மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தானது, நேற்று (27.03.2024) இரவு பெரியகல்லாறு மயான வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் என்னும் 16வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மற்றைய மாணவன் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை!!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார். சம்பவம் தெர்ர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (27.03.2024) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

இரவு 7 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

IPL சூதாட்டத்தில் 1 கோடியை இழந்த நபர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆர்வகம் கொண்டவர். கடந்த 2021ல் இருந்தே IPL போட்டிகள் தொடர்பில் சூதாட்டத்தில் தர்ஷன் ஈடுபட்டு வந்துள்ளார்.

சூதாட்டத்தில் தோல்வி காணும் போது கடன் வாங்கத் தொடங்கினார். கடன் தொகை அதிகமான நிலையில், கடன் அளித்தவர்கள் நெருக்கடி தரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி 23 வயது ரஞ்சிதா நிரந்தர கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 18ம் திகதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வெளியான தரவுகளின் அடிப்படையில் தர்ஷன் ரூ 1 கோடிக்கு மேல் கடனாளியாக உள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

தர்ஷன் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 2021ல் தொடங்கி 2023 வரையில் தர்ஷன் IPL சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சூதாடுவதற்காக சுமார் 1.5 கோடி வரையில் அவர் கடன் வாங்கியுள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 84 லட்சம் வரையில் தற்போதும் கடனாளியாக உள்ளார். தர்ஷன் – ரஞ்சிதா திருமணம் 2020ல் நடந்துள்ளது. ஆனால் 2021ல் தான் தமது கணவரின் சூதாட்டம் குறித்து அவர் அறிந்துகொண்டுள்ளார்.

தற்போது ரஞ்சிதாவின் தந்தை தமது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் என 13 பேர்களின் பெயர்களை பட்டியலிட்டு புகார் அளித்துள்ளார். இவர்கள் தர்ஷனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது மருமகனை ஏமாற்றியே சூதாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக விரைவில் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தையை நம்பியே தர்ஷன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஞ்சிதாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அந்தவகையில் செட்டியார் தெரு நிலவரப்படி தங்கத்தின் நேற்றைய விலையுடன் இன்றைய தினத்திற்கான விலையை ஒப்பிடும் போது மாற்றமின்றி காணப்படுகிறது.

24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாக காணப்படுகிறது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்று 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,062.50 ரூபாவாகவும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,412.50 ரூபாவாகம் காணப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க இன்று இந்தியா விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் இது குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து, சுற்றாடல் அமைச்சுக்களின் செயலாளர்கள், தொடருந்து திணைக்களப் பொது முகாமையாளர், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு வந்த நிலையில், மாணவர்கள் ஆசிரியரை செருப்பால் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். அதோடு குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர்.

அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓட குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

மாணவர்களின் அடிதாங்க முடியாது தெறித்து ஓடிய ஆசிரியரை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு : கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு!!

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளம்பரத்திற்கமைய, ருவன்வெல்ல பிரதேசத்திற்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவொன்றிற்கு ஏற்பட்ட, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, அந்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்ணின் உடல் பாகங்கள் தானம் : துயரத்திலும் பெற்றோர் செய்த செயல்!!

அனுராதபுரத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பாகங்கள், யுவதியின் பெற்றோரால் தானம் செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்தில் அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ, ரம்பேவ, பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி எனும் யுவதியே நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் என்பன தானமாக வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்த யுவதி பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அனுராதபுர கிளையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த எட்டாம் திகதி ரம்பேவ மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை பார்த்துவிட்டு, மறுநாள் காலை வீடு திரும்பும் போது, ​​கெப் வண்டியில் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த யுவதி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை தனது மகளின் இறுதி விருப்பத்திற்கமைய அவரது உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மகள் உயிரிழந்த துக்கத்திலும் தம் மகளின் கடைசி ஆசையை பெற்றோர் நிறைவேற்ரி உள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வைத்தியர் எடுத்த விபரீத முடிவு.. திருமணமான சில மாதங்களிலேயே அதிர்ச்சி!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிராமிக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அபிராமிக்கு திருமணம் நடந்தது. இவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் அபிராமியின் தற்கொலைக் கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், வாழ்க்கை சோர்ந்து போகிறது என்றும் தற்கொலைக் கூறப்பட்டுள்ளது. பணிபுரிந்து வந்த மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள பி.டி.சாக்கோ நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார் அபிராமி.

அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அபிராமி தற்கொலை செய்து கொள்ள எந்த காரணமும் இல்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மருத்துவமனையின் சக ஊழியர்கள், நண்பர்களிடம் மேலும் பல தகவல்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மகள் அபிராமியை போனில் தொடர்பு கொள்ள முடியாததால், தாய் ரமாதேவி வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால், பின்பக்க ஜன்னல்களை உடைத்து பார்த்தபோது, ​​அபிராமி அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர் கதவு உடைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவக்கல்லூரி அருகே உள்ள இந்த வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்துள்ளார் அபிராமி.

மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அபிராமியின் கணவர் கொல்கத்தாவில் பணிபுரிந்து வரும் நிலையில், தான் இன்று மார்ச் 27ம் தேதி, கொல்லத்தில் உள்ள கணவரிடம் செல்ல இருப்பதாக அபிராமி கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நேற்றுமுன்தினம் மதியம் மாமனார், மாமியாருக்கும் ஷாலினிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஷாலினி தனது தாய் தந்தைக்கு போன் செய்து குழந்தை இல்லாத காரணத்தால் மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் தன்னை துன்புறுத்துவதாக அழுதபடி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஷாலினியின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முரளிதரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இதில் அதிகாலை 3 மணிக்கே ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த இவர்கள், ஏன் தங்களுக்கு 5 மணிக்கு தாமதமாக தகவல் தெரிவித்தனர் என ஷாலினி குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதனையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஷாலினியின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் முரளிதரன் குடும்பத்தினர் மாலை வரை மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை.

வரதட்சணையாக ரூ.12 லட்சம் ரொக்கம், நகைகள் மற்றும் அனைத்து சீர்வரிசைகளும் செய்து திருமணம் செய்து வைத்த நிலையில், குழந்தை இல்லை எனக்கூறி அவரை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும்,

இதில் முரளிதரன், அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்யும் வரை ஷாலினியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைக்கவுள்ள அரசாங்கம் : ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழ்ந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிற்கு புதிய கல்வி முறையை அமைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதோடு அதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்திற்கு கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

அதேவேளை, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே எமது நோக்கமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஐயோ சாமி ….. இலங்கைப் பாடகிக்கு சர்வதேச விருது!!

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை சென்னையில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், வின்டி குணதிலக இந்த ஆண்டிற்கான Best Sensational Song of the Year 2023 விருதை ஐயோ சாமி பாடலுக்காக வென்றார். பொத்துவில் அஸ்மின் எழுதிய “ஐயோ சாமி” பாடலுக்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

விருதினை இயக்குனர் மனோஜ் பாரதிராஜா,அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். விருது வழங்கும் நிகழ்வில் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், “ஐயோ சாமி” பாடலை சர்வதேச பாடல் வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துவதற்கு உதவிய தனது இரசிகர்களின் வாக்குகளுக்கு வின்டி குணதிலக நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த அசம்பாவிதம் : யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி!!

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாகரை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

அதீத ஆசை… விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.. வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்!!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்றைய தினம் (25-03-2024) கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இந்தாண்டு (2024) உயர்தரத்திற்கு தோற்றும் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சஹான் திவந்த பெரேரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

சஹான், நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று தனது தாயாரிடம் காட்டிய பின் மீண்டும் திரும்பி வந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது அதிக ஆசை கொண்ட சஹான், அதை தனது தாயிடம் காட்டுவதற்காக அப்படி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியின் குறுக்கே (யு-டர்ன்) வலதுபுறம் திரும்ப முற்பட்டபோது, ​​மாகும்புரவில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற சஹான் வேனில் மோதியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கி பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் சஹான் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.