அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் அவுஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, அவுஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சம் கோரிகள் அந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கோரிக்கை மதிப்பிடப்படும் என்றார்.
உண்மையான அகதிகள் பாப்யுவா நியுகினியாவில் தங்க அனுமதிக்கப்படுவர்.
ஆனால் தஞ்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் திரும்பவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது ஒரு மூன்றாம் நாட்டுக்கோ அனுப்பப்படுவர் என்று பிரதமர் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பலமான, துடிப்பான எல்லைப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக பிரதமர் ரட் கூறினார்.
15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, சுகன்யா, டி.கே.கஜேந்திரன், நடிகர் ஸ்ரீமான், இயக்குநர் அமீர், பாமக முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்,
வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வைரமுத்து, பிறைசூடன், ந.முத்துக்குமார், கோவை தம்பி, கவிஞர் தமிழ்நாடன், பொன்னடியான், நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட கவிஞர்கள் நடந்தே மயானத்திற்கு சென்றனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) அமல் படுத்தப்பட்டுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் டி.ஆர்.எஸ். முறையில் சர்ச்சை ஏற்பட்டது.
இங்கிலாந்து வீரர் டிராட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையில் கொடுக்கப்பட்ட ஆடமிழப்பு மற்றும் ஆடமிழப்பு என்று நன்றாக தெரிந்தும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை விட்டு செல்ல மறுத்தது ஆகியவற்றின் காரணமாக இந்த டெஸ்ட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டி.ஆர்.எஸ். முறையால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தியது சரியானதாக தெரியவில்லை. சில பிரச்சினைகள் சரி செய்யப்படலாம்.
ஆனால் ஓட்டு மொத்த தீர்வாக இல்லை என்றும் டி.ஆர்.எஸ். முறையில் உள்ள குறைபாடுகளால் தான் இந்திய சபை அதை ஏற்க தயங்குகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது எனவும் கூறினார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப் & ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான். ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன. இதை மனதில் வைத்து சினிமா நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.அந்த விழாவில் 4 மொழிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் 50 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.
இந்த பிருமாண்டமான விழாசென்னையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் தொடக்க நாள் அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் ஆகியோரும் அதே தினத்தில் விழாவில் பங்கேற்கிறார்கள்.
முதல் நாள் விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் சிறந்த 50 கலைஞர்களின் உருவபடங்கள் அடங்கிய தபால்தலை வெளியிடப்படுகிறது.
இரண்டாவது நாள் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர முதல்வரும், கர்நாடக முதல்வரையும் அழைத்திருக்கிறாகள்.
ராயபேட்டை ஒய்.எம் சி ஏ மைதானத்தில் நடக்கும் இந்த விழாவின் கடைசி நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். அத்துடன் 4 மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.குறிப்பாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் உட்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஹைலைட்டாக இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடலும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிறப்பு பாடலும் கடைசி நாள் விழாவில் இசைக்கப்படுகிறது.இதற்கு தென்னிந்திய ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடனமாடப் போகிறார்கள்.
இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப்போல தற்போது மற்ற விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் நடைபெற தொடங்கி விட்டன.
இந்தியன் ஹொக்கி லீக் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்திய பேட்மின்டன் லீக் போட்டி ஆகஸ்ட் 14ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது. டெல்லி, லக்னோ, மும்பை, புனே, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் இந்தப்போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் விளையாடும் மும்பை மாஸ்டர்ஸ் அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான கவாஸ்கர், நடிகர் நாகார்ஜுன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேனேஜர் சாமுண்டி ஆகியோர் வாங்கியுள்ளனர்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு 22ம் திகதி வெளியிடப்படும். இதேபோல புனே அணியை பர்மன் குடும்பத்தினர் புனே பிஸ்டன்ஸ் வாங்கியுள்ளன. ஒவ்வொரு அணியும் 11 வீரர்களை ரூ.1 கோடிக்கு வாங்கி கொள்ளலாம்.
வத்திகனில் இருந்தபடியே டுவிட்டர் மூலம் உலக மக்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம் போப் ஆண்டவர்.
இதற்கு முன் எந்தவொரு போப் ஆண்டவரும் செய்திடாத ஒன்றை தற்போதைய போப் ஆண்டவரான பிரான்சிஸ் செய்திருக்கிறார்.
அதாவது டுவிட்டர் மூலம் உலக மக்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம்.
