வவுனியா பிரதேச செயலக ஆலயத்தில் ஜயப்ப பூஜை வழிபாடு!!

 
வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்திலுள்ள விளாத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஜயப்பன் பூஜை வழிபாடு நேற்று திங்கள் கிழமை (18.12.2017) நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் ஐயப்ப பூஜை வழிபாடினை வவுனியா தவசிகுளம் பஜனை கோசப் பிரியர் மணிமண்டப சாமிமார்களும் மற்றும் வவுனியா கூமாங்குளம் ஆனந்த ஐயப்ப சாமிமார்களும் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இப் பூஜை வழிபாட்டில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

யாழில் முகம் கழுவச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ். நாவலி பகுதியில் முகம் கழுவச் சென்ற வயோதிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகம் கழுவச் சென்ற வயோதிபரை காணவில்லை என்று உறவினர்கள் தேடிய போது, அவர் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில்: பாடசாலை வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!!(விபரம் உள்ளே)

2017ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 2018ம் ஆண்டில் தரம் 6க்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான, பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வெட்டுப் புள்ளி விபரம் மேலே தரப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்!!

 
வவுனியா – கணேசபுரம் பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கணேசபுரம் 40 வீட்டத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் என்பவரது தற்காலிக வீடே இவ்வாறு தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.

குடும்பத்தினருடன் அவர் வவுனியா நகருக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயலவர்களின் முயற்சியினால் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி மற்றும் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற பாடசாலை ஆசிரியர் : பதற வைக்கும் சம்பவம்!!

 
அயர்லாந்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பாடசாலை தலைமை ஆசிரியர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.

அயர்லாந்தின் கேவன் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2016 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த பதற வைக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கேவன் கவுண்டியில் உள்ள பாடசாலை தலைமை ஆசிரியரான Alan Hawe தமது 30 வயது மனைவி Clodagh Hawe மற்றும் சொந்த குழந்தைகளான Liam(14), Niall(11) மற்றும் Ryan(6) ஆகியோரை கத்தியால் கொடூர முறையில் கழுத்தை துண்டித்து கொலை செய்துள்ளார்.

இதில் தனது மனைவி Clodagh Hawe-ஐ தலையில் கடுமையாக தாக்கியுள்ளதும், கழுத்து எலும்புகள் உடைந்திருந்ததும், அதிகபடியான ரத்தம் வெளியேறியிருந்ததும் பொலிசாரின் விசாரணையின் போது தெரிய வந்தது.

மட்டுமின்றி குறித்த தாக்குதலில் ஆலன் பயன்படுத்திய கோடரி ஒன்றும் ரத்தக்கறை படிந்த கத்திகள் இரண்டும் பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலும் தனது மனைவி கொல்லப்பட்டு கிடந்த அதே பகுதியில் ஆசிரியர் ஆலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு கிடந்துள்ளார். மட்டுமின்றி Clodagh-ன் நகைப்பெட்டியானது அழகாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை முதன் முறையாக Clodagh-ன் தாயார் பார்த்து அதிர்ச்சியுற்று உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மட்டுமின்றி மீட்கப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களில் ஆலன் கைரேகை பதிந்திருந்ததால் பொலிசாரின் விசாரணை, சம்பவத்தின் பின்னணி குறித்தே நடத்தப்பட்டது.

மேலும் ஆலன் கைப்பட எழுதப்பட்ட சில குறிப்புகளும் கடிதங்களும் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த கொடூர சம்பவம் குடும்ப பிரச்னை தொடர்பாக நடந்திருக்கலாம் எனவும், அதன் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரியவகை புற்றுநோயால் உயிருக்கு போராடும் சிறுமி : நிதி உதவி கோரும் பெற்றோர்!!

 
பிலிப்பைன்ஸில் நாளுக்கு நாள் தடித்து பெரிதாகும் நாக்குடன் 2 வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருவது அவரது பெற்றோரை கலங்கடித்துள்ளது.

