வடக்கில் தனி இராணுவ அலகை அமைக்க சாத்தியமில்லை – பசில்..!

basilமாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மீளவும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது என்பதனை தின்னமாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய நல்லுறவு தொடரும்: சல்மான் குர்ஷித் உறுதி..!

salmanஇலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது,

இந்திய – சீன எல்லையை ஒட்டி இந்திய பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை.

போர் காலங்களிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புபவர்கள் நாம். எனவே, தேசிய நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான உடன்பாடு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பல துறைகளில் நல்லுறவு நிலவுகிறது. அந்நாட்டை புனரமைக்க நாம் முழுவீச்சில் இறங்கியுள்ளோம்.

அந்த நல்லுறவு தொடரும் என நம்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் குறித்து கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு குர்ஷித் கூறினார்.

5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உடைய தாய்மார் வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தடை..!

slவெளிநாட்டு வேலைக்கு செல்லத் தயாராகும் பெண்களின் குடும்ப பின்னணி குறித்து தகவல் திரட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

பிரதேச செயலகங்கள் ஊடாக குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடு செல்வதை தடை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை இன்று தொடக்கம் குறுந்தகவல் மூலம் அவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு பயணத்தில்..

Payanam

ஒரு பயணத்தின் முடிவுகள்
முடிவிலியாய்..

பேருந்து பயத்தின்
நெருசல்களின்
உரசல்களால்
யார் யாரோ
விட்டு சென்ற
வியா்வை நாற்றங்கள்
இன்னும் என்னுள்
அருவருக்க……

காலைத் தேநீரும்
காலவதியாகி
களைப்பும் இளைப்பும்
சடுதியாய் வந்துவிட

தோற்றுப் போன
பயணத்தின் வெறுமை
தனிமையை நொந்து கொள்ள

கரை தொட்டும்
கடல் மேவும்
அலையாகி
நுளைவாயில்
நோக்கி நடந்து கொண்டிருந்தேன்
அத்தனை வெறுமைகளையும்
விழுங்கி ..

கொட்டும் வெயிலையும்
குளிருட்டி
கணப்பொழுதொன்றை
கனதியானக்கியது
அவன் வருகை

உயிரள்ளிப் போகும்
கனத்த நினைவக்குள்
தொலைகிறது மௌனம்
கால நீட்சியில் அவன்
உருவத்தில்
எழிலும்
பதவியில் உயா்வும்
கூடியேருந்தது..

பாசம் நிறைந்த -அவன்
பார்வைக்குள் அடங்கியே
போனது பயணக்களைப்புகள்

இத்தனை காலப்
பிரிவில்
அவனும் என்னை
போலவே தவித்த படி
உதடுகள் அசைய
மறுக்க
கைகள் பற்றிக் கொண்டன

மாறும் உலகில்
மாறாத அதே
பள்ளித் தோளனாய்
நீ உயிருடன்
இருக்கின்றாயா?
பதறிப் போனன்
அவன் கண்ணீா்
துளிகளை யாருக்கும்
தெரியாமல் காற்று
உலா்த்தி சென்றது
காலத்தின்
அவசரத்தில்
கதை பேசா
பிரிவுகளால்…

நேரில்
பேசும் நினைவுகள்
சுமந்தபடி
அவனைப் போலவே
நானும்
உணா்வுமிக்க பொழுதொன்றிற்காய்
காத்திருக்கின்றேன்.

மித்யா -கானவி.

பூனைகளாக மாறிய புலிகள்(படங்கள் இணைப்பு)

தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.இது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

p5 p4 p3 Tigers at the Tiger Temple in Kanchanaburi, Thailand - 26 May 2013 p1

வணக்கம் சென்னை திருட்டு கதையா?

vanakkam chennai

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம் “வணக்கம் சென்னை”.இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் கதை 1955 – ஆம் ஆண்டு ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்த “மிசியம்மா” படத்தின் தழுவல் என்று படக்குழுவினர் வாயிலாக செய்தி கசிந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் கிருத்திகா கடுப்பாகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “வணக்கம் சென்னை” படத்தின் கதை “மிசியம்மா” படத்தின் தழுவல் என்று கூறுவதில் உண்மை இல்லை.

