வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(04.12.2023) யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், பனையாண்டான் நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை வயதுடைய சிவலோகநாதன் விந்துஜன் என்ற சிறுவன் கடந்த மாதம் 21ஆம் திகதி உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சென்று சிக்குப்பட்ட நிலையில் விபத்தினை சந்தித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று(06.12.2023) காலை 11 மணிக்கு அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கக் கல்லின் உட் பகுதியில் நீர் குமிழிகள் போன்று மின்னுவதால் இந்த இரத்தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.இதனை ஆராய்ந்த தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த மாணிக்கத்தின் உரிமையாளர் அதனை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.இவர் மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன், அருணன் A1 பிரிவில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி 2ஆம் இடத்தை பெற்றார்.
இந்த மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாம்பூரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிக்கு செல்லத் தெரிவானார்.
நேற்று(2023.12.03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளிலிருந்து பலர் போட்டியில் பங்கு பற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் தான் மலேசியா செல்வதற்கு உதவி செய்யுமாறு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் யாகேந்திரனிடம் நேரில் சென்று கோரியிருந்தார்.இந்த நிலையில் பயணச் செலவுகள் முழுவதையும் தான் வழங்குவதாகக் கூறி பெற்றோர்களை அழைத்து பயணச் செலவுகளுக்கான பயணத்தொகையை அண்மையில் வழங்கியமை குறிப்பிட்டத்தக்கது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையார் கோயில் வீதி பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய தவராசா திலகராஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தனது பிள்ளையின் பிறந்த தினத்திற்காக உணவுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொணடிருந்த போது பாம்பு தீண்டியுள்ளது. மயக்கமுற்ற நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலிய நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு சம்பளம் 30 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய நிதி மதிப்பாய்வின் அண்மைய ஆய்வு அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஷெமாரா விக்ரமநாயக்க ஒருவரே பெண் என்பது சிறப்பு. இவரைத் தவிர மேலுமொரு பெண் மட்டும் முதல் 50 இடங்களில் உள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் அவர் எழுதிய மூன்று கடிதங்களும் நேற்று (03.12.2023) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நதிக்கா காசினி படவல என்ற 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹோமாகம, அத்துரிகிரிய வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண், நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுடன் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய, நேற்று முன்தினம் பகல் முழுவதும் இப்பெண்ணை அழைத்த போதும் பதில் கிடைக்காததையடுத்து இதுபற்றி மற்றுமொரு உறவினரிடம் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பெண் அறையொன்றின் நடுவில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அறையின் நடுவில் உள்ள நாற்காலியில், மர்மமான முறையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் மாத்திரைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுக்கு எழுதிய கடிதங்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இருவரும் இலங்கை வந்ததன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார். தனமல்வில தேசிய பாடசாலையில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
9ஏ சித்திகளை பெற்றவர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த அகில ஜெயலங்க விஜேதுங்க என்ற மாணவராகும்.அகில, 2024ஆம் ஆண்டிலேயே சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டியவராகும். அதையும் மீறி அதிபரின் அனுமதியுடன் 2022ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றி இந்த சித்தியை பெற்றுள்ளார்.
அகிலவின் தந்தை சரத் விஜேதுங்க ஒரு இராணுவ சிப்பாய் மற்றும் தாயார் நிலாந்தி மங்கலிகா சமரசிங்க ஒரு இல்லத்தரசி ஆவார். உயிரியலில் உயர்நிலைப் பட்டப்படிப்பை படித்து மருத்துவராகி தனமல்விளை போன்ற தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அகிலவின் எதிர்கால இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024 இற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 16ஆம் திகதி விடுமுறை விடப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும்.விடுமுறை முடிந்து பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதல் தவணை செயற்பாடுகள் பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திலேயே முதல் தவணை செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி முதலாம் தவணையை ஆரம்பித்து நாங்கள் அதை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எனினும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024ஆம் ஆண்டிற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தனது கணவரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டார்கள் என்று கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் தனது கணவரை கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதால் தனக்கு நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், எனது கணவரான சோமசுந்தரம் துரைராஜா வியாபாரம் செய்து வருபவர். எமக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கசிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் கணவர் நீதிமன்றத்தில் முன்னிலையான போது அவருக்கு நீதிமன்றம் பிடியாணை வழங்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்திருந்தனர். பின்னர் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணையில் எடுக்க நாங்கள் செல்ல முடியாத காரணத்தால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கணவரை கடந்த 27 திகதி செவ்வாய்க்கிழமை சிறைச்சாலையில் பார்வையிடுவதற்கு நானும் எனது மகளும் சென்றிருந்தோம். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் சுமார் 30 நிமிடத்தின் பின்னர் உங்களது கணவன் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவரின் உடல் பிரோத அறையில் வைக்கப்பட்டிருந்தது.அவரின் உடலில் கால் கை, தலை, நெஞ்சு பகுதியில் அடிக்கப்பட்ட காயம் இருப்பதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனையின் பின்னர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை சடலத்தை ஒப்படைத்தனர்.