பிலிப்பைன்ஸ்ஸில் Little Zhyrille Cruz என்ற 2 வயது சிறுமியே அரியவகை புற்றுநோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.

பிறக்கும்போதே வீங்கிய வாயுடன் பிறந்த சிறுமியை மருத்துவர்களிடம் காட்டிய பெற்றோர், சிறுமிக்கு lymphangioma என்ற அரியவகை நோய் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ஏழ்மையில் தத்தளிக்கும் பெற்றோரால் அப்போது போதுமான மருத்துவ உதவிகளை செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது அது சிறுமியின் உயிருக்கே உலைவைக்கும் வகையில் மாறியுள்ளது.

சிறிது சிறிதாக சிறுமி Zhyrille-ன் நாக்கு தடித்து வாய்க்கு வெளியே துருத்திய வண்ணம் மூச்சு விடவும் பிரயாசைப்படும் நிலைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளது.

இதனிடையே சிறுமியின் தாயார் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுமியை கொண்டு காண்பித்துள்ளார். ஆனால் போதிய பணவசதி இல்லாமல் போகவே, பொதுமக்களிடம் இருந்து திரட்டிய நிதியால் தற்போது சிறுமி Zhyrille மூச்சுவிடும் அளவுக்கு குழாய் ஒன்றை அமைத்து சிகிச்சை செய்துள்ளனர்.

தடித்து பெரிதாகும் நாக்கின் அளவு படிப்படியாக குறைந்தால் மட்டுமே மருத்துவர்களால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த நோய்க்கு பிரித்தானியாவில் மிக எளிதாக சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. ஆனால் அறுவைச்சிகிச்சை தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சிறுமி Zhyrille-ன் உயிருக்கு அது ஆபத்தாக முடியும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மாத வருவாயாக வெறும் 112 பவுண்ட்ஸ் மட்டுமே ஈட்டும் குறித்த குடும்பத்தால் சிறுமியின் மருத்துவ செலவு மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளை தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவி செய்தால் மட்டுமே சிறுமி உயிர் பிழைப்பார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான் : கொலையாளி தஷ்வந்தின் தந்தை குமுறல்!!

சிறுமி ஹாசினி மற்றும் தாய் சரளாவை கொலை செய்த தஷ்வந்தை, பிணையில் வெளியே கொண்டு வந்தது தான் தன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என தஷ்வந்தின் தந்தை சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹாசினி என்னும் சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக தஷ்வந்த் என்னும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், தஷ்வந்தின் தந்தை சேகர் அவரை சமீபத்தில் பிணையில் வெளியே எடுத்தார். ஆனால் பிணையில் வெளி வந்த சில நாட்களிலேயே தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு, நகைகளை வீட்டிலிருந்து திருடிக் கொண்டு சென்றுள்ளார் தஷ்வந்த்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பொலிசில் இருந்து தப்பியோடினார். அதன் பின்னர், தேடுதல் வேட்டைக்கு பிறகு பொலிசார் தஷ்வந்தை கைது செய்தனர்.

இந்நிலையில், தஷ்வந்தின் தந்தை சேகர் கூறுகையில், ‘நான் எனது வாழ்வில் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். சிறு வயது முதலே தஷ்வந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததை கவனித்து வந்தேன்.

அவன் தனிமையை விரும்புபவன் என்பதால், மென்மை குணம் கொண்டவனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்படி ஒரு கொடூரமான காரீயத்தை செய்வான் என நினைக்கவில்லை. அவனுக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை உள்ளது என்று தெரிந்த பின், அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம்.

அவனை பரிசோதித்த மருத்துவர், மருந்துகளை கொடுத்துவிட்டு தினமும் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டும் என்று கூறினார். ஆனால் தஷ்வந்த் அந்த மருந்துகளை உட்கொள்ளாமலும், கவுன்சிலிங்கிற்கு செல்லாமலும் இருந்துள்ளான்.

