உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இலங்கை தமிழ் மக்கள் இசை, நடனம், போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆவர்.
ஏற்கனவே தமிழ் திரையுலகில் சூப்பர்சிங்கர் மூலம் கனடாவைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான ஜெசிக்கா தமிழர்களிடையே பிரபலமானார். தற்போது கனடாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பிரபல இசையமைப்பாளரின் இசையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் புதிய குரல்களை அறிமுகப்படுத்தி வரும் டி.இமான் தான். இவர் ஏற்கனவே தன்னுடைய இசையில் சாட்டை படத்தில் கனடாவில் ஈழத்து பெண்ணான எலிசபெத்துக்கு வாய்ப்பு தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்தில் தான் லக்ஷ்மி பின்னணி பாடகியாக அறிமுகமாகவுள்ளார்.
குரல் பதிவிற்காக சென்னை சென்றிருந்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் 24ம் திகதி குரல் பதிவினை முடித்து இன்று டொரான்டோ வந்தடைந்தார். டி.இமான் அவர்களின் இசையில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (26.07.2016) காலை தம்புள்ளையில் இருந்து வந்து கொண்டிருந்த லொறி மற்றும் மாத்தறை நோக்க்கி பயணித்துகொண்டிருந்த வான் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ பால கதிர்காம ஆலய ஆடிவேல் வீதியுலா தமிழ்மக்களின் கலை கலாச்சார நடனங்களுடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆடிவேல் வீதியுலாவின் மூன்றாம் நாளான நேற்று நேற்று முன்தினம் (24.07.2016) பால கதிர்காமப் பெருமான் விசேட ஊர்தி அலங்காரங்களுடன் இந்துப் பாரம்பரிய கலை கலாசார தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக கரகாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், தீப்பந்த விளையாட்டுக்கள் இன்னும் பல நிகழ்வுகளுடன் மின்சார அலங்காரங்களுடன் பாலகதிர்காமத்தை நோக்கி வந்தடைந்தார்.
வீதியனைத்தும் வாழை தோரணங்கள் பூரணகும்பம் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாகப் புடைசூழ ஆலயத்தை வந்தடைந்தார். அதன் பின்பு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆடிவேல் ரதபவனி இரவு 8 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.
வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன வற்றிற்கு 2016ம் வருடாந்த அபிவிருத்தித்திட்டத்தின்; அடிப்படையின் கீழ் இவ் உதவித்திட்டங்கள் நேற்று 25.07.2016 பிற்பகல் 3 மணியளவில் வவுனியா சுற்றுவட்ட வீதியிலுள்ள கிராம அபிவிருத்தித்திணைக்களத்தில் வடமாகாண கடற்தொழில், மீன்பிடி, கிராம அபிவிருத்தி, வீதி, போக்குவரத்து துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனினால் 22 கிராம அபிவிருத்திச்சங்களுக்கு சமையலறை பாத்திர உபகரணங்கள், தளபாட உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் தையல் பயிற்சி பெற்றுவந்த 17மாணவர்களுக்கு பயிற்சி நெறியின் இறுதியில் தையல் இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜெயதிலக, அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன், சமயத்தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கலந்துகொண்டு, சட்டம் பற்றி விளக்கமளிக்கும் போதே, இளஞ்செழியன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
யாரையும் குற்றம் காண்பதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெறவில்லை. அதிபர்கள், ஆசிரியர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் வைத்து வணங்க வேண்டியவர்கள்.
ஆசிரியர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யலாம் அல்லது வாக்குமூலம் பதிவு செய்யாது, உடனடியாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி பின்னர், பெலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்.
குற்றச் செயல்களை சமாதானம் செய்து வைக்க முடியாது. பாலியல் வன்புணர்வு குற்றங்களில், பாடசாலை பழைய மாணவர் சங்கங்களோ, அபிவிருத்தி சங்கங்களோ தலையிடக் கூடாது.
பழைய மாணவர் சங்கம் மற்றும் அபிவிருத்தி சங்கங்களின் கருத்துக்களை மாணவர்கள் விடயத்தில் கிரகிக்க வேண்டாமென அவர் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களுக்கும் அபிவிருத்தி குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அபிவிருத்திச் சங்கத்தினர் அபிவிருத்தி பற்றியே சிந்திக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் ஒழுங்க விழுமியங்களில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
பாலியல் வண்புணர்வு குறித்து மாணவர்களினால் முறையிடப்பட்டால், நிர்வாக ரீதியாக கல்விப் பணிப்பாளருக்கும், கடமையின் நிமித்தம் பொலிஸாருக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
எதிர்காலத்தில் இவ்வாறு அதிபர்கள் செய்யத் தவறினால், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றம் ஆபத்தானவை. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்கள் அல்ல. ஆனால், 5 வீதமானவர்கள் குற்றம் செய்கின்றார்கள். அந்த 5 வீதமானவர்களையும் இல்லாது ஒழிக்க வேண்டியவர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி உயர் அதிகாரிகள் என்பதனை மறவாதீர்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு பாதுகாப்பது சட்ட முரணான செயற்பாடு, பாடசாலைக்கு பிள்ளை வருகின்றார் என்றால், பாதுகாப்பு நீங்கள் தான். பாலியல் வன்புணர்வு குற்றங்களை தடுப்பதற்கு பாடசாலை மட்டங்களில் அதிபர்கள் சட்ட நடைமுறைகளை கையாள வேண்டுமென்றும் கூறினார்.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அகதிகள் தமிழ் நாட்டில் முகாம்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.
