தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம் புகுந்த மன்னாரை சேர்ந்த ஏழு பேர்!!

மன்னாரில்..

மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இவர்கள் படகுமூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டிற்கு அகதியாக சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்குச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!!

சமாதி அனுராதா ரணவக்க..

நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த கண்டி மகாமாயா மகளிர் வித்தியாலய மாணவி சமாதி அனுராதா ரணவக்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன.இதன் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் கண்டி மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சமாதி அனுராதா ரணவக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

தனது இந்த வெற்றி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஆரம்பம் முதல் ஒரு நோக்கத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எவராலும் தமது இலக்கை அடைய முடியும்.நாட்டிற்கு சிறந்த சேவையாற்றக் கூடிய ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாய் : வெடித்த சர்ச்சை!!

யாழில்..

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்னுக்கு பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால் , நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,கடந்த 21ஆம் திகதி குழந்தை பேறுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினமே சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார்.பின்னர் 25ஆம் திகதி சனிக்கிழமை தாய்க்கு அம்மை நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக கூறி சில மருந்துகளை எழுதி தந்து , அவற்றை வாங்கி கொடுக்குமாறும் , அம்மை நோயுடன் , வைத்தியசாலை விடுதியில் வைத்திருக்க வேண்டாம் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என பணித்தனர்.

காலையில் கூட பிரஷர் இருக்கு என சொன்னவர்கள் மாலை 5 மணிக்கு தாயையும் பிள்ளையையும் அழைத்து செல்லுமாறு பணித்ததால் , நாம் வீட்டிற்கு அழைத்து சென்றோம்.வீடு வந்த பின்னர் தாய் மிக சோர்வாக , பலவீனமாக காணப்பட்டார். பிள்ளைகளுக்கு பாலூட்டவோ , அவர்களை அரவணைக்கவோ முடியாத அளவுக்கு தாயின் உடல் பலவீனமாக இருந்துள்ளது.

அதனால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரிடம் காட்டிய போது , உடனடியாக நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு செல்லுங்கள் , தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர் கூறினார்.ஞாயிற்றுக்கிழமை மாலையே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தோம்.

சிறுநீர் பரிசோதனையை தனியார் ஆய்வு கூடத்தில் செய்து வருமாறு கொடுத்தனர். பரிசோதனை செய்து கொடுத்தோம் அதன் பின்னர் இரவு 12 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் திங்கட்கிழமை காலை , தாயின் சிறுநீரகத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு உள்ளமையால் , உடல் உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என தெரிவித்தனர்.

மீள சிறுநீர் பரிசோதனை செய்து வருமாறு திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திரும்பி போதனா வைத்திசாலைக்கு வந்து சிறிது நேரத்தில் மாலை 4.45 மணியளவில் தாயை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து நடத சம்பவங்களை வைத்தியசாலை பணிப்பாளரிடம் நடந்த அனைத்து விடயங்களையும் கூறி முறையிட்டோம்.

விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும், பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால், அதனை மறைத்து விட முடியாது. முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்பிக்கை தந்து அவர் அனுப்பி வைத்தார். எனினும் மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.

பொலிஸ் அதிகாரி , தானாகவே இது ஒரு போதனா வைத்தியசாலை இங்கே கவனயீனம் , வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார். அதுமட்டுமல்லாது எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ , எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.

சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் அவர் அருகில் வரவில்லை. தூர நின்றே குறிப்பெடுத்தார். அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் கிட்ட வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது , ஊழியர்களை மிரட்டி , தான் அருகில் வர தேவையில்லை என்றார்.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது , அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள் , மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார்.பின்னர் சில மாதிரிகளை கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக கொழுப்புக்கு அனுப்ப வேண்டும்.

அறிக்கை கிடைக்க இரண்டு கிழமைகளுக்கு மேலாகும் என்றார். உடலத்தை மீள சோதனை செய்ய வேண்டி வருமா என சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது , தேவையான மாதிரிகள் எடுத்து விட்டோம். உங்கள் சமய வழக்கப்படி செய்யுங்கள் என கூறினார்.

