யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது.
இச் சம்பவத்தையடுத்து இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இக் கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைக்கழக பதிவாளரால் வெளியிடப்பட்டது.
மேலும் விரிவுரையாளர்களும், மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதனையும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ- 320 ரக விமானங்களை தரையிறக்கும் வகையில் விமான நிலையம் அபிவிருத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 200 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையான இந்த விமானங்களை தரையிறக்குவதற்கான ஓடுதளம் அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பில் இந்திய விமான நிலைய அதிகாரசபையினூடாக செயலாக்க ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
உள்ளக மற்றும் அயல் நாடுகளிலிருந்து விமான சேவைகளை பலாலி விமான நிலையத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சிறிது நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 161 பயணிகள்அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 161 பயணிகளுடன்ஒரு விமானம் துபாய் புறப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பது சில நொடிகளில் கண்டறியப்பட்டது.
இதனால் விமானிகள் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். இதன் பின்ன இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாக விமானம் துபாய்க்கு புறப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போதே கண்டறியப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஞாற்றுக்கிழமை (17.07.2016) ஆரம்பமானது.
ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறவுள்ள இச் சுற்றுப் போட்டியில் இதுவரை 25க்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள் பதிவுசெய்துள்ளதுடன் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
இச் சுற்றுப் போட்டியில் உங்கள் விளையாட்டுக்கு கழகமும் இடம்பெறவிரும்பினால் லயன்ஸ் விளையாட்டுக்கு கழகத்தை தொடர்புகொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சுவாதியை எவ்வாறு வெட்டினேன் என்பது குறித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் நடித்துகாட்டியுள்ளார்.
ராம்குமாரிடம் பொலிஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து பொலஸ் அதிகாரி கூறியதாவது, எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13ம் திகதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றோம்.
பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த ஊடகங்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்குமாரை அங்கு கொண்டு சென்றோம். பின்னர் கொலை செய்த விதத்தை நடித்துக்காட்ட சொன்னோம்.
கொலை நடந்த தினத்தன்று ராம்குமார் வந்த வழி, சுவாதியை எங்கே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தார், பின்னர் அவரை நெருங்கி வெட்டிய விதம், வெட்டு விழுந்த விதம், எத்தனை முறை வெட்டினார், தப்பி ஓடிய விதம், எந்த வழியாக தப்பி ஓடினார்.
அரிவாளை தூக்கி எறிந்த இடம், மேன்ஷனுக்கு கடந்து சென்ற வீதிகள் போன்றவற்றை நடித்துக் காட்டினார். நாங்கள் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.
ராம்குமார் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் 3 சிசிடிவி கமெராக்களில் பதிவாகி உள்ளது.
ராம்குமாரும்,வீடியோ காட்சியில் இருக்கும் நபரும் ஒருவர்தானா என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
காணாமல் போயிருந்த 5 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் ஒன்று கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி – வட்டக்கச்சி, புதுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்ஷன் எனும் 5 வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுவனை தேடும் பணிகளில் பெற்றோர்கள் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் சிறுவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சிறுவனின் சடலம் இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி த. திருலோகமூர்த்தி முன்னிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும், சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இது தொடர்பில் இரு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளதாக, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொள்ளை உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததன் அடிப்படையில், கடந்த 11ம் திகதி சந்தேகத்தின் பேரில் கார் ஒன்றை சோதனையிட்ட போது, அவற்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் சில காணப்பட்டன.
இதனையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் பல நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.
இந்த நகைகள் கடைகளில் விற்கப்பட்டிருந்ததாகவும், கொழும்பு வரை சென்று அவற்றை மீட்டிருந்ததாகவும் அவற்றில் பல நகைகள் உருக்கப்பட்ட நிலையில் கட்டிகளாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மோசடியான வகையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இது குறித்து தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக நேற்று மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
அத்துடன், மீட்கப்பட்ட நகைகள் மொத்தம் 128 பவுண்கள் எனவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கைது நடவடிக்கையினால் மேலும் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்த யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண, சந்தேகநபர்களை கைப்பற்றப்பட்ட நகைகளுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்கள வடமாகாண அரையாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (16.07.2016) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வவுனியா மேல்நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம். நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வடமாகாண நீதிமன்றங்களில் கடமையாற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலைப் பரிசோதகர்கள் பங்குபற்றி தங்களுக்குக் கிடைக்கப்பெறும் சமுதாய சீர்திருத்தக் கட்டளைகள், முன்னேற்றங்கள், அடையப்பெற்ற வெற்றிகள் மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட அடைவு மட்டங்கள் தொடர்பாக நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் அலசப்பட்டது.