அங்குள்ள 5,000 அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள அகதிகளுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவியையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.
இவர்கள் நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலையின் போது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை யாழ். தெல்லிப்பளை மணல்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்த சந்தேகநபரை மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலை படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன், பிரதி சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது தனிப்படை போலீஸ். அப்போது அவர், சுவாதியை எப்படிக் கொலை செய்தேன் என்ற தகவலை விரிவாகச் சொன்னதாக போலீஸ் சொல்கிறது.
அவருடைய வாக்குமூலத்தை போலீஸ் தரப்பில் இருந்து சேகரித்தோம். அதில்,பி.இ படிப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கோச்சிங் கிளாஸுக்காக சென்னை வந்தேன். என் உறவினர் மதன் உட்பட செங்கோட்டையைச் சேர்ந்த 7 பேர் சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ் மேன்ஷனில் தங்கியதால், நானும் அங்கு தங்கினேன்.
அந்த வழியாகச் சென்ற சுவாதியைப் பார்த்தேன். அவரைப் பின்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரை ரயிலில் மூன்று முறை சென்றேன். அப்போது, சுவாதி வேலை பார்த்த இடத்தைக் கண்டுபிடித்தேன்.
சுவாதி தினமும் அவரது வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்வார். சுவாதிக்காக அந்தக் கோயிலுக்கு நானும் செல்வேன். ஒருநாள் அவரிடம் என் காதலைச் சொன்னேன்.
அவர் என்னை, ‘தேவாங்கு’ என்று திட்டியதோடு கன்னத்தில் ஓங்கி அடித்தார். அது எனக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது அரிவாளை எடுத்து வந்தேன். சுவாதியை கொலை செய்வதற்கு முன்புகூட அவரிடம் என் காதலை வெளிப்படுத்தினேன். அப்போதும் அவர், என்னை அசிங்கமாகத் திட்டினார்.
இதனால் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வாயிலேயே ஆத்திரம் தீர வெட்டினேன் என்று போலீஸில் சொல்லி இருக்கிறார் ராம்குமார்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். போலீஸ் காவலில் ராம்குமார் சொன்ன தகவல்கள் அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளோம். அவரின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், முகமது பிலால் சித்திக், காவலாளி கோபால், பிளாட்பார வியாபாரி சிவக்குமார், சுவாதியின் நண்பர்கள் 5 பேர் என 60 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ராம்குமார் வழக்கில் அடுத்த மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்ய உள்ளோம். ராம்குமார், சுவாதிக்கு வட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் எடுக்க உள்ளோம்.
அடுத்து, ராம்குமாரின் செல்போனில் சுவாதியின் புகைப்படங்கள் உள்ளன.ராம்குமாரை கைதுசெய்வதற்கு முன்பு சுவாதியின் நெருங்கிய நண்பர் முகமது பிலால் சித்திக்கிடம் விசாரணை நடத்தினோம்.
அப்போது, பிலாலுக்கு ஏதாவது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அந்த விசாரணை நடந்தது. இதற்குக் காரணம், சுவாதியின் குடும்பத்தினருக்கும் மத அமைப்புக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கோச்சிங் வகுப்பில்தான் முதன்முதலில் சுவாதியும், பிலாலும் சந்தித்து உள்ளனர். நெருங்கிப் பழகி உள்ளனர்.
ராம்குமாரின் பின்னணியில் ஏதாவது மத அமைப்புகளின் பங்கு இருக்கலாம் என்ற கோணத்தில் உளவுத்துறை இரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மூன்று மாதங்கள் மட்டுமே ராம்குமார் மேன்ஷனில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. ஏற்கெனவே அவர், அதே மேன்ஷனில் 10-8-2015 முதல் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த மேன்ஷனில் தங்கியிருந்தபோது சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தியுள்ளோம் என்றார்.
ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜிடம் பேசினோம். இந்தக் கொலை வழக்குக்கும் ராம்குமாருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. இந்தக் கொலைக்குப் பின்னணியில் சில அமைப்புகள் உள்ளன.
