ஹோட்டல் பாத்ரூமில் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : மனதை உருக்கும் சம்பவம்!!

அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கணவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல அங்கேயே அவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மனதை உருக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Falon Griffinக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட அவரது கணவரான Robert அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வழியில் Falonக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருவரும் வழியில் இருந்த Chick-fil-A என்னும் ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டல் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையிலும் Falonஇன் நிலைமை கண்டு இரக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அனுமதித்தனர்.

பாத்ரூம் சென்ற Falonக்கு அங்கேயே பிரசவ வலி அதிகரிக்க தாங்க இயலாமல் சத்தமிட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர் Falonஇன் சத்தம் கேட்டு Robertக்கு தகவல் தெரிவிக்க அவர் பதறிச் சென்று பார்க்கும்போது குழந்தையின் தலை வெளியே வரத் தொடங்கி விட்டதைக் கண்டார்.

ஹோட்டல் மேனேஜரை அழைத்து அவசர உதவி ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு தன் மனைவியிடம் ஸ்வீட்டி, நாம் இங்குதான் நம் குழந்தையை வரவேற்க போகிறோம், என்று கூறிவிட்டு குழந்தையை கைகளில் ஏந்த தயாராகியிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தையின் தலையைச் சுற்றி தொப்புள் கொடி பலமாக சுற்றியிருப்பதைக் கண்டு அதிர்ந்தாலும், தன் மனைவியிடம் சற்று ரிலாக்ஸ் செய்யச் சொல்லிவிட்டு மெதுவாக அந்த கொடியை விலக்கி விட்டிருக்கிறார்.

இரண்டு நிமிடங்களில் குழந்தை Gracelyn அப்பாவின் கைகளில் தவழ்ந்திருக்கிறாள். தனது சட்டையைக் கழற்றி குழந்தையை பொதிந்து வைத்து விட்டு மூவரும் சற்று குளிரைப் போக்கிக் கொள்வதற்காக கிச்சனுக்கு சென்றிருக்கிறார்கள்.

15 நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வர, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

இதற்கிடயில் தங்கள் ஹோட்டலில் Gracelyn பிறந்ததற்காக ஹோட்டல் நிர்வாகம் வாழ்நாள் முழுவதும் அவள் அங்கு இலவசமாக சாப்பிடலாம் என்றும் அவள் வளர்ந்த பிறகு அங்கேயே அவளுக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு நிற்காமல் Gracelynஇன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் இப்போதே தாயாராகி வருகிறார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.

பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது தன்னுடைய படிப்பை சிறப்பாக முடித்து, தன்னைப் பற்றி பேசியவர்களின் வாயை அடைத்துள்ளார்,

பிரித்தானியாவின் Stanley நகரத்தின் Co Durham பகுதியைச் சேர்ந்தவர் Kayleigh . தற்போது 16 வயதாகும் இந்த சிறுமி, 13 வயதிலே கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றெடுத்தார்.

இதனால் இனி இவளின் வாழ்க்கை அவ்வளவு தான், படிப்பை கூட சரியாக படிக்க முடியாது என்று அவர் தோழிகள் உட்பட பலரும் கூறியுள்ளனர்.

இதனால் கடும் மனவேதனையில் இருந்த சிறுமியைப் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. Kayleigh தானா இது? என்றளவிற்கு உள்ளார்.

அவர் குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Kayleigh தற்போது தன்னுடைய பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார் எனவும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

பார்க்க இளவரசி போன்று தோற்றம் அளிக்கும் வகையில்இருக்கும் அந்த இரண்டு வயது சிறுமியுடன் Kayleigh ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kayleigh 13 வயது இருக்கும் போது தான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்துள்ளார். ஏனெனில் பெற்றோருக்கு தெரிந்தால் இது பிரச்சனையாகிவிடும் என்று பயந்துள்ளார்.

அதன் பின் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவளின் பெற்றோர் அறிந்துள்ளனர். ஆனால் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தாங்கள் தாத்தா-பாட்டியாக இருக்கிறோம் என்று கூறி ஆதரவாக இருந்துள்ளனர்.

