கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் யாழ். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த வேளையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணிபுரிந்து வருகின்ற நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கிலேயே புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதேவேளை இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் என்னும் கடற்கரையிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ரோலண்டோ ஓமங்கஸ் என்னும் 21 வயது மீனவர், தனது உறவினர் ரெனியல் ஓமங்கஸ் என்பவருடன் இணைந்து பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக வீசிய புயலின் காரணமாக அவர்களது படகு, சிதைந்தது.
இதனால் உணவு, குடிநீரின்றி அவர்கள் இருவரும் கடலில் தத்தளித்தனர். இந்த போராட்டத்தில் உறவினர் ரெனியல் மரணம் அடைந்தார்.
இருப்பினும் மனவலிமையுடன் ரோலண்டோ 56 நாட்கள் கடலில் நீந்தி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கரையொதுங்கினார்.
கடலில் தத்தளித்த நாட்களில் மழைநீரையே குடிநீராகப் பயன்படுத்தி வாழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது ரோலண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் சீரான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர் லக்ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து அவருக்கு ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் தோல்வியை அடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல் குறித்து பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சலைப் போன்று வைரஸ் காய்ச்சலும் குழந்தைகளுக்கு பரவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் வெகுநாள் ஆசை ஒன்று நிஜமாகப்போகிறது. கமெண்ட்களில் அனிமேட்டட் கிராஃபிக்ஸ் இமேஜுகளைப் பயன்படுத்த விரும்புவோரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தார் அதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
கூடிய விரைவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் தங்களது நட்புகளுக்கு கமெண்ட் இடும் போது அழகழகான அனிமேட்டட் படங்களை லைவ் ஆக அனுப்பும் வசதி பேஸ்புக்கில் கொண்டுவரப்படவிருக்கிறது. அதற்கான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சோதனைகளுக்குப் பின்பு குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் GIF கமெண்ட் பட்டன்கள், ஃபேஸ்புக் மெஸஞ்சர் பட்டன்களைப் போலவே தனித்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும், அதன் வெற்றியைப் பொறுத்து அனைத்து ஃபேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் மாற்றப்படும் என்றும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
சகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான். ஆனால், இந்த நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடையும் நிலை ஏற்படும்.
இங்கிலாந்தைப் பொறுத்த வரை 30 சதவீதம் பணிகளை ரோபோக்கள் செய்து வருகின்றன. இவற்றின் செயற்பாடுகளால் இன்னும் 15 வருடங்களில் அங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவிதமான அதி நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் உருவாகி வருகின்றன. அவை தொழிலாளிகளின் பணியிடங்களைப் பறிக்கும் அபாயம் உள்ளதாக பி.டபிள்யூ.சி. என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் 22 இலட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆனால், ரோபோக்கள் வருகையால் அவற்றில் 10 இலட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இலங்கை, இந்தியா நாடுகளைப் பொறுத்தவரையில் ஆபாசப் படம் பார்ப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஏராளமானோர் ஆபாசப் படங்களை ஆண், பெண் என பாலின வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பார்த்துவருகின்றனர்.