ரேடியோ, தொலைக்காட்சி போன்று சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களைத் தொடர்பு கொள்ள முடிவதால் பிரார்த்தனைகள் மற்றும் பாவமன்னிப்பு போன்ற நிகழ்ச்சிகளை தவற விடும் மக்களுக்காக இந்தப் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக வத்திக்கன் செய்தித்தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வவுனியா பேராற்றை மறித்து வவுனியா நகருக்கான குடிநீர்த்திட்டத்தை அமைக்கும் செயற்திட்டத்தில் பாதிப்படைந்துள்ள 15 விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டபோது அங்கு விவசாய நிலத்தைக் கொண்டிருந்த மற்றும் அங்கு குடியிருந்த மக்களின் ஒத்துழைப்பு எமக்கு அதிகமாக தேவைப்பட்டது மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக இந்தக் குடிநீர்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த இடத்தில் இம்முறை பயிர்ச்செய்கையை செய்து இலாபத்தை ஈட்டலாம் என எண்ணிக்கொண்டிருந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்கி வைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் முக்கியமானதாக கருதுகின்றேன். இந்த அபிவிருத்திப் பணியின் பலன்கள் இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியதாகும்.
அந்த வகையில் ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் போலவே எமது அமைச்சும் மிக வேகமாக இந்தத் திட்டத்தை செய்து முடிப்பதற்கு முன்வருகின்றது என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் இந்த நீர்விநியோகத் திட்டத்தை வெறுமனே ஓர் திட்டத்தை உள்ளடக்கியதாக இல்லாது, குடிநீராகவும் விவசாயத் தேவைக்காகவும் மற்றும் நீரோடு சம்பந்தப்பட்ட தேவைகளுக்காகவும் சுகாதார தரம்மிக்க நீரை பெற்றுக்கொள்வதற்கு எமது அமைச்சு இதனை முன்னெடுக்கின்றது.
இந்த வகையில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் சிறந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மாவட்ட விவசாயிகளுக்கும் உற்பத்தியில் ஆர்வலர்களுக்கும், சேவைகளை வழங்கவும் இலகுவாகவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைப்பேன் என்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த மினி உலக கிண்ண தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட ஹர்ஜன் சிங் அடுத்து சிம்பாபே அணியுடன் நடக்கவுள்ள தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை.
அதிரடி தொடக்க வீரர்கள் சேவக், கம்பீர், வேகப் பந்துவீச்சாளர் ஜகீர் கான் ஆகியோரும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அனுபவ வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங் நேற்று கூறியதாவது..
அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு கடுமையாகப் பயிற்சி செய்ய உள்ளேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக உழைப்பேன். தொடர்ச்சியாக பல போட்டிகள் நடக்க உள்ளன. ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாகவே விளையாடினேன். அந்த தொடரில் நான் 24 விக்கெட் வீழ்த்தியதுடன் மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்றதுதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி தேர்வுக் குழுவினர்தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும்.
எனினும் அடுத்து வரும் உள்ளூர் போட்டிகள் மற்றும் சம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் விளையாடி திறமையை நிரூபிப்பேன். ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியவர்கள் 100 போட்டிக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர்களை பற்றி விமர்சிக்க கூடாது.
தற்போதுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆடுகின்றனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது முக்கியம். இவ்வாறு ஹர்பஜன் கூறியுள்ளார்.
” யா யா” படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா.
சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் “யா யா” படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம்.
சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம்.
மேலும் இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம்.
இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டமேஜ் ஆகிவிடும் என்று நினைத்த அவர் மலையாள படங்களில் நடிக்க சொந்த மாநிலமான கேரளாவுக்கு கிளம்பிவிட்டாராம்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானி அறைக்குள் நடிகையை உட்கார அனுமதித்த விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் பெங்களூரில் இருந்து ஐதராபாத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தென் மாநில நடிகை ஒருவரும் பயணித்தார். அவரை பார்த்த விமானிகள் ஜெகன் எம்.ரெட்டி மற்றும் கிரண் ஆகியோர் விமானி அறைக்குள் அவரை கூட்டிச் சென்றதோடு அங்கு சிறிது நேரம் உட்காரவும் அனுமதித்தனர்.
இது தொடர்பாக அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகத்திற்கு முறைப்பாடு தெரிவித்தார். இதையடுத்து விமானிகள் இருவரையும் ஏர் இந்தியா நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறியதாவது..
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற விமானங்கள் மோதி இரட்டை கோபுர கட்டடங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் பயணிகள் யாரையும் விமானி அறைக்குள் அனுமதிக்கக் கூடாது என ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறி நடிகையை விமானி அறைக்குள் அனுமதித்த விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணையும் நடைபெறும். சிவில் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகமும், இது குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது. இவ்வாறு ஏர் இந்தியா அதிகாரிகள் கூறினர்.
காதலிப்பதாக நாடகமாடி மூன்று மாணவர்களை ஏமாற்றிய போலி காதலிக்கு சரமாரி கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.
