இன்று (19.06) அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்பொழுது மாடு இறந்ததுடன் புகையிரதத்தின் முன்பகுதியில் (Baffer) பகுதியில் சேதம் ஏற்ப்பட்டமையால் புகையிரத்ததை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.
அதனை பின்னர் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு இலங்கை புகையிரத சேவைப் பணியாளர்களினால் பவர்ரினைக் கழற்றி சீர்செய்ததன் பின்னர் குறித்த பாகத்தையும் புகையிரதத்தில் ஏற்றி தாமதமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.
முற்பகல் 11.05 இற்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கடுகதி புகையிரதம் பிற்பகல் 12.40 அளவிலேயே புறப்பட்டது இதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கலைந்து ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டான் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை(21.06) மாலை மூன்று மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பேரணி ஒட்டுசுட்டான் நீர்பாசன சந்தியில் இருந்து ஆரம்பமாகி, ஒட்டுசுட்டான் சிவன் கோயில் சந்தியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதில் அனைவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்கட்சித் தலைவருக்கு இன்றைய தினம் கடிதமொன்று அனுப்பினார்.
குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
மூன்று விடயங்களின் அடிப்படையில் இந்த விடயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.
சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.
நான் தற்போது தொலைபேசியில் வடமாகாண ஆளுநரை தொடர்புகொண்டு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்பிலுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.
நாம் வெகுவிரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் 18.06.2017 ஞாயிறு மற்றும் 19.06.2017 திங்கள் ஆகிய இரண்டு நாட்களும் தந்தையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிரம்ம குமாரிகள் சங்கம் வருகை தந்து பஜனை மற்றும் கருத்துரைகளில் ஈடுபட்டனர். தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மதியபோசன உணவுக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
19.06.2017 திங்கள்கிழமை மாவட்ட சமூக சேவை அலுவலகம் தந்தையர் தினத்தை ‘மகிழ்வோர் மன்றம் ‘ என்ற தலைப்பில் நிகழ்வுகளை நடாத்தி சிறப்பித்தனர் .
லண்டன் V3 அமைப்பினூடாக கோண்டாவிலைச் சேர்ந்த அமரர் மஹாலட்சுமி செல்வரட்ணம் அவர்களின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் அவரது மகன் செ.ஜெகத் ஜெனன் இதற்கான ஏற்பாட்டைச்செய்திருந்தார்.
இன்றைய நிகழ்வுகளில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் இல்ல பொறுப்பாளர் செல்வி அகிலா, செல்வி தேவிகா, செல்வி மதுசினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முதியோர்களின் ஆடல் பாடல் மற்றும் கருத்தாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
2009 இல் இடம்பெயர்ந்த மக்களின் துயர் துடைக்கவென பலரது வேண்டுதலின் பேரில் சமனங்குளம் வித்தியாலயத்தில் இருந்த முதியோர்களை பொறுப்பேற்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வில்லம் யுத்தத்தின் பின் அளப்பரிய சேவையை எமது சமூகத்திற்கு ஆற்றியுள்ளது.
இன்றுவரை கோவில்குளம் சிவன் ஆலய தர்மகர்த்தா சபையினரால் குறிப்பாக இதன் செயலாளர் திரு.நவரத்தினராசா மற்றும் இங்குள்ள ஊழியர்களால் மிகவும் சிறப்பான முறையில் இவ் இல்லம் நடாத்தப்பட்டு வருகிறது.
வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று (19.06.2017) காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜனால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன், தமிழ்நாட்டின் தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் , வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி கு.சிதம்பரநாதன், சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடனம் பாடசாலை மாணவர்களின் திருக்குறல்-பாவோதல், பேச்சு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இத் திருவள்ளுவர் சிலை தமிழ்நாட்டின் தொழிலதிபர் டாக்டர். வி.ஜி. சந்தோசம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா A9 வீதி சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) மதியம் 1.30 மணியளவில் தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் விபத்துக்குள்ளனாது. இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இரு பேருந்துகளும் சிறியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது அவ்விடத்திற்கு சமுகமளித்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்ப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைப்பதற்கு சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களின் இடத்திற்கு சென்றார்.