ஆனால் சிறுமியோ எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலங்களில் தான் பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து Kayleigh கூறுகையில், நான் வீட்டில் என் குழந்தையுடன் இருப்பேன், அப்போது என்னை பலரும் பல விதமாக பேசினர்.

ஆனால் நான் தீவிர முயற்சி செய்தேன். நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன். தற்போது என் குழந்தைக்கு நல்ல ஒரு தாயாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் Kayleigh-வின் இரண்டு வயது குழந்தையின் பெயர் ஹார்லி எனவும், தற்போது பள்ளி படிப்பை முடித்துள்ள Kayleigh வரும் செப்டம்பர் மாதம் இசைக் கல்லூரியில் சேரப்போவதாகவும் கூறப்படுகிறது.

தன்னைப் பற்றி பல கடுமையான சொற்கள் வந்த போதும், Kayleigh தன்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்து குழந்தைக்கு நல்ல ஒரு தாயாகவும் இருந்து வருகிறார்.

நடுரோட்டில் பெற்ற மகளை உயிரோடு எரித்து கொன்ற தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் சைன்புர் சர்கார் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால் (52). இவர் மகள் லட்சுமி பாய் (19). இவரும் ராஜ்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இவர்கள் காதலுக்கு சுந்தர்லால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் தந்தை எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த லட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து அறிந்த சுந்தர்பாய் லட்சுமியை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெயை லட்சுமி மீது ஊற்றி சுந்தர்பாய் தீவைத்தார்.

இதையடுத்து வலியால் துடித்த லட்சுமி நடுரோட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சுந்தர்பாயையும், இதற்கு உடந்தையாக இருந்த அவர் சகோதரரரையும் கைது செய்துள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி : 43 பேரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரை காப்பாற்றி பேருந்து ஓட்டுநர் தனது உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் மது(48). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், நேற்று இரவு கோட்டயத்தில் இருந்து மலப்புரத்தில் உள்ள புத்தன் அத்தானி எனும் இடத்திற்கு 43 பயணிகளுடன் பயணித்தார்.

ஆனால், அவர்கள் சென்ற சாலை மலைப்பகுதி போன்றதாகும். அந்த பாதையில் 10 முதல் 100 அடி வரை பள்ளம் உள்ளது.

பேருந்து கோட்டைக்கல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநர் மதுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

எனினும், மது தனது நெஞ்சை பிடித்தபடி பேருந்தை ஓட்டினார். ஆனால், பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சமுற்று அலறினர்.

பேருந்து சென்ற பாதையில் ஒரு புறம் பள்ளம், எதிர்புறம் ராட்சத மரம் என்று இருந்ததால் மது பேருந்தின் வேகத்தை குறைக்க Hand Brake-ஐ பிடித்தவாறே ஓட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதனால், ராட்சத மரத்தில் மோதாமல் பேருந்து நின்றது. பயணிகள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து, பயணிகள் ஓட்டுநரிடம் சென்று பார்த்தபோது அவர் Steering-ஐ பிடித்தவாறு மயங்கி கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர், தங்களது உயிரை காப்பாற்றி தனது உயிரை விட்ட மதுவின் உடலுக்கு, குறித்த பயணிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டைக்கல் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம் : தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் மகனும், மருமகளும் தங்களை புறக்கணித்ததால் மனமுடைந்த வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜானி. இவர் மனைவி ரூபி. தம்பதியின் மகன் பெயர் திபஷிஸ் கார்காரியா. திபஷிஸுக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்நிலையில் தனது பெற்றோரின் வீடு, நிலம், பணம் எல்லாவற்றையும் வாங்கி கொண்ட திபஷிஸ் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதையடுத்து சிறிய வீட்டில் ராஜானியும், ரூபியும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். பெற்றோர் இறந்த தகவல் திபஷீஷுக்கு தெரிவிக்கப்பட்டும அவர் சடலங்களை பார்க்க வராமல் தனது மனைவி குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

இதையடுத்து ராஜானி மற்றும் ரூபியின் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், மகனும், மருமகளும் தங்களை எந்தளவு புறக்கணித்து கைவிட்டார்கள் என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் திபஷீஸை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அவர் மனைவியை தேடி வருகிறார்கள்.

நடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய் : இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்!!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா கடந்த 18-ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் பிரியங்காவுக்கு கணவர் மற்றும் குடும்பத்தால் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவனையில் பிரியங்காவின் சடலம் வைக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிரியங்காவின் தாய் அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், கடையை விரிவாக்கம் செய்யபோகிறேன் எனவும், பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு வந்து விடு எனவும் பிரியங்கா இறப்பதற்கு முன்னர் என்னிடம் கூறினார்.

என் மகள் சாகும் மனநிலையில் என்னிடம் பேசவில்லை என கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் சக நடிகைகள் வந்த போது அவர்கள் தோள் மீது சாய்ந்தபடியும், பிரியங்கா சடலத்தை பார்த்தும் அவர் தாய் அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

அண்டை வீட்டாருடன் நெருங்கி பழகிய மனைவி : கணவர் எடுத்த முடிவால் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்!!

தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்ததால், மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தண்டுபாளையம் காலனியைச் சேர்ந்த தம்பதி அருள்தாஸ்-தமிழ்ச்செல்வி.

இதில் தமிழ்ச்செல்வி அண்டை வீட்டக்காரரான செல்வகுமார் என்பவருடன் நெருங்கிய பழகியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அருள்தாஸ் தன்னுடைய மனைவியை பல முறை எச்சரித்த போதும், அவர் கேட்காததால், சந்தேகமடைந்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி காவல்நிலையம் அருகேயுள்ள பாழடைந்த மருத்துவமனையில் தீக்குளித்தார்.

95 சதவிகித தீக்காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கொடூர கணவன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

தற்போது 4 மாத கார்ப்பிணியாக இருந்த அவர் சமீபத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ராமதாசுக்கும் புஷ்பாவுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் ராமதாசுக்கு எப்போதும் சந்தேகம் இருந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால், ரமதாசுக்கு தன் மனைவி மீது தொடர்பு இருப்பது குறித்து சந்தேகம் அதிமாகியது.

இதனால் முன்னால் இவர்களுக்கிடையே நடந்த சண்டையை விட தற்போது சண்டை அதிகரிக்கவே துவங்கியுள்ளது.

இப்படி தொடர்ந்து சண்டை வந்ததால், பொறுமை இழந்த ராமதாஸ் ஒரு கட்டத்தில் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவர் யூடியூப்பில் தவறு செய்யும் பெண்களை கொலைசெய்யும் முறைகள் தொடர்பான வீடியோக்களையும், கொலை செய்து விட்டு எளிதில் தப்பிப்பது எப்படி? என்பது தொடர்பான வீடியோக்களையும் கொலை செய்தால் இந்தியாவில் என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றது போன்ற வீடியோக்களையும் ஒரு மாதமாக பார்த்து வந்துள்ளார்.

குறிப்பாக ஹாலிவுட் படமான Scold’s Bridle படத்தில் வரும் காட்சிகளை பார்த்துள்ளார். அதில் பெண்களின் வாயை இறுக்க பூட்டி கொடூரமாக கொலை செய்யும் முறைகளை பார்த்து அது போல ஒரு மாதமாக பயிற்சியும் எடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி புஷ்பா தன் தாயார் வீட்டிற்கு செல்வதற்காக அருகில் இருக்கும் கரும்பு தோட்டத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அவர் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்ற ராமதாஸ், புஷ்பாவின் முகத்தை துணியால் இறுக்கி கட்டி , தலையை கரும்பு தோட்ட சகதியில் வைத்து அழுத்தி அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலைக்கும், தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் நடித்து வந்த ராமதாசின் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரின் சட்டை மற்றும் வேட்டியில் சகதி இருந்துள்ளது பொலிசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாசின் மொபைல் போனை ஆராய்ந்து பார்த்த போது கொலை செய்வது எப்படி? போன்ற வீடியோக்களை, யூடியூப் மற்றும் முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமதாஸ் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் வந்த சிவன் கோவிலை கட்டி வரும் நபர்!!