இந்த நிலையில் இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன. வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான் , உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள பெணிணின் உறவினர்கள் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று(02.12.2023) போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஊடகஅமையத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்துதெரிவித்த ஊடகவியலாளர்கள்…

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர் கதையாகவே
இருந்து வருகின்றது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத்தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதி மறுக்கப்பட்டநிலையில் இன்றும் நீதி கோரி போராடிவருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

இதேவேளை மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இவ் அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றார்கள். எனவே ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகியநாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத்தரப்பிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம் என்றனர்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஊடக சுதந்திரத்தை. உறுதிசெய், பொய்வழக்கு போடாதே,ஊடகப் படுகொலைக்கு நீதிவேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்து முற்றுப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்தேசிய மக்கள் முண்ணனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்,

வவுனியா வர்த்தக சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலதில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் ( 21) என்பவர் எம்.பி.பி.எஸ் (MBBS ) படித்து வந்தார்.

இவர், கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் வழங்கினர்.

அப்போது, மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிய பின்னர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு சென்ற ஆதித் பாலகிருஷ்ணனை வாகனம் நிறுத்தும் இடத்தில் விஷ பாம்பு கண்டித்துள்ளது. அவரது வீட்டின் அருகில் இருந்த பூங்காவில் இருந்து பாம்பு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், பாம்பு கடித்ததை உணராத ஆதித் பாலகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்றதும் சுருண்டு விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

அப்போது, பட்டமளிப்பு விழாவை காண வந்த ஆதித் பாலகிருஷ்ணனின் தாய் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்ததும் கதறினர். இத்தாலியில் உள்ள அவரது தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆதித் பாலகிருஷ்ணனுக்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

மழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி சென்றபோது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் என்ற இளைஞர் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகே சாலையில் குடைபிடித்தபடி சென்றுள்ளார். செல்போன் பேசியபடி சென்ற அவர் கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

அவரது செல்போன் லேசாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணில் வெறிநாய்க்கடி ஊசி போட்ட காதலி… கதறித் துடித்த காதலன்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்த்ரா ஜிமினெஸ் . இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்.

அதே நேரத்தில் அவரது காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து காதலனிடம் தகராறு செய்தார் சந்த்ரா ஜிமினெஸ். ஆனால் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜிமினெஸ், தங்களின் வளர்ப்பு நாய்க்கு போடுவதற்காக வாங்கி வைத்து இருந்த வெறிநாய்க்கடி ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அவரது காதலன் உடனே போலீசை தொடர்பு கொண்டுதனக்கு உதவி செய்யும் படி கதறி அழுதார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே சமயம் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் படுத்து தூங்கி கொண்டு இருந்த தோழி ஜிமினெஸையும் போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜிமினெஸிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, காதலனை தான் தாக்கவில்லை.

அவர் தன்னை தானே குத்திக் காயப்படுத்தி கொண்டார். இந்த தாக்குதல் குற்றச்சாட்டை நான் ஏற்க முடியாது எனவும் ஜிமினெஸ் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜிமினெசிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் சடலமாக கிடந்த தாய்.. விசாரணையில் அதிர்ச்சி!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், மீனாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரே வீட்டில் தனித்தனியே சமைத்து வந்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!

சென்னையில்..

காதலியை கர்பபமாக்கி விட்டு தலைமறைவான காதலனை அழைத்து காதலியுடன் காவல்நிலையத்தில் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சஜின்ராஜ்ம்(27) பணி பரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1.5 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலைவாணி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை சஜினிடம் தெரிவித்த நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே வீட்டில் திருமணம் குறித்து பேசலாம் எனவே கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பி கலைவாணியும் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனையடுத்து மதம் காரணமாக காதலனின் பெற்றோர் மறுப்பதாகவும், இதனால் திருமணம் செய்து கொள்ள சஜின்ராஜ் மறுத்துள்ளார். இதன் காரணமாக கலைவாணி வீட்டில் இருந்த மாத்திரைகளை உட்கொண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இராயபுரம் காவல் நிலையத்தில் கலைவாணி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த காதலன் கொடைக்கானலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கலைவாணி கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் காதலனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் சமரசமாக திருமணம் செய்து கொள்கிறோம் என இருவீட்டார் தெரிவித்ததை அடுத்து காவல் நிலைய வளாகத்திற்குள் ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி கொண்டு, தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.

