நேற்று மாலை (16.10.2016) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் கல்லால் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தை மேற்கொண்ட குழுவில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இதேவேளை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் மது போதையில் நின்றார்கள் எனவும் ஒருவர் தனியார் பேரூந்தொன்றில் பணிபுரிபவர் என்றும் அறியப்படுகிறது.
வவுனியா மணிபுரத்தில் இன்று (16.10.2016) கொதிக்கு எண்ணையில் வீழ்ந்து காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மணிபுரத்தில் மிக்ஸர் தயாரிப்பதற்காக இருந்த கொதிக்கும் எண்ணை வைத்திருந்த பாத்திரத்திக்குள் 2வயது சிறுவன் தவறிவீழ்ந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஆணுறுப்புப் பகுதி, கால்கள் பாதிக்கப்பட்டமையினால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (15.10.2016)வவுனியா வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இரு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன் நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல புலமை பரிசில் பரீட்சையில் 1ம் இடத்தினைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிஷிகன் பொலிஸ்மா அதிபரினால் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.
பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.ராகுலன் ஏபிரகாம் ஏற்பாடுசெய்திருந்தார்.
நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பான பயிற்சி பெற்ற பெண்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் சான்றிதழ்களும் அடையாள அட்டையையும் வழங்கப்பட்டது.
வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டி சீரழிக்கும் நுண்நிதி (மைக்ரோ கிரடிற்) நிறுவனங்களை இழுத்து மூட அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு (லீசிங்) என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிறுவனங்களுக்கு எதிராகவும் கிராம மட்டங்களில் குடும்பங்களின் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாளை 17.10.2016 காலை 10.00 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வறுமை ஒழிப்பு மற்றும் சுயதொழில் விருத்திக்கு உதவி என்ற பெயரில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் பெண்களை இலக்கு வைத்து கொடுக்கும் சிறுகடன்கள் பல குடும்பங்களை சிதைத்துள்ளது.
பல கிராமங்களில் கடன்பெற்ற குடும்பங்கள் அதை மீளச்செலுத்த முடியாத நிலையில் தூர பிரதேசங்களுக்கு இடம்பெயர்கின்றனர். சில பெண்கள் தற்கொலை என்னும் தீர்வை நாடியுள்ளனர்.
அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக விவசாயமும் சிறு தொழில்களும் நாசமாக்கப்பட்டு வலுவிழந்து வரும் நிலையில் அரசு உடனடியாக நிதி நிறுவனங்களை மூடுவதுடன் சமூர்த்தி வங்கி, கூட்டுறவுச்சங்கங்கள், கிராமிய வங்கிகள் ஊடாக மக்களுக்கு சிறு கடன்களை வழங்க முன்வரவேண்டும்.
2014 ஆண்டு நாட்டின் உற்பத்தியில் 42 சதவீத பங்களிப்பினை வழங்கும் மேல் மாகாணத்தை விட மிகக்குறைவாக நாட்டின் உற்பத்தியில் 04 சதவீத பங்கினை வழங்கும் வட மாகாணத்தில் உள்ள நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இது வடக்கு மக்களை திட்டமிட்டு சுரண்டுகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி நிற்கிறது.
ஒரு சமூகத்தை சிதைக்க வேண்டுமென்றால் அச்சமூகத்தின் பெண்களை சிதைத்தால் அது சாத்தியமாகும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நுண் நிதி கடன் திட்டங்களின் மூலம் பெண்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி ஆரோக்கியமான குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்களை சீரழிப்பதன் ஊடாக எமது சமூகத்தை ஊனமாக்க செயல்ப்படும் சக்திகளுக்கு எதிராக ஒக்டோபர் 17 காலை 10 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எமது பெண்களை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் எழுச்சியில் எல்லோரும் அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு அறைகூவல் விடுக்கிறது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இன்று(16.10.2016) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு கட்சியின் கடந்த கால செயற்பாடுகள், கட்சியின் நிலைப்பாடுகள் குறிப்பாக எழுக தமிழ், வடமாகாணசபை, நிலவரங்கள், பொருளாதார மத்திய நிலையம், அது தொடர்பாக கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் பேச்சாளர் எடுத்துக்கூறினார்.
வவுனியா மாவட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது. இதில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் பரபரப்பான வீதியை கடக்க முற்பட்ட குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் விந்தையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின். Dundee பகுதியில் உள்ள East Marketgait சாலையை கடக்க முற்பட்ட குற்றதிற்காகவே கோழி கைது செய்யப்பட்டுள்ளது.
