வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கடந்தவாரம் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் S.சிந்துஜன் 10.62 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி.ஜெனோயன் 10.02 மீட்டர் தூரத்திற்கு எறிந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் நெல்லியடி மகாவித்தியாலய மாணவன் எஸ்.நிதுசாந் 9.81 மீட்டர் தூரத்திற்கு எறிந்து 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
இசைக்கு மயங்காதோர் இவ் உலகில் இல்லை. அதிலும் எம் தமிழிசைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு.
ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் பஞ்சமூர்த்தி அவர்களின் புதல்வன் K.P.குமரன் குழுவினர் நாதஸ்வர இசையுடன் நவீன இசையையும் கலந்து இசை விருந்து படைத்து வருகின்றனர்.
இவர்களின் காணொளி ஒன்று இரு வாரங்களுக்கு முன்னர் வவுனியா நெற் இணையத்தில் பகிரப்பட்டு இக் காணொளி 9500 க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டு 210 000 பேரால் பார்வையிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு இசையை நீங்கள் இதுவரை கேட்டிருக்க மாட்டீர்கள்.. முடித்தால் ஒருதடவை கேட்டுப்பாருங்கள்..
போதை மற்றும் மதுபாவனை இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மது கொள்வனவுக்காக வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாக இலங்கை மது ஒழிப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய பயன்படும் நிதியின் பெருந்தொகை அழிவடைவதாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சபையின் செயலாளர் சக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
18 தொடக்கம் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விநியோகிப்பது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மதுபாவனையில் இலங்கை முன்னிலையில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு உரையாற்றிய விசேட வைத்தியர் அநுலா விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதனை தடுப்பதற்கான அல்லது இந்த நிலையினை மாற்றுவதற்கான சட்டங்களை உருவாக்குவதோடு, நாட்டில் அதிகரித்துள்ள தற்கொலைக்கும் இந்த மதுபாவனையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறும் கடதாசி மட்டைகளை காண்பித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோதரை – டில்சால் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியு போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு நல்லாட்சிக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன எழுப்பிள்ள கேள்விகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.ஷ
இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில், சுற்றரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. பந்துல குணவர்த்தனவின் கேள்விகளுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அலங்காரம் என்றால் பெண்களுக்கு தான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.
முகம்
பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை.அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்து விடுகிறது.
அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல பேசியல் செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு.
எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முக அழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
பற்கள்
புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். தேனீர் பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.
பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.
சருமம்
பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.
அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள். அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
உடை
உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள்.
சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை அயர்னிங் செய்து அணிவது சிறந்தது.
தலைமுடி
ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
வவுனியா பாவற்குளம் படிவம் 1 இல் வசிக்கும் திருமதி ச.கமலாதேவி தனது ஒரே மகளை 2009.02.28 முதல் காணாமல் போய் இன்னும் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு தாயாவார்.
தனது மகளான ச.சதாநந்தினி காணாமல் போன நாள் முதல் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தனது மனக் கவலையை போக்க வவுனியாவின் ஒவ்வொரு கிராமமாக சென்று கஷ்டப்படும் மக்களை சந்தித்து ஆறுதல்ப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை சமூக நிறுவனங்கள் மூலமாக பெற்று கொடுத்து, தன் மனதுக்கும் ஆறுதலை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரவே தமிழ் விருட் சம் ஊடாக கனடாவில் இயங்கி வரும் ராம் பவுண்டேசனுக்கு தனது நிலையை தெரியப்படுத்தினார்.
அவரது நிலையை உணர்ந்த ராம் பவுண்டேசன் அவருக்கு தேவையான மருந்துகள், இலவச சத்திர சிகிச்சை யாழ்பாணத்தில் நடைபெற இருப்பதால் போக்குவரத்து செலவு உட்பட சகல செலவுகளுக்குமான பணம் என்பவற்றை கடந்த 16.07.2016 அன்று வழங்கினர்.
ராம் பவுண்டேசனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் வழங்கி வைத்தனர் .
ராம் பவுண்டேசனுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து அந்த உதவிகளை திருமதி ச.கமலாதேவி பெற்று கொண்டார்.
மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்திரேலிய ஆய்வொன்று, தனிமையானது மன அழுத்தம், சமூக கவலை, மற்றும் சித்த சம்மந்தமான மன நோய்களை ஏற்படுத்தக் கூடியது என சொல்கிறது.
இந்த ஆய்வானது கிட்டத்தட்ட 1000 பேர்களில் 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் சமூக கவலையுள்ளவர்கள் எதிர்காலத்தில் தனித்துப் போகும் வாய்ப்புக்களிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தனிமையானது நாம் எவ்வளவு நேரம் தனித்து இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, பழகும் மற்றவர்களின் தன்மையும் அதில் அடங்கும் என ஆய்வாளர் Michelle Lim சொல்கிறார்.
அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 – 87 வயதுக்கிடைப்பட்ட 1010 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஏற்படும் மன நிலை மாற்றங்கள் 6 மாதங்களாக மூன்று online ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது தொடர்பான தகவல்கள் Abnormal Psychology எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பதினொருவர் அணிக்கெதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை பதினொருவர் அணி முதலாவது இன்னிங்ஸில் 229 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இதில் குணரத்ன 58 ஓட்டங்களையும், சிறிவர்தன 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஓ கீபி 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் ஓ கீபி அட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், பர்ன்ஸ் 72 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சீல் ஜயசூரிய 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை 243 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை அரம்பித்த இலங்கை பதினொருவர் அணி 83 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதில் ஜயசூரிய மாத்திரம் 29 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஓ கீபி 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலே மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ரவுடிக் கும்பலுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த யூலை 12ம் திகதி அவர்கள் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் அவர் இன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது மைதானத்திற்கு நுழைந்த ஒரு கும்பல் ஹொக்கி மட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் அவரை அடித்து கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை. 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் சம்பவத்தில் 10 பேருக்கும் அதிகமானோருக்கு தொடர்புள்ளதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் இது போன்ற ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. ஆனால் டெல்லி பொலிசார் அவர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.
தமிழகத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வனிதா, இவருடைய மகள் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ்(21) என்பவர் அம்மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த ஆறு மாத காலமாக தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த நச்சுமருந்தை குடித்து பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழவே, அருகில் உள்ள ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து மாணவி கூறியதாவது, நான் என்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தேன். அப்போது பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் அமர்ந்து கொண்டு சுரேஷ் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
மேலும் அவரிடம் படிப்பு தான் முக்கியம் என்று கூறியும், தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே வந்தார். இதனால் செய்வதறியாமல் விஷம் குடித்து விட்டேன் என கூறியுள்ளார்.
பொலிசார் விசாரணையில் அவர் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது, இதனால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இந்த மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர், மூதூர் 5, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கூனித்தீவு பகுதியில் கடைக்குச் சென்ற சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்ததாக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அதற்கமைய குறித்த நபர் திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி அகுரஸ்ஸ – வல்பிட பகுதியில் 50 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 மற்றும் 33 வயதான சகோதரர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மத்தறை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று நீதிபதி, தமிக் தோடவத்தை தீர்ப்பளித்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.
ஜனநாயகம் என்பது வெறுமனே புள்ளடி போடும் ஒரு விவகாரமல்ல. ஜனநாயகம் என்பது நடைமுறையில் அதற்கான மரபுகளையும், சம்பிரதாயங்களையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் கொண்ட அன்றாட நடைமுறையோடு பின்னிப்பிணைந்த விடயமாகும்.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டபோது அதற்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணப்போவதாகக் கூறி வடமாகாணசபை உறுப்பினர்களையும், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்த ஒரு கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் கூட்டியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகரீதியில் முடிவை எட்டுவதாகக் கூறி அது முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்களும் சம்பந்தன் ஐயாவின் கருத்தினை ஏற்று, மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டறிந்தார். இதன் பிரகாரம் ஓமந்தையில் இது அமைவதே பொருத்தமானது என பெரும்பாலானவர்கள் வாக்களித்தனர். இது இத்துடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதன் பின்னர் பாராளுமன்றக்குழு கூடி இந்தக் காணிகளைப் பார்வையிடுவதாகவும், ஓமந்தையிலேயே இதனை நிறுவுவதற்கும் முடிவெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சரை சந்தித்து நீங்களே இதற்கான முடிவை எடுங்கள் என்றும் கூறியிருந்தார்.