கணவன்-மனைவிக்கிடையே கடும் சண்டை… அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

ஜெர்மனியில்..

நடுவானில், பாங்காக் சென்று கொண்டிருந்த விமானத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த பயங்கர சண்டை காரணமாக அவசரமாக விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது.

ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே கடும் சண்டை உருவானது.

இருவரும் அடுத்தடுத்து தாக்கிக் கொண்டதில் விமானத்தினுள் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் யாராலும் சமாதானப்படுத்த முடியாமல் விமானம் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது’ என்றார்.

இவர்களிடன் சண்டை காரணமாக விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி நிராகரிக்கப்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் : தனிமையில் வாழ்ந்த விரக்தியில் வெறிச்செயல்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியில் பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆண் குழந்தை இருந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அகல்யா கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒறையூரில் உள்ள தனது தாய் வீ்ட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி காலை 10 மணிக்கு குழந்தை சசிதரனுக்கு அகல்யா சாப்பாடு ஊட்டியதாகவும், பின் குழந்தை தூங்கிய நிலையில் பகல் 12:30 மணிக்கு குழந்தையை எழுப்பிய போது எழுந்திருக்காததால், உடனடியாக ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது குழந்தை சசிதரன் உடலை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், உடனடியாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து அகல்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அகல்யா திருச்செங்கோடு பகுதிக்கு மணிலா அறுவடைக்காக சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை காதலித்து தனிமையில் இருந்து வந்த போது கர்ப்பமாகி உள்ளார்.

இதனால் கடந்த 2021 பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் அகல்யா நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அகல்யாவுக்கு 17 வயது என்பதாலும், குழந்தை திருமணம் நடந்திருப்பதாலும், சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சக்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் காரணமாக தனது தாய் வீட்டில் வந்து தங்கிய அகல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் 2 ஆண்டுகளாக மீண்டும் சக்தியுடன் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவர் துணை இன்றியும், பெற்றோர் இல்லாததாலும் தனிமையில் வாழ்ந்து வந்த அகல்யாவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பவத்தன்று தனது இரண்டு வயது ஆண் குழந்தை சசிதரனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, இட்லி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அகல்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விநோதமான ஹெல்மெட் அணிந்து மக்களை அச்சுறுத்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!

தென்காசியில்..

விநோதமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் விநோதமான வகையில் தலைக்கவசம் அணிந்தபடி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், மேற்கொண்டு அபம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலிசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவல் ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்தனர்.

இதனையடுத்து விநோதமாக தலைக்கவசம் அணிந்த அந்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த நபர் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

இதையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விகித்தனர். மேலும் அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

ஒரு இரவுக்கு 30 லட்சம்… இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் இதுதான்!!

இந்தியாவில்..

இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் பிரபலமானது. இங்கு தங்க ஒரு இரவுக்கு எவ்வளவு செலவாகும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ் ஆகும். நாட்டின் விலை உயர்ந்த ஹோட்டல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. அதன் அழகு உலகம் முழுவதும் எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த ஹோட்டலை இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டலாகவும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. உலகப் பயண விருதுகளால் ஏழு முறை உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாக இது பெயரிடப்பட்டுள்ளது.

ஹோட்டல் முன்பு தி சோமு ஹவேலி என்று அழைக்கப்பட்டது. இது 1727-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சோமுவின் கடைசி மன்னர் தாக்கூர் ராஜ் சிங்கின் நினைவாக இது அழைக்கப்படுகிறது.