ஆனால், அதன் விவரம் சுவாதியின் குடும்பத்துக்கும் போலீஸுக்கும் தெரியும். தமிழக போலீஸ் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால், சி.பி.ஐ விசாரணை கேட்க உள்ளோம்.
சுவாதியின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை ஏன் போலீஸார் மறைக்க வேண்டும்?
போலீஸ் காவலில் ராம்குமாரை சித்திரவதை செய்துள்ளனர். ராம்குமாரின் தந்தை பரமசிவன், தன் மகனின் கழுத்தை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் அறுத்ததாக செங்கோட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் என்றார்.
சுவாதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து பேசிய டாக்டர் ஒருவர், சுவாதியின் உடலில் நான்கு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பின்பக்கத்தில் இருந்தே அவரை வெட்டியிருக்க வாய்ப்பு உள்ளது.
கழுத்துப் பகுதியில் உள்ள கார்னியல் பிளேட் குழாய் அறுக்கக்கப்பட்டு இரத்தம் அதிகம் வெளியேறியதால் சுவாதி மரணம் அடைந்துள்ளார்.
கார்னியல் பிளேட் குழாய் அறுக்கப்பட்டால் மூன்று நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும். மருத்துவரீதியான இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டு சுவாதியைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றார்.
2015ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்கள் மீண்டும் தமது பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியிருந்தது.
இதற்கமைய மாணவர்கள் தமது மீள்பரிசோதனை விண்ணப்பங்களை அனுப்பியமைக்கு அமைய 1200 மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மீள்பரிசோதனைக்கு நாடு பூராகவும் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள்பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் அந்த ஊனமுற்றவருக்கான மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் எனவும், வெளியே இருந்து வந்து இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலின் இடையே அந்த நபர் தாம் சாதித்துவிட்டதாக குரல் எழுப்பியதாக நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த குறிப்பிட்ட பகுதியானது அமெரிக்க ராணுவ தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகை ஒருவரின் தொலைபேசி அழைப்புக்களை இரகசியமாக ஒட்டுக் கேட்ட வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல சிங்கள நடிகை மேனகா மதுவந்தி என்ற இளம் நடிகையின் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்டதாகவும் குறுஞ்செய்திகளை பார்வையிட்டதாகவும் வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 26 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக மேனகாவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட குறித்த இளைஞரிடம், செல்லிடப் பேசியில் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரியுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞர் மேனகாவிற்கு வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமது செல்லிடப் பேசி ஊடாக கேட்கவும் பார்வையிடவும் கூடிய வகையில் மென்பொருள் ஒன்றை செயற்படுத்தியுள்ளார்.
மேனகாவின் இணைய முகவரிற்குள் பிரவேசித்து புகைப்படங்களை வேறும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தாம் நெருக்கடியை எதிர்நோக்கியதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை மீளவும் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்குமாறும் மேனகா பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இதன் அடிப்படையில் கொஹூவல பொலிஸார், குறித்த வர்த்தகரை அழைத்து அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்களே இல்லையே, நமது நிழல் நம்மை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இருட்டிய நேரத்தில் நாம் சாலையில் நடந்துசெல்கையில் நம்மை அறியாமலேய நமது நிழலை பார்த்து சில நேரத்தில் அச்சம் கொள்கிறோம். இவ்வாறு சில நேரங்களில் நம்மை அச்சம்கொள்ள வைக்கும் நிழல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
நிழல் என்றால் என்ன?
ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர்.
நிழல் ஏன் கருப்பாக இருக்கின்றது?
நம்மில் பலபேர் நிழல் கருப்பாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் நிழல் கருப்பாக இல்லை, ஒளி அற்று இருக்கிறது.
ஒளி அற்றதை நாம் கருப்பு என்கிறோம், எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால் அது வெள்ளையாகப் புலப்படும், சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும்போது பல வண்ணங்கள் காணப்படும்.
நிசப்தம் என்பது சப்தம் இன்மை என்பது போல, கருமை என்பது நிறம் அல்ல, ஒளி இன்மை.
தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. 54 வயதான சாவ்ஜி, ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் ஆபரணப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் முன்னணி செல்வந்தராக வளம் வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் என்ற வகையில் அதற்கான குஜராத் மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி.
இந்நிலையில் இவரின் மகன் ட்ராவ்யா தொலாக்கியா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். 21 வயதே நிரம்பிய ட்ராவ்யா தொலாக்கியாவுக்கு பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையைப் புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார். இதனை மகனிடமும் கூறியுள்ளார். அவரும் தந்தைப் பேச்சிற்கு மதிப்புக்குக் கொடுத்து தந்தையின் சொல்படி நடந்து கொண்டுள்ளார்.
இது குறித்து சாவ்ஜி தொலாக்கியா கூறுகையில், “என்மகனிடம் நான் சொன்னது ஒன்றுதான். வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால் வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றேன்.