இதில் அதிகமான கட்டளையாளர்கள் மன அழுத்தங்கள், குடும்பப் பிரச்சனைகள்,போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் கஞ்சா பாவணைக்கு உட்பட்டவர்கள் என பட்டியல் நீண்டு செல்கின்ற அறிக்கையினை தெளிவுபடுத்தியதுடன் அவர்கள் 22 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் திணைக்களம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் தமது சேவைகளையும் செயற்திட்டங்களையும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாகவும் கருத்துரை வழங்கியதுடன் அவர்களை எமது திணைக்களத்துடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்தார்.
இக் கூட்டத்திற்கு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை மற்றும் மல்லாகம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலை பரிசோதகர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வவுனியாவில் நேற்று (16.07.2016) காலை 11 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் 28 வயது சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு பொதி செய்யப்பட்டு ஒரு கிலோ கேரள கஞ்சாவினை விற்பனை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா விற்பனை செய்யும் சந்தேக நபரையும் கேரளா கஞ்சா பொதியினையும் கைது செய்து மாமடு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாமடு பொலிசாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மாமடு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று முன்தினம் (15.07.2016) வெடிக்காத நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (15.07.2016) பனைமரம் ஒன்றிக்கு கீழ்ப்பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதனை அவதானித்த பொதுமகன் ஒருவர் ஒமந்தை கிராம அலுவலகர் மூலம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விஷேட அதிரடிப்படையிரின் உதவியுடன் ஆறு கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர்.
புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீர மக்கள் தின நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு நேற்று (16.07.2016) சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது.
புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளர் தோழர் எம்.பற்றிக் அவர்களின் நெறிப்படுத்தலில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை அடுத்து கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வு பெற்ற அதிபர் திரு.சிவசோதி, கழகத்தின் உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கழகத்தின் உப தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ராகவன், தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கழக பொருளாளர் இளங்கோ, முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் அன்ரன் பொன்னையா,
மகளிர் அணியைச் சேர்ந்த தோழர் ஜெஸ்மின், செயற்குழு உறுப்பினர்களான செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் தோழர் குகதாசன், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்), மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசம்பு, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூரி, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக், கழகத்தின் மாவட்ட குழு உறுப்பினர்களான தவராஜா மாஸ்டர், நிஷாந்தன், ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, தனியார் பேரூந்து நடத்துனர் சங்கத் தலைவர் ரஞ்சன், இளைஞர் அணி சார்பில் பிரதீபன் ஆகியோர் ஈகைச்சுடர்களினை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கழகத்தின் செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் மலர் அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
மலர் அஞ்சலியினை தொடர்ந்து, நினைவுரையினை ஓய்வுபெற்ற அதிபர் திரு சிவசோதி அவர்கள் நிகழ்த்தினார். அதனை அடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரெலோ அமைப்பைச்சேர்ந்த திரு வினோ நோகராதலிங்கம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.
அதனை அடுத்து கழகத்தின் ஜேர்மன் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மறைந்த கழக உறுப்பினர்கள் இருவரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களாலும் செயலாளர் சு.சதானந்தன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது..
தொடர்ந்து கழகத் தலைவர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இறுதிநாள் நிகழ்வு சிறப்பு நினைவுரையை ஆற்றினார்.
இறுதியாக நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைவரும் அங்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த சக கட்சித் தலைவர்கள் சக அமைப்பு போராளிகள், கழக கண்மணிகள் அனைவரது உருவப்படங்களுக்கும் விசேட அஞ்சலிகளையும் வணக்கங்களையும் செலுத்தியிருந்தனர்.
இறுதி நாள் நிகழ்வுகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சு.காண்டீபன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை நீடிக்கிறது.
சுகயீனம் காரணமாக கூட்டமைப்பின் இந்தக் கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார் என அறிந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்து பேசியிருந்தேன். அப்பொழுது பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளேன்.
அது எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேசி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்.
அது விரைவாக எடுக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விடயத்தில் குழப்பம் காணப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது பற்றி உறுப்பினர்களுடன் பேசி பொது முடிவுக்கு வர முயற்சி எடுப்பார்.
