வவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு!!

 

மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் பகுதியில் நேற்று (13.01.2019) மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. தாலிக்குளம் பகுதியில் வீட்டிலுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை துவைப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில்,

தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து 15 வயதுடைய சொக்கலிங்குமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்துள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலி!!

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது 4 நண்பர்களுடன் மகாவலி கங்கைக்கு குளித்தச் சென்ற போது குறித்த ஐவரில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூவரையும் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலே குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் உயர் தரத்தில் கல்வி கற்கும் நாவலபிடி அப்புகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நாவலபிடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குமார் சங்கக்கார? அதிரடிப் பதில்!!

 

குமார் சங்கக்கார

சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு என இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிகெட் வீரர் குமார் சங்ககாரா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் குமார் சங்கக்காரா எந்தவிதமான கருத்துக்களையும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், “ உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாக மாறினால், அந்த நற்பெயரை பெறுவீர்கள் என்று நினைக்காதீர்கள்?

நீங்கள் அரசியலில் சேர விரும்பினால் உங்கள் நற்பெயர் மற்றும் கௌரவம் முடிந்து விடும். இதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளுங்கள் ” என்று கருத்திட்டிருந்தார்.

இக்கருத்துக்கு பதில் கருத்துப் பதிவு செய்துள்ள சங்ககாரா, “ சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு. என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறக்கப்படுவது தவறான செய்தி என்பதை இதன் மூலமாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

எவ்வாறாயினும் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதியாக பொது வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

யாழில் மதுபோதையில் பெனாயில் குடித்து உயிரிழந்த பொலிஸ்!!

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (12) இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையின் நிமித்தம் மலசல கூடத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பெனாயிலை குடித்துள்ளார்.

இதனை அறிந்த சக பொலிஸார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றுக்காலை அனுமதித்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர் : அதிர்ச்சி சம்பவம்!!

 

சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர்

நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான Saliu Ladayo என்பவர் 19 வயதான Chidiebere என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த Ladayo கத்தி ஒன்றை வாங்கி வந்து தமது காதலியின் மார்பை குறிவைத்து 19 முறை குத்தியுள்ளார். இதில் Chidiebere பரிதாபமாக மரணமடைந்தார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட Ladayo விசாரணை கைதியாக உள்ளார்.

இதனிடையே இளம் பெண்ணின் பெற்றோர் வினோதமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது தமது மகளின் சடலத்தை Ladayo உரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், இறுதிச்சடங்குக்கான அனைத்து பொருளதவியையும் Ladayo ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

ஆனால் Ladayo அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கொல்லப்பட்ட Chidiebere-ன் சடலம் கடந்த 8 மாதங்களாக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது Ladayo மீது கொலை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்ய முயன்ற பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா!!

 

நடிகை ஷகிலா

ஷகிலா என்றால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும். அவருக்கு அப்படியான ஒரு பெரும் வரவேற்பு இருந்தது. படங்களில் நடிக்க ஒரு சக நடிகை போல தான் வந்தார். ஆனால் ஆபாச பெண் என்பது போல அவர் மீது முத்திரை பதிந்தது.

அவரின் படங்கள் வந்தால் ஹீரோக்கள் படங்கள் கூட வெளியாக தயங்கும். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.

அண்மையில் அவர் பேட்டி கொடுத்திருந்தார். இதில் அவர் நான் 15 வயதிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டேன். ஆனால் குடும்பத்துக்காகவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கி கொண்டார். நிறைய காதல் தோல்விகளும் கூட. இதனால் தற்கொலை கூட செய்ய முடிவெடுத்தேன்.

வீட்டில் இருக்கும் போது நான் கமல்ஹாசனின் படங்களை தான் பார்ப்பேன். அவரின் ரசிகை நான். அவருடைய கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இருக்கின்றது என கூறியுள்ளார்.

கூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி!!

 

நடிகை கொடுத்த பதிலடி

நடிகைகளை சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள் என்றால், நிஜத்திலும் அவர்கள் வெளியில் வந்தால் வெறும் மோகப்பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். பல சமயங்களில் நடிகைகளிடம் சிலர் தவறான நடந்துகொண்டார்கள் என்கிற அதிர்ச்சி தகவல்களும் வந்ததுண்டு.

அதுபோல தற்போது பிரபல நடிகை சரீன் கான் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வரும் போது பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.

அப்போது ஒரு நபர் நடிகையை தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் கோபமடைந்த நடிகை அந்த நபரை போட்டு அடித்துள்ளார்.

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. தவறாக நடந்தவரை எதிர்த்து தாக்கிய நடிகைக்கு பாராட்டுகளுக்கு குவிந்து வருகிறது.

அழகு என்ற பெயரில் உதட்டை பெரிதாக்கிய நடிகை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!

 

உதட்டை பெரிதாக்கிய நடிகை

பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமும்மான, நடிகை சாரா கான், உதட்டை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

தற்போது முதல்முறையாக அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.

ஒரு சிலர் நல்லவிதமாக அழகாய் இருந்த உதடுகளை இப்படி மாற்றிக்கொண்டது ஏன் என்பது போல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அழகு என்ற பெயரில் இப்படி பாலிவுட் நடிகைகள் தங்கள் தோற்றத்தை மேலும் மெருகூட்ட இப்படி அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் நடிகை ஸ்ருதியும் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று அவரது முகத்தை ரசிகர்கள் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் ஒரு கைக்கூலி : கடுமையாக விமர்சித்த திருநங்கை!!