இதன் போது அவ்விடத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது எனவும் அவர் எனது மனைவி நான் கதைக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரின் கணவர் தெரிவித்தார்.
அத்துடன் முதலமைச்சரின் ஆதரவாளர் பொலிஸாரினால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,
நான் மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் வயதுக்கு மூத்தவர்கள், தந்தைக்கு சமனானவர்களை கை நீட்டி அடிப்பதற்கு முற்படுபவர்களுடன் நான் கதைக்க தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
மைசூர் ராணி திரிஷிகா நான்கு மாத கர்பமடைந்துள்ளதாகவும், 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறி பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
399ம் ஆண்டு முதல் விஜயநகர பேரரசின் ஆட்சிப்பகுதியான மைசூரு பகுதியை, உடையார் வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்த திருமலைராஜாவின் ஸ்ரீரங்கபட்டிணம் மீது 1610-ம் ஆண்டு முதலாம் ராஜ உடையார் போர் தொடுத்தார். இதையடுத்து தலக்காடு எனும் நகரில் திருமலைராஜா தனது மனைவிகளுடன் குடிபெயர்ந்தார்.
இதனிடேயே நோயால் பாதிக்கப்பட்ட திருமலைராஜா மரணமடைந்தார். அவரது 2-வது மனைவி அலமேலம்மா அழகாக இருந்த காரணத்தால், அவர் மீது உடையார் மன்னர் ஒருவர் ஆசைகொண்டதாகவும் இதன் காரணமாக அலமேலம்மா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கு முன் அவர், மைசூர் ராஜ வம்சத்துக்கு குழந்தைகளே பிறக்கக் கூடாது என சாபிமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை மைசூர் ராஜ குடும்பத்துக்கு நேரடியாக எந்த வம்சமும் இல்லாமல் இருந்து வந்தது.
தத்து முறையிலேயே வாரிசுகள் அமைந்தன. உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னரான சாமராஜ உடையார் மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் இளவரசராக இருந்து வந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு இவர் மறைந்தார். பின், அவருடைய தூரத்து உறவினரான யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையார் இளவரசராக முடிசூடப்பட்டார்.
கடந்த ஆண்டு, இவருக்கும் ராஜஸ்தான் துங்கப்பூர் மன்னர் குடும்பத்து இளவரசியான திரிஷிகா குமாரி தேவிக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கும் குழந்தை இல்லாமல் போய்விடும் என மக்கள் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில் திரிஷிகா குமாரி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அலமேலம்மாவின் சாபம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு 472 மகள்களிடம் இருந்து தந்தையர் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி.
அதனால் ஒவ்வொரு தந்தையர் தினத்திற்கும் சவானிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அன்பு மழையிலும், பரிசு மழையிலும் நனைகிறார் இந்த அன்புத்தந்தை.
வைர வியாபாரம், ரியல்எஸ்டேட் தொழில் ஆகியவைதான் மகேஷ் சவானியின் பிரதான தொழில்கள். சில பள்ளிகளையும் பரிபாலனம் செய்கிறார். 48 வயதானவர் சவானி.
தொழில் அதிபரான அவரது அண்ணன் சிறிது காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு சவானிக்கு ஏற்பட்டது.
திருமண சமயத்தில் அண்ணனின் மனைவி சந்தித்த நெருக்கடியை அவரும் அருகில் இருந்து அறிந்து கொண்டார். வசதி வாய்ப்பு நிறைந்த நாமே, மகள்களின் திருமணத்தை எதிர்கொள்ள இவ்வளவு சிரமப்பட நேரிடும்போது, தந்தையை இழந்து, வசதி வாய்ப்பின்றி தவிக்கும் இளம் பெண்கள் எத்தனைபேர் திருமண பந்தம் கூடாமல் தவிக்கிறார்களோ? என்ற எண்ணம் சவானியின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.
உடனே தந்தையை இழந்த பெண்கள் மீது தனிக்கவனம் செலுத்துவது என்று முடிவு செய்தார்.
