வவுனியாவில் 4 சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

 
வவுனியா மாவட்டத்தில் 5 சபைகளில் 4 சபைகளுக்கு நேற்றைய தினம்(20.12) தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

நேற்று மாலை வட மாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ப.சத்தியலிங்கம்..

அனைத்து சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது, வவுனியா வடக்கு பிரதேச சபையில் பெரும்பான்மை இனத்தவர்கள் உள்வாங்கப்படவுள்ளமையினால் பொது மக்கள் மிக அவதானமாக வாக்குகள் சிதறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று வியாழக்கிழமை (21.12) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் அனைத்தும் நிறைவடைகின்ற நிலையில் காலதாமதம் இன்றி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்தார்.

  

வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்!!

 
தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியாவில் இன்று(20.12) வேட்புமனுத் தாக்கல் செய்தது.

வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் வவுனியா நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடுவதற்காகவே வவுனியா மாவட்ட செயலக தேர்தல் அலுவலகத்தில் இந்த வேட்புமனுவை தாக்கல் செய்தது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, இ.இந்திரராஜா மற்றும் வேட்பாளர்கள் எனப் பலரும் இதன் போது வருகை தந்திருந்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் (20.12) வவுனியாவில் 300 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் சர்வதே சமூகம் தலையிட்டு தங்கள் பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.

தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து கடை வீதி வழியாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கண்டி வீதியில் அமைந்துள்ள பிராதான தபாலகத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டகையை வந்தடைந்திருந்தனர்.

சுமார் 50 பேர் வரையில் கலந்துகொண்ட இப்போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் அரசாங்கத்தினை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேசமே தமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!!

 
வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் முனாபர் உள்ளிட்டோரே கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதன்போது, நல்லெண்ண அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக இதன்போது கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர் தெரிவித்தார்.

காட்டுப்பன்றி இறைச்சியை சாப்பிட்டு கோமா நிலைக்கு சென்ற குடும்பம்!!

 
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினர் சமீபத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை பதப்படுத்தி ஆசையாக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்ட சில மணி நேரத்திலே ஒவ்வொருவராக மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மயக்க நிலையிலேயே அம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

கோமா நிலைக்கு என்ன காரணம் என்பதை சோதித்த போது அவர்கள் அனைவரும் சாப்பிட்ட காட்டுப்பன்றியின் இறைச்சி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுபன்றி இறைச்சியால் பாட்டுலிஸம் எனும் அரிய வகை நோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் அதனால் தான் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் பாட்டுலிஸத்தால் ஏற்படக்கூடிய விஷத்தன்மையை முறிக்கும் மருந்துகளை அளித்துள்ளனர். அந்த மருந்து நன்கு வேலை செய்து அவர்களில் இருவரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால் அது பாட்டுலிஸம் நோயின் பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

முன்னேற்றம் என்றால் கண்களை மட்டுமே திறந்து பார்கின்றார்களே தவிர, இயல்பு நிலைக்கு வரவில்லை. அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மட்டும் காட்டுபன்றியின் இறைச்சியை சாப்பிடாததல் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.

பாட்டுலிஸம் நோயானது பக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியாவினால் பரவக்கூடியது.

இந்தவகை பக்டீரியா அவர்கள் சாப்பிட்ட காட்டுப்பன்றி இறைச்சியில் இருந்துள்ள காரணத்தினால் தான் அவர்கள் கோமா நிலையை அடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்தொலைபேசியை அருகில் வைத்து உறங்கினால் புற்றுநோய் அபாயம்!!

 

கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கலிபோர்னிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர்.

அலாரம் வைப்பது, சமூக வலைதளங்களை இரவில் அதிகம் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை முடித்த பின் கைப்பேசியை அருகில் வைத்தபடி தூங்குவதால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மை தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக California Department of Public Health (CDPH) தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து California Department of Public Health (CDPH) இயக்குநரும் மாநில பொது சுகாதர அதிகாரியுமான Dr.Karen Smith கூறுகையில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் இதுபோன்ற கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் இரவில் கைப்பேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பத்து வருடத்திற்கு மேலாக செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிய இதயத்தை நொறுங்க வைக்கும் புகைப்படம்!!

 
உச்சியை பிளக்கும் வெயிலில் சிறு குட்டையில் தேங்கிய அழுக்கு நீரை மண்டியிட்டு வாயால் உறுஞ்சிக் குடிக்கும் சிறுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.

ஆஜென்டீனாவின் Mbya Guarani சமூகத்தைச் சேர்ந்த 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி உச்சியை பிளக்கும் அந்த வெயிலில் தண்ணீர் தாகத்தால் இவ்வாறு தேங்கிய நீரை வாயால் உறுஞ்சிக் குடித்துள்ளார்.

வறுமையால் தத்தளிக்கும் குறித்த சமூகத்தினர் பகல் வேளைகளில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குறித்த புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பகிரவும், தற்போது அது வைரலாகி பொதுமக்களிடையே விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

மட்டுமின்றி சமூக ஆர்வலர் Migue Ríos இந்த விவகாரம் தொடர்பில் தேசிய அளவில் விவாதத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த புகைப்படம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு வறுமையால் தீபற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, இச்சிறுமி தம்மை தற்காத்துக் கொள்ள நிலத்தில் மண்டியிட்டுள்ளார்.

