பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் பற்றிய விசாரணை சிஐடி வசம்!!

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு விடையளித்த மாணவர்கள் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு!!

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 9 நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், அதற்கு உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், ஆகவே வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

 
பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாடளாவிய ரீதியில் 400 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத்தின் விசேட விற்பனைக் கூடத்திற்கு நேற்று வருகைதந்து பொருட்களின் விலைகள் தொடர்பில் அறிந்து கொண்டதுடன் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுடன் உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மழை இல்லாத காரணத்தினால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதி கூடிய விலைக்கு அதனை விற்று வந்ததை நாங்கள் அறிவோம். அதனால் அரசாங்கம் இலங்கையில் அரியை இறக்குமதி செய்கின்ற பொழுது இருந்த தீர்வையை முற்றாக நீக்கியிருக்கிறது. அதேபோல் விரும்பியவர்கள் யாராக இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் அதற்கான உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிசம்பர் மாதத்திலே அதேபோல் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி வரையில் சலுகை விலை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆர்ப்பிக்கோ, கார்கில்ஸ் பூட்சிற்றி, சதொச போன்ற இடங்களில் சாதாரண விலையில் பொருட்களை பெற முடியும். தேவையான எல்லா வகையான அரிசிகளும் சாதாரண விலையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சீனி, பருப்பு, சமன் போன்ற அத்தியாவசிப் பொருட்களும் இலங்கையின் எல்லா சந்தைகளிலும் உள்ளதுடன் எல்லாப் பாகங்களிலும் லொறி மூலம் விற்பனை செய்வதற்கு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பணித்திருக்கின்றேன்.

எனவே தேவையான அளவு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருக்கின்றது. அதேபோல் ஏனைய பொருட்கள் இருக்கின்றது. எனவே கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எமது அலுவலகத்திற்கு தெரியப்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளவிய ரீதியில் 400 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களை இந்தப் பணிக்காக அமர்த்தியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

பாதசாரிகள் கடவையில் விபத்து : பரீட்சைக்கு சென்ற மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

நாட்டில் மஞ்சள் நிறமாக காணப்பட்ட பாதசாரிகள் கடவை அண்மையில் வௌ்ளை நிறமாக மாற்றப்பட்டது.

ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தைப்பெற்று சாதாரண தரப்பரீட்சைக்கு புறப்பட்டுச் சென்ற இரண்டு மாணவிகள் நேற்று பாதசாரிகள் கடவையில் விபத்திற்குள்ளான சம்பவமொன்று பதிவானது.

பதுளை கவரங்ஹேன மற்றும் இழுக்கும்புர பிரதேசங்களைச் சேரந்த இந்த இரண்டு மாணவிகளும் பதுளை, கொழும்பு பிரதான வீதியில் கவரங்ஹேன சந்தியில் விபத்திற்குள்ளாகினர்.

உரியமுறையில் எவ்வித குழப்பமுமின்றி இந்த இரண்டு மாணவிகளும் பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்தாலும் வீதி ஒழுங்கை மீறி செயற்பட்ட சாரதியின் செயற்பாட்டினால் இவர்கள் அனர்த்தத்தை எதிர்நோக்கினர்.

அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் இந்தக் காட்சி இவ்வாறு பதிவாகியிருந்தது.

காயமடைந்த இரண்டு மாணவிகளும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அல்லேபொல மகாவித்தியாலயத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதப் பாடத்திற்கு தோற்றுவதற்காக சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியாவில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள் : உரிமையாளர் கைது!!

 
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார்) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.

இன் நிலையில் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதை அறிந்த மக்கள் பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று அங்கு அந்நிறுவன ஊழியர்களை சிறைப்பிடித்து வைத்திருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்த அனைவரும் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எட்டு மணிநேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்களை விடுவித்ததுடன் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளருடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்டு குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் முற்றுகை!!

சிவகார்த்திகேயன்-சூரி செய்த காரியத்தால் கடுப்பான சமந்தா!!

சினிமா பயணத்தில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது வேலைக்காரன் படத்தில் நயன்தாரா, பொன்ராம் படத்தில் சமந்தா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அண்மையில் வேலைக்காரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் பொன்ராம் படத்தை பற்றியும் கேள்வி கேட்டனர்.

அப்போது அவர் நானும், சூரியும் நடித்துக் கொண்டிருக்கும் போது சமந்தா எங்களை பார்த்து கடுப்பாகிவிட்டார். ஏனெனில் உங்கள் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது, இதில் நாயகியாக நான் என்ன செய்ய போகிறேன் என அவர் வருத்தப்பட்டதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

2018 ல் ஜெய் அஞ்சலிக்கு திருமணமா?