ஒருமுறை இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டிருந்தான். மேலும், காதல் விவகாரத்திலும் ஈடுபட்டதால், அவனுக்காக நாங்கள் முதல் முறையாக காவல் நிலையம் சென்று வந்தோம்.

சிறுமியை அவன் கொலை செய்த அன்று, நாங்கள் உறவினர் ஒருவரின் விழாவிற்கு சென்றிருந்தோம். அன்று எங்களுடன் தஷ்வந்த் வரவில்லை. நாங்கள் கைப்பேசியில் அழைத்தபோது, பக்கத்து வீட்டு சிறுமியை காணவில்லை. அவளின் பெற்றோருடன் சேர்ந்து அவளை தேடுவதாக கூறினான்.

பின்னர் தாமதமாக விழாவில் எங்களுடன் கலந்து கொண்டான். விழா முடிந்து இரவு 10 மணிக்கு நாங்கள் வீடு திரும்பினோம். ஆனால், தஷ்வந்த் 11.30 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தான்.

அடுத்த நாள் அவன் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டான். அதற்கு அடுத்த நாள் பொலிசார், எங்கள் வீட்டிற்கு வந்து, சிறுமி ஹாசினியை கொலை செய்ததாக அவனை கைது செய்தனர்.

சிசிடிவி வீடியோவில் அவன் பை ஒன்றை எடுத்து சென்றை எங்களிடம் காண்பித்தனர். ஆனால், அவன் இதனை மறுத்தான். வழக்கு நடந்தபோது. வழக்கறிஞரிடம், அவனை பிணையில் எடுக்க நான் ஆலோசித்தேன். குண்டர் சட்டம், தஷ்வந்த் மீது பாய்வது தெரிந்து உடனடியாக அவனை பிணையில் எடுக்க முயன்றேன்.

அதற்கு என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவன் மீது உள்ள பாசத்தில் அவனை வெளியே கொண்டு வந்தேன்.

எனது இரண்டாவது மகன், தஷ்வந்த் ஒரு சைக்கோ என்று கூறினான். அதனால் நாங்கள் பதட்டத்துடனேயே இருந்தோம். நான் நினைத்தது போலவே அசம்பாவிதம் நடந்துவிட்டது.

என் மனைவியை அவன் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகைகளுடன் தப்பிச் சென்ற விடயம் தெரிய வந்தது. அவன் மீது நான் வைத்திருந்த அனைத்து நம்பிக்கையும் போய்விட்டது. நான் எனது மனைவியையும், மகனையும் இழந்துவிட்டேன்.

அதன்பிறகு எனது வழக்கறிஞரிடம், எந்த விதத்திலும் தஷ்வந்த்துக்கு உதவக் கூடாது என்று கூறிவிட்டேன். தற்போது எனது இரண்டாவது மகன் என்னிடம் பேசுவதில்லை.

என்னைப் போல யாரும் உங்கள் குழந்தைகள் மீது கண்மூடித்தனமான அன்பை வைக்காதீர்கள். என் வாழ்வில், நான் செய்த மிகப் பெரிய தவறு தஷ்வந்தை பிணையில் வெளியில் கொண்டு வந்தது தான்’ என தெரிவித்துள்ளார்.

11 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்தது ஏன்? தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது தந்தை ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

பூபதி- தனலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. விசைத்தறி தொழிலாளியான பூபதி முறையாக வேலைக்கு செல்லமாட்டார்.

இந்நிலையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது, பிறந்த குழந்தையை பூபதி கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடியுள்ளார்.

பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

பூபதி சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தால் அவரது பெற்றோர் அவரை எப்போதும் திட்டிக்கொண்டே இருந்துள்ளனர், இந்நிலையில் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. நீ, இப்படி வேலைக்கு போகவிட்டால் பச்சிளம் குழந்தைக்கு பால் வாங்குவதற்கு பணம் யார் தருவது, என திட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பூபதி, குழந்தைக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என்பதால், இரவு தனது மனைவிக்கு அருகில் தூங்கிகொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று பக்கத்து வீட்டுக்காரரின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு சடலத்தை அருகிலேயே போட்டுவிட்டு வந்துள்ளார்.

