இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு பேட்டி அளித்தனர்.
முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார். சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து புஜாரா மனம் திறந்தார்.
ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி இருவரும் பேட்டி அளித்துள்ளதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
‘தொடர் முடிந்ததும் உடனடியாக மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, அதற்குட்பட்டு நடக்கும்படி கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அறிவுறுத்தினார்’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் மொத்தம் 39 வீரர்கள் இடம் வகிக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், அந்த தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பும் எந்த காரணத்தை கொண்டும் மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று ஒப்பந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
மீடியாக்களிடம் பேச தடை விதிக்கும், கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், சந்து போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கௌதம் மேனனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஏற்கனவே கௌதம் முடிவு செய்திருந்தார். ஆனால் அப்படம் நின்று போனது.
எனவே துருவ நட்சத்திரம் படத்தில் இருவரையும் ஜோடி சேர்க்க முடிவுசெய்துள்ளார். அசின் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அசின் இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரையுலக சங்கங்கள் தடை விதித்தன.
ஆனால் அந்த தடையினை மீறி அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். எனவே அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது. இதை அனுமதிக்க முடியாது. மேலும் தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக கௌதம் மேனன் செயல் படக்கூடாது. அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நௌறு தீவு அகதிகள் முகாமில் நேற்று இரவு பாரிய கலவர நிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிசி செய்திசேவையின் தகவல்படி, பெரும்பாலான இலங்கையர்கள் உட்பட்டவர்கள், அங்கு கடமையில் இருந்த பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் 50 பேர் வரை நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் ஒரு செய்தியின்படி சுமார் 500 அகதிகள் தப்பிச் செல்வதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை அகதிகள் தமது கலவத்தை ஆரம்பித்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நௌறு அகதி முகாமின் மத்திய பகுதியை கைப்பற்றினர்.
இதன்போது அவர்கள் கத்தி, கம்பு உட்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய மருத்துவமனை உட்பட்ட கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின்போது சுமார் 15 பொலிஸார் காயமடைந்தனர். முகாமில் உள்ள இரண்டு இலங்கையர்கள் நேற்று தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவங்களை அடுத்தே இந்த கலவரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருபவர்கள் நேரடியாக பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள் போராளியுமான தேவராசா பிரதீபன் என்ற 26 வயது இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர் அதே நபர்களினால் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் சூடேற்றிய இரும்பு கம்பிகளால் சூடப்பட்டும், சிகரட்டினால் சுடப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் மிகுந்த அச்சத்தினால் விடயத்தை அப்படியே மூடிமறைத்துள்ளனர்.
இதேவளை குறித்த இளைஞர் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தை எனவும், முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கிராமத்தில் அயலவருடன் ஏற்பட்ட தகராறையடுத்தே விசாரணைக்கு இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்று தாக்கி, சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான பரோன் டேவிஸ் தன்னை வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்கிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
34 வயதான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்குல உயரமானவர். அமெரிக்காவின் பல்வேறு கழகங்களுக்காக விளையாடியவர். இரு தடவைகள் அமெரிக்க அனைத்து நட்சத்திர அணியிலும் இடம்பெற்றவர். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நியூயோர்க் நைக்ஸ் கழகத்துக்காக விளையாடியவர். 2001 ஆம் ஆண்டு குட்வில் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியிலும் அவர் இடம்பெற்றார்.
கடந்த வியாழனன்று “த சம்ப்ஸ்” எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர் தன்னை வேற்று கிரகவாசிகள், அவர்களின் பிரதான விண்வெளிக் கலமொன்றுக்கு (பறக்கும் தட்டுக்கு) கொண்டு சென்றதாக கூறினார்.
இரு வாரங்களுக்கு முன் நான் உண்மையில் வேற்றுக் கிரகவாசிகளால் கடத்தப்பட்டேன். லாஸ் வேகாஸிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸுக்கு காரை செலுத்திக் கொண்டிருந்தபோது இது இடம்பெற்றது. அவ்வேளையில் நான் சற்று களைப்படைந்திருந்தேன். திடீரென பெரும் வெளிச்சத்தைக் கண்டேன். பாரிய ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக நான் நினைத்தேன்.
அதன்பின் நான் பாதியளவு மனிதர்களைப் போன்ற அவலட்சணமான நபர்களைக் கண்டேன். அவர்கள் என்னை தமது விண்வெளி ஓடத்தின் மூலம் தமது பிரதான கலத்துக்கு கொண்டு சென்றார்கள்.” என பரோன் டேவிஸ் கூறினார்.