நடிகை அஞ்சலி தமிழ் தெலுங்கு என பிசியாக இருப்பவர். அதே நேரத்தில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வருகிறார் என்று அடிக்கடி சொல்லப்படும் விசயம்.

2018 ல் இவர்களது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள பலூன் இம்மாத இறுதியில் வெளியாகியுள்ளது.

இது பற்றி பேசியாவர் நான் ஜெய்யுடன் மீண்டும் நடித்துள்ளேன். இயக்குனர் என்னிடம் இருந்து வித்தியாசமான நடிப்பை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். பலரும் என்னிடம் கல்யாணம் எப்போது என கேட்டு வருகிறார்கள்.

ஆனால் எனக்கு அடுத்த வருடம் முழுக்க படம் கையில் உள்ளது. தேசிய விருது வாங்காமல் விடமாட்டேன் என கூறியுள்ளார். பிசியாக இருப்பதால் கல்யாணம் இப்போது இல்லை என அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலையில் இணைந்த இரு இதயங்கள் : உண்மைக்காதல் கதை!!

திருமணங்கள் சொர்க்கத்தில் முடியும் என்று சொல்வார்கள், ஆனால் இந்த தம்பதியினரின் திருமணம் மருத்துவமனையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இடுப்பு கீழே செயலிழந்த நிலையில், இரு மனங்கள் சங்கமித்துள்ளன.

திருவந்தபுரத்தை சேர்ந்த ஜார்ஜ் பெங்களூரை சேர்ந்த ஜாஸ்மின் ஆகிய இருவரும் தற்போது காதல் தம்பதியினர். விபத்தில் சிக்கி இருவரும் தங்கள் கனவுகளை தொலைத்துவிட்ட நிலையில், தற்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, பிகொம் முடித்திருந்த ஜார்ஜ், அடுத்ததாக எம்கொம் படிக்க வேண்டும் என கனவில் இருந்தபோது அந்த விபத்து நடந்தது, காலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் இவரது, முதுகெலும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, உணர்வு நரம்புகள் செயலிழந்திருக்கின்றன. அதனால் என் இடுப்புக்கு கீழ் பகுதி இனி செயல்படாது. கழிவறைக்கு கூட நான் அடுத்தவர்கள் துணையின்றி செல்ல முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

2004 ஆம் ஆண்டு ஜாஸ்மின் தனது தங்கையோடு ஸ்கூட்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், தலையில் அடிபட்டு கீழே விழுந்திருக்கிறார். அதோடு என் இடுப்புக்கு கீழ் செயல்பாடு இல்லாமல் போய்விட்டது. வீல் சேரிலே வாழ்க்கை கடந்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை ஒன்று ‘முதுகெலும்புக்குள் செலுத்தப்படும் விசேஷ ஊசி மருந்து உள்ளது. அது முதுகெலும்பில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து, முன்பு போல் இயங்கவைக்கும்’ என்று விளம்பரம் கொடுத்திருக்கிறது.

அதை பார்த்துவிட்டு பெங்களூருவில் இருந்து ஜாஸ்மினும், திருவனந்தபுரத்தில் இருந்து ஜார்ஜூம் அந்த மருத்துவ மனைக்கு வந்திருக்கிறார்கள். முதல் நாள் ஜாஸ்மினை, ஜார்ஜ் பார்த்திருக்கிறார். மறுநாளும் அவர் கண்கள் ஜாஸ்மினைத் தேடியிருக்கின்றன. 12 நாட்கள் தொடர்ச்சியாக ஊசி மருந்து செலுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஊசி போடும்போது உயிர்போகும் வலியை அனுபவித்திருக்கிறார்கள். கடைசி நாளில் இருவரும் அருகருகே உள்ள படுக்கையில் வலியை தாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக அவர்கள் மனந்திறந்து பேசியிருக்கிறார்கள்.

அப்போது, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போய்விட்டது, ஆனால் போட்டுக்கொண்ட ஊசியினார் இவர்கள் கனவு நிறைவேறவில்லை, கவலையுடன் வீடு திரும்பிய இவர், நாளடைவில் இணைய வழியாக இருவரும் நட்புடன் பேச ஆரம்பித்து காதலர்களாக மாறினர்.

இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, இரு மனங்களும் இணைந்துள்ளனர்.

நமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கற்றுக்கொண்டால், பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

இப்போது எங்கள் வேலையை எங்களால் கவனித்துக்கொள்ள முடிகிறது. வீட்டில் மாடிப்படிகளை மாற்றிவிட்டு வீல் சேர் செல்லும் அளவுக்கு சவுகரியப்படுத்தியுள்ளோம். வண்டி ஓட்டுவதை போன்று வீல் சேரை இயக்கி டவுன் வரை சென்று வருகிறோம்.

வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியில் சென்று வரும் இவர்கள், தங்கள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார்கள். வீல் சேர் வாழ்க்கை என்பது முடிவானதல்ல’ என்பதை உணர்த்தும் விதத்தில், வீல் சேரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

நடு இரவில் வீட்டின் கதவை தட்டி இளைஞர்கள் தொந்தரவு செய்வார்கள்: திருநங்கை கிரேஸ் பானு!!

பெண்களுக்கு நடக்கப்படும் பாலியல் சீண்டல்களை விட, எங்களுக்குத் தான் அவர்களை விட அதிகமாக நடக்கிறது என்று கவலையுடன் கூறுகிறார் திருநங்கை கிரேஸ் பானு.

கிராமத்தில் பிறந்த நான், அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் தான் படித்தேன், அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சமூக சூழ்நிலையாலும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்.

தற்போது 29 வயதாகும் எனக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பாலியல் தொந்தரவுகள் வந்துவிட்டன, பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்தேன்.

நான் திருநங்கை என்பதால், என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்க மருத்துவிட்டனர். அப்போது என் அப்பா, தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடினார், அதன் பின் தலைமையாசிரியர் அனுமதி தந்தார்.

அனுமதி தந்த அவர் இரண்டு கண்டிஷன் போட்டார். ஒன்று, வகுப்புக்குள்ளே அனுமதிக்காமல், அவர் வகுப்பறையின் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்துதான் படிக்கணும். இரண்டாவது, பள்ளியில் யாரும் என்கூட பேசக்கூடாது. நானும் அவங்களோடு பேசக்கூடாது என்று கூறினார்.

வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், அதற்கு நான் சம்மதித்துவிட்டேன், இதைத் தொடர்ந்து நான் பள்ளிக்கு சென்ற போது, அங்கிருக்கும் மாணவர்கள், மிகவும் இழிவு படுத்தக் கூடிய வார்த்தைகளால் என்னை கூப்பிடுவார்கள்.

அங்கு இருக்கும் கழிவறைக்கு போக முடியாது, ஏன் என்றால் நான் கழிவறைக்கு சென்றால் எப்படி என்று பார்ப்பார்கள். இதன் காரணமாகவே அங்கிருக்கு கழிவறைக்கு போகமாட்டேன்.

பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வேகமாக செல்வேன், அப்போது சில இளைஞர்கள் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஓடுவார்கள், பெண்ணாக இருந்தால் பொலிசில் புகார் அளிக்கலாம், திருநங்கையாக போய்விட்டேன, இதனால் இதை யாரிடம் கூறுவது என்று கூட தெரியாமல் தவித்திருக்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களும் என்னை காயப்படுத்தியதால், வீட்டை விட்டு வெளியே வந்தேன், அதைத் தொடர்ந்து என்னைப் போன்ற திருநங்கை உதவியுடன் பாலிடெக்னிக் படித்தேன், அதன் பின் கல்லூரி என படித்தேன், அங்கும் பல பிரச்சனைகள், சிலர் ஊரோரம் புளியமரம் என்று பாட்டுப் பாடி எல்லாம் கிண்டல் செய்வார்கள் இதை எல்லாம் தாண்டி தான் நாங்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது அதை நாங்கள் யாரிடம் கூறுவது, இரவு ஒரு மணிக்கு எல்லாம் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இளைஞர்கள் பிரச்சனை செய்துள்ளார்கள், இந்த தைரியம் அவர்களுக்கு யார் கொடுத்தது.

நான் சமூகப் போராட்டகளில் ஈடுபடும்போதெல்லாம் கைதுசெய்து கூட்டிட்டுப் போகும்போது பொலிசார் கண்ட இடங்களில் கை வைப்பார்கள், அப்போது பெண் பொலிசாரும் எங்களை தொடக் கூடாத இடங்களில் தொட்டு பார்ப்பார்கள், இந்த சமூகத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் எங்களை பாலியல் வன்கொடுமை பண்கிறார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் எங்களுக்கு என்று ஒரு சட்டம் இல்லை,அதைத் தான் நாங்கள் கேட்கிறோம், நாங்களும் மனிதர்கள் தான் இதை எப்போது இந்த சமூகம் உணரப் போகிறது என்று வருந்தியுள்ளார்.