இந்தியாவில் கனவில் வந்த கோவிலை முதியவர் ஒருவர் 30 ஆண்டுகளாக கட்டி வரும் சம்பவம் பலரிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற 64 வயது முதியவர் கட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் கற்களால் கட்டப்பட்டு வந்த இந்த கோவிலை பார்ப்பதற்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றன.

இது குறித்து சத்யபூஷண் கூறுகையில், பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். அப்போது சிவன் கோவிலை கட்டுவது போல் எனக்கு கனவு வந்தது.

இதனால் அது போன்ற கோவிலை கட்ட முடிவு செய்தேன். 1980-ல், இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.

இந்த கோவில் கட்டுவதற்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் பெறவில்லை எனவும், கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர் என்றும், கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கொடையாக பணம் கொடுப்பார் அதை வைத்து இந்த கோவிலை கட்டி வருவதாக கூறியுள்ளார்.

கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது.

இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை மீது உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி!!

டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா என்ற பள்ளி மாணவிக்கு பேஸ்புக் வாயிலாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி அந்த பெண், கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி அந்த இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

ஆனால், வேலை தெரியாத காரணத்தால் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கையிலும் பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க தள்ளப்பட்டார் அந்த மாணவி. மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

இதையடுத்து பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டார் அந்த பெண். அவர்கள் அந்த மாணவிக்கு உணவு வழங்கினர். அவர்களிடம் செல்போன் வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தன்னை மீட்கும்படி கெஞ்சியுள்ளார். அதனைத்தொடர்ந்து பதறியடித்து வந்த பெற்றோர் சிறுமியை மீட்டுள்ளனர்.

தன்னை விட 20 வயது குறைவான இளம் மனைவியை கொன்றது ஏன்? கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் (45). இவர் மனைவி சவுமியா (25). ஜகதீஷை விட சவுமியா அதிக வயது குறைவானவர் என்ற நிலையில் சமீபகாலமாக மனைவி நடத்தையின் மீது ஜகதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா என கூறி சவுமியாவுடன் ஜகதீஷ் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

இதே போல நேற்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் சவுமியாவின் தலையை தரையில் வேகமாக மோதிய ஜகதீஷ் பின்னர் அவர் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த ஜகதீஷ் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு கணவன்…2 காதலர்கள் : கொலையில் முடிந்த சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 16 ஆம் திகதி குடிபோதையில் தனது காரில் இறந்துகிடந்தார். குடித்துவிட்டு காருக்குள் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கருதி இவரது உடலை மனைவி நளினி அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பத்மாவதி மற்றும் குமரேஷன் ஆகிய இருவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பத்மாவதிக்கும் இறந்துபோன ராஜேஷ்க்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. பின்னர் பத்மாவதி மதுரவாயிலை சேர்ந்த குமரேசன் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். குமரேசனுடன் ஏற்பட்ட புது தொடர்பால் ராஜேஷை கைவிட்டுள்ளார் பத்மாவதி.

இதனால், கோபம் கொண்ட ராஜேஷ், பத்மாவதியுடன் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். இதனால் கோபம் கொண்ட பத்மாவதி, தனது இரண்டாவது கள்ளக்காதலன் குமரேசனை வைத்து முதல் கள்ளக்காதலன் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ராஜேஷை மது அருந்த அழைத்து மதுவில் விஷம் கலந்துகொடுத்துள்ளனர். பின்னர், அவரை அடித்து காருக்குள் படுக்கவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

போதையில் தான் ராஜேஷ் படுத்திருப்பதாக நினைத்து அவரது மனைவி நளினி இதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து காலையில் பார்க்கும்போதுதான் ராஜேஷ் இறந்துகிடந்துள்ளார்.