 

ரஜினிகாந்த் ஒரு கைக்கூலி

மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே திருநங்கை அப்சரா ரெட்டி நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா அதிமுக-வில் இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். இதையடுத்து அவரை தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவித்தது காங்கிரஸ்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்சரா, தமிழக மக்கள் என்றும் ஹிந்தி கட்சியை ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. ரஜினிகாந்த் பா.ஜ.கவின் கைக்கூலியாக தான் செயல்படுகிறார்.

அரசியலுக்கு வருவேன், வருவேன் என ஏமாற்றுகிறார். மக்களை அவர் ஏமாற்றக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை காட்டுக்குள் உல்லாசத்தில் பெருமளவு வெளிநாட்டவர்கள் : ஒருவர் பரிதாபமாக மரணம்!!

அம்பலந்தோட்டை உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சுற்றுலா முகாமில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். சுற்றுலா அமைச்சின் அனுசரனையுடன் இடம்பெறும் இந்த முகாமில் உயிரிழந்தவர் இந்தியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நேற்று காலை திடீரென கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியுடன் அம்பலந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதிகளவில் மதுபானம் அருந்தியமையே இந்த மரணத்திற்கான காரணமாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை!!

2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாடு முதலீடுகள் வேகமாக திரும்பபெறப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து ஒரு பில்லியன் (1000 million) டொலர் வெளியேற்றபட்ட நிலையில், 2019 ஆம் 11 பில்லியன் ரூபாய் வெளியேற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி என சபாநாயகர் கூறிய அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பிணை முறி மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் திரும்பபெறப்பட்டன.

அரசியல் நெருக்கடி தீரக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 12 மாதங்களில் அல்லது விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற அரசியல் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் மதிப்பிழக்க இந்த அரசியல் நிலைமைகள் பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபட்டுள்ளன. இலங்கை மூலதன சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபடுவது தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பேர் : தோழியின் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம்!!

 

பரிதாப சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோழியின் கண்முன்னே இரண்டு நண்பர்களும் சுனையில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி-அறிவியல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடன் அதே பிரிவில் பயிலும் சுவேதா(19) மற்றும் வேறு ஒரு மாணவி என 3 பெரும் சேர்ந்து, நேற்று கல்லூரியை கட்டடித்துவிட்டு செஞ்சி அருகே பனமலை கிராமத்தின் மலை உச்சி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சுவாமி தரிசனம் முடிந்த பின்னர், கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சுனை கரையோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த பாசியில் கால் தடுமாறி சுவேதா சுனையில் சிக்கியுள்ளார். நீச்சல் தெரியாமல் சுவேதா திணறுவதை பார்த்த சுந்தர்ராஜ் வேகமாக தண்ணீருக்குள் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால் நீருக்குள் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த மற்றொரு தோழி என்ன செய்வதென தெரியாமல் அதிர்ச்சியில் சுனையில் குதித்துள்ளார். ஆனால் அவரையும் சுனை மூழ்கடிக்க முயன்றதால், அங்கிருந்த கல்லை பிடித்து கொண்டு உதவி கேட்டு கூச்சலிடம் ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு கோவிலில் இருந்து ஓடிவந்த பொதுமக்கள் வேகமாக அந்த பெண்ணை மீட்டெடுத்தார். அதன் பிறகு அந்த மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆற்றில் மூழ்கிய சுந்தர்ராஜ் மற்றும் அவருடைய தோழி சுவேதாவை சடலமாக மீட்டெடுத்தனர்.

இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் வட்ஸ் அப்பால் வந்த வினை : உயிரை விட்ட கணவன்!!

 

உயிரை விட்ட கணவன்

இந்தியாவில் மனைவி தொடர்ந்து வட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்தவர் சரண்தேஜ் ரெட்டி (25) ஆட்டோ ஓட்டுனரான இவரும் பவானி என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பவானி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் – மனைவி இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் பவானி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக மன வேதனையடைந்த சரண்தேஜ் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சரண்தேஜின் குழந்தை அருகில் அழுது கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அருகில் வசிப்பவர்கள் சரண்தேஜ் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சரண்தேஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!!

 

முதியவர் படுகாயம்

வவுனியா ஓமந்தையில் நேற்று(12.01) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற கப்ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக தலையில் பலத்த அடிபட்டமையின் காரணமாக முதியவரை அங்கிருந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஹீரோவாக செயற்பட்ட தந்தை : அரசாங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

 

ஹீரோவாக செயற்பட்ட தந்தை

கண்டி – யட்டிநுவர வீதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்தப்பிய குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தக் குடும்பத்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறி கண்டி கெப்பெட்டிபொல ஓய்வு மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை அவர்களுக்கு புதிய வீடொன்றை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் ஷான் கஹவெல அந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது குடும்பத்தையே காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் கண்ணீருடன் கருத்து வெளியிட்டிருந்தார். தீயில் எரிந்து உயிரை விடுவதை விட பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்ததாகவும், அதனாலேயே பிள்ளைகளை மேல் இருந்து கீழே தூக்கி வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் வாழ்ந்த இடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. வாழ ஒரு இடமில்லை. குடும்பத்தோடு நடு வீதிக்கு வந்துவிட்டோம். வைத்தியசாலையில் இருந்து எங்கு செல்லப்போகிறோம் என தெரியவில்லை. வாழ இடமில்லை. பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை இல்லை என ராமராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடியான நிலையில் அந்த குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Alif Dhaalu Atoll பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கையரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மற்றுமொரு இலங்கையருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தியவருக்கு எந்தவொரு ஆபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இரவு 08.50 மணியவில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.