வவுனியாவில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை வவுனியா ஊடக அமையத்தினர் நாளை (02.12.2023) சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கவுள்ளனர் . இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிசாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினராலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு-கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வவுனியாவில் செய்தி சேகரில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளரும் ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிசாரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (02.12) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வலுப்படுத்துமாறு வவுனியா ஊடக அமையத்தினர் கோரியுள்ளனர்.

பிரித்தானியாவில் சிறு வயதில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers மற்றும் MTM Young Achievers விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை சிறுமி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த 15 வயதான யெனுலி பினாரா என்ற சிறுமி, 2023 MTM YOUNG ACHIEVERS விருதை வென்றுள்ளார். இந்த விழாவானது 25ஆம் திகதி பிரித்தானியாவின் பிரிஸ்டல் மேரியட்டில் உள்ள டெல்டா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

பல்வேறு வகையான திறமைகளை கண்காளும் வகையில் நடாத்தப்பட்ட இந்த போட்டியில் பங்குக் கொண்டுள்ள போட்டியாளர்களின் மத்தியில் மிகவும் வயது குறைந்த ஒரு சிறுமி என்றால் இவர் தான் என கூறப்படுகிறது.

இந்ந விருதானது இறுதிச் சுற்றில் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட யெனுலிக்கு வழங்கப்படுள்ளது. பல உலக நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களின் மத்தியில் வழங்கப்படுள்ளன.

இலங்கையில் கொழும்பு பிரதேசத்தில் பிறந்த யெனுலி, தற்போது தனது தாய் தந்தையருடன் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார். இதற்கு முன்னர் ஓமானில் உள்ள இலங்கை பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், இசை, பாடல், பேச்சு, நடிப்பு என பல துறைகளில் பல நாடுகளில் பல போட்டிகளில் அவர் வெற்றிப் பெற்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

12 வயதில், நூறு என்ற சர்வதேச அமைப்பின் உலகின் இளைய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இது ஒரு சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவதற்கான எனது பயணத்திற்கு ஒரு பெரிய சாதனை மற்றும் உந்துதல் என விருதை வென்ற சிறுமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

வெலிப்பன்னயில்..

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த 24 வயது யுவதியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

யுவதி காணாமல்போனதாக இரு தினங்களுக்கு முன்னர் யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் நாயின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ள மாணவி!!

யாழில்..

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டம் யா ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தை சேர்ந்த புவியம்மா அதிவிஷேட சித்திகளைப் (09A) பெற்றுக்கொடுத்து யாழ் மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

க.பொ.த சா.தர பரீட்சையில் யாழ் வடமராட்சி குடத்தனை வடக்கு மாணவர்கள் சாதனை!!

யாழில்..

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான , க.பொ.த சா.தர (O/L)பரீட்சையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதிய சேர்ந்த மாணவர்கள் பலர் சித்திபெற்று தாம் கற்ற பாடசாலைக்கும், தமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில் யாழ்/குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலை மற்றும் அயல் பாடசாலையில் கல்விகற்று சித்தியடைந்த குடத்தனை வடக்கு மாணவர்களான, அன்ரன்ஜெயக்குமார் லிதியா 5A B 2C S, சதீஸ்தரன் றதீஸ் 3A 3B C 2S, சுதாகரன் நவநீதன் 2A B 4C 2S, அரசகுலசிங்கம் கவிஷா 3B 3C S, சற்குணராச யதுசா 6A 2B C, ஜெகதீபன் சதுசன் 4A 3B 2 C, ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைபெற்று பரீட்சையில் சித்தியெத்தியுள்ளனர்.

இந்நிலையில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.

வீதி விபத்தில் ஒருவர் பலி, நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து..

காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவையில் கட்டடமொன்றில் வேலை செய்துவிட்டு பத்தேகம நோக்கிச்சென்று கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கம் காரணமாகவே லொறி சாலையை விட்டு விலகி கொன்கிரீட் சுவரொன்றில் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் லொறியின் பின் பக்கத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A : யாழ் வேம்படி கல்லூரி மாணவியும் சாதனை!!

பரீட்சை..

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் 13,588 மாணவர்கள் 9 A சாதனை படைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவியரீதியில் , 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இவர்களில் 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளமன்றத்தில் தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள மஹாமாய பெண்கள் பாடசாலை மாணவியொருவர், நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.

4ம் இடம் பெற்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி. ஆறாவது இடங்கள் நான்கு உள்ளன.

அவற்றுள் இரண்டு காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி, கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பத்தாவது இடத்தில் உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி!!

சாதாரண தரப் பரீட்சை..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் எனவும், சில சிக்கல் நிலைகள் காரணமாக வீட்டில் இருந்து சுயகற்றல் மூலம் மாணவி பரீட்சைக்குத் தோற்றியதாக மாணவியின் தாயார் எம்மிடம் தெரிவித்தார்.

மேலும், குறித்த மாணவி சதுரங்க போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும், ஆறு நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.

அத்துடன், பல துறைகளில் தான் தடம் பதிக்க வேண்டும் எனவும், முடியுமென்றால் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்திற்காக மாணவி காத்திருப்பதாகவும் அவரது தாயார் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 20 பேர் 9A சித்திகளை பெற்று சாதனை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியான நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, 20 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.

ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் ஐந்து மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பான சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

46 வயதில் உலகின் மிக நீண்ட கூந்தலுக்காக கின்னஸ் சாதனை.. நீளமான முடிக்கு பெண் கூறிய ரகசியம்!!