இந்த கொலை வழக்கில், நளினி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பொலிசார் முன்வந்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இதில் முக்கிய காட்சியாக, குமரேஷன் மதுவில் விஷத்தை கலந்து ராஜேஷ்க்கு கொடுத்த காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இதனை உறுதிப்படுத்திக்கொள்ள இறந்துபோன ராஜேஷின் உடலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை பிரியங்காவின் தற்கொலை தான் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் பலரும் பேசும் விடயமாக உள்ளது.

பிரியங்காவுக்கு கணவருடனும், குடும்பத்தாருடனும் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரியங்காவுடன் வம்சம் தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கூறுகையில், எப்பொழுதும் என்னுடன் தொடர்பில் இருந்திருக்கும் பிரியங்காவின் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக கொஞ்சம் சரியில்லை.

சமூகவலைத்தளங்களில் பிரியங்கா பதிவிட்டு வந்த தகவல் அதனை உறுதிபடுத்தியதாகவும், அவரது கணவரும் இதேப் போன்ற பதிவுகளையே வெளியிட்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சசினையில் இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்ட பூமிகா பிரியங்காவின் கணவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவளிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம்.

பிரியங்கா சமீபத்தில் அவர் வெளியிட்ட ஐ வாண்ட் டூ டை என்ற வார்த்தைகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டதை அவதானித்த வம்சம் பூமிகா உடனே அவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு பிரியங்கா சும்மா தான் அக்கா என்று அழுதுள்ளார். நேரில் பார்க்கும் போது கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பூமிகா மேலும் கூறுகையில், அளவுக்கதிகமான பரிசுப்பொருட்களை எனக்கு கொடுத்துள்ளார். அதனை அவதானிக்கும் பொழுது அவள் ஏன் இவ்வாறு செய்தார் என்ற கேள்வியுடன் கண்ணீர் வடித்துள்ளார்.

வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா!!

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் இன்று (21.07) நடைபெற்றது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவும், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக கூட்டுறவு களஞ்சியம் எனும் நூல் வெளியீடும், கூட்டுறவாளர் பத்திரிகையின் ஐந்தாவது இதழும் வெளியிட்டுவைக்கபபட்டதுடன், மாணவர்களது கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் கூட்டுறவாளர்கள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2018!!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான திருவாளர்கள் ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம் உட்பட 1983 ஜீலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53பேர் மற்றும் இக் கலவரத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35வது ஆண்டு நினைவாக,

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க அனுமதியுடன் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (21.07.2018) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலமையில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கறுப்பு ஜீலை நினைவேந்தலின் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து மங்களவிளக்கேற்றியதுடன் பாராளுமன்ற உறுப்பினர், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களின் உரையுடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் நடராஜசிங்கம் (ரவி) , வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் யோகராஜா , தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் குருஸ்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் அரவிந்தன், உதைப்பந்தாட்ட சங்க தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வு வவுனியா இரண்டாம் குறுக்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்தில் இன்று (21.07.2018) காலை 10.30 மணி தொடக்கம் 13.30மணி வரை தமிழ்தாய் இளைஞர் கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இக் கருத்தமர்வில் தகவல் உரிமைச்சட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எவ்வாறான சமூகத்தில் இருள் போர்வைக்குள் இருக்கும் விடயத்தை சட்டபூர்வமாக எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்று பல விடயங்களையும் விளக்கங்களையும் வளவாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

நீங்கள் இலங்கை அரசின் அமைச்சு ஒன்றிடமிருந்து ஒரு குறித்த அபிவிருத்தி திட்டமொன்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெறுமதி அதனால் நடந்தேறிய அபிவிருத்தி பற்றிய விபரங்களை கேட்டுப் பெறும் உரிமை உங்களுக்கு சட்ட ரீதியாக தரவேண்டும் என்ற பல விளக்கங்கள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் , இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.