புகைத்தலில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நூற்றுக்கு 8 வீதமாக காணப்பட்ட போதைபொருள் பாவனை கடந்த வருடம் நூற்றுக்கு 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் தெரிவித்தார்.
பல்வேறு காரணிகள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
13 வயது தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 40,000 பாடசாலை மாணவர்கள் புகைத்தலில் ஈடுபட்டு வருவதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் 29 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இருந்து ஒரு இந்திய பெண் தனது கைகுழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த கன்னாராம் ஸ்ரீநிவாஸ் என்பவர் பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுப்ரஜா. இவருக்கு 5 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். இவர் அங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 அடுக்கு மாடிகளை குடியுருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சுப்ரஜா தனது கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய விக்டோரியா பகுதி பொலிசார், சுப்ரஜா தனது கைக்குழந்தையுடன் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இந்தியாவிற்கு சுப்ரஜாவின் உடலை கொண்டு வரும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் கொலை தொடர்பில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த மாதம் 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாத்தி வெட்டி படுகொலை செய்யபட்டார்.
ஆரம்பத்தில் இக்கொலையானது காதல் விவகாரத்தினால் ஏற்பட்டது என்ற நிலையில் வெளிவரத் தொடங்கிய செய்திகள் இன்று வேறு ஒரு கோணத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.
இக்கொலையானது காதல், ஜாதி, மதம் என்ற கோணத்திலிருந்து தற்போது அரசியலிலும் தாக்கம் செலுத்த கூடியதாக மாறியுள்ளது.
கொலை குறித்து பலரும் பல தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திருச்செங்கோடு யுவராஜ் ஒரு பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளார்.
தனது நிலை குறித்து அடிக்கடி விளக்க ஆடியோக்களை வட்ஸ் அப்பில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் யுவராஜ்.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கு குறித்து தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வன்னி மல்லாவியை சேர்ந்த 36 வயதான திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நித்திரைக்கு சென்ற நிலையில் மறு நாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற குறித்த நபர் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி கராப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மனநல வைத்திய ஆலோசகர் வைத்தியர் ரமணி ரட்ணவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வி மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாக மாறியுள்ளது.
எனினும், இணைய மற்றும் அதனுடன் சார்ந்த தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை வெகுவாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாரிய கடமையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்வதன் ஊடாக மாணவர்களை சாதனையார்களாக மாற்ற முடியும்.
இன்றைய காலகட்டத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கு இணையம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழில்நுட்பம் தேவையை ஊக்கப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று.
இதேவேளை, இணையத்தளத்துக்கு அடிமையாவதன் மூலம், மாணவர்கள் பரீட்சைகளில் தோல்வியயை எதிர்கொள்ளும் போது அவர்களின் மனநிலையை பாதிக்கின்றது.
போதைப்பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்பினை போன்று, இதுவும் மாணவர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அதிகமாக சமூக வலைத்தளங்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்தும் மாணவர்களுக்கு, எந்தவகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் எம்மிடம் சாட்சிகள் உள்ளன.
இதன் காரணமாக, இணையத்தளத்துக்கு அடிமையாகின்றமை ஒரு மனநோயாகவே கருதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த கபாலி திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால், அந்தப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டுமெனக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் இது தொடர்பாக ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வரும் 22ம் திகதி வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படத்திற்கு, திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது என்றும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அனுப்பியதாகவும் ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லெயென்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதுவரை கபாலி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது மனுவில் தேவராஜன் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இது தொடர்பான புகார் கடந்த 15ம் திகதி தான் தபாலில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த மனு உரிய அதிகாரிகளிடம் போய்ச் சேர்ந்ததா, இல்லையா என்று தெரிந்துகொள்ளாமலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசமும் அளிக்காமலும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதைத் தெரிந்துகொண்ட பிறகு நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிய நீதிபதி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
ரஜினி, ராதிகா ஆப்தே நடித்திருக்கும் கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஜூலை 22ம் திகதியன்று வெளியாகிறது.
தான் பெற்ற மழலைச்செல்வங்களைப் பரிதவிக்கவிட்டு, தொலைதூரத்திலுள்ள குழந்தைகளுக்குத் தாயாகி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல தாய்மார்களின் எதிர்பார்ப்பு தனது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே.