தொடர்ந்து ஆபாச படங்களை ஸ்மார்ட்போனில் பார்ப்பதால் இன்டர்நெட் டேட்டா தீர்வது மட்டுமின்றி மனமும் ஆபாசமாக நாளடைவில் மாறிவிடும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒருசில ஆபாச இணைய தளங்களுக்குச் செல்லும்போது, திடீரென ஏதேனும் ஒரு மென்பொருள் உங்களது ஸ்மார்ட்ஃபோனில் தன்னிச்சையாகவே இன்ஸ்டோல் ஆகிவிடும். அதன் காரணமாக உங்களது நெட் பேங்கிங், பேடிஎம், மின்னஞ்சல் தரவுகள், தனிப்பட்ட சமூக வலைத்தள தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து, தகவல்களை திருடிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ஸ்மார்ட்போனில் ஒளித்துவைத்துள்ள அந்தரங்க புகைப்படங்கள் வரை ஹேக்கர்களால் ஊடுருவ முடியும் என்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படித்தான் சிக்கித் தவிப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண் அழாததைக் காரணம் காட்டி சந்தேக நபர் விடுவிக்கப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பால் முழு நாடுமே அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு இத்தாலிய நீதித் துறை அமைச்சர் அண்ட்ரியா ஓர்லண்டோ உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் ஒருவரை ஒருவர் முன் பின் அறிமுகமானவர்களே என்பதனாலும், சந்தேக நபர் குற்றத்தில் ஈடுபடும்போது அவரை எதிர்க்கப் போதுமானவரை முயற்சி செய்யவில்லை என்பதனாலும், அழவில்லை என்பதனாலும் சந்தேக நபரை விடுவித்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது “போதும்” என்று மட்டுமே பாதிக்கப்பட்டவர் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தனக்கு அறிமுகமானவர் என்பதால் அவரது செய்கையை குறித்த பெண் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றும், நன்கு அறிமுகமானவர் இதுபோன்ற அதிர்ச்சியான செயல்களில் இறங்கும்போது, அவரை உடனடியாக முழுமையாக எதிர்க்க முடியாத சூழ்நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டுவிடுவதாகவும், எவ்வாறெனினும் இதுவும் பலாத்காரமாகவே கருதப்படவேண்டும் என்றும் இத்தாலியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மணப்பெண் அலங்காரத்தினை கொச்சைப்படுத்தி புகைபடம் வெளியிட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவில் இருந்து வெளிவரும் ‛‛ஜோடி´´ என்ற பத்திரிகை கடந்த 13ம் திகதி வெளியிட்ட கவர்ஸ்டோரி அட்டை படத்தில் மாடலிங் அழகி தனுஷ்கா சுப்ரமணியனின் படம் வெளியிட்டுள்ளது.
அதில் மணப்பெண் அலங்காரத்தில் தனுஷ்கா சுப்ரமணியம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது போன்ற படம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளதால் தமிழக கலாச்சாரத்தை இ்ந்த புகைப்படம் சீரழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனடாவில் வாழும் தமிழர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது.
அத் தடாகத்தில் நாணயங்களை வீசுவது தமக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு வீசப்படும் நாணயங்களை மேற்படி ஆமை விழுங்கி வந்ததால் அதற்குப் பாதிப்பு ஏற்பட்டது.
தாய்லாந்தின் சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர்களால் இம் மாத முற்பகுதியில் மேற்படி ஆமை சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு, அதன் வயிற்றிலிருந்து 915 நாணயங்கள் அகற்றப்பட்டன. சத்திரசிகிச்சைக்குள்ளான இந்த ஆமை சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
திங்கட்கிழமை அதற்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. எனினும் அதையடுத்து, கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஆமை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிவித்துள்ளனர். இரத்தம் நஞ்சாகியமையே இது உயிரிழ ந்தமைக்கு காரணம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக நீளமான கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்கான வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தின் வடிவமைப்பு படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
உலகின் உயரமான கட்டிடமான டுபாயின் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு நீளமான கட்டிடத்தை நியூயோர்க்கில் அமைக்கத் திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி பிக் பெண்ட்’ எனப் பெயர் சூட்டப்படவிருக்கும் இக்கட்டடம் ஆங்கில எழுத்து ‘யு’ வடிவ வளைவு போன்று கட்டமைக்கப்படவிருக்கிறது.
4,000 அடி நீளம் (1.22km) இக்கட்டடத்தை ‘யு’ வடிவில் வளைத்து அமைக்கவுள்ளனர்.
ஓயோ ஸ்டூடியோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடத்தில், வளைவுகளில் செல்வதற்கான ‘மின்னுயர்த்தி’ வசதியும் செய்யப்படவுள்ளது. நியூயோர்க்கின் மான்ஹட்டான் நகரில் இருக்கும் ’உயர்ந்த கட்டிடங்களுக்கான தளர்வு’ விதிகளுக்கு இக்கட்டிடம் மாற்றாக அமைந்துள்ளது. 4,000 அடி உயரமான கட்டிடமாக இல்லாமல் 4,000 அடி நீளமான கட்டடமாக நிலைநிறுத்தவுள்ளனர்.
நியூயோர்க் கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த வடிவமைப்பின் கட்டமைப்புக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 கிளைகள் மாத்திரமே இயங்கும் நிலையில் காணப்படுகின்றது.