ஆனால் 1996 ஆம் ஆண்டு இளவரசி ஜெயேந்திர குமாரி இந்த அரண்மனையை ஹோட்டலாக மேம்படுத்த முடிவு செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் இது மிகவும் தனித்துவமான ஹோட்டலாக இருந்தாலும், உட்புறம் இன்னும் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த ஹோட்டலில் 50 ஆடம்பர அறைகள் கட்டப்பட்டுள்ளன. இவை முகலாயர் கால வடிவமைப்பை ஒத்தவை. இவை அரசர்களும் பேரரசர்களும் தங்கும் ஹோட்டல் அறைகள்.

அதுமட்டுமின்றி, பல ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புகள் இந்த ஹோட்டலில் இன்னும் உள்ளன. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் கனேடிய நடிகர் எலன் பேஜ் வரை பல பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். இங்கு பல்வேறு வகையான அறைகள் உள்ளன.

இந்த ஹோட்டலை பொறுத்தவரை இது மிகவும் குறைவு., ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்புமிக்க சூட் வாடகை ரூ.77,000 ஆகும். அதையடுத்து, ப்ரெஸ்டீஜ் சூட்டின் ஒரு இரவு வாடகை ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல், அரண்மனை அறைக்கு ஒரு இரவு வாடகை ரூ. 5 லட்சத்துக்கும் மேல். இங்கு விலை உயர்ந்தது பிரசிடென்ஷியல் சூட் அறையின் ஒரு இரவு வாடகை ரூ. 14 லட்சம் முதல் ரூ.29 லட்சத்திற்கும் மேல் என கூறப்படுகிறது.

இது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 240 கிமீ தொலைவிலும் உள்ளது. இது ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 7.9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் விமானம் அல்லது சாலை வழியாகவும் இங்கு செல்லலாம்.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி!!

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் தோழர் என்.பிரதீபன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு – கிழக்குப் பகுதிகளில் பொலீஸார் நடந்து கொள்ளும் முறையானது நாட்டின் அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதுடன், அப்பாவி மனிதர்களின் உயிர்களை பலி
எடுப்பதாகவும் உள்ளது.

அந்த விடயங்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுவது இலங்கை முழுவதும் நடந்து வருகின்றது.

அந்தவகையில், வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு பொலீஸாரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இழைக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக வவுனியா மாவட்டஊடகவியலாளர்களால் நடாத்தப்படும் கவனயீர்ப்பு பேராட்டத்திற்கு கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

இலங்கைப் பொலீஸார் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகின்றார்களா? எனும் சந்தேகம் எழுகின்றது. யாழ்ப்பாணம் சித்தங்கேணியிலும், ஒரு அப்பாவி இளைஞன் பொலீஸ்
நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.

இதே போன்று தான் வவுனியாவில் மாவீரர் நினைவு நாளில் அரசாங்க பாதுகாப்புதுறை நடந்து கொண்ட விதத்தை வன்மையாகக்
கண்டிக்கின்றோம். ஊடகவியலாளர்களுக்கு இந்த நிலை எனில் அப்பாவி பொது மக்களுக்கு என்ன நிலை என்பதை உணர வேண்டியவர்களாய் இன்று தமிழ்ச் சமூகம் உள்ளது. என்பதே
உண்மையாகும்.

02.12.2023 சனிக்கிழமை வவுனியா பழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் கண்டன கவனயீர்ப்பு பேராட்டத்தை பலப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!!

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.12.2023) இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட வீடமைப்பு அலுவலகத்தின் கீழ் வாழும் மூவினங்களையும் சேர்ந்த 66 குடும்பங்களுக்கு அவர்களது வீட்டுக்கான உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜிவ் சூரியராச்சி, உபதலைவர் லக்ஸ்மன் குணவர்த்தன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர், வீடமைப்பு திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு : செட்டிகுளம் வீதியை பயன்பாடுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியை இரவு நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து 19.4 அடிக்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக, பாவற்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நேரியகுளம் ஊடான நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் நீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.