இப்போ
பத்துப்பவுண் கழுத்தில் அணிந்து
எட்டு இலட்ச கடிகாரம் கட்டி
நாகரீகம் என்ற பெயரில்
நான்கு வாய் உண்பதற்குள்
நாவு வறள்வது போல்
இருக்க
நாடுவேன் வைத்தியரை
அவர்
நானுாறு காட்டுதென்பார்
என் குருதி அழுத்தம்.

-திசா.ஞானசந்திரன்-

குவைத்தில் இலங்கை பெண்ணை கொன்ற தமிழக இளைஞர்களின் மரண தண்டனை ரத்து..!

இலங்கை பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இருவரின் மரண தண்டனையை குவைத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்தியா, நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் 30 வயதான சுரேஷ் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 32 வயதான காளிதாஸ் ஆகிய இருவருக்குமான மரண தண்டணையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து குவைத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 2008இல் இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும் சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர்.

இந்நிலையில் இருவரது மரண தண்டனை ஜூன் 16ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

தூதரக அதிகாரிகளின் முயற்சியினால் பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர்.

உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.