ஓமந்தை, தாண்டிக்குளம், மூன்று முறிப்பு காணிகள் குறித்தும் முதலமைச்சர் தெரிவித்தார். ஓமந்தையே சிறந்தது எனத் தெரிவித்தார். அதில் அமைக்க முடியாது போனால் மூன்று முறிப்பு காணியில் அமைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடினார்.
அது நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் அப்படி கொடுக்கப்படவில்லை, அதனை விடுவிக்க முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விரைவாக முடிவு எட்டப்பட வேண்டும்.நாங்கள் ஏற்கனவே இது தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஜனநாயக ரீதியாக முடிவெடுக்குமாறு கூறியுள்ளேன்.
நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம் தூக்கவில்லை. வன்முறைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத்திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இதன்போது வவுனியா விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவரிடம் மனு ஒன்றினை கையளித்திருந்ததுடன், வவுனியா மொத்த மரக்கறி விற்பனை சங்கத்தினரால் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் எனவும் மனு ஒன்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து நாட்டில் பெண் ஒருவரின் சிறு வயதில் ஏற்பட்ட சிறிய புற்றுநோய் கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டதால் பத்து வருடத்திற்கு பின் அவர் தனது காலை இழந்துள்ளார்.
ஸ்கொட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் ஜெரில் முர்ரே (27) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 15 வயதில் வலது காலின் பாதத்தின் பக்கவாட்டில் ஒரு மிகச்சிறிய கட்டி போன்று உள்ளதை பார்த்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.
அது வளர்ந்து வருவதை கவனித்தும், குடும்பத்தாரிடமும், தனது நண்பரிடமும் கூட சொல்லவில்லை. இப்படியே பத்து வருடங்களை கழித்தார்.
2014ம் ஆண்டு கோல்ப் பந்தின் அளவில் கட்டி பெரிதானது, இறுதியாக வேறுவழி இல்லை என்று தனது நண்பர் டெவிட் மெக்கென்ஷி-யிடம் கூறினார். விஷயத்தை அறிந்த மெக்கென்ஷி இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் அழைத்து சென்றார். முர்ரே காலில் உள்ள கட்டியை, சோதனை செய்த மருத்துவர்கள் அது புற்றுநோய் கட்டி என்று உறுதிப்படுத்தினர். மேலும் அது உடலில் பரவாமல் இருக்க காலின் மூட்டுக்கு கீழே உள்ள பகுதியை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினர்.
இதைக் கேட்ட முர்ரே, தனது வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாகவே பயந்தார். இதை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் தெரிவித்திருந்தால் இப்படி ஒரு இழப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என்று புலம்பி, முழு தன்னம்பிக்கையும் இழந்தார். பின்னர், வேறு வழியில்லை நடப்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.
2014ம் ஆண்டு ஜூன் மாதம் கிளாஸ்கோ ராயல் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. புற்று கட்டியுடன் காலின் மூட்டிற்கு கீழே உள்ள பகுதியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றினர்.
சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது செயற்கை காலுடன் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார். வாழ்க்கை முடிந்தவிட்டதாக நினைத்து வருந்திய அவரது வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாக மாறுவதற்கு, முழு காரணமும அவரது நண்பர் மெக்கென்ஷி.
முர்ரேவின் இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு எல்லா உதவியும் செய்து, அவருடன் பயணித்துள்ளார். செயற்கை காலுடன் இருக்கப்போகும் பெண்ணை விரும்பாத பெரும்பாலானோர் மத்தியில், முர்ரே-விற்கு சத்திர சிகிச்சை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது வாழ்நாள் முழுவதும் அவருடன் வாழ விருப்பம் உள்ளதாக கூறி அவரிடம் சம்மதம் கேட்டுள்ளார் மெக்கென்ஷி. இந்த சொல்லே, முர்ரேவை மிக வலிமையானவளாக மாற்றி உள்ளது.
கடந்த கால வாழ்க்கையை நினைத்து கவலைப்படாமல் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களை மகிழ்ச்சியாக கடந்து தற்போது திருமண நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிச்சயதார்த்தத்துக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினையில், திராவகம் ஊற்றி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவருடைய மகள் ஸ்ரீவித்யா என்ற வித்யா (21). சிறுவயதிலேயே தந்தையை இழந்த வித்யா தன்னுடைய தாயார் சரஸ்வதி, அண்ணன் விஜய் ஆகியோர் பாதுகாப்பில் வளர்ந்தார்.
