பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
அதேசமயம் இளைஞர்கள் சிலர் தமது பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடும், சாகசம் செய்யும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றது.
இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இது போன்ற உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்து செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலியில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் பணியாற்றிய நிலையில் 51 வயதான சம்பத் சந்தன வீரகொடி என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்து பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இத்தாலி செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்த போது நிராகரிக்கப்படுவதாக மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தானும் மகனும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக, 48 வயதான நிரோஷா ஷாமலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிசாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.
இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விராலிமலை அருகே சொத்து தகராறில் அண்ணன் மனைவியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி.
இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர்.
இந்நிலையில், சேவியருக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லை. ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வைத்துக் கொண்டார்.
இதனால், அதுகுறித்து ஆரோக்கியமேரிக்கும், அவரது கொழுந்தனாரான ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ‘உனக்கு தான் குழந்தை இல்லையே எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்து நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய்?.
ஒழுங்காக அந்த சொத்துகளை என் பெயருக்கு எழுதி கொடுத்துவிடு. இல்லையென்றால் நடக்கிறதே வேறு. நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ள நெற்கதிர் வயல்களில் மயில் விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது, ஆரோக்கியமேரியின் அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து போனில் பேசியுள்ளார். பின்னர், மாலை 7 மணியளவில் அவர் தனது தங்கைக்கு போன் செய்யும்போது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
பலமுறை பேச முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டருகே உள்ளவர்களுக்கு போன் செய்து வயலுக்கு சென்று தேடி பார்க்க சொல்லி உள்ளார். பின்னர், அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.
இதனால், சந்தேகமடைந்த சகோதரர் அவரது உறவினருடன் கருங்குளத்தில் இருந்து புறப்பட்டு ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, மரம், வயல்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அன்று இரவே இதுகுறித்து மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர், நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே உள்ள மதயானைப்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து இதுகுறித்து மாத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாத்தூர் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர், நேற்று மதியம் 1 மணியளவில் விராலிமலை தாசில்தார் கருப்பையா முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றை தோண்டி பார்த்தபோது அதில் ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது சடலத்தை போலீஸார் குழியில் இருந்து வெளியே எடுத்து உடற்கூராய்வு செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை அவரது கொழுந்தன் ராயப்பன் கொலை செய்து உடலை அவரது டிராக்டர் கொலுவில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள மூக்கன் காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சொருகி புதைத்து விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்ததாக கூறினர்.
மேலும் போலீஸார் ராயப்பனின் தாய் சின்னம்மாள், மனைவி லிவிட்டியாமேரி ஆகியோரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த ராயப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து மாத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனர். சொத்துப் பிரச்னைக்காக தனது அண்ணன் மனைவியை இளைஞர் ஒருவர் கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனக்குத் துரோகம் செய்ததாக சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் படுகொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
புஷ்பலதா பியூட்டிஷியன் படிப்பை படித்து வந்தார். தனது மனைவி புஷ்பலதாவின் நடத்தையின் முது விஜய் சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கும், புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், .என்.என்.யு.ஆர்.எம் காலனியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை, விஜயின் சகோதரி சமீபத்தில் வாங்கியுள்ளார்.
அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனது மனைவி புஷ்பலதாவை விஜய் நேற்று மாலை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படுக்கை அறையில் புஷ்பலதாவின் கழுத்தை அறுத்து விஜய் கொலை செய்தார். இதன் பின் ரத்தக்கறையோடு அவர் வீட்டை வெளியேறுவதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த அப்துல்லாபூர்மெட் போலீஸார், கொலை செய்யப்பட்ட புஷ்பலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புஷ்பலதாவை திட்டமிட்டுக் கொலை செய்தவற்காக தனது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்காக கொலை செய்வதற்கு முதல்நாள், கத்தியை விஜய் வாங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து விஜயை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இதுகுறித்து அப்துல்லாபூர்மெட் போலீஸார் கூறுகையில்,” மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகித்த விஜய் இந்த கொலையைச் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவிக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து புஷ்பலதா புகாரும் செய்துள்ளார்” என்றனர். கடந்த 2014-ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்காக யார் யாரோ என்னவெல்லாமோ பரிசு தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், தன்னுடைய காதலிக்காக, காதலி எழுத வேண்டிய போட்டித் தேர்வை காதலன் எழுத முயற்சித்து, அதற்காக காதலியைப் போல பெண் வேடமிட்டு, போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் எழுதி அதிர வைத்திருக்கிறார்.
இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என அனைத்து ஆவணங்களையும் போலியாக உருவாக்கி போட்டித்தேர்வில் கலந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், கைரேகையால் காதலன் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். தேர்வு எழுத வந்த காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.
மேலும் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவையும் இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இருப்பினும் இந்த தேர்வுகள் முழுவதும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது பரம்ஜித்தின் கை ரேகை விழாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது.