ஒரு சமுதாயமாக நாம் ஏதோ தவறிழைக்கின்றோம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எவரும் பேச முன்வராத பிரச்னை தொடர்பில் இறுதியாக நம்மை பேச வைத்துவிட்டாள் குறித்த சிறுமி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தை பதிவு செய்த பத்திரிகையாளர் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடவும் தற்போது அது பல மில்லியன் மக்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

பலர் தங்கள் கருத்துகளை அரசுக்கு எதிராக காட்டமாக பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், பசியால் பலர் தினம் இறந்து கொண்டிருக்க, எனது ஆடம்பர வாழ்க்கை குறித்து நான் தம்பட்டம் அடித்து வாழ்ந்து வருகிறேன் என்றால் எத்துணை வெட்கக்கேடானது அது என பதிவிட்டுள்ளார்.

அதே இடத்தில் நீங்கள் உங்களை வைத்து ஒருகணம் சிந்தியுங்கள் அல்லது உங்கள் குழந்தைகளை அதே நிலையில் வைத்துப் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சவுதியில் கொன்று புதைக்கப்பட்ட நீதிபதியின் சடலம் கண்டுப்பிடிப்பு!!

சவுதியில் கடத்தி கொலை செய்யப்பட்ட நீதிபதி ஷேக் முகமதின் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

நீதிபதி ஷேக் முகமது அல்-ஜிரானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நாட்டின் குட்டீப் மாநகராட்சியில் அதிகாரிகள் செவ்வாய் கிழமை சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஷேக்கின் சடலத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது சல்மான் அல்-பராஜ் என்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.
சிறப்பு பாதுகாப்பு அதிகாரி காலித் அல்-சல்மெடியும் இந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான செய்தியை கூடுதல் தகவலுடன் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மகனின் வாழ்வில் விளையாடிய தாய்!!

தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தாய் ஒருவர், தனது மகனின் பள்ளிப் படிப்பை நிறுத்தி அவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வி, இவருக்கு விக்னேஷ்குமார்(13) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வி சில மாதங்களுக்கு முன் ஜோதிடரைப் போய் பார்த்துள்ளார்.

அப்போது அந்த ஜோதிடர் உன் மகன் தனியாக பள்ளிக்கு சென்றால், அவனுடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளார். மகனின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து அதிர்ச்சியைடைந்த அவர், மகனை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரிதும் விரக்தியடைந்த விக்னேஷ் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து குழந்தை நலத்துறையினர் அவரிடம் விசாரித்த போது, மகனின் உயிர் முக்கியம் என்பதால் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் தன்னுடைய மூத்த மகன் 12-ஆம் வகுப்பு படிக்கிறான், அவனை நான் பள்ளிக்கு அனுப்பி தான் வைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் கொடுத்ததைத் தொடர்ந்து, தற்போது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு செல்வி சம்மதம் தெரிவித்துள்ளார்.

மகன் செய்த செயலால் குடும்பமே உயிரை விட்ட சோகம்!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த பெற்றோர் தங்கள் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள மறையூரை சேர்ந்தவர் முருகன் (50). இவர் மனைவி முத்துலட்சுமி (45). இவர்களுக்கு பாண்டியராஜ் (25) என்ற மகனும், பானுப்பிரியா (21) என்ற மகளும் உள்ளனர்.

பாண்டியராஜ் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், கல்லூரியில் படித்த போதே ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பாண்டியராஜின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியை சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜ் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அவமானம் தாங்காத முருகன், பானுப்பிரியா, முத்துலட்சுமி ஆகியோர் கொழுமம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!

 
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

சிறிரெலா கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்டோரை கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்ட பேச்சுக்களில் இணக்கம் காணப்படாமையால் அபிவிருத்தியை விரும்பும் எமது மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கணித பாடம் தொடர்பான அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!

கணித பாடம் தொடர்பிலான அச்சத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தெஹியத்தகண்டிய அரலகங்கவில கெக்குலுவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன், கணித பாடத்திற்கு உரிய முறையில் பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

17 வயதான இசார ஜனித் சந்திரசிறி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கணித பாட பரீட்சைக்குத் தோற்றி வீடு திரும்பிய மாணவன், தாம் சரியாக பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நேற்று முன்தினம் நஞ்சு அருந்தியுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் நஞ்சு அருந்திய மாணவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் அதி சிறந்த விளங்கும் இந்த மாணவன் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் முதல் நிலையை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 600 யாசகர்கள் : ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை!!

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை – ரிதிகமயில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும், அதன்படி அவர்கள் செயற்படா விட்டால், மாநகர சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை!!

இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் மோசடி செய்த மாணவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியான முறையில் கணிதப்பாடத்திற்கு விடையெழுதியதாக கூறப்படும் மாணவரின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாணவர் எஞ்சியுள்ள ஏனைய பாடங்களை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய பாடங்களின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுர வெலிசிங்க ஹரிஸ்சந்திர வித்தியாலய மாணவர் ஒருவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வௌியீட்டுக்கு தயாராகும் இமைக்கா நொடிகள்!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறுபுறத்தில் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.