அதுவும் பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், அவளை நல்ல இடத்தில் மணம் முடித்து வேண்டும், என்றெல்லாம் அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
ஆனால், பெண்பிள்ளைகளுக்கு வளரும் பருவத்தில் தாயின் அன்பும், பாதுகாப்பும் அவசியம் தேவையென்பதை பல தாய்மார்கள் மறந்து விடுகின்றார்கள்.கணவன், அத்தை, தங்கை, என்று தன்னைச் சுற்றியுள்ள உறவினர்களின் பாதுகாப்பில் பெண்பிள்ளைகளை விட்டு கடல் கடந்து தொழிலுக்காக செல்கின்றார்கள்.
எனினும், துரதிஷ்டவசமாக வேலியே பயிரை மேய்வது போல் பெண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவிருந்த உறவுகளினாலேயே அவர்கள் துஷ்பியோகங்களுக்குட்படுவதும், தாயின் அன்பை காதலன் உருவத்தில் காணச்சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்வதும் தொடர் கதையாகவுள்ளது.
இவ்வாறான பின்னணியில் உள்ள பரிதாபகக் கதையொன்றுதான் இது.
சிறைச்சாலை வாளாகத்திலுள்ள மரத்தடி நிழலில் தனது மகளின் விடுதலைக்காக வாடிய முகத்துடன் காத்திருந்தாள் இந்துனி. அவருடன் கதைக்க முற்பட்ட போது, மிக நீண்ட அமைதிக்கு பின்னர் தனது மகளின் வாழ்வில் அரங்கேறிய அவலத்தை மனம் திறந்து கூறத் தொடங்கினார்.
ஆண் கெட்டால் சம்பவம் பெண் கெட்டால் சரித்திரம் என்று எண்ணும் ஒரு சமூகத்தில் தான் இன்றும் நாம் வாழ்ந்து வருகின்றோம். அதனால் எனது மகளுக்கு நடந்த கொடுமைகளை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியவில்லை.
என்னுடைய சொந்த ஊர் கொழும்பு. நான் கல்விப்பொதுத்தாராதர உயர்தரப் பரீட்சை எழுதிய கையோடு என்னுடைய உறவுக்கார மச்சான் முறையிலான ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
எனது கணவன் ஒரு ஆசிரியர். திருமணத்திற்குப் பின்னர். எனது கணவருக்கு மிகவும் பின்தங்கிய கிராமமொன்றுக்கு ஆசிரியர் இடமாற்றம் கிடைத்ததால் நாங்கள் அந்தக் கிராமத்தில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று குடியேறினோம்.
சில மாதங்களின் பின்னர் நான் கருவுற்றேன். எனவே நான் அங்கு இருப்பது பாதுகாப்பு இல்லையென்ற காரணத்தினால் எனது கணவரின் வற்புறுத்தலில் எனது பிறந்த வீட்டிக்கு வந்தேன்.
ஆனால்,அதன்பின்னர் என்னுடைய கணவர் என்னை விட்டு விலகிச் செல்வதை நான் உணர்ந்தேன். பாடசாலை விடுமுறை நாட்களில் கூட அவர் என்னைப் பார்க்க வருவதில்லை.
நான் எத்தனையோ கடிதங்களை அவருக்கு எழுதிய போதிலும் அவற்றுக்குப் பதில் வருவதில்லை .எனக்கு அது வேதனையளித்தது. இறுதியில் எனது பிரசவ நாளும் நெருங்கியது .
பிரசவத்தின் போது நான் அழகிய பெண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தேன்.அப்பா எனக்கு குழந்தை பிறந்திருப்பதை கூறி அவரை அழைத்துவர அவர் இருந்த கிராமத்துக்குச் சென்றார்.
அப்போது தான் எனது கணவருக்கும் அந்தக் கிராமத்திலுள்ள பெண்ணொருவருக்கும் இரகசியத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அப்பா வந்து என்னிடம் கூறினார்.
அது எனக்கு முதலில் வேதனையாய் இருந்த போதும், நான் எனது மகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.எனினும் மாமா அவரை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்த்து வைப்பதாகக் கூறினார்.
