இரவு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 24 வயது பெண் மருத்துவர் பரிதாபமாக மரணம்!!

சென்னையில்..

சென்னையில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகி கொண்டே வருகிறது.சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24).

இவர், தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இதில் அன்விதா, நேற்று இரவு 7.30 மணிக்கு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவர் வார்ம் – அப் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் வந்துள்ளது.

அப்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், மயக்கம் அடைந்த அன்விதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், அப்போதும் எந்தவொரு அசைவுமின்றி அன்விதா கிடந்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த ஜிம் ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அன்விதாவை கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே சிகிச்சை பலனின்றி அன்விதா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சியின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்.. அதிர்ச்சியில் இணையவாசிகள்!!

பிரேசில்லில்..

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலைத்தேய நாடுகளில் திருமணம் எனும் பெயரில் மரம், ஆவி, பொம்மை, மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்த வகையில், பிரேசில் நாட்டி வசிக்கும் Meirivone Rocha Moraes (37) வயதாகும் இளம்பெண்ணொருவர் நீண்ட நாட்கள் தேடியும் கணவராக ஒரு ஆண் கிடைக்க வில்லை என வறுத்தத்தில் இருந்துள்ளார். இந்த விடயம் குறித்து அவரின் அம்மாவிடம் கூறிய போது குறித்து பெண்ணிற்கு கணவராக அவர் ஒரு பொம்மையை கொடுத்துள்ளார்.

Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மை தன்னுடைய நிஜ கணவனாக ஏற்றுக் கொண்டு அந்த பொம்மையுடன் குறித்த பெண் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் பொம்மையுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தையை பெற்றெடுப்பது போன்று அலப்பறை செய்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்கையில், தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வரவழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அடுத்து ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகளின் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

கனடாவில் ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் – மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!!

கனடாவில்..

ஒரே சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வெற்றியீட்டியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி வெற்றியினை பதிவு செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் தற்செயலாக இரண்டு லொட்டோ லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர். இந்த இரண்டு லொத்தர் சீட்டு இலக்கங்களும் ஒரே எண்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

செனோன் மற்றும் அவரது கணவர் கார்ஸ்டன் ஆகிய இருவரும் சம அளவிலான பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர். இந்த இருவரும் இணைந்து சுமார் 33 லட்சம் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் தற்செயலாக இவ்வாறு இரண்டு ஒரே இலக்கங்களை உடைய லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து பாரியளவு தொகை பரிசினை வென்றெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக் கோரிய பொலிஸார் : நீதிமன்றத்தால் மனு நிராகரிப்பு!!

போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்று வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை நினைவுகூருவதற்கு இரு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

இதனால் குழப்பநிலை ஏற்ப்படும் வாய்ப்புக்கள் இருப்பதனால் குறித்த நினைவேந்தலுக்கு தடையினை விதிக்குமாறு ஈச்சங்குளம் பொலிசார் வவுனியா மாவட்ட நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது தீர்பளித்த நீதிபதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எவருக்கும் உரிமையுள்ளது. எனவே அதற்கு தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.

அத்துடன் குறித்த விடயத்தில் கலகம் விளைவிப்பவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

உலக இந்துக்களால் நேற்று (26.11.2023) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும் விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

இலங்கையில் பாரியளவில் அதிகரித்த எலுமிச்சையின் விலை!!

எலுமிச்சை..

இலங்கையில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை, 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரணங்களே, எலுமிச்சை பழத்தின் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளதென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!

யாழில்..

வெளிநாடொன்றில் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் – அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இவர் கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடமைக்காக உயிரை தியாகம் செய்த தமிழ் பொலிஸ் அதிகாரி : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உயர் அதிகாரிகள்!!

கிருஷ்ணமூர்த்தி பிரதாபன்..

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா -எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று(26.11) இடம்பெற்றுள்ளது.

இதன் போது மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்துள்ளார்.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.

உயிரை துச்சமென கருதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கபெறும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று மதியம் தகனம் செய்யப்படவுள்ளது. இதன்போது பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தாழமுக்கம் : புயலாக மாறலாம் என எச்சரிக்கை!!

காலநிலை..

எதிர்வரும் 27.11.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். இது எதிர்வரும் 29.11.2023 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வானிலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், எதிர்வரும் 27.11.2023 முதல் 03.12.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழைவீழ்ச்சி கிடைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாக நகரும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாவும்.

புயலாக வலுப்பெறும் இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை,சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகளை உருவாக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கில்மிஷாவுக்கு சினிமாவில் வாய்ப்பு : நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

சினிமாவில்..

