ஓவியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க வருகின்றார் வவுனியாவைச் சேர்ந்த நடிகை மிதுனா.
இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படமே ‘ஓவியா’. தன்னை முறையாக பராமரிக்காமல் தனது மரணத்திற்கு காரணமான பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கையின் படம் தான் ஒவியா.
இந்த படத்தின் நாயகியாக நடிகை மிதுனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகின்றார். ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழில் அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
அந்த வரிசையில் தமிழில் இலங்கையிலிருந்து மிதுனா அறிமுகமாகின்றார்.
பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.
இதன்போது அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக வடமராட்சியில் அதிகளவு பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கிருந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதேவேளை குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராசா சஞ்சீவன், காவலர் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரையில் பண்டைய கோயில்கள், சரணாலயங்கள் இருப்பதென்பது புதிதான ஒரு விடயம் அல்ல. ஆனால் ஆழ் கடலில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான இடிபாடுகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். எனினும் அதன் மர்மங்களை விஞ்ஞானிகள் இன்று வரையில் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இந்தோனேஷியா கடலுக்கு கீழ் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழையான பௌத்த மத ஸ்தலங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் பால என்ற கடலுக்கு கீழ் விகாரை போன்ற இடம் அமைந்துள்ளது. அந்த விகாரையில் தனிப்பட்ட கட்டமைப்புடன், பெரிய மற்றும் சிறிய சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அங்கு தருக்க நிலைகள் மற்றும் மர்மமான சிற்பங்கள் அதிநவீன முறையில் கடலுக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார்.
அயோமா கருணாரத்ன என பெயர் கொண்ட குறித்த இலங்கை பெண், திருமணத்திற்கு பின்னர் அயோமா வைலன் என அழைக்கப்படுகின்றார்.
கண்டி மாஹாமாய பாடசாலையின் பழைய மாணவியான அவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவராகும். அவரது தந்தை பேராதனை பகுதியில் உள்ள மிகச்சிறிய கடை ஒன்றின் உரிமையாளராகும்.
கல்வி நடவடிக்கையில் அதிகம் திறமையான அவருக்கு வெளிநாட்டில் கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத்துள்ளது. எனினும் அதனை பெற்றுக்கொள்வதற்காக 750 டொலர்களை அவரால் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் இலங்கையில் கேக் தயாரிக்க ஆரம்பித்த அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார். இதன்போது அவரை அமெரிக்கா நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றவர் சிறிய அளவிலான உணவகம் ஒன்றை அங்கு ஆரம்பித்துள்ளார். உணவகத்தில் அமெரிக்கர்களுக்கான இலங்கை உணவு சமைக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கு உணவு பெற்றுக் கொள்ள வந்த அமெரிக்கா பெண் ஒருவர் இந்த உணவகம் தொடர்பில் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அன்று முதல் குறித்த உணவகத்திற்கு அமெரிக்கர்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளார்.
நாளடைவில் பிரபலமடைந்த அந்த உணவகம் 2009ஆம் கலிபோர்னியாவில் சிறந்த உணவகமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு சிறந்த சமையல்காரருக்கான விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டுள்ளது.
தலை துண்டிக்கப்பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியாபாரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
“யெலோஃபின்” ரகத்தைச் சேர்ந்த இந்த மீன் பிடிக்கப்பட்டவுடன் அதன் தலை துண்டிக்கப்பட்டு, அதன் உடல் நெடுக்காக வெட்டப்பட்டிருந்தது.
எனினும், ஜப்பானிய மீன் விற்பனையாளரின் தட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த மீன் பாகம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
சிலர் இக்காட்சியை வீடியோவில் பதிவு செய்தனர். சுமார் ஒன்றரை நிமிட நேரம் இம்மீன் பாகம் துள்ளிப் பாயும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இலட்சக்கணக்கானோர் இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒரு மாதத்திற்குள் 50 வீதத்தால் குறைப்பதற்கு துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நியூஸ்பெஸ்டுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நான்கு விசேட நிபுணர்கள் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்,டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களிடம் தாம் அறிக்கை கோரியிருந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
இந்த விசேட குழுவினர், அமைச்சரவை முன்னிலையிலும் பிரசன்னமாகி நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளனர்.
இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்காக வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சிகிச்சைகளை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது என்ற போதிலும், தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாதென சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஊடக அமைச்சு, ஊடக நிறுவனங்கள் இணைந்து டெங்கு பரவுவதை ஒழிப்பதற்காக மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடக நிறுவனங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இதுகுறித்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும், டெங்கு ஒழிப்பிற்காக பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி, பிலிப்பைன்ஸில் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது வெற்றியளிக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்
11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது.
இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல் விளையாட்டு என்ற எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் புயல்வேக பவுன்சர் பந்துகள் பேட்ஸ்மேன்கள் தலையை தாக்கும். இதனால் துடுப்பாட்ட வீரர்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடி வருகிறார்கள்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன் பிறகு வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்து துடுப்பெடுத்தாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சில்லி பொயிண்ட், சில்லி மிட்விக்கெட்டாக பேட்ஸ்மேன்கள் அருகில் பீல்டிங் செய்யும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தங்களை பாதுகாத்துக் கொள்ள மைதான நடுவர்களே கைக்கவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
ஆனால் ஒரு பந்து வீச்சாளர் ஹெல்மெட் அணிந்து பந்து வீசமுடியாது. பெரும்பாலும் தனக்கு நேராக பந்து வந்தால் அதை தடுத்து விடுவார்கள். அல்லது விலகி விடுவார்கள்.
ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் பந்துவீச்சாளரின் மண்டையை பந்து பலமாக தாக்கிய சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.
டி20 பிளாஸ்ட் தொடரில் நாட்டிங்காம்ஷைர் – பர்மிங்காம் அணிகள் மோதிய போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பர்மிங்காம் அணியின் சாம் ஹெய்ன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.
28 வயதான லுக் பிளெட்சர் பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளரான பிளெட்சர் வீசிய பந்தை சாம் ஹெய்ன் சற்று முன்னால் இறங்கி வந்து ஸ்ட்ரைட் ஷொட் அடித்தார்.
இந்த பந்து பிளெட்சரை நோக்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பிளெட்சரின் மண்டையை தாக்கிவிட்டு பலூன் போன்று பறந்தது. பந்து பட்டதும் பிளெட்சர் சுருண்டு விழுந்தார். மற்ற வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக பிசியோ மைதானத்திற்குள் விரைந்தார். சிறிது நேரம் அவருக்கு முதலுதவி செய்த பின்னர், வெளியே அழைத்துச் சென்றார்.
அதன்பின் பிளெட்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிளெட்சர், அதிர்ச்சியில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பிளெட்சருக்கு அடிபட்டதும் அரைமணி நேரம் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இதேபோல் மொத்தமுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திரிபுரா சுதேச மக்கள் முன்னணி கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கம்திங்பரி பகுதியில் இருக்கும் அசாம்-அகர்தாலா தேசிய நெடுஞ்சாலையில் திரிபுரா சுதேச மக்கள் முன்னணி தலைவர்களும், ஆதரவாளர்களும் இன்று திரண்டனர்.
சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி மாநிலம் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தேங்கி நின்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், அந்த பகுதியின் அருகிலுள்ள ரெயில்வே தண்டவாளங்களிலும் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நிலவிய போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலையில் தேங்கி நின்ற வாகனங்கள் அகர்தலா-குவை-டெலியமுரா பகுதிகள் வழியாக திருப்பி விடப்பட்டன.
மறியல் போராட்டம் நடந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிலைமை சீரடைந்து வருகிறது என மேற்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து திரிபுரா மக்கள் முன்னணி தலைவர்களில் ஒருவரான டெப்பர்மா கூறுகையில், ´´தனி மாநில கோரிக்கை விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரை சந்தித்து பேசவுள்ளோம்.