வீதியில் புத்தகம் விற்றவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

 
‘Humans of Bombay’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் எழுச்சியூட்டும் வகையிலான வீடியோ ஒன்று பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராம் சுப்ரமணியன் என்னும் இயக்குனர் இந்த வீடியோவை எடுத்துள்ளார், இதில், தெருவில் புத்தகங்களை விற்று வந்த ஏழைச் சிறுவன், தற்போது அமெரிக்க நடைபெறவிருக்கும் மாணவர் நிகழ்ச்சிக்கு தேர்வானது குறித்தும், மும்பை நகர மக்களின் வாழ்க்கைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இது குறித்து அந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் மாணவன் சல்மான் சயித் கூறுகையில்,

‘நான் Haji Ali சிக்னலுக்கு எதிர்முனையில் இருக்கும் நடைபாதையில் பிறந்தேன். எனது தாய், குப்பைகளை சேகரிப்பது மற்றும் அப்புறப்படுத்தும் பணியை செய்து வந்தார்.

அதனைப் பார்த்து வளர்ந்த நான், வேலை செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று சிறு வயதிலேயே முடிவு செய்தேன். அதன்படி, 2ஆம் வகுப்பு படிக்கும் போதே படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு, Haji Ali சிக்னலில் புத்தகங்களை விற்க தொடங்கினேன்.

புத்தகங்களை விற்கும் போதே, அதிலிருந்து சில வார்த்தைகளை அறிந்து கொள்வேன். மேலும், எனது வாடிக்கையாளர்களும் படிப்பதற்கும், சரியான முறையில் உச்சரிப்பதற்கும் உதவினர்.

அதன்பிறகு ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் சுயமாக இறங்கினேன். ஒருநாள் Akanksha Survey என்னும் பள்ளியின் கருத்துக் கணிப்பு, எங்கள் வீட்டிற்கு அருகே நடந்தது.

நானும், என் நண்பர்களும் அதனை பார்ப்பதை தவிர்த்தோம். ஆனால், எனது தோழி நான் ஆங்கிலம் பேசுவதால், என்னை Akankshaவில் சேர வலியுறுத்தினாள். அவளின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், நான் 12 வயதில் பள்ளியில் சேர்ந்தேன்.

ஆனால் பள்ளிக்கூடம் எனக்கு அந்நியமாக தோன்றியதால், அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ஒரு வாரத்தில் மீண்டும் சிக்னலில் புத்தகங்களை விற்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் எனது வாடிக்கையாளர்கள் என்னைப் பார்த்து ‘மறுபடியும் இந்த வேலைக்கு வந்து விட்டாயா? உன் வாழ்நாள் முழுவதையும் இந்த சிக்னலிலேயே கழிக்க போகிறாயா? என்று கேட்டனர். அவர்கள் கேட்டது என் மனதை தாக்கியது, அதனை உணர்ந்த நான், எங்கு சென்றேனும் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். என் தோழி Caroline didi பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற எனக்கு உதவினாள்.

ஆனால், முதல் முயற்சியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நான், பின்னர் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு, 11ஆம் வகுப்பில் 91 சதவித மதிப்பெண்ணிலும், 12ஆம் வகுப்பில் 81 சதவித மதிப்பெண்ணிலும் தேர்ச்சி பெற்றேன்.

தற்போது, நான் மும்பையின் KC கலையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

எனது தோழி எனக்கு படிப்பிற்கு உதவியது போலவே, நானும் தற்போது மற்றவர்களுக்கு உதவி வருகின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து கொண்டே தனது படிப்பை தொடர்ந்து வரும் சல்மான், தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடக்க உள்ள ‘Students Exchange Program’ நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

5 ஸ்டார் ஹோட்டலில் பிரபல தொலைக்காட்சி நடிகைகள் கைது!!

ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பொலிஸ் நடத்திய தேடுதலில் மும்பையை சேர்ந்த இரண்டு பொலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி நடிகையை கைது செய்துள்ளனர்.

ஆனால் அந்த நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

அவர்கள் சென்ற திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர். இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவின் 5 சபைகளுக்கும் மூன்று கட்டங்களாக கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி!!

 
வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (18.12.2017) மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளில் முதல் கட்டமாக வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு வர்த்தக கைத்தொழில. அமைச்சரின் இணைப்பாளர் முகைதீன் தலைமையிலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் வடமாகாண சபை உறுப்பினர் ம.ஜெயதிலக, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மு.சுப்பிரமணியம், இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா ஆகியோராலும் செலுத்தப்பட்டது.

வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணத்தை அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான அப்துல் பாரி தலைமையிலான குழுவினரும் செலுத்தியிருந்தனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் முற்றுகை!!

 
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார் ) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.