அதுபோன்ற பெண்களுக்கு ஆதரவு தந்து தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைப்பதை தனது தொண்டாக கருதி களத்தில் இறங்கினார். 2008-ம் ஆண்டு முதல் ஏராளமான ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து வருகிறார். இதுவரை இவரால் திருமண பந்தம் பெற்றவர்கள் 472 பேர். மேலும் பலருக்கு திருமண உதவித் தொகை வழங்கி உள்ளார்.
சாதி, மதம் பார்க்காமல் ஆதரவற்றோருக்கு அவர் உதவி வருகிறார். அதுபற்றி அவரிடம் கேட்டால் “கணவனை இழந்த ஒரு தாய் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை நான் அறிவேன்” என்கிறார் சவானி.
உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிப்புச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். 17 குழந்தைகள் அவரால் கல்வியை இடைவிடாமல் தொடர்கின்றனர்.
மற்றொரு தொண்டாக, உடல் தானம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் சவானி. இதுவரை 251 பேர் உடல்தானம் செய்ய சம்மதம் தெரிவிக்க உதவியாக இருந்துள்ளார்.
அவரது தொண்டுகளைப் பாராட்டி பல சமூக அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.
மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் , அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.
ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவுக்கு 137வது இடம் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
தீவிரவாத அமைப்புகளின் வன்முறையால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயில் வீதியில் பயணிப்பதே தண்டனை வழக்கப்பட வேண்டி குற்றச் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இருக்கு சிலர் ரயில் வரும் போது செல்பி புகைப்படம் எடுப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரயில் பாதைகளில் செல்பி புகைப்படம் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போதே, ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் அதன் தாய் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதேபோல், ஜெட் ஏர்வேஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல சலுகை அறிவித்துள்ளது.
162 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸின் போயிங்-737 விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
விமான பயணிகளின் உதவியாலும், பயிற்சி பெற்ற துணை மருத்துவர் ஒருவர் இருந்ததால் 35 ஆயிரம் அடி உயரத்தில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது.
மும்பை விமானம் திரும்பியதும், குழந்தையும் தாயும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வீட்டு வேலியிலுள்ள மரங்களை தனது மகன் மற்றும் கணவரின் தலையைப் போன்று வடிவமைத்துள்ளார்.
48 வயதான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண், கலைப்பட்டதாரி ஆவார். தனது வீட்டு வேலியிலுள்ள மரங்களை கத்தரிக்கத் தீர்மானித்த இவர், தனது கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது கணவர் அன்ட்ரூ, மற்றும் மகன் பிரெனின் தலைகளைப் போன்று அம்மரங்களை கத்தரித்துள்ளார்.
ஒரு பல்கடை அங்காடியின் முகாமையாளர் அவரின் கனவு புகைப்படத்தினை எடுப்பதற்காக 4 வருடங்கள் 10 ஆயிரம் மைல்கள் மற்றும் 50 ஆயிரம் தடவைகள் முயற்சித்து தனது கனவு புகைப்படத்தினை இறுதியில் புகைப்படம் எடுத்த சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரி ஜோன்ஸ் என்ற புகைப்பட கலைஞர் மீன்கொத்தி பறவை நீரில் இருந்து வெளியில் வரும் அந்த கணத்தின் காட்சியை புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற இலட்சியத்தினை கொண்டிருந்தார்.
கடைசியாக அவரின் இலட்சியத்தினை 4 வருடங்கள் கழித்து 50 ஆயிரம் தடவைகள் தவறவிட்டு வெற்றியடந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில் சுவாரஸ்யம் இருப்பதாலும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது.
அதன்படி தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத் தீவுகள் (2010), இலங்கை (2012), பங்களாதேஷ் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் நடத்தப்பட்டது.
அதன்படி அடுத்த வருடம் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால்இ முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதால் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதில்லை என்று ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கு பதிலாக 2020ஆம் ஆண்டில் தொடரை நடத்த ஐ.சி.சி. முன்வந்துள்ளது.