காலையில், மனைவி எழுந்து குழந்தையை தேடியபோது, பூபதியும் ஒன்றும் நடக்காதது போன் அவரும் சேர்ந்து தேடியுள்ளார்.

பூபதியின் இந்த வாக்குமூலத்தை கேட்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பூபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா வல்லரசாகும் : அமெரிக்காவில் மிகப்பெரிய பூகம்பம் உலுக்கும் : பிரான்ஸ் தத்துவஞானி கணிப்பு!!

2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். தீவிரவாத அச்சுறுத்தல் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்று கணித்துள்ளார் பிரான்ஸ் தத்துவஞானி நாஸ்டிரடாமஸ். சீனா வல்லரசு நாடாக மாறும் என்றும் கணித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த வருடப் பிறப்பு எப்படி இருக்கும், புது வருடம் எப்படி அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் நாஸ்டிரடாமஸ் 2018ஆம் ஆண்டுக்காக கணித்துள்ள சிலவற்றை இங்கு பார்க்கலாம். 14ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டிரடாமஸ். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்கப் போகிறது என்று கணித்து கூறியுள்ளார்.

அவர் கணித்தபடி முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. 1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் படபடப்பையும் இவை ஏற்படுத்தின.

இந்த வகையில் 2016ம் ஆண்டு குறித்த இவரது கணிப்புகள்தான் இப்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாஸ்டிரடாம்சுக்குப் பிறகு அப்படிப்பட்ட எந்த தத்துவ ஞானியையும் உலகம் கண்டதில்லை. அதே பிரான்சில் மேலும் பலரும் கூட கணிப்புகளைக் கூறி வந்த போதிலும் கூட அவருக்கு ஈடு இணையான ஒருவர் உலகளவில் எங்குமே இல்லை.

அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறியிருந்தார்.

இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அதே போல குர்ஸ்க் தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல நடந்தது.

2018ஆம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு தீவிரவாதம்தான் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்.

தீவிரவாதிகளை ஒழிக்கவே உலக தலைவர்கள் மிகப்பெரிய அளவில் கூட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். மிகப்பெரிய கத்தோலிக்க சர்ச் தலைவர் மரணம் சம்பவிக்கும் என்று கணித்துள்ளார்.

புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். அமெரிக்கா நாட்டில் மிகப்பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்படும். 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் மேற்கு அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும். லத்தின் அமெரிக்கா நாடுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.

2033ஆம் ஆண்டில் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2046ஆம் ஆண்டில் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டிரடாமஸ் சொல்லியிருக்கிறார்.

இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறியிருக்கிறார். இறுதியாக 5079ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த மணமகளின் திருமண ஆடை ஏலத்தில்!!

 
பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீற்றர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக விசே‌ஷ உடை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை 8,095 மீற்றர் நீளம் இருந்தது. அந்த திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த உடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியது. அதை 15 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர்.இத்திருமண உடை முந்தைய கின்னஸ் சாதனையை தகர்த்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீற்றர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில் இருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கனடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கைப் பெண்!!

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கனடாவில் குடியேறிய தமிழ் பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் பல்வேறு விதமான உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் பல்வேறு சேவைகளை விஜிதா தர்மலிங்கம் என்ற பெண் செய்து வருவதாக கனேடிய ஊடகங்கள் பாராட்டி தகவல் வெளியிட்டுள்ளன.

1992 ஆம் ஆண்டு விஜிதா தர்மாலிங்கம் இலங்கையில் இருந்து தனது குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார். பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த விஜிதா, தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய எண்ணியுள்ளார்.