எனது கணவன் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவருடன் சிறைக்கூடத்தில் இருந்த கைதிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு தெரியும் யார் எனது கணவனை அடித்து கொலை செய்தது என்ற விடயம் எனவே கணவரை கொலை செய்தவர்களை நீதியின் முன்னர் நிறுத்தவேண்டும். சிறையிலேயே பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறைச்சாலை காவலர்கள் பொறுப்பு கூறவேண்டும்.அவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளேன். பொலிஸாரிடம் இருந்நு பக்கசார்பற்ற விசாரணை வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னைக்கு, 150 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.
கடும் புயல், மழை காரணமாக வெள்ள அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.இதேவேளை, மழை காரணமாக சென்னையில் புறநகர் தொடருந்துகள் இன்று நாள் முழுவதும் இரத்துச் செய்யபட்டுள்ளது, மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு தொடருந்துகளாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ள நிலையில் இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் சென்று இருவரை மீட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (30.11.2023) காலை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது.
இக் கல்விக் கண்காட்சியில் 05க்கு மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து கல்விப் பொது சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கண்காட்சியில் குழாய் இணைப்பு பொறியியல் பிரிவு, சுருக்கெழுத்து மற்றும் தட்டடெழுத்துப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, எந்திரவியல் பிரிவு, வாகனம் திருத்தும் பிரிவு, இலத்திரனியல் பிரிவு, குளிரூட்டல் மற்றும் வளிச்சீராக்கல் பிரிவு போன்ற பல்வேறு காட்சிக் கூடங்கள் தொழிநுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இக் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 15.12.2023 என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,
தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன். வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை ஆகும். பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால், நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த தாயின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,“விதுசா, கடந்த 21ஆம் திகதி குழந்தை பேறுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினமே சத்திர சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளை பெற்ற பின்னர் 25ஆம் திகதி சனிக்கிழமை தாய்க்கு அம்மை நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக கூறி சில மருந்துகளை எழுதி தந்தனர்.
அவற்றை வாங்கி கொடுக்குமாறும், அம்மை நோயுடன், வைத்தியசாலை விடுதியில் வைத்திருக்க வேண்டாம் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் வைத்தியர்கள் பணித்தனர்.
காலையில் தாய்க்கு இரத்த அழுத்தம் இருப்பதாக கூறிய வைத்தியர்கள், மாலை 5 மணிக்கு தாயையும் பிள்ளையையும் அழைத்து செல்லுமாறு பணித்ததால், நாம் வீட்டிற்கு அழைத்து சென்றோம்.வீடு வந்த பின்னர் தாய் மிக சோர்வாக, பலவீனமாக காணப்பட்டார்.
பிள்ளைகளுக்கு பாலூட்டவோ, அவர்களை அரவணைக்கவோ முடியாத அளவுக்கு தாயின் உடல் பலவீனமாக இருந்துள்ளது.அதனால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரிடம் காட்டிய போது, உடனடியாக நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தோம். சிறுநீர் பரிசோதனையை தனியார் ஆய்வு கூடத்தில் செய்து வருமாறு வைத்தியசாலையால் கூறப்பட்டது.
பரிசோதனை செய்து கொடுத்த பின்னர் இரவு 12 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மறுநாள் திங்கட்கிழமை காலை, தாயின் சிறுநீரகத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு உள்ளமையால், உடல் உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என தெரிவித்தனர். மீள சிறுநீர் பரிசோதனை செய்து வருமாறு திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மீண்டும் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிறிது நேரத்தில் மாலை 4.45 மணியளவில் தாயை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தனர்.
வைத்தியசாலை பணிப்பாளரிடம் நடந்த அனைத்து விடயங்களையும் கூறி முறையிட்டோம். விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும், பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால் முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தார்.
மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.ஒரு பொலிஸ் அதிகாரி தானாகவே, இது ஒரு போதனா வைத்தியசாலை இங்கே கவனயீனம், வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார்.
எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ, எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் பொலிஸ் அதிகாரி அருகில் வரரமல் தூர நின்றே குறிப்பெடுத்தார்.
அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் அருகில் வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது, ஊழியர்களை மிரட்டி, தான் அருகில் வர தேவையில்லை என்றார்.
சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது, அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள், மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார். சடலத்தை மீள சோதனை செய்ய வேண்டி வருமா என சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது, தேவையான மாதிரிகள் எடுத்து விட்டோம்.
உங்கள் சமய வழக்கப்படி இறுதிக் கிரியைகளை நடத்துங்கள்” என கூறினார்.இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன. வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான், உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என கோரியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் வளர்ந்துவரும் செய்தி வாசிப்பாளர் 2022(2023) கல்வி ஆண்டிற்கான க. பொ.த சாதரண தர பரீட்சையில் விஷேட சித்தியடைந்துள்ளார்.
யாழ் மறை அலைத் தொலைக்காட்சியின் வளர்ந்து வரும் செய்தி வாசிப்பாளரான செல்வி மோதெழில் பகீரதன் 9A சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். குறித்த மாாணவியின் தந்தை பகீரதன் – இனியவன் முந்நாள் போராளியும் மாவீரரும் ஆவார்.