அவரும் அதே போல வாழ்ந்து காட்டியுள்ளார்.” என்கிறார் நெகிழ்வாக.
தந்தையின் சவாலை வெற்றிகொண்ட ட்ராவ்யா தொலாக்கியா தெரிவிக்கையில், ‘அப்பாவின் சொல்படி வேலை தேட நான் தேர்ந்தெடுத்த மாநிலம் கேரளா. எனக்கு மலையாளம் தெரியாது. அங்கு அதிகம் இந்தி மொழி தெரிந்தவர்களும் இல்லை.ஆனாலும் பல இடங்களில் வேலை தேடினேன்.
கொச்சி முழுக்க 60 நிறுவனங்களில் வேலை தேடினேன். கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை. இறுதியாக பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்தது. அடுத்துஅழைப்பு மையம் ஒன்றிலும், மெக் டொனால்ட் கடையிலும் வேலை பார்த்தேன். எல்லாமே சிறு சிறு வேலைகள்தான். ஒரு மாதத்தில் 4000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான், நான் வேலை செய்யும் பேக்கரிக்கு வந்த ஒருவர் எனது வேலையைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகியுள்ளார். அவர் தான் பணிபுரியும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்தார். ஆனால் அப்போது அவருடன் இருந்த நபர்கள் ‘இவரைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவருக்கு வேலை வாங்கித் தரவேண்டாம் என்று கூறினர். இருப்பினும் எனது வேலைத்திறன் அவருக்குப் பிடித்துப் போகவே புதிய வேலைக்குப் பரிந்துரைத்தார். இதற்கிடையே எனது தந்தை நிறுவனத்தில் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது.
என் மீது நம்பிக்கை வைத்து வேலைக்கு ஏற்பாடு செய்த அவருக்கு நன்றி தெரிவித்து, நான் யார் என்றும் என்ன நிலையில் வேலைக்கு வந்துள்ளேன் என்பதை அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார்கள். இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் என்னை மனமார வாழ்த்தினார்.
விரைவில் எனது சொந்த ஊருக்குச் செல்கிறேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மனதோடு குஜராத் பயணமாகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய விஷயம், சக மனிதனுடன் அன்பும் கரிசனமும் கொண்டு பழக வேண்டும் என்பதுதான்” என்றார் வாழ்வின் புரிதலோடு.
தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதிவசதியோ அல்லது ஆவணங்களோ இன்று தாம் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாதுள்ளதாகஅவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தொழிலாளர்களில் பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர்.
தமக்கு தொழில் தருநரால் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பளம் தரப்படவில்லைஎன்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.ஆனால் நான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. காரணம் இலங்கை அணி விளையாடும்போது என்னால் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து போட்டியை ரசிக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் மீது நான் கொண்டுள்ள அன்பு அளப்பரியது.
நாட்டுக்காக பலவற்றை நான் செய்துள்ளேன். ஆனால் இன்று துரோகி என கூறுகின்றனர். ஒன்றை தெரிந்துக்கெள்ள வேண்டும். நான் துரோகி இல்லை கிரிக்கெட் சபைதான் மிகப்பெரிய துரோகி.
2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒருதடவை மாத்திரமே என்னை இலங்கை அணி ஆலோசகராக செயற்படும்படி கேட்டுக்கொண்டது. நான் அப்போது என்னால் முழு நேரமும் அதனை செய்யமுடியாது. என்னால் இயன்ற நேரங்களில் நாட்டுக்காக நான் அதை செய்கிறேன் என கேட்டுக்கொண்டேன்.
இப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயற்படும்போது, என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர். அது பிழையான ஒன்றாகும்.
அவுஸ்திரேலிய அணிக்கு முன்னாள் என்னை இலங்கை அணி அழைத்திருந்தால் நாட்டுக்காக நான் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆலோசகராக செயற்பட்டிருப்பேன். அதனை கிரிக்கெட் சபை செய்யவில்லை. இப்போது குறை கூறுவது தேவையற்றது.
நாட்டில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி நிறத்தை பார்த்து பயிற்சி அளிப்போருக்கு பணம் அளிக்கின்றனர்.
நான் நாட்டை நேசிக்கின்றேன், நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்
மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள்.
ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.
மரணம்தான் இறுதியானது. மறுபிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜேர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த வியப்பூட்டும் அறிவிப்பு என்பது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.
இந்த சர்சைக்குரிய ஆய்வு கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ரீ அனிமேசன் முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்பட்டது. இதற்கு, அந்த உடலின் இரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டொக்டர் பெர்தோல்ட் ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.
அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.
கடந்த சில வருடங்களில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.
தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டவ மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.
ஆனால் மனிதகுல வரலாற்றின் பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற டொக்டர் பெர்தோல்ட் ஆக்கர்மேன் கூறுகிறார்.