உத்தர பிரதேசததில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதாகும் இவர் 7 அடி 9 அங்குலத்திற்கு கூந்தலைக் கொண்டிருக்கிறார்.

இதன்மூலம் உலகிலேயே அதிக கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தனது 14 வயதில் இருந்து அவருக்கு நீளமாக கூந்தல் வளரத் தொடங்கியுள்ளது.

பல தசாப்தங்களாக தனது தலைமுடியை வெட்டாமல் வளர்ந்து வந்த ஸ்மிதா, கின்னஸ் சாதனை மூலம் தன் கனவு நனவாகியுள்ளதாக கூறியுள்ளார். ஸ்மிதாவின் தலைமுடி நீளத்தைப் போலவே அவரது முடியின் பராமரிப்பு வழக்கமும் ஈர்க்கக்கூடியது.

அவர் தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவி, உலர்த்தி, அகற்றி பின் ஸ்டைல் செய்ய 3 மணிநேர எடுத்துக் கொள்கிறாராம். கூந்தலை கழுவதற்கு மட்டும் அவருக்கு 45 நிமிடங்கள் எடுக்கிறதாம். கவனமாக ஒரு துண்டு மூலம் பின் உலர்த்துகிறாராம்.

சுமார் 2 மணிநேரம் ஸ்மிதாவின் தலைமுடியை பிரிக்க ஆகும் என்பதால் அது கடினமான பணியாக இருக்கிறதாம். ஸ்மிதா தன்னுடைய நீண்ட கூந்தல் குறித்து கூறுகையில், ‘நான் என்னால் முடிந்த வரை என் தலைமுடியை கவனித்துக் கொள்வேன்.

என் தலைமுடியை நான் ஒருபோதும் வெட்ட மாட்டேன். ஏனென்றால் என் வாழ்க்கை என் தலைமுடியில் உள்ளது’ என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். அத்துடன் எவ்வளவு காலம் இந்த கூந்தலை வளர்த்து பராமரிக்க முடியும் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். தனது அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக கூந்தலை கருதும் ஸ்மிதா, அதனை தொடர்ந்து வளர்க்க திட்டமிட்டுள்ளார்.

வவுனியாவில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை!!

வவுனியாவில்..

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் இன்று தீர்பளித்துள்ளார். தந்தை மகளை தகாத முறைக்கு உட்படுத்தியமையினால் மகளுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

இந்நிலையில், எதிரியான தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார். குறித்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றுள்ளது.

தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் மூன்று தடவைகள் தந்தையினால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட, 14 வயது மகளான சிறுமி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து மரபனு பரிசோதனையின் போது எதிரியான தந்தையே பிறந்த ஆண் குழந்தைக்கு தந்தையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரச சட்டதரணி தர்சிகா திருக்குமரநாதன் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, எதிரியான தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை, 30 ஆயிரம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதோடு, கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத கால கடூழிய சிறை மற்றும் ஆறு இலட்சம் ரூபா நட்ட ஈடும், கட்டத்தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டுபிடிப்பு!!

தேங்காய்..

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும் நாட்டில் இவ்வாறானதொரு தேங்காய் இனம் இனங்காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இந்த வகை தென்னை மரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சராசரி உயரம் கொண்ட இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை நாட்டிலுள்ள தென்னை வகைகளில் , சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள , இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும், இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும், நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால், இது குறித்த ஆய்வை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதேவேளை இனிப்பான தென்னை துளிர்க்க முடியாததால், இந்த புதிய வகை தென்னையை பரப்புவது கடினம் என்பதால், திசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் , தகவல்களை வழங்குமாறும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது

கோழிச் சண்டையால் விபரீதம் ஒருவர் மருத்துவமனையில்!!

அளுத்கமவில்..

அளுத்கம பிரதேசத்தில் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த மோதல் சம்பவத்தில் ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும் நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெனிபெத்திகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.கைது செய்யப்பட்டவரது குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த கோழியை யார் வெளியே எடுத்து கிணற்றைச் சுத்தம் செய்வது என்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு தரப்பினருக்குமிடையே மோதலாக மாறி தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பொலித்தீன் சாப்பிடவைத்த அதிபருக்கு நேர்ந்த கதி!!

நாவலப்பிட்டியில்..

பலவந்தமாக பாடசாலை மாணவர்களை பொலித்தீன் சாப்பிட வைத்த சம்பவத்தில் கைதான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் நேற்றைய தினம் (28-11-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (29-11-2023) நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலைக் கடிக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் பலி!!

திருகோணமலையில்..

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தொடுவான் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற இளம் குடும்பஸ்தரைத் தண்ணீருக்குள் முதலை இழுத்துச் சென்று கடித்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோப்பூர் – பாட்டாளிபுரத்தில் வசித்து வரும் கதிர்காமத்தம்பி நிதுர்ஷன் (வயது 20) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வயல் ஒன்றைப் பார்வையிட்டு வரும் கணவனும் மனைவியும் நேற்று (30.11.2023) குளிப்பதற்காகக் குளத்துக்குச் சென்றபோது கணவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்த போதும் காப்பாற்ற முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணி நேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் காயம்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவையில் இருந்து வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெலிகந்த வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என வெலிகந்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பேருந்து பயணித்த போது அதில் ஏறக்குறைய 80 ஊழியர்கள் இருந்ததாகவும், விபத்தில் சிறிதளவு காயமடைந்த ஊழியர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.