அது வெறும் வதந்திதான். நான் இலக்கியம் படித்தவள். கல்லூரியில் படிக்கும்போதே நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சிறுகதைதான் “வணக்கம் சென்னை”. இது முழுக்க முழுக்க என்னுடைய கதைதான் இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எதிர்வரும் 27-ம் திகதி நடைபெறவுள்ளது.

கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்..!

TH-VAALIசினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம்  உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு வைத்தியர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாலி 1931-2013 (வரலாறு)

தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மண்ணிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னால் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவின் சினிமா வாழ்க்கை இனிமே அவ்ளோதானா?

trishaகடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை திரிஷா தான். மார்க்கெட்டில் நிலைத்திருக்க என்ன தேவையோ அதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் கோலோச்சிய நடிகை த்ரிஷா. இடையில் இந்திப் பக்கம் கூட போய் வந்தார். ஆனால், அவர் நடித்த “கட்டா மிட்டா” ப்ளாப் ஆனதால், தமிழ் – தெலுங்கு இரண்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தெலுங்கில் திரிஷாவுக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. தமிழிலும், ஜெயம் ரவியுடன் “பூலோகம்”, ஜீவாவுடன் “என்றென்றும் புன்னகை” படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தில் சூர்யாவுக்கு த்ரிஷா தான் ஜோடி என்றார்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கும் திரிஷாவைப் பார்த்து போரடித்து விட்டதால், இயக்குநர்கள் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லையாம். கையில் இருக்கும் இரண்டு படங்களும் முடிந்துவிட்டால் திரிஷாவுக்கு வேறு படமே இல்லை.

இதுவரை சிங்கிள் ஹீரோயின் மட்டும்தான் என்று கண்டிஷன் போட்டவர் தற்போது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் ஓ.கே. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்படி இருந்தும் வாய்ப்புகள் எட்டிப் பார்க்கவே இல்லையாம். ஒருவழியாக 3 ஹீரோயின்களில் ஒருவராக திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“ரம்” படத்தில் 3 கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். அவருடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அப்போ திரிஷா இனிமே அவ்ளோதானா? என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

தெஹிவளையில் 31 அனகொண்டா மலைப் பாம்புக் குட்டிகள்!!

anakonda

 

 

 

 

 

 

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.

இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள் அனகொண்டா பாம்புகள் பிறந்திருந்தன.

அவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.

மோதலுக்கு தயாரான அஜித்-விஜய் படங்கள்..!

vijay_ajithவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற 53-வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது.
இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பின்பு தற்போது 54-வது படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

மேலும் சந்தானம், பாலா, விதார்த், ‘நாடோடிகள்’ அபிநயா, ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புக்குட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டதால், வரும் பொங்கலன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தலைவா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

இதையடுத்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் நாளில் ‘தல’-‘தளபதி’ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அடுத்த வருட பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறிக்கொண்டே போகும் நயன்தாராவின் சம்பளம்!

nayanthara

ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என காதல் சூறாவளிகள் சுற்றிச் சுற்றி அடித்தாலும், எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை டொப் கியரில் கொண்டு செல்கிறார்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் இவருடைய மார்க்கெட் உச்சத்தில்தான் உள்ளது. தற்போது ஆர்யாவுடன் “ராஜா ராணி”, அஜித்தின் 53-வது படம், உதயநிதியுடன் “இது கதிர்வேலன் காதல்” என தமிழில் அவர் பிஸியோ பிஸி.

அதேபோல் தன்னுடைய சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டார் நயன்தாரா. “இது கதிர்வேலன் காதல்” படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நயன்தாரா.

இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிப்பதற்காக நயனிடம் பேசியுள்ளனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம் நயன். அதைக்கேட்டு ஆடிப்போன தயாரிப்பு தரப்பு சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறார்களாம்.

அமெரிக்காவில் 10 லட்சம் வைன் போத்தல்களை அழிக்க முடிவு!!

wine

காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ள 10 லட்சம் ம் வைன் போத்தல்களைஅழித்து விட போவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மது ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று “டிரெஷிரி ம் வைன் எஸ்டேஸ்”, “பென்ஃபோல்ட்ஸ்”, “உல்ஃப் பிளாஸ்”, “ரோஸ்மவுண்ட்” போன்ற உலகப் புகழ் பெற்ற மது வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பொதுவாக காலம் கடந்து குடிக்கும் போது தான் வைன்அதிக மணமும் சுவையும் பெற்றிருக்கும் என நம்பப் படுவதுண்டு. ஆனால் இது மட்ட ரக வைன்களுக்கு பொருந்தாது. இந்நிலையில், அவுஸ்ரேலிய மது தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பு வைன் போத்தல்கள் லட்சக் கணக்கில் அமெரிக்க மது பானக் கடைகளில் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