தென்னிந்திய பிரபலத் தொலைக்காட்சிளுள் ஒன்றான ஜீ தமிழில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், ஈழத்து குயிலான யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷாவின் பாடலைக் கேட்டு அரங்கம் அதிர்ந்துள்ளதோடு, கில்மிஷாவுக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தனது அதீததிறமையால் இறுதி சுற்று போட்டிக்கு இரண்டாவதாக போட்டியாளராக இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திரைப்பிரபலங்கள் கில்மிஷாவின் திறமையை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், “எனக்கே எதுவும் பாட வேண்டும் என்றால் இவரை கூப்பிடலாம்“ என்று மேடையில் சிறப்பு விருந்தினர் பேசிய காட்சி ரசிகர்களுக்கு பெரும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.அதன்படி, மிக விரைவில் கில்மிஷா தனது பாடும் திறமையை சினிமாவிலும் முன்வைப்பார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு அடுத்தாண்டில் காத்திருக்கும் பேரதிர்ச்சி : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில்..

2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி வரியாகவும் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா பெரேரா இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். “2024 வரவு செலவுத் திட்டத்தின்படி அரசாங்கம் 122,400 கோடி ரூபா (1224 பில்லியன்) கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது.

அதில் 72 சதவீதம் மறைமுக வரிகளாகவும் 28 சதவீதம் நேரடி வரிகளாகவும் இருக்கும். 2023ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மொத்த வரி வருமானம் 2851 பில்லியன் ரூபாயாகும். 2024ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4075 பில்லியன் ரூபாயாகும்.

அது வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான வரி விதிப்பு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மாவு, கருவாடு, கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 72 சதவீதம் வரை உயரும்.

தமிழர் பகுதியில் மர்மமாக உயிரிழந்த வைத்தியர்!!

அம்பாறையில்..

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் அறையில் அவரது உடல் மீட்கப்பட்டதாக அம்பாறை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பணிபுரியும் பிரிவுக்கு வரவேண்டிய தினத்தில் வருகைத்தராமையினால் அவருடன் பணியாற்றுபவர்கள் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர். எந்த பதிலும் கிடைக்காததால் செவிலியர் ஒருவர் மருத்துவமனை ஊழியரை அவர் தங்கியிருந்த அறைக்கு அனுப்பியுள்ளார்.

வீட்டுக்குச் சென்று தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய போதும் பதிலளிக்காமததால் பொலிஸாருக்கு அறிவித்து வீட்டு உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது வைத்தியரின் உடல் அசைவின்றி காணப்பட்டுள்ளது.

உடனடியாக அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்தது சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குருநாகல் பகுதியைச் சேர்ந்த பிரசன்ன பண்டார ரத்நாயக்க என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார்.​​ மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதால், சடலம் உறவினர்கள் வரும் வரை அம்பாறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து : ஐவர் காயம்!!

வவுனியாவில்..

மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நகரில் பகுதியில் இருந்தது மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!!

மட்டக்களப்பில்..

ஆறு மாத குழந்தை ஒன்று விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.குறித்த சமபவம் மட்டக்களப்பு – ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது.

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டி இருக்கிறது உள்ளது. காலை மயக்க நிலையில் இருந்த குழந்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குழந்தையை தீண்டிய பாம்பினை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உறக்கத்திலேயே மரணம்!!

சந்துனி ஹன்சமலி பண்டார..

தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

மகளும் தாயும் மட்டுமே சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். தந்தை தொழிலுக்காக வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகளிடம் அசைவுகள் இல்லாதமையால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழையப் போவதாகவும், அதற்கான ஆடைகளையும் தயார் செய்ததாகவும் தாய் குறிப்பிட்டார்.

இம்மாணவியின் பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளனர். தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை துவிச்சக்கரவண்டியில் சாதனை முயற்சி!!

துவிச்சக்கரவண்டியில்..

67 வயதுடைய நபர் ஒருவர் இன்று (25) துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.’சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்’ என்ற தொனிப்பொருளில் அவர் இந்த துவிச்சக்கரவண்டி பயணத்தில் ஈடுபடவுள்ளார்.

சாதனையில் ஈடுபட்டுள்ள ரிச்சர்ட் பெர்னாந்து நுவன் புள்ளே என்ற இந்த நபர், 361 கிலோமீட்டர் தூரத்தை துவிச்சக்கரவண்டியில் 24 மணித்தியாலங்களுக்குள் கடந்து யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக கூறப்படுகிறது.

பயணத்தை ஆரம்பிக்க பம்புக்குளிய பிரதேசத்தில் உள்ள முதியவரது இல்லத்தில் இருந்து அவர் மேளதாள வாத்தியத்துடன் பிரதேசவாசிகளால் பம்புக்குளிய தேவாலயம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து பம்புக்குளிய தேவாலயத்தில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர், பிற்பகல் 12.45 மணியளவில் அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதேவேளை இவர், கடந்த வருடம் நவம்பர் 25ஆம் திகதி நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் இருந்து மடு தேவாலயம் வரை 13 மணித்தியாலங்களுக்குள் துணிச்சக்கரவண்டியில் சென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.