நான் அதற்கு உடன்படவில்லை. நான் எனது அம்மா, அப்பா, தங்கையுடன் வீட்டில் இருந்தேன். அப்பாவின் உழைப்பில் மகளின் செலவுகளையும் பார்த்துக்கொண்டேன்.
எப்படியோ காலச் சக்கரம் விரைவாக ஓடியது. எனது மகள் பாடசாலை செல்லும் வயதை அடைந்தாள். அப்போது அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
எனினும், தொடர்ந்து அப்பாவை கஷ்டப்படுத்த நான் விருப்பவில்லை. எனவே நான் வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன்.அதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்ல ஆயத்தமானேன்.
அப்போது மகளுக்கு நான்கு வயது தான் இருக்கும். அவளின் பிஞ்சு முகத்தை பார்த்தவுடன் அவளை விட்டுச் செல்ல என் மனம் ஆரம்பத்தில் இடம்கொடுக்கவில்லை.
எனினும், அவளின் எதிர்காலத்துக்காக நான் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் எனது மனதை கல்லாக்கிக்கொண்டு மத்தியகிழக்கு நோக்கிப் பயணமானேன்.
அப்போது எனது அம்மாவும் தங்கையும் மகளுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.நான் போன இடத்தில் எனக்கு எந்தவித பிரச்சினைகளும் இருக்கவில்லை.
நான் மகளினதும், எனது பெற்றோரினதும் செலவுகளுக்கு மாதாந்தம் பணம் அனுப்பினேன்.அடிக்கடி மகளின் நினைவுகள் வந்து என்னை நிலைக்குலைய வைக்கும்.
அப்போதெல்லாம் அவளின் புகைப்படத்தைக் கட்டியணைத்து எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன். இவ்வாறு வருடக்கணக்கில் என்னுடைய வாழ்க்கை வெளிநாட்டிலேயே கழிந்தது.
இது இவ்வாறிருக்க மகள் பருவமடைந்தால் , எனது மகளுக்கு நல்லதொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும், சீதனத்துக்கு வீடு, நகைகள் சேர்க்க வேண்டுமென்று என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாகின.
இது இவ்வாறிருக்க, எனக்கு ரூபசிறி என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ரூபசிறி திருமணமாகி மனைவியை இழந்து யாருடைய துணையுமின்றி தனியாக வாழ்ந்தார்.
எனவே, என்னைத் திருமணம் செய்துகொண்டு மகளையும் ஏற்றுக்கொண்டு ஒரே குடும்பமாக வாழ ரூபசிறி விரும்பினார். மகளுக்கு ரூபசிறி மூலம் தந்தையொருவரின் அன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
அதன்படி நாங்கள் இருவரும் இலங்கைக்கு வந்து எனது குடும்பத்தவர்களின் சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டு மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமானோம்.
மகளின் கல்விப்பொதுத்தாரதர சாதாரணதரப் பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியிருந்த வேளையில் என்னுடைய தங்கையிடமிருந்து எனக்கு கடிதமொன்று வந்தது.
அந்தக் கடிதத்தில் மகளின் நடத்தையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். அவள் யாரோ ஒரு இளைஞனைக் காதலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கு அது சற்று குழப்பமாகவிருந்த போதும் மகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும் என்று நினைத்தேன். அதன்பின்னர் பல கடிதங்களை மகளுக்கு அனுப்பினேன். எனினும், அவை எதற்குமே பயனிருக்கவில்லை.
ஒரு நாள் தங்கை நான் பணிபுரிந்த வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மகள் அந்த இளைஞனுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டாள், அவன் நல்லவள் அல்ல என்றும் கூறி அழுதாள்.
அதன்பின்னர், என்னுடைய மகள் எங்கு சென்று விட்டாளோ அவளுக்கு என்ன நடந்திருக்குமோ என்று அறியாதவளாய் மகள் வீட்டை விட்டு சென்று ஒரு மாத நிறைவில் நான் இலங்கைக்கு வந்து சேர்ந்தேன்.
அதன்பின் மகளை நானும், தங்கையும் இணைந்து எங்கெல்லாமோ தேடி அலைந்தோம். ஆனால், மகள் பற்றி எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. மகள் காதலித்த இளைஞன் வீட்டுக்கும் சென்று தேடினோம்.