பரம்ஜித்தின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த தேர்வை எழுத அங்ரேஷ் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலி ஆவணங்களை தயாரித்ததாக கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபில் இது போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டங்களில் ஈடுபடுவது புதிதல்ல. கடந்த 2011ம் ஆண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற போது, ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர், பல மாதங்களாக தனக்கு மணப்பெண் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூன்று மணப்பெண்களை மதுசூதன் பார்த்துள்ளார்.
ஆனால், நடத்தையின் காரணமாக, அந்த மூன்று மணப்பெண்களும் திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இதனால், மதுசூதன் மதுவுக்கு அடிமையானார் எனவும் கூறப்படுகிறது. அப்போது, அவரது உறவினர்கள் மதுவை நிறுத்திவிட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளனர் ஆனால், மணமகள் கிடைக்காத விரக்தியில் மதுசூதன் தொடர்ந்து குடித்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 5 -ம் திகதி விஷம் அருந்தி மதுசூதன் மயங்கி விழுந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்தில் (விம்ஸ்) சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு மதுசூதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்த நிலையில்,
தன்னைக் காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று இளம்பெண்ணுக்கு அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்ததால், பதட்டத்திலும், பயத்திலும் என்ன செய்வது என தெரியாமல் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் நிடுகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(21). பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ள சங்கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற வாலிபர் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இவரது காதலை சங்கீதா ஏற்காத நிலையில், தொடர்ந்து சங்கீதாவை ஒருதலையாக சிவா காதலித்து வந்துள்ளார். சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து தன்னைக் காதலிக்கும்படி தொடர்ந்து சிவா தொந்தரவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், தன்னைக் காதலிக்கவில்லை என்று சங்கீதா சொல்லியும், அதைக் கேட்காமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சிவா டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேலூரில் உள்ள அய்யப்பஸ்வா கோயிலுக்கு சங்கீதா குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
அப்போது சிவாவும் அங்கு வந்தார். அங்கு சங்கீதாவை பார்த்து, என் போன் அழைப்பை ஏன் எடுக்கவில்லை என்று திட்ட ஆரம்பித்தார். அத்துடன் என்னைக் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் சங்கீதா மிகவும் கவலையடைந்தார். காதலிக்க முடியாது என்று எத்தனை முறை சொல்லியும், கேட்காமல் தினமும் தொல்லை கொடுப்பதுடன், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று சிவா மிரட்டுவதால் மன உளைச்சல் அடைந்தார்.
தன்னால் தன் குடும்பத்திற்கு கெட்டப்பெயர் வந்து விடுமோ என்று அச்சமடைந்த சங்கீதா, நேற்று வீட்டில் யாருமில்லாத போது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடைக்குச் சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, சங்கீதா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் அலறித் துடித்தனர். இச்சம்பவம் குறித்து பேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.
துணி துவைக்கச் சென்ற தாயும், மகனும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35).
இவரது மகன் பிரவீன் (15) இருவரும் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன்குமார் தவறி கிணற்றில் விழுந்தார். இதை பார்த்த விமல் ராணி மகன் பிரவீனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அதன்பின், வயல்வெளியில் வேலை செய்துவிட்டு, துணி துவைக்கச் சென்றவர்கள், நீண்ட நேரமாகியும் அவர்களை காணவில்லை என, அங்கு சென்று பார்த்தனர்.
அப்புறம் புடவை மட்டும் மேலே மிதந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கிணற்றில் தண்ணீர் நிரம்பியதால் இருவரையும் மீட்க மீட்புக் குழுவினர் போராடி கிணற்றில் இருந்து இறந்த இருவரையும் மீட்டனர். இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றிய அணைக்கட்டு போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தின் கயிற்றில் ஏறியே குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்துள்ளார். பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்க விட சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்தில் உயிர்தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அம்பத்தளை நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சிறுவனின் உடலின் எந்த பாகமும் காணாமல் போனதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கடுவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.
கடுவலை வெலவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசித்து வந்த 11 வயதுடைய டிஸ்னா பிரமோத் பெரேரா என்ற பாடசாலை மாணவனே முதலை இழுச்சென்றதால் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி பாரியளவில் இடம்பெறுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மோசடியாளர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்ட வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முருவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை. ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.
கொழும்பு அழகு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்,ஹொரணை உயன பிரதேசத்தில் வசித்து வந்த ஹாஷினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 11ஆம் திகதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹாஷினி பாக்யா நேற்றைய தினம் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் ரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு கொழும்பில் 3,992 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,892 ஆக உள்ளது. அவர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும்,பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், மெனிக்பாம் செட்டிகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியாபரணம் இன்று 17-01–2024 காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும் கமலாதேவியின் கணவரும், விஜயகுமார், மகிழா,கோடீஸ்வரன்,வேணி,முகுந்தன்,விநோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிஜைகளுக்காக நாளை மதியம் 2 மணியளவில் மெனிக்பாம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.