கிராம மட்டங்களில் காணப்பட்ட பல கிளைகள் மூடப்பட்டமையினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் வேலைவாயப்புகளும் முடக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பில் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினரின் சீராக வழிநடத்தலின்மை மற்றும் சங்க நிர்வாகத்தின் பொருளாதாரம் சார் பார்வையின்மையே இதற்கான காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் முத்தையா, வீரசிங்கம், நடராஜா, பத்மநாதன், சுப்பிரமணியம் (வேலுச்சேமன்), ஞானப்பிரகாசம் ஆகியோரின் காலங்களில் வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் வட கிழக்கில் முதன்மைச்சங்கமாக செயற்பட்டு வந்திருந்தமையையும் பொதுமக்கள் இந்த நிலையில் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல வர்த்தக நிலைய கட்டடங்கள் சீரான கேள்வி கோரல்கள் மூலம் காலத்திற்கு காலம் விடப்படாமையினால் சில தனிப்பட்ட நபர்கள் அதனை உரிமைகோரும் நிலையும் காணப்பட்டு வருகின்றமையும் சங்கத்தின் வருமான இழப்பிற்கு காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் குறைந்த வாடகையில் நகர்ப்புற வர்த்தக கட்டடங்களை பெற்றவர்கள் அதனை வேறு நபர்களுக்கு அதிகளவான வாடகைக்கும் வழங்கி வருவதும் சங்கத்திற்கான வருமான இழப்பினை ஏற்படுத்துவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 1ம் திகதி வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெறவுள்ளமையினால் புதிய நிர்வாகம் மூடப்பட்ட கிளைகளை திறப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2 மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற மஞ்சுல பிரசன்ன குமார என்ற 29 வயது இளைஞர் அங்கு விலங்குகளுக்கு வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடத்தில் கட்டுத்துவக்கு வைத்தது யார் என பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பர் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, மிமனபலான பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றின் பின்பக்கத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து ஒருவர் மற்றொருவரை கொலை செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரால், கழுத்துப் பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பரை கொலை செய்துள்ளதுடன், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரும் அதே விட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்த ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து என தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும், அதை கடந்து சாதனை மங்கையாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா பிரபா திகழ்ந்து வருகிறார்.
கோட்மா பகுதியை சேர்ந்த அனிதா பிரபா பத்தாம் வகுப்பில் 92 சதவீத தேர்ச்சி பெற்றவர். இவர் தொடர்ந்து படிக்க விரும்பிய போதும், ஆனால், அவரது பாரம்பரியம், சடங்கு போன்ற தடைகள் காரணமாக தன்னை விட பத்து வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
தன் வாழ்வில் பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட போதிலும், அனிதா 4 வருடத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின் அனிதா தன் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டிய நிலையில் இருந்ததால், தனது விடாமுயற்சியின் காரணமாக ஒப்பனை கலைஞராக வேலை செய்ய துவங்கினார்.
ஒருகட்டத்தில் அனிதா தன் கணவரின் தொல்லைகள், பிடித்த வேலை, மகிழ்ச்சியான வாழ்க்கை, குடும்பம் இல்லாமல் மன வருத்தத்தை சந்தித்தார்.ஆனாலும் அவர் 2013-ல் வனத்துறை அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்று, பாலாகாட் மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.
அதன் பின் தன் வாழ்வின் இன்னல்களை தூக்கி எரிந்து தனது லட்சியங்களை உயர்த்தி உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி, கடின பயிற்சிகளில் வெற்றி பெற்று தேர்வானார்.அதன் பின் தனது வாழ்க்கையில் பல மன கஷ்டத்தினால் 22 வயதில் விவாகரத்து பெற்றார். அதே நேரத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பொது சேவை ஆணைக்குழு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, தனது 25 வயதில் பெண்கள் பிரிவில் 17-ம் இடம் பிடித்து, டி.எஸ்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.
25 வயதில் ஒரு பெண் என்ன செய்து விட முடியும்? என்ற கேள்வியை முறியடித்து. மீண்டும் கலெக்டர் பதவிக்கு தனது இலட்சியத்தை உயர்த்தி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு, அதற்கான தேர்விலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய யானை ஒன்று இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் சேற்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாருடைய உதவியுமின்றி இருந்த இந்த யானை இலங்கையின் கொட்டுகச்சி என்ற கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த கிராம மக்கள் யானையின் மீதுள்ள சேற்றினை கழுவுவதற்கும் அதனை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யானை தந்தத்தினால் காயம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் தெளிவாக தகவல் வெளியாகவில்லை.
யானையின் உடல் நிலை மோசமாக உள்ள போதிலும் அதனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். எனினும் யானையின் காயம் மிக பெரியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கம்பீரமான யானைகள் கொலை செய்யப்பட்டு, அதன் மதிப்பு மிக்க தந்தங்கள் உடைக்கப்பட்ட முதலாவது நாடாக இலங்கை காணப்படுகின்றது.