சரஸ்வதி வீட்டு வேலைகளை செய்து மகளையும், மகனையும் வளர்த்து வந்தார். இதற்கிடையில், பிளஸ்-2 படித்து முடித்த வித்யா, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் மெயின் வீதியில் உள்ள கணனி மையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது, ராபின் என்பவருடன் வித்யாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், ராபினுக்கு கெட்ட பழக்க வழக்கம் இருந்ததால், அவரை விட்டு, வித்யா விலகினார்.
இதன்பின்னர், கணனி மையத்துக்கு அடிக்க வந்து சென்ற விஜயபாஸ்கர் என்ற வாலிபர், வித்யாவை காதலிப்பதாக கூறினார். காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அவர் மிரட்டினார். இதனால், முதலில் காதலை ஏற்காமல் இருந்த வித்யா, பின்னர் படிப்படியாக அவரை ஏற்றுக்கொண்டார். இந்த காதலை இருவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தையும் செய்து வைத்தனர்.
இதையடுத்து, வித்யாவை விஜயபாஸ்கர் அடிக்கடி வெளியில் அழைத்து சென்று வந்தார். இதற்கு வித்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் முடியும் வரை விஜயபாஸ்கருடன் வெளியில் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து வித்யா அவருடன் வெளியில் வர மறுத்து விட்டார். இதனால், விஜயபாஸ்கர் சிறிது காலம் கடுமையான கோபத்தில் இருந்தார்.
வித்யா தன்னை ஏமாற்றுவதாக விஜயபாஸ்கர் நினைத்துள்ளார். இந்த கோபத்தில், கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி கணனி மையத்துக்குள் புகுந்து வித்யா மீது அவர் திராவகத்தை வீசியுள்ளார். ஆனால், வித்யா, குனிந்து கொண்டதால், அவருடைய உடலில் சில இடங்களில் மட்டும் திராவகம் பட்டது. வீசப்பட்ட திராவகம் தரையில் கொட்டிக்கிடந்தது.
ஆத்திரம் தீராத நிலையில் இருந்த விஜயபாஸ்கர், வித்யாவை தரையில் தள்ளி அவரது முகத்தை தரையில் கொட்டிக்கிடந்த திராவகம் மீது வைத்து தேய்த்தார். இதில் வித்யாவின் முகம் வெந்தது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களை தள்ளி விட்டு, விஜயபாஸ்கர் தப்பியோடி விட்டார். உடல் வெந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் வித்யா சேர்க்கப்பட்டார்.
அப்போது, நீதிபதியிடம் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக வித்யா கொடுத்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதையடுத்து ஆதம்பாக்கம் பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து, விஜயபாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, விஜயபாஸ் கருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 28ம் திகதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயபாஸ்கர், சென்னை மேல்நீதிமன்றில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் வித்யாவின் முதல் காதலன் ராபின், வித்யா மீது திராவகத்தை ஊற்றியதாகவும், அதை தடுக்கச் சென்றபோது தன் உடலிலும் காயம் ஏற்பட்டது என்றும், இந்த வழக்கில் ராபினை கைது செய்யாமல், தன்னை கைது செய்து விட்டதாகவும் விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
உண்மையில் விஜயபாஸ்கர் உடலில் காயம் உள்ளது. அவர் சொல்வதை உண்மை என்று கருத்தில் எடுத்துக் கொண்டாலும், இறந்து போன வித்யா திராவகம் வீச்சு குறித்து, நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், விஜயபாஸ்கர்தான் திராவகம் ஊற்றினார் என்று தெளிவாக கூறி இருக்கிறார். சாகும் நிலையில் இருக்கும் ஒரு பெண், உண்மையான குற்றவாளியை காப்பாற்ற நினைக்க மாட்டார். அதேநேரம் குற்றவாளியை காப்பாற்ற அப்பாவி மீது பழியை போடமாட்டார்.
கீழ் நீதிமன்றம் அனைத்து தரப்பு சாட்சிகளின் அடிப்படையின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. இதில் நாங்கள் தலையிடத் தேவையில்லை. கீழ் நீதிமன்ற தண்டனையை உறுதி செய்கிறோம். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
பிலியந்தலை – மஹரகம வீதியின் ஜெயமாவத்தை பகுதியில் காரொன்றில் சென்று கொண்டிருந்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 07.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வர்த்தக சங்கத்திற்கு இன்று (16.07.2016) காலை ஜே.வி.பி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திசாநாயக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அதன்போது வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம் அனுர திசாநாயக்கவிற்கு சிறப்பான வரவேற்பினை வழங்கியதுடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அனைத்தையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அது தொடர்பாக உரியவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில் வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், செயலாளர், பொருளாலர், மற்றும் சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.