இந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் மலையகச் சிறுமி அசானி பங்கேற்று வருகிறார். மலையகச் சிறுமியான அசானி தொடர்பில் நடிகர் சத்தியராஜ் கருத்து தெரிவிக்கையில் மலையக தமிழர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்துத் தொடர்பில் நூலுகவாசி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மலையகத் தமிழர் அனைவருக்கும் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது.
இலங்கையிலிருந்து மீளவும் இந்தியாவிற்கு சென்ற மலையகத்தவர்களும் ஈழத் தேசத்திலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு சென்றவர்களும் மாத்திரமே இன்றுவரை இந்தியாவில் குடியுரிமையற்று வாழ்கின்றனர்.
இந்தியாவில் திரும்பிச்சென்ற முப்பதாயிரம் மலையகத் தமிழர் உட்பட ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் சுமார் 40 வருடகாலமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள மலையகத்தமிழர்கள் கல்வி கற்று அரச வேலைவாய்ப்புகளைப் பெற்று இலங்கை நாடாளுமன்றிலும் அங்கம் வகிக்கின்றனர்.
ஆனால் தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் உரிய புள்ளிகளை பெற்றாலும் கூட அரச வேலைகளுக்கோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை அரசுக்கு மனட்சாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும் என குறித்த முகநூல் வாசி விசனம் தெரிவித்துள்ளார். மேலும் அசானிக்கு இலங்கைக் குடியுரிமை இருப்பதால்தான் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இந்திய விசா பெற்று சரிகமப நிகழ்வில் பங்கேற்க முடிந்தது.
பிரித்தானியாவில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவன் நதியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்ற இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த (17.11.2023)ஆம் திகதி நடைப் பயிற்சிக்கு சென்றபோது அவர் வீடு திரும்பாததால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாததால் நாடு முழுவதும் சுமார் 12 இலட்சம் வீடுகளுக்கு சிவப்பு கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் ஆகும். இவ்வருடம் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பலருக்கு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் சிலர் ஆபரணங்களை அடகு வைப்பது, மின்கட்டணத்தை செலுத்த கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், உரிய நேரத்தில் மின்கட்டணத்தைச் செலுத்தாததால், எதிர்காலத்தில் மின்வெட்டு அதிகரிக்கலாம் என்றும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீட்டெடுக்கும் நேரமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வி கற்பதற்கு வளர்ச்சி, ஊனம் என்பதெல்லாம் ஒரு தடையே கிடையாது. அப்படியான விசேட தேவையுடையவர்களுக்கும் தனித் திறமை இருக்கும் என இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த சித்தியைப் பெற்ற விசேட தேவையுடைய மாணவியான சாந்தலிங்கம் விதுர்ஷா தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை எடுத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேசமயம், மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் பரீட்சை எழுதி சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டன.
இந்தநிலையில், மட்டக்களப்பு – களுவன்கேணி, பலாச்சோலை பகுதியில் வாழும் சாந்தலிங்கம் விதுர்ஷா என்ற விசேடத் தேவையுடைய மாணவியும் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளுடன் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளைதான் இந்த விதுர்ஷா. தொடர்ந்து நடப்பது கடினம், வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, நெஞ்சில் ஒரு கட்டி, மாதாந்தம் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை என பல சோதனைகள் இருந்தும்,
தான் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் விதுர்ஷா விடாப்பிடியாக இருந்துள்ளார்.இவரும், இவரது தங்கையும் இணைந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இருவருக்குமே சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ள நிலையில், இருவரும் உயர்தரம் கற்பதற்கு தயாராகியுள்ளனர்.
தனது வெற்றி தொடர்பில் மாணவி விதுர்ஷா தெரிவிக்கையில்,“என்னைப் போல உங்களது வீட்டிலும் ஒருவர் இருந்தால், அவரை முடக்கி வைக்காதீர்கள். அவர்களுக்குள்ளும் தனித் திறமை இருக்கும். அவர்களையும் நீங்கள் வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும்.
பிள்ளைகளுக்கு ஊனம் என்பது அவர்களது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு தடையில்லை. அந்த எண்ணத்தை வெளியில் உள்ளவர்கள் தான் அவர்களுக்கு புகுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் கோவில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கல்முனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் ஒருவர் மீது இல்லத்தின் மேற்பார்வையாளர் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் மேற்பார்வையாளரை நேற்று சனிக்கிழமை (02) கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்குவில் எல்லை வீதியைச் சேர்ந்த 14 வயதுடைய நாராயண ஆனந்ததேவன் தர்சாத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 16 ஆம் திகதி கொக்குவில் கொம்புமுறிச்ச சந்தி பிள்ளையார் ஆலையத்தில் உள்ள 3 விளக்கு, மணி ஒன்று , தீபம்காட்டும் தீபம் ஒன்று உட்பட்ட வென்கலத்திலான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனையும் பூசாரி ஒருவரையும் பிரதேச மக்கள் பிடித்து கொக்குவில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செயயப்பட்ட இருவரையும் 17 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பூசாரியை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குறித்த சிறுவனை கல்முனை சிறுவர் இல்ல வீதியில் உள்ள கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நவம்பர் 30 ஆம் திகதி குறித்த இல்லத்திலுள்ள கூண்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பராமரிப்பு நிலையத்தில் சிறுவன் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து இல்ல பெண் மேற்பார்வையாளர் கோபமுற்று சிறுவன் மீது பொல்லால் தாக்கி அவரை கூண்டில் அடைத்ததாகவும் அதன் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து,
சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையில் சிறுவன் மீது அடியாயங்கள் உள்ளதாகவும் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து குறித்த சிறுவர் பராமரிப்பு இல்ல பணிப்பாளரை நேற்று சனிக்கிழமை (02) கைது செய்தனர்.
சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தனது மகனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் எனது மகனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் எனது மகனை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மற்றும் கிழக்கின் கடல் பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர் கடலுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
11.4° வடக்கு அகலாங்கு மற்றும் 82.5° கிழக்கு நெடுங்கோடு அருகில் இன்று (03.12.2023) யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 325 கி.மீ தொலைவில் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புக்களில் பயணிக்க வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி கிராமத்தை சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் அண்மையில் அரசு பணியாளர்கள் ஆணையர் தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
அதன்படி அண்மையில் வெளியான முடிவில் இவர் சிறந்த மதிப்பில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பணியை பெற்றார். இவர் தற்போது உத்க்ரமித் மத்திய வித்தியாலயா என்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் சம்பவத்தன்று கடத்தப்பட்டுள்ளார். இவரது பள்ளிக்கு வந்த 4 – 5 பேர் கொண்ட கும்பல் இவரை பள்ளிக்கே நேரடியாக வந்து கடத்தி சென்றுள்ளனர். அவ்வாறு சென்ற அவர்கள் ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி அவரை வலுக்கட்டாயமாக செங்கல் சூளை தொழிலதிபர் ராஜேஷ் ராய் என்பவரது இளம் மகளை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இதற்கு கௌதம் குமார் மறுப்பு தெரிவித்த காரணத்தினால், அவர் அந்த கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரை தாலி கட்ட வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் வேறு வழியின்றி கௌதம் குமார், அந்த இளம்பெண் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசிலும் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி முனையில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவம் பிகாரில் அடிக்கடி நடக்கும் ஒன்றாக இருக்கிறது.
‘பகட்வா விவாஹா’ (Pakadwa Vivah) அல்லது ‘ஜாப்ரிய விவாஹா’ (Jabariya Vivah) என்று சொல்லப்படும் இந்த திருமணமானது, நன்கு படித்த, வசதி படைத்த இளைஞரை கடத்தி, திருமணம் செய்து வைக்கும் கடத்தல் திருமணமாகும். பொதுவாக வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற சில பகுதிகளில், இது போன்று மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் அடிக்கடி நடக்கும்.
அதாவது திருமணம் ஆகாத, வசதியுள்ள இளைஞரை கடத்தி, அவரை துப்பாக்கி, கத்தி முனையில் மிரட்டி, தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்கப்படுகிறார்கள். இதனை ‘ஜாப்ரிய விவாஹா’ என்று அழைக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்த 29 வயதான வினோத் குமார் என்பவர், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார்.
குமார் மணமகன் உடையில் சடங்குகளை நிறுத்துமாறு கெஞ்சும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதோடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே பீகாரில் மருத்துவர் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கபட்டவர்கள் சிலர் தங்களுக்கு விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
நவாடா பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும், லக்கிசராய் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே நடந்த பத்து வருட கட்டாயத் திருமணத்தை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பது கூடுதல் தகவல்.
கடந்த 2021-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அத்ராங்கி ரே’ (Atrangi Re) திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியானது. அந்த திரைப்படத்தில் தனுஷ் பீகார் சென்றிருந்தபோது, அவரை கடத்தி கதாநாயகியின் கழுத்தில் கட்டாய தாலி கட்ட வைத்து, கதாநாயகியை தனுஷுடன் அனுப்பி வைக்கப்படும் காட்சி காட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியில் வசித்து வருபவர் சுனு. இவரது மனைவி சௌம்யா. இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஆதி, ஆதில் என இரட்டைக் குழந்தைகள் இருந்த நிலையில், கூலித்தொழிலில் வரும் வருமானத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் சுனு, சவும்யா தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. குழந்தைகளின் சத்தமும் கேட்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் ஒரு அறையில் ஆதி, ஆதில் ஆகிய 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். இன்னொரு அறையில் சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்து பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் தற்கொலைக்கு கடன் தொல்லையா அல்லது வேறு ஏதாவது குடும்ப பிரச்சனையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஹோட்டல் அறையில் கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) கழுத்தை நெரித்து காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பவுசியா மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் கேரளாவில் இருந்து வந்த காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாலை 4 மணியளவில், தனக்கும் காதலிக்கும் தகராறு ஏற்பட்டதால் பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக ஆசிக் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழிகள் குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அறையில் சென்று பார்த்த போது மாணவி பவுசியா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதனையடுத்த பவுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பவுசியா16 வயது இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த கேரளா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இருவருக்கும் பிறந்த குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் சென்னையில் இருந்த தனது காதலியை பார்க்க ஆசிக் வந்துள்ளார்.