அமைதியான வழியில் எங்கள் போராட்டம் தொடரும்´´ என தெரிவித்துள்ளார்.
2013ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் பாடிய ‘காற்றே.. காற்றே’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.
பார்வையற்றவரான இவர், தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை தனது குரலால் கவர்ந்தவர். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள வைக்கம் விஜயலட்சுமியின் இசை உலக சாதனையை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த இவரை அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கெளரவிக்கும் விதமாக இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது. இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
சினிமா அவரவர்களின் திறமையை பொறுத்து ஸ்டார் நடிகர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பொலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவருடன் 1970 க்ளின் நடித்தவர் சுமிதா சன்யால்.
பிரபல நடிகயான இவர் பெங்காலி மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா பட எடிட்டர் சுபோத் ராயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது சுமிதா தனது 71 வது வயதில் காலமானார். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரிஹான தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 18ம் திகதி நடைபெற்றதாக கூறப்படும் அந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட தடுப்பு முகாமில் பணியாற்றும் சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இதன்படி, திங்கட்கிழமை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபரான கான்ஸ்டபிளை பாதிக்கப்பட்ட இந்த பெண் அடையாளம் காட்டியதாக, அந்தப் பெண்ணுக்கு சட்ட உதவிகளை வழங்கி வருகின்ற ஆர்.ஆர்.ரி சட்ட நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிராஸ் நூர்டின் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.
மிரிஹான தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த, 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ்நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்
படகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் இந்த 30 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் மிரிஹான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா அகதிகள் அமைப்பின் கண்காணிப்பில் இலங்கையில் அவர்கள் தஞ்சம் பெற விரும்புகின்றார்கள். அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகள் அமைப்பு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இவர்களில் 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொகுவல பொலிஸில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நீராடிய போது காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன.
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரிவைச் சேர்ந்த குமாரசுவாமி சஜித் (19), குமாரசுவாமி சிதுஜன் (21) ஆகிய சகோதரர்களே உயிரிழந்தவர்கள் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் தம்பட்டையில் உள்ள அவர்களது உறவினர்களின் வீட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் இவர்கள் இருவரும் மற்றுமொரு நண்பரும் சேர்ந்து ரெஜிபோமிலான மிதப்பின் உதவியுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கரை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.
நீராடிக் கொண்டிருக்கையில் மிதப் பின் ஒரு பகுதி சேதமடைந்து இளைய சகோதரர் கடலில் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்றும் நோக்கில் கடலில் பாய்ந்த மூத்த சகோதரரும் கடலலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இச்சம்பவத்தை கண்ணுற்ற உல்லாசப்பிரயாணி ஒருவர் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்காக அதிக பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அம்முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் தம்பட்டை மற்றும் சின்னமுகத்துவார மீனவர்களின் உதவியுடன் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
அக்கரைப்பற்று பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் சடலங்களை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளை நடாத்துமாறு உத்தரவிட்டார்.
இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சிம்பாவே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.
நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2-2 என சமனில் இருந்த நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி அம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிரேம் கிரீமர் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து, 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிம்பாவே அணி 38வது ஓவரில் 7 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
சிம்பாவே அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய Masakadza 73 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றி சிம்பாவே வரலாறு படைத்தது.
வவுனியா கணேசபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சினால் சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொகுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் (PSDG) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், வைத்திய அதிகாரி விடுதி என்பன வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் இன்று (10.07.2017) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கணேசபுரம் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுதர்சன், கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபர் எஸ்.நந்தசேனா, வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் பத்மநாதன் சத்தியசீலன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான இ.சஜீவன், பா.சிந்துஜன், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
9 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையமும் 5.84 மில்லியன் ரூபா செலவில் வைத்திய அதிகாரி விடுதியும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.