அதேசமயம் இன்று தாண்டிக்குளத்தைத் தெரிவு செய்துள்ள அமைச்சர் றிசாத் பதியூதீன், கடந்த 15.06.2010ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அன்றைய வடமாகாண ஆளுநராக இருந்த சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், நகரசபை தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் இணைந்து ஓமந்தையைத் தெரிவு செய்தனர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
ஆட்சி மாறியவுடன் கொள்கையை மாற்றுவது பதவி ஆசை பிடித்த அரசியல் வாதிகளுக்கு கைவந்தகலை. ஆனால் அன்றைய அந்த முடிவானது ஒரு நிபுணர்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அதனடிப்படையில் எடுக்கப்பட்டது.
இன்று எந்த காரணத்திற்காக மத்திய அமைச்சர்கள் இதனை எதிர்க்கிறார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இது இவ்வாறு இருக்கத்தக்கதாக பிரதி அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமுறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டி இது விடயம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோருவதன் நோக்கமென்ன?
ஓமந்தை பிரதேசம் பேய்கள் உலாவும் இடம். அந்த இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முடியாதென அமைச்சர் ஹரிசன் குறிப்பிட்டிருந்தார். அந்த மக்கள் தான் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்து ஹரிசனும் ஒரு அமைச்சராக இருப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை அமைச்சர் ஹரிசன் மறந்துவிடக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கி, வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தை வேறு எங்காவது கொண்டுசெல்ல முயற்சிக்கின்றார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.
வடமாகாண மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடியவாறு இந்த சந்தை அமைய வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் இந்த சந்தையை மையமாக வைத்து அது தம்புள்ள போன்ற ஒரு நகரமாக வளரவேண்டும் என்ற தேவையையும் கவனத்திலெடுத்து, அதற்கான காணி மற்றும் தேவையான வளங்கள் அனைத்தும் ஓமந்தையில் உள்ளதென்பதையும் கவனத்தில் எடுத்து, இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் ஆகியோர் முன்னெடுக்க வேண்டும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வடமாகாண விவசாய சங்கங்கள் அனைத்தும் மற்றும் வடமாகாணத்தைச் சார்ந்த பொருளாதார நிபுணர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுனர்களும் இதற்கு சிறந்த இடம் ஓமந்தையே எனப் பரிந்துரை செய்துள்ளனர். இதற்குப் பின்னரும் இது தொடர்பான தேவையற்ற குடுமிப்பிடி சண்டை தொடர்வதை வடமாகாண பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக இன்று (20.07.2016) கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திரு.மரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சரினால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா நகர கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வலயக்கல்விப் பணிமனையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயங்கராவூரை சேர்ந்த லண்டனில் வதியும் செல்வரத்தினம் பிரபாகரன் அவர்களின் நிதியுதவியுடன் அவரது தந்தையின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பெற்ற இந்த இயந்திரத்தொகுதியில் நாளொன்றுக்கு 2000 லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு லண்டனில் வதியும் செல்வரத்தினம் பிரபாகரன் அவர்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த வடிகட்டிய சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் எதிர்காலத்தில் வவுனியா மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், அமைச்சரின் இவ்வருடத்திற்கான மாகாண நிதியொதுக்கீட்டில் வவுனியா வடக்கில் 02 பாடசாலைகளிலும், செட்டிகுளம் பகுதியில் 03 பாடசாலைகளிலும் இதேமாதிரியான குடிநீர் இயந்திரத்தொகுதிகள் பொருத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘மக்கள் செயற்பாட்டினூடாக பலமானதொரு அமைப்பை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (19.07.2016) வவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந் நிகழ்வானது காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று திரண்டு அனைத்தினதும் நல்வாழ்வுக்காக பொது மக்கள் அதிகாரத்தை எவ்வாறு வலுப்படுத்த முடியும் அல்லது நிறுவ முடியும் என கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க ராஜபக்ச, செயலாளர் பி.ஆர்.ஜெயதிலக அமைப்பின் உறுப்பினர் உப்பாலி மற்றும் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் விவசாய அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.