தமிழ் மொழியின் மூலம் தனது சேவைகளை செய்யும் வகையில் அன்னை தந்த இல்லம் (ATI) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

பல்வேறு குறைபாடுகள் உள்ள மக்களின் தேவைகளை ATI அறக்கட்டளை பூர்த்தி செய்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ATI அறக்கட்டளை உதவிகளை வழங்கியதனால் குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது.

குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம் என அறக்கட்டளையின் துணைத் தலைவரான ஆரணி தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். ஆரணி தர்மலிங்கம் என்பவர் விஜிதாவின் இளைய மகளாகும்.

1987 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்சக்கட்டத்தில், தர்மலிங்கத்தின் வீடு போர் வலயத்தின் மத்தியில் சிக்கிக் கொண்டது. இதன்போது விஜிதா மற்றும் அவரது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

தப்பிச் செல்லும் போது கர்ப்பமாக இருந்த விஜிதா, விபத்துக்குள்ளாகினார். விபத்தில் இருந்து மீண்டு வந்த விஜிதா மீராவை பெற்றெடுத்தார். எனினும் மீராவின் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. மூளை பாதிக்கப்பட்ட மகளை ஆதரவற்ற இல்லத்தில் வழங்குமாறு பல உறவினர்கள் விஜிதாவிடம் கூறியுள்ளனர். எனினும் தனது மகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை வழங்க வேண்டும் என விஜிதா தர்மலிங்கம் எண்ணினார்.

விஜிதா தர்மலிங்கம் தனது மகளுக்கான ஒரு வழியை கண்டுபிடித்தார். மகள் போன்று பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கொண்ட தமிழ் சமூகத்திற்காக அவர் சமூக சேவை செய்து வருகிறார்.

அதற்கமைய 2014ஆம் ஆண்டு அவர் அறக்கட்டளை ஆரம்பித்தார். இதன் ஊடாக கனேடிய வாழ் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் பயனடைந்து வருவதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது : தடயப்பொருட்களும் மீட்பு : பொலிஸார் அதிரடி!!

 
மன்னார், பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில்உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைபேசாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்றுபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வர்த்தக நிலையம் ஒன்றில் உயிரிழந்தஇளைஞனுடன் வேலை செய்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் பேசாலையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது 29) என்னும் இளைஞர் கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் அவரின் வீட்டில் உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞனின் மர்ம மரணம் தொடர்பில் உறவினர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்திருந்தனர்.இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. குறித்த சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டுசட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்தசடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார். இதன் போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர்தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வந்தநிலையில் சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம்செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரணம் கொலை என தெரியவந்த நிலையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளைமேற்கொண்டு வந்தனர்.

பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டீ.எம்.சிறில் தலைமையில் விசேட பொலிஸ்குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இரகசிய விசாரணையின் போது மர்மமானமுறையில் உயிரிழந்த குறித்த இளைஞனுடன் ஒரே வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தலைமன்னார் பியர் றிஸாட் சிட்டிபகுதியில் உள்ள வீட்டில் வைத்து 24 வயதுடைய இளைஞன் ஒருவரை கைதுசெய்ததோடு, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்தியதடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை இடம் பெற்ற நேரத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தின்போது இறந்த இளைஞனின் உடலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வெளி வந்த இரத்தம் கொலைசெய்ததாக கூறப்படும் சந்தேகநபரான கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அன்றையதினம் அணிந்திருந்த உடையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது குறித்தஉடையும் சான்றுப்பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த இளைஞனை கழுத்து நெரித்து கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாககருதப்படும் பொதிகள் கட்டும் துணி கயிற்றையும், சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமன்னார் – பேசாலை வீதியின் அருகே உள்ள பற்றைக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேசாலை ஆலய திருவிழாவாக இருந்தமையால் சம்பவத்துக்குமுதல் நாள் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு வரை குறித்த வர்த்தகநிலையத்தில் வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரே உயிரிழந்த இளைஞனை அவரின்வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