இதற்குமுன் வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டையும் வேற்றுக்கிரக வாசிகள் போன்ற இனந்தெரியாத நபர்களையும் கண்டதாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால், பறக்கும் தட்டுவாசிகளால் பூமியிலுள்ள மனிதர் ஒருவர் தமது பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டதாக அல்லது பறக்கும் தட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பரோன் டேவிஸ் கூறுவதை மேற்படி நிகழ்ச்சியை நடத்திய நீல் பிரெனன், மோஷ் கேஷர் ஆகியோர் கூட நம்பவில்லை. “நீங்கள் சீரியஸாக சொல்கிறீர்களா? என செவ்வி கண்டவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஆமாம். உண்மையாக. அவர்கள் எனது மூக்கில் குத்தினார்கள். எனது கண்களை உற்று நோக்கினார்கள் என டேவிஸ் பதிலளித்தார். அவர் தனது கூற்றுகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட பல வாய்ப்புகளையும் நிராகரித்தார்.
எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அதன்பின் நான் மொன்ட்பெல்லோவில் (லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஒரு நகரம்) இருந்தமைதான் எனக்குத் தெரியும்” என பரோன் டேவிஸ் சத்தியம் பண்ணாத குறையாக கூறினார். அதையடுத்து இத்தகவல்கள் அமெரிக்காவின் பல முக்கிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியாகின.
ஆனால் இருநாட்களின் பின்னர் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில், வேற்றுக்கிரகவாசிகள் விடயம் ஒரு ஜோக் என பரோன் டேவிஸ் தெரிவித்தார். அதே டுவிட்டர் செய்தியில் எனக்கு உதவுங்கள். என் வீட்டுக்கு வெளியே கறுப்பு உடையணிந்த நபர்கள் நிற்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பரோன் டேவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியவை உண்மையா அல்லது பின்னர் டுவிட்டரில் கூறியது உண்மையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக கூறி இரண்டு நாட்கள் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவரச் செய்த பரோன் டேவிஸுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேற்கிந்திய தீவு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது போட்டி சென்ட் லூசியாவில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணித் தலைவர் டுவைன் பிராவோ களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா 75 ஓட்டங்களையும் உமர் அக்மல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவு சார்பில் ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சாமுவேல்ஸ் 46 ஒட்டங்களையும், சிம்மன்ஸ் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்வரிசை விக்கட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் சயீத் அஜ்மல், ஜுனைத் கான் தலா 3, விக்கட்டுகளையும் முகமது இர்பான் 2, வாகாப் ரியாஸ் ஒரு விக்கற்றையும் வீழ்த்தின
இதன் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. தொடர் 1-1 என மீண்டும் சமநிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் மிஸ்பா, மேற்கிந்திய தீவின் சிம்மன்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி சென்ட் லூசியாவில் நாளை நடக்கிறது.
மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற தமிழ், முஸ்ஸிம் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளடங்களாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்று வேறு இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்ஸிம் குடும்பங்களை உரிய முறையில் அவர்களுடைய சொந்த மண்ணில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றது.
ஆனால் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பல்வேறு உத்திகளை அரசு கையாண்டு வருகின்றது.
தமது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை முதலில் உரிய முறையில் அரசு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.
இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படால் சிங்கள குடியேற்றங்களை அரசு மேற்கொண்டால் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே யுத்தத்தினால் பல பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ், முஸ்ஸிம் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் உரிய முறையில் குடியேற்றம் செய்ய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறது. 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இதில் ஒரு நாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
கொழும்பில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணித் தலைவர் மத்தியூசிற்கு 2 ஆட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இலங்கை அணிக்கு சண்டிமால் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி தனது பயிற்சி போட்டியில் வெற்றி பெற்று உள்ளதால் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.
தென்னாபிரிக்க அணி இலங்கை அணிக்கெதிராக இலங்கை மண்ணில் விளையாடிய போட்டிகள் ஒரு ஒரு போட்டியில் மாத்திரமே இதுவரை வெற்றியீட்டி இருக்கிறது. அப்போட்டி 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர்.
எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம் விரயமாகின்றது.
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்கு Photo Uploader எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
Windows 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் தரவேற்றப்படும் புகைப்படங்களுக்கு விசேட எபெக்ட் போன்றனவும் வழங்க முடிவதுடன் ஒரே தடவையில் 100 வரையான புகைப்படங்களை தரவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்துக்கு 40, 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்து வாங்கும் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் நடிகைகள் பெற்றுவிடுகிறார்கள்.