அங்கு ‘அவனை வீட்டை விட்டே நாங்கள் ஒதுக்கி வைத்துவிட்டோம் அவனை தேடி யாரும் இங்கு வராதீர்கள்’ என்று அவருடைய பெற்றோர் எங்களைத் திட்டி அனுப்பிவிட்டார்கள்.
இப்படி எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் இருக்கும் போதே ஒரு நாள் மகளிடமிருந்து கடிதமொன்று வந்தது.அந்தக் கடிதத்தில் நான் சிறையிலிருக்கின்றேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகள் எழுதியிருந்தாள்,
அதன்பின் தான் நாங்கள் இங்கு வந்து மகளைச் சந்தித்தோம்.மகளைக் காதலிப்பதாகக் கூறி அந்த இளைஞன் போலி நாடகமொன்றை அரங்கேற்றி பின்னர் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச்சென்று, விபசார விடுதியொன்றுக்கு மகளை விற்றிருக்கின்றான்.
அங்கு வைத்து தான் மகள் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு வந்திருக்கின்றாள்.இது நான் சிறைக்கு வரும் இரண்டாவது தடவை. இன்று எப்படியும் மகளுக்கு விடுதலை கிடைத்துவிடும்.
ரூபசிறி மகளை வெளிநாட்டுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டோம்.
இடமாற்றம் நிச்சயம் மகளுக்கு கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க வழிசெய்யும். மகளுக்கு நிச்சயம் நானும் ரூபசிறியும் புதிய வாழ்க்கையொன்றை பெற்றுக்கொடுப்போம்.
இவ்வாறு கண்ணீருடன் கூறி முடிந்தாள் இந்துனி. அவருடைய தளராத நம்பிக்கை இனிமேலும் பொய்யாகிவிட கூடாது என்ற பிரார்த்தனையுடன் அவளிடமிருந்து நாம் விடைபெற்று வந்தோம்.
தெற்கு பிரான்சில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையை காண பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் நைஸ் நகரில் திரண்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக் ஒன்றை வேகமாக ஓட்டிவந்த தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்தில் மோதவிட்டான்.
இந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த சம்பவத்தின் கோர முகம் மறைவதற்குள், தற்போது தெற்கு பிரான்சின், பொலினி என்ற பகுதியில் உள்ள மெர்சில்லி நகரில் பார்முலா-1 என்ற ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி, மற்றும் பயங்கர ஆயுதத்துடன் மர்ம நபர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அங்கு போலீசார் குவிந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சவுதி விமானத்தில் தொழிநுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த விமானத்தில் இருந்த 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று முற்பகல் 11.40 மணியளவில் 258 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்திலே இந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 258 பயணிகள் உயிர்த்தப்பினர்.
இந்த விமானத்தின் கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வரும் நிலையில், கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று(1907.2016) காலை வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை வவனியா தமிழ்மா மன்றம், நகர வரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் அன்னாரின் சிலையினை நிறுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினாகளான் ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் தமிழ்மாமன்றத் தலைவர் கிருபானந்தகுமார், வைத்தியர் மதுகரன், கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்ச சமூக ஆர்வலருமான சந்திரகுமார்(கண்ணன்) வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, அயல் பாடசாலை அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்த கொண்டனர்.
நமது தாய்த் திருநாட்டிலிருந்து இம்முறை பிரேஸிலில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றவிருக்கும் நம் நாட்டு வீரர்களுக்கும் ஊக்கமும் கௌரவமும் வழங்கும் வகையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வானது வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
அந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கே.காதர் மஸ்தான் பா.உ வன்னி அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் சார்பாக அவரது அலுவலக அதிகாரியும் ஆசிய விற்பன்னர் மெய்வல்லுனர் ஜனாப் அஸிஸ் மற்றும் அவரது ஊடக வெளியுறவுச் செயலாளர் நவ்பர் அவர்களும் கலந்து கொண்டனர்.