இந் நிதி நிறுவனத்தில் உறுப்பினர் ஆகுவதற்கு ரூபா 1000 செலுத்துமாறும், 10 லட்சம் ரூபா 1% வீத வட்டியடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் 1 லட்சம் ரூபா பணம் செலுத்த வேண்டுமெனவும் 5 லட்சம் ரூபா பணம் தேவைப்படின் 50000 பணம் செலுத்த வேண்டுமென நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி பணத்தினை மக்கள் வைப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் மக்களுக்கு குறித்த தனியார் நிதி நிறுவனத்தினால் காசோலை வழங்கப்பட்டது. அக் காசோலையினை வைப்பிட சென்ற சமயம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் குறித்த தனியார் நிதி நிறுவனத்தினை முற்றுகையிட்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நிதி நிறுவன ஊழியர்களுடனும் கலந்துரையாடினர்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்ட பொலிஸார் நிதி நிறுவனத்தின் முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர்.

ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய தீர்வு கிடைக்கும் வரை நிதி நிறுவனத்தினை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்து நிதி நிறுவன அலுவலகத்தினுள் முற்றுகையிட்டு உள்ளனர்.

94 கிலோவில் இருந்து 54 கிலோவாக குறைந்தது எப்படி?

மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் 94 கிலோ எடையால் அவதிப்பட்டதால் 11 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்து தற்போது 54 கிலோவாக உள்ளார்.

Ghosh(26) என்ற இளம்பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டே எம்பிஏ பயின்று வந்துள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுகளால் எனது உடல் எடை அதிகரித்தது.

மேலும் உடல் எடையால் அவதிக்குள்ளான நான், எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற முழுகவனத்துடன் ஈடுபட்டேன். ஒரு நல்ல உடற்பயிற்சி மையத்துக்கு சென்று சேர்ந்தேன், அன்றாடம் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று சுமார் 3 மணி நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்.

அடுத்ததாக உணவு விடயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக நடந்துகொண்டேன், காலை உணவாக ஓட்ஸ் மற்றும் பழங்கள் சாப்பிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு அல்லது முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவேன்.

எனது மதிய உணவு கண்டிப்பாக பருப்பு, வேகவைத்த காய்கறிகள், அல்லது சாலட் சாப்பிடுவேன். இரவு நேரம் கண்டிப்பாக புரோட்டீன் உணவுகளைத்தான் சாப்பிடுவேன், இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பேன்.

கடந்த 11 மாதங்களாக இந்த உணவுபட்டியலையே பின்பற்றி வந்தேன், தற்போது 54 கிலோ எடையில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தனது கனவு திட்டத்திற்கு விடை கொடுக்கின்றது கூகுள்!!

கூகுள் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.

இவற்றின் வரிசையில் Tango எனும் திட்டத்தினை 2014ம் ஆண்டில் ஆரம்பித்தது. இது கமெராக்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும்.

அதாவது அசைவு மற்றும் ஆழங்களை துல்லியமாக கணிக்கக்கூடிய கமராக்களை இத் திட்டத்தின் ஊடாக உருவாக்கி அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் முயற்சித்து வந்துள்ளது.

எனினும் இத் திட்டத்தினை 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவீன ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் கண்கள் என அழைக்கப்பட்ட இக் கமராக்கள் முழுமையான வெற்றியினைப் பெறாமையினாலேயே முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது.

எரிக்கப்பட்ட தாயின் சாம்பலை மதிய உணவாக சாப்பிடும் மகள்!!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துபோன தனது தாயின் சாம்பலை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மதிய உணவாக சாப்பிட விருப்பதாக தெரிவித்துள்ளார்.

Kent பகுதியில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வரும் Debra Parsons என்பவரது தாய் கடந்த மே மாதம், நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துவிட்டார்.

அவரது உடல் எரிக்கப்பட்ட சாம்பலை பத்திரமாக பேணிக்காத்து வரும் Debra Parsons, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மதிய உணவாக தனது தாயின் சாம்பலை சாப்பிடவிருக்கிறேன் என தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இதனை கேட்டவுடன் மக்கள் என்னை பைத்தியமாக நினைக்கலாம். ஆனால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன். எனது தாய் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட எனக்கு கவலையாக இருக்கிறது.

இதனால், அவரது சாம்பலை சாப்பிடுவதன் மூலம் அவர் என்னுள் இருப்பதாக உணர்கிறேன், நான் சுவாசிப்பதன் மூலம் அவரும் சுவாகிக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நான் தயார் செய்யும் பல்வேறு உணவுகளுடன் எனது தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலும் இருக்கும் என கூறியுள்ளார்.