படமே இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகள் இப்படிச் செய்வதில்லை மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் தான் ஒற்றைப் பாட்டுக்கு ஆடுகிறார்கள். காரணம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்களாம்.
சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆடினார் நயன்தாரா. லம்ப்பாக ஒரு தொகை கிடைத்ததும் சிவாஜி யில் ரஜினி, எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் – சிவகார்த்திகேயன் என அப்படியே தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அஞ்சலியும் சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டார். இதைப் பார்த்த மற்ற இயக்குநர்களும் ஒரு பாட்டுக்கு ஆட அஞ்சலியிடம் கேட்டனர்.
ஆனால், பெரிய நடிகர், பெரிய தொகை என்றால் தான் நான் ஆடுவேன் எனச் சொல்லி வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார்.
இப்படித்தான் பிரியாமணியும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கஹானி இந்திப் படத்தின் ரீமேக்கான அனாமிகா படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்ற தகவல் பரவியது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.
தற்போது தமிழில் கைவசம் எந்த படமுமே இல்லாததால், தமிழிலும் ஒரு பாட்டுக்கு ஆட ரெடி என்று இயக்குநர்களுக்கு ரகசிய தூது விட்டிருக்கிறாராம் பிரியாமணி.
அதேநேரம் இந்த நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டையும் சரியவிடாமல் கவனத்தோடு இருக்கிறார்கள். அதை வைத்துத்தானே ஒரு பாட்டுக்கு ஆட லம்ப்பாக வாங்க முடியும்.
மணிரத்னம் கடைசியாக இயக்கிய ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைச் சந்தித்தன.
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா நடித்த குரு இந்திப் படம் தான் கடைசியாக மணிரத்னம் கொடுத்த ஹிட்.
இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்து கண்டிப்பாக ஹிட் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மணிரத்னம்.
இதற்காக மும்முரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். எல்லாமே சிறப்பாக வரவேண்டும் என்பதால் ஓய்வுக்கு விடைகொடுத்துவிட்டு பம்பரமாகச் சுழன்று வருகிறாராம்.
ஆனால் அவர் இயக்கப் போவது தமிழ்ப் படமல்ல. கடைசியாக தமிழில் எடுத்த இரண்டு படங்களுமே ஓடாததால் இந்திப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிரபல பொலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம் மூலம் அறிமுகமானவர் விமல். அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் இவர் நடித்த களவாணி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கிராமத்துக் கதையில் பொருந்திப் போகிறார், அதிரடி அக்ஷன் காட்சிகள் தேவை இல்லை, இயல்பாகக் காமெடி வருகிறது என்பதால் அடுத்தடுத்து படங்கள் புக்காகின.
பிஸியாக இருந்தபோதே டாக்டருக்குப் படித்த பெண்ணுடன் காதல், அவசரத் திருமணம், பட விழாக்களில் குடித்துவிட்டுப் பேசுகிறார் என்று பிரச்சனைகளும் அவரை விட்டுவைக்கவில்லை.
தனியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இரண்டு, மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டுகளிலும் நடித்து பீல்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
அப்படிப்பட்டவருக்கு இப்போது சோதனை காலம் ஆரம்பித்திருக்கிறது. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் தன்னுடைய இடத்தைப் பிடித்துவிட்டதாக நினைக்கிறாராம் விமல்.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்கள் பண்ணிக் கொண்டிருந்தாலும், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போல மூன்று படங்களிலேயே அதிரடி ஹிட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறாராம்.
இதனால் கொஞ்ச காலத்துக்கு காமெடியை விட்டுவிட்டு அக்ஷன் பக்கம் தாவலாமா என்ற யோசனையில் இருக்கிறார் விமல். ரொம்பவும் அக்ஷன் இல்லாமல், தனக்கு ஏற்றபடி உள்ள அக்ஷன் கதையைத் தேடி வருகிறாராம் விமல்.
Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளத்தை (Operating System) கொண்டு வந்துள்ளது.
முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில் பயர்பொக்ஸ் இயங்குதளங்கள் கொண்ட கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த கைபேசிகளை வெளியிட Mozilla நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் கூடிய விரைவில் அனைவரும் உபயோப்படுத்தும் சூழ்நிலை உருவாகும் என்றும் Mozilla அறிவித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.