இறந்த இளைஞனின் வீட்டில் தாயும் இறந்த குறித்த இளைஞனுமே வாழ்ந்துவந்துள்ளனர். குறித்த இளைஞனின் தாய் அன்றைய தினம் கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மட்டுமே தனிமையில் இருந்த நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகுறித்த நபர் கொலையினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனுக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்குமிடையே சில தினங்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாகபொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பேசாலைபொலிஸார் குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை(15.12) மன்னார் நீதிமன்றத்தில் மாவட்டநீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதிவெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேசாலையில் இடம் பெற்ற குறித்த இளைஞனின் மர்ம மரணம் மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டல்!!

 
வவுனியாவில் இன்று (19.12) காலை 9.30 மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித்திணைக்கள கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி ஆர் எல்.வசந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கிருபாகரன், முதன்மை விருந்தினர்களாக வவுனியா பிரதேச செலயாளர் கா.உதயராசா, வடமாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி வனஜா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், சமுதாய பிரிவினர், மாணவர்கள், அரச ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.‌

அவுஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பில் சாதனை படைத்த இலங்கை மாணவி!!

இலங்கையை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற 16 வயது மாணவி இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.

Presbyterian Ladies கல்லூரியில் இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பயின்ற இவர், 99.75 ATAR (Australian Tertiary Admission Rank) பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து மாணவி ராகவி பகிர்ந்துகொண்டதாவது, இலங்கையில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற காரணங்களால் நாங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறினோம்.

இலங்கை பெண்கள் நல்ல கல்வியறிவினை பெற்றுக்கொள்ள வேண்டும். என்னை போன்று கல்வியறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்காக இலங்கையில் நிறைய பெண்கள் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு அவுஸ்திரேலியா தெரிவு செய்துள்ள 16 மாணவிகளில் ராகவியும் ஒருவர்.

தான் ஒரு மருத்துவராகி, சுகாதார சேவையில் பணியாற்றுவது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்றுவதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

எனது தந்தை Guyra Multi Purpose Service இல் மருத்துவராக பணியாற்றுகிறார். நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதற்கு எனது தந்தையே ஒரு முன்னுதாரணம், மேலும் மருத்துவம் தொடர்பான சிறந்த யோசனைகளும் எனக்கு கிடைத்தது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் University of New South Wales – இல் மேற்கொண்டு எனது படிப்பினை தொடரவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

அகதிகளை கடத்தியவருக்கு 1489 ஆண்டுகள் சிறை!!

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர். பெரும்பாலோனோர் ஐரோப்பிய நாடுகளுக்கே அகதிகளாக செல்ல முடிவெடுக்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகு போக்குவரத்தில் அதிகமானோர் பயனிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் நுழைவு வாயிலாக இருக்கும் கிரீஸ் நாடு வழியே ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைகின்றனர். துருக்கி வழியாக கிரீஸ் எல்லைக்குள் செல்லும் இவர்களுக்கு உள்நாட்டில் இருந்து பலர் பணம் பெற்றுக்கொண்டு உதவுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிரீஸ் பொலிசார் சிறப்பு நடவடிக்கை நடத்தி பலரை கைது செய்தனர். அவர்களில் 23 பேருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்டவர்களில் பலர் டாக்சி ஓட்டுநர்கள் ஆகும். 8 முதல் 1489 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 54 வயதான ஒருவருக்கு 1489 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 500 அகதிகளை கடத்தியதற்காக அவர் மீது 43 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. கிரீஸ் சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகளே சிறை தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், அவருக்கு 1489 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரயில்வே நிறுவனம் இயங்கி வருகின்றது ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவில் பொது நிதியில் இயக்கப்படும் ஒரு ரயில்வே நிறுவனம்.

சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் பயணித்த ரயிலேயே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சியாட்டிலில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் ஆம்ட்ராக் ரயில் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடிரென தடம்புரண்டு வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரயிலின் 5 பெட்டிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வீழ்ந்தமையால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.