வவுனியா மணிவாசகர் சபையினர் நடாத்தும் மணிவாசகர் விழா 2016 இன்று(19.07.2016) காலை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா மணிவாசகர்சபை தலைவர் வை.செ.தேவராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியாதனந்தன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோர் கலந்த கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
பேச்சு, பண்ணிசை, சொற்பொழிவு, சிறப்பு சொற்பொழிவினை தமிழருவி த. சிவகுமார் ஆற்றியிருந்தார். இறுதியாக மாணவர்களுக்கு பிரதம விருந்தினரால் சான்றிதழிகளும் வழங்கி வைக்கப்பட்டன். நன்றியுரையினை திருமதி. ஜயம்பிள்ளை ஓய்வு நிலை ஆங்கில உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆற்றினார்.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன.
இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று இருநாடுகளும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாத்தியமான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தையும் மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தென்கொரியாவின் கூடுதல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் மேற்கு நகரான ஹவான்ங்ஜூவில் கடற்கரையில் இருந்து சுமார் 500-600 கிலோமீற்றர் தொலைவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்கட் ஏவுகணைகள் தென் கொரியாவின் அனைத்து பகுதிகளிலும் சென்று தாக்கக் கூடிய வகையில் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவாதிக்கு பெங்களூரில் ஆண் நண்பர் ஒருவர் இருந்தார். இருவருக்கும் பதிவுத் திருமணம் கூட நடந்து முடிந்து விட்டது. இதனால்தான் சுவாதியை அவரது குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர் என்று ராம்குமாரின் வக்கீல் ராமராஜ் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஆண் நண்பரை ஏன் பொலிசார் விசாரிக்கவில்லை என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த பதிவுத் திருமண விவகாரம் தொடர்பாகவும் பொலிசார் விசாரணை நடத்தாதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார். இதேபோல அவர் மேலும் பல சந்தேகங்களையும் கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் தமிழக பொலிஸார் விசாரணை ஏதும் நடத்தினரா என்று தெரியவில்லை.
அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக சுவாதியின் நெருங்கிய தோழிகள் குறிப்பாக பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் தோழிகள் அல்லது நெருக்கமான சக ஊழியர்கள் காவல்துறைக்கு உதவ முடியும் என்று கூறப்படுகிறது.
சுவாதிக்கு உண்மையிலேயே அங்கு ஏதேனும் பிரச்சினை இருந்ததா, வேறு யாருடனாவது அவருக்கு பிரச்சினை இருந்ததா என்பது போன்ற தகவல்களை அவரது நெருங்கிய தோழிகள், தோழிர்கள் அளிக்க முன்வரலாம் என்றும் ராம்குமார் தரப்பில் எதிர்பார்க்கிறார்கள்.
ஒருவேளை ராமராஜ் சொல்வது போல சுவாதிக்கு பெங்களூரில் பதிவுத் திருமணம் நடந்திருந்தால் நிச்சயம் யாராவது சாட்சிக் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
அப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்கள் தாங்களாக முன்வந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க முன்வந்தால் இந்த வழக்கில் உண்மையிலேயே வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரிக்க அல்லது பிடிக்க உதவியாக இருக்கும் என்றும் ராம்குமார் தரப்பு எதிர்பார்க்கிறது.
இதுதொடர்பாக பெங்களூரில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். ராம்குமார் பக்கம் மட்டுமே போலீஸார் தங்களது கவனத்தை செலுத்தாமல், சுவாதிக்கு இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் ராம்குமார் தரப்பு எதிர்பார்க்கிறது.
16 வயது மாணவி ஒருவரை காணவில்லை எனும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனும் பெற்றோரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த மாணவி 16 வயதுடையவர் எனவும், மாணவி வழமை போன்று பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை என்றும் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவி திங்கட்கிழமை பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை என பாடசாலை தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் காத்தான் குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையின் சுடர் பேரணி ஐந்தாவது நாள் பயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் நம்பிக்கையின் சுடர் பேரணியின் பயணம் ஆரம்பமாகியது.
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நம்பிக்கையின் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது வடமாகாண விளையாட்டுத்துறை உதவிப்பணிப்பாளர், வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
நம்பிக்கையின் சுடர் பேரணி ஏ9 வீதியூடாக ஆனையிறவு, கிளிநொச்சி ஊடாக வவுனியா நோக்கி பயணித்தது.
நேற்று வவுனியாவை வந்தடைந்த நம்பிக்கையின் சுடர் பேரணியின் இன்று வவுனியாவில் இருந்து புறப்பட்டது.