கோழியால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார். கோழியை கைது செய்து அருகில் உள்ள Tayside காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உரிமையாளர் கிடைக்கும் வரை கோழியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி கோரியுள்ளனர்.
எனினும், கோழி ஏதற்காக சாலையை கடக்க முற்பட்டது மற்றும் உரிமையாளர் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத மனைவியை அவரது கணவனே விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, போதகாப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா(20) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், திருமணம் செய்து 2 வருடம் ஆகியும் குழந்தை இல்லையே என்ற மனக்கவலையால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பிரியா வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே, பிரியாவின் தாய் ரங்கம்மாள் நாமகிரிப்பேட்டை பொலிஸ் நிலையத்தில், தனது மகளை ராஜேஷ் தான் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
புகாரைப்பெற்ற பொலிசார் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் உடல்நலம் குறித்து தமிழச்சி வெளியிட்ட பதிவை பிரதி செய்து பேஸ்புக்கில் பகிர்ந்த பாதிரியார் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி என்பவர் முதல்வர் உடல்நலம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவலை ஒன்றை பதிவிட்டார்.
குறித்த பதிவை பிரதிசெய்து பாதிரியார் ஒருவர் தன்னுடை கருத்து போல் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பதிவு குறித்து அதிமுக சார்பில் பொலிஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைபர் கிரைம் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த பேஸ்புக் கணக்கு கணக்கு தூத்துக்குடி மாவட்டதைச் சேர்ந்த 24 வயதான அண்டனி ஜேசுராஜ் என்பவரது என்று தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகை கவீஷா அயேஷானியின் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான பஸ் வண்டி நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இருந்து நிரோமி சந்தியை நோக்கி சென்ற கார், எதிர் திசையில் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற நடிகை கவீஷா அயேஷானி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை வேளையிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கண்டி, பொலநறுவை, கதிர்காமம், கம்பஹா போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 முதல் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலை முத்துநகர் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(15) உயிரிழந்துள்ளதாக சீனக் குடா பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
திருகோணமலையில் இருந்து கல்லோயாவுக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நிரோசன் மதுசங்க (24 வயது) என்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நபரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
அனுராதபுரம் விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த நபர், சிறையறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
தான் உடுத்தியிருந்த உடையை பயன்படுத்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ள இந்த நபரை சிறைச்சாலை அதிகாரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான இந்த நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது. சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சிரமதான பணிக்காக கண்டி தும்பர போகம்பர சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை மற்றும் கோஹாகொட பிரதேசங்களை சேர்ந்த இந்த கைதிகள் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தப்பியோடி இந்த கைதிகள் இன்னும் சிறிது காலத்தில் விடுதலை செய்யப்படவிருந்தனர்.
தப்பியோடிய கைதிகளை தேடும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை அதிகாரிகளும், கண்டி பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு றாணமடு மாதிரிக் கிராமத்தில் இளைஞர் ஒருவர் நேற்று(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த நபர் மாதிரி கிராம பாலர் பாடசாலையின் உள்ளே வளையில் சாறியினால் சுருக்கிட்டு இறந்துள்ளதை அறிய முடிகிறது.
மேற்படி தற்கொலை செய்த நபர் கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனை காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான படகுகளுக்கு ஐரோப்பாவில் அதிக அளவிலான கோரிக்கை உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தயாரிக்கப்படும் படகுகள் மிகவும் தரமான நிலையில் உள்ளமையினால் கடந்த வருடத்தில் மாத்திரம் படகு உற்பத்தி மூலம் 80 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு போன்ற ஆசிய நாடுகளிலும் இந்த படகிற்கான கோரிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகுகளில் தாக்குதல் படகுகள், சுற்றுலா பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் படகுகள், பாதுகாப்பு படகுகள் மற்றும் கடற்பாதுகாப்பு படகளுக்கே அதிக கோரிக்கை உள்ளது.
அத்துடன் இந்த வருட இறுதியில் படகு உற்பத்தியின் மூலம் 100 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நுகேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுள்ள செல்லப்பட்டுள்ளதாக மீரிஹான போக்குவரத்து பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கவீஷா அயேஷானி மோட்டார் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளதாகவும், அது அவருக்கு சொந்தமான மோட்டார் வாகனம் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட நடிகையாக இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும்.
அண்மையில் இவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், பிறந்த நாள் விழாவில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.