தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்
கொட்டகலை, ரொசிட்டா பகுதியில் தாயொருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26 வயதான கே.நித்தியகல்யாணி என்பவரும் அவரது 7 மாத ஆண் குழந்தையான சி.சந்தீப் அஷ்விந்தன் என்ற குழந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் உறவினர்களுடன் வீட்டில் இருந்துள்ள நிலையில் வீட்டிலிருந்து குழந்தையின் சடலத்தையும், வீட்டிற்கு வெளியிலுள்ள கொய்யா பழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும் இன்று காலை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பெண்ணும், குழந்தையும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறெவரும் அவரை கொலை செய்தார்களா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


























































