அவற்றின் காலாவதி திகதி நெருங்க இருப்பதால் அவற்றை அழித்து விட அந்நிருவனம் முடிவு செய்துள்ளது. காலாவதியாகும் நிலையில் உள்ள வைன் போத்தல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்தைத் தாண்டும் எனச் சொல்லப் படுகிறது.

ஆனால், வைன் போத்தல்களை அழிக்கும் ரகசியம் குறித்து விவரம் வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது. அவை கால்வாயில் ஊற்றி அழிக்கப்படலாம் அல்லது பள்ளம் தோண்டி புதைக்கப்படலாம் என தெரிகிறது. காலாவதியான தங்களது தயாரிப்புகளை மக்கள் உட்கொண்டால் அவர்களுக்கு தங்களது தயாரிப்புகளின் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் என்பதற்காகவே இந்த முடிவு செய்யப் பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

நெப்டியூனின் புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!!

neptunecompared

சூரிய குடும்பத்தின் 8வது கிரகமாக அறியப்பட்டுள்ள நெப்டியூன் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும், நான்காவது மிகப்பெரிய கோளாகும். இந்த கிரகத்துக்கு மேலும் ஒரு சிறிய துணைக்கோள் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் ஹப்பில் விண்வெளி தொலை நோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெப்டியூன் 10க்கும் மேற்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோள் இவற்றில் மிகச் சிறியதாகும்.

இதற்கு எஸ்/2004 என் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் சுமார் 20 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர், நெப்டியூன் ஆராய்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த புதிய கோளை கண்டுபிடித்தார்.

டெண்டுல்கரை விட லாராவே சிறந்த வீரர் பொண்டிங் புகழாரம்!!

ricky-pontin

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா இருவரும் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்கள் தான். ஆனால் டெண்டுல்கரை விட லாரா தான் தனது அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் போது சச்சினை காட்டினாலும் லாரா அடுத்த நாள் துடுப்பெடுத்தாட வருவதை நினைத்து ஒரு தலைவராக பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளேன்.

களத்தில் டெண்டுல்கரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து விடலாம். ஆனால் லாரா அப்படி இல்லை. களம் இறங்கிய அரை மணிநேரத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நம்மிடம் இருந்து பிரித்து போக்கையே மாற்றி விடுவார்.

என்னை பொறுத்தவரை எத்தனை சதங்கள் அடித்தோம் என்பதை விட அணியின் வெற்றிகள், தொடரை வெல்வது ஆகியவை தான் மிகவும் முக்கியம் என்றார்.

2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் பதிலடி கொடுக்குமா அவுஸ்திரேலியா?

CRICKET-ENG-AUS-ASHES

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இந்தநிலையில் 2–வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இதில் அவுஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையால் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சர்ச்சை ஏற்பட்டது.

இங்கிலாந்து வீரர் டிராட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையில் கொடுக்கப்பட்ட ஆட்டமிழப்பு மற்றும் ஆட்டமிழப்பு என்று நன்றாக தெரிந்தும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை விட்டு செல்ல மறுத்தது ஆகியவற்றின் காரணமாக இந்த டெஸ்ட் மிகுந்த விமர்சனங்களுக்குள்ளானது,

இந்த நிலையில் டி.ஆர்.எஸ். முறையால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஆசஷ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தியது சரியானதாக தெரியவில்லை. சில பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். ஆனால் ஓட்டு மொத்த தீர்வாக இல்லை என்றார்.

உடல் எடையில் 2 கிலோவை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு- துபாய் அரசு!!

big-bear

உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கும் புதிய சுகாதார திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இலவச தங்கத்தை பெற விரும்பும் நபர்கள் தங்களின் தற்போதைய உடல் எடையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும். உடல் எடையை குறைக்க உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

துரித உணவகங்களில் அதிகம் சாப்பிடுவதை மக்கள் கைவிட்டு, உடற் பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுவதை ஊக்கப்படுத்தவே இந்த பரிசு திட்டம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.