வியாழேந்திரன் எம்.பி

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்தில் எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலாறுகளே தான்உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியானது வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியாகும். இது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம். இதற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை மொட்டு மலர்வதற்கு சாதகமாக அமைந்தது. பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை அலையாக வலம் வந்தமை மூலமாக கோட்டாபய ராஜபக்சவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அறியாத சில அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மை விமர்சித்தனர். ஆனால் இன்று மௌன நிலைக்குத் தள்ளப்பட்டு வாய்ப்பூட்டுபோடப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்திக்காக நாம் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
























