அப்போது இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி தனிமையில் இருந்த போது மாணவி யதார்த்தமாக காதலன் செல்போனை எடுத்து பார்த்த போது பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மாணவியை கொலை செய்துவிட்டதாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்திய மாநிலமான கர்நாடகாவில் இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25 -வது திருமண விழாவை கணவர் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் மற்றும் சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் சுமா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதனால், தனது 25 -வது திருமண விழாவை மனைவியின் மெழுகு சிலையுடன் கொண்டாட சந்திரசேகர் முடிவெடுத்தார். அதன்படி, இறந்த மனைவிக்கு மெழுகு சிலையை தயாரித்தார்.
பின்னர், 25 -வது திருமண விழாவை உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடத்த முடிவு செய்தார். அதற்காக உறவினர்களையும் அழைத்தார். திருமண விழாவில் மனைவியின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த உறவினர்கள், சுமாவே நேரில் வந்திருப்பதாக கூறினர்.
மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்றார். பின்னர், அவரின் 2 மகள்களுடன் மனைவியின் சிலை முன்பு போட்டோ எடுத்துக் கொண்டார். இச்சம்பவம், உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவில் வெறும் 75,000 ரூபாயில் ஒரு ஜோடி ஆடம்பரமாக திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Destination Wedding என்று கூறப்படும் ஆடம்பர திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்.
ஆனால், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ரியாஸ் என்பவரின் திருமணம் ஒரு லட்சத்திற்கும் குறைவான செலவில் நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸிற்கும், அனகா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இந்த ஜோடி Destination Wedding செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளது.
இதற்காக திருவனந்தபுரத்தின் ஷங்குமுகம் கடற்கரையை தெரிவு செய்துள்ளனர். அங்கு சுற்றுலாத்துறையானது Destination Wedding மையத்தை அமைக்க இரண்டு கோடி முதலீடு செய்துள்ளது. இதில் நடந்த முதல் திருமணம் ரியாஸ் – அனகா ஜோடியுடையது தான்.
இதில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அலங்கார மேடை, உணவு, கண்கவர் விளக்குகள், திருமண இடத்திற்கான கட்டணம் என மொத்தம் 75,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறையின் முதல் முயற்சியான இந்த திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
வவுனியா – செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் (01.12) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் கணவன், மனைவி இருவரும் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது 10,000 ரூபா பணமும் தங்க நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கும் இந்த இளைஞருக்கும் பல தொடர்புகள் காணப்படுகிறது. அது தொடர்பிலும் விசாரணை நடைபெறுகிறது.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர் குற்றச்செயலின் போது அணிந்திருந்த ஆடைகளும் திருடப்பட்ட தங்க நகையும் பை ஒன்றில் மறைத்து வைத்து கிணற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
கடந்த 21.11.2023 ஆம் திகதி பிரசவ வலியின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே சிசேரியன் சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளை இளம் தாயான விதுஷா ஈன்றெடுத்துள்ளார்.
பிரசவம் நடந்த அடுத்த நாள் மாலையில் அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறி யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பட்டார்.
மேலதிக சிகிச்சை வீட்டை வந்தடைந்த பின் விதுஷாவின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பருத்தித்துறை றூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றபோது வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரகம் முழுவதுமாக கிருமித்தொற்று அனைத்து உறுப்புகளும் பழுதடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக விதுஷாவை தயார்நிலையில் வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் காப்பாற்றமுடியாது என கைவிரித்து விட்டனர். விதுஷாவின் மரணம் குறித்த விசாரணையின்போது வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மற்றும் பருத்தித்துறை பதில் நீதவான் ஆகியோர் மரணம் குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தார். விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் வண்டியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வினை ஆராய்ந்து பார்க்கும் போது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க நேரிடும்.
எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த மாதம் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட விலை விபரங்களுக்கமைய, இந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3565 ரூபாயாக மாற்றமின்றி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதுடன்,13588 மாணவர்கள் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில்,கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலய மாணவி சமாதி அனுராதா முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் அக்ஷ்யா ஆனந்த சயனன் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் ஏ.எம்.ஏ. மின்சந்து அலககோன்,பெற்றுள்ளார். நான்காவது இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் துல்மினா சதீபா திஸாநாயக்க மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி மாவணர்கள் பெற்றுள்ளனர்.
ஆறாம் இடத்தை காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி ஆகிய மாணவர்கள் பெற்றுள்ளனர். பத்தாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பிடித்துள்ளன.