ஆண்கள் தான் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவர். ஆனால், ஒரு பெண் மூன்று மாணவர்களை காதலித்து ஏமாற்றிய சம்பவம் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
பெல்காம் மாவட்டம் அதணி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதாதொட்டமணி, கடந்த 15ம் திகதி அவரது சொந்த ஊரான தெலசங்கா கிராமத்தில் 3 மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சங்கீதாவை மீட்டு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர்.
அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.
கெலசங்கா கிராமத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பசப்பா மாகரா (22), பசப்பா கம்பளி (23) மற்றும் சுரேஷ் கல்மட்டி (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, பொலிசாருக்கே தலைசுற்றியது. பிஜாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் சங்கீதா இரண்டாம் ஆண்டு பியுசி படித்த போது, அதே கல்லூரியில் பசப்பா மாகரா, பசப்பா கம்பளி, சுரேஷ் கல்மட்டி ஆகிய 3 பேரும் படித்தனர்.
சக மாணவர்களுடன் அன்பாக பழகிய சங்கீதா பின் மூன்று பேரையும் காதலர்களாக்கி கொண்டார். மூன்று பேரையும் தனித்தனியாக சந்திக்கும்போது உன்னைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் கூறினார். இதையடுத்து ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் ஜாலியாக ஊர்சுற்றி ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மூன்று பேரும் தன்னை ஒரே நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல் மிக கவனமாக நிலைமையை சமாளித்து வந்தார். அதேபோல், மூன்று இளைஞர்களும் ஒன்றாக சந்தித்து கொள்ள முடியாதபடி பகைமையை உருவாக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் மூன்று பேரை தனித்தனியாக காதலித்து சுக போக வாழ்க்கை நடத்திய சங்கீதாவுக்கு மேலும் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்டார்.
இதற்காக மூன்று இளைஞர்களையும் மெல்ல புறக்கணிக்க தொடங்கினார். சங்கீதாவின் போக்கில் மாற்றம் இருப்பதை தெரிந்துகொண்ட மூன்று இளைஞர்களும் ஒரு கட்டத்தில் ஒன்றாக சந்தித்து தங்கள் மனக்குறைகளை கொட்டிதீர்த்தனர். அப்போது தான் சங்கீதாவின் குட்டு வெளிச்சத்திற்கு வந்தது.
காதல் நாடகமாடி ஏமாற்றிய சங்கீதாவை உயிருடன் விடக்கூடாது என்று முடிவு செய்து, மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 15ம் திகதி தொலைபேசியில் பேசி தனி இடத்துக்கு வரவழைத்தனர்.
அங்கு மூன்று பேரும் தங்கள் ஆத்திரம் தீர சங்கீதாவை சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சங்கீதா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிசார் மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூறிய தகவலை கேட்டு பொலிசாரே குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் சொல்வது உண்மையா, பழி வாங்கும் நோக்கத்தில் சங்கீதாவை கொலை செய்ய முயற்சித்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவுக்கு நினைவு திரும்பிய பின், அவர் கொடுக்கும் வாக்கு மூலத்தை வைத்து என்ன காரணத்திற்காக கொலை முயற்சி நடந்தது என்பது தெரியும் என்று பொலிசார் கூறினர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 45,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபையின் தங்க தர பிரிவு ஆலோசகர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 41,000 ரூபாவிற்கு விற்பனையாவதாக அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 சதவீத வரி அறவிடப்படுவதால் இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு நிலையான அளவில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு பெற அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இலங்கை சனத்தொகையில் கிராம புரத்தில் 10 வீதமான மக்களும் நகர் புரத்தில் 15 வீதமான மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10-15 வீதமான பாடசாலை மாணவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவறான உணவு, உடற்பயிற்சி இன்மை மற்றும் மன அழுத்தம் என்பன நீரிழிவு நோய் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு5ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது.
எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச் சொந்தமான மரப்பலகை நிறுவனத்தின் அரை மில்லியன் டாலர்கள் பணத்தை கையாடியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அலெக்ஸி நவால்னி மறுத்திருந்தார்.
தன்மீதான குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று அவர் கூறியிருந்தார்.
தன்மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி நீதிபதி தீர்ப்பளித்தபோது நவால்னி நக்கலாக புன்முறுவல் காட்டியுள்ளார். வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் நவால்னி மாஸ்கோ மேயர் பதவிக்காக போட்டியிடவிருந்தார்.
ஆனால், தனது தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டில் வெற்றிபெற முடியாமல்போனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது போகலாம் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே இவரது இந்த 5 ஆண்டுகால சிறைத்தண்டனை, 2018-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விடாமலும் இவரைத் தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.