நிர்ணய விலையை விட அதிக விலைக்கு, பொருட்களை விநியோகிக்கும் வர்த்தகர்களை கைதுசெய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
16 வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் நேற்றுமுன்தினம் இரவு முதல் நிர்ணய விலை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கோழியிறைச்சி, சிவப்பு பருப்பு, நெத்தலி, கடலை, பயறு, ரின்மீன், வெண்சீனி, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் உள்ளூர் பால்மா, இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கட்டா கருவாடு, சாலயா மற்றும் மாசி கருவாடு, சஸ்டஜன் மா என்பவற்றிற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது.
துருக்கியின் தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். ஹம்சா தெரிவித்துள்ளார்.
துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியின் போது இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்காரா நகரிலிருந்து நியூஸ்பெஸ்டுக்கு அவர் குறிப்பிட்டார்.
துருக்கியின் அதிகாரத்தை தாம் கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டின் இராணுவ குழுவொன்று அறிவித்திருந்தது.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை சமாதான பேரவையின் கீழ் கொண்டுவரவுள்ளதாக அந்த இராணுவ குழு மேலும் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், விடுமுறையில் சென்றிருந்த துருக்கி ஜனாதிபதி டையிப் எர்டோகன் இஸ்தான்புல் நகரைச் சென்றடைந்துள்ளதுடன், இந்த சதிமுயற்சி தேசத்துரோக செயலாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
துருக்கியில் இராணுவ சதிமுயற்சியின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் 40 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பீ.பீ.சீ. உலக செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றுள் இரண்டு பாடசாலைகளும், இரண்டு முக்கிய அமைச்சுக் கட்டடங்களும் அடங்குவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
இதுதவிர வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6500 இற்கும் அதிகமான இடங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றுள் சுமார் 4100 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கூறினார்.
மேல் மாகாணத்திலேயே நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான அதிக இடங்கள் அடையாளம் காணப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடுமுழுவதும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தங்களின் கடமையின் போது விடுக்கப்படும் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அரசியல் களத்தில் இது என்ன வித்தியாசமான கட்டுரை என்று நிச்சயம் இதற்கு காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக மிருகவதை அதிகரித்து விட்டது. இதனை அரசியலாக பார்க்காமல் தீர்வு ஒன்று நிச்சயம் கிடைக்கபெற வேண்டும். இனி விலங்குகளை வதைப்பதை பற்றி நினைத்தால் அரசியலால் கொண்டு வரப்படும் சட்டத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் ஓர் அச்சம் நிச்சயம் எழ வேண்டும்.
மிருகங்களை கொடூரமான முறையில் வேட்டையாடுவது தொடர்பான சம்பவங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னால், ஈவிரக்கமில்லா முறையில் ஒரு கழுகின் தோலை உரித்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
எதற்காக இந்த போலி விளம்பரம் ஓர் உயிரைத் தண்டித்து, அழித்து வாழ்வது தான் மனித தத்துவமா?
இந்த குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது, தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இரக்கமில்லாத விலங்குக் கொலைக் குற்றஞ்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்களேயான நிலையில், மீண்டும் ஒரு கொடூர கொலை பதிவாகி விட்டது.
வன விலங்குகளை வேட்டையாடி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது.
இந்த புகைப்படங்களில் மான், காட்டுப்பூனை, வெளவால், முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டுக்கோழி மற்றும் மர அணில் போன்றவற்றை வேட்டையாடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது.
இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை குற்றவாளிகளுக்கு ஆர்வத்தை துண்டுவதாகதான் இருந்தன. கொலையாளிகள் அவற்றை தொங்கவிட்டு, தோலுறித்தது மாத்திரமன்றி, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதற்கு தயார் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இவை அனைத்தும், அரசு தவறு செய்தால் மன்னிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 28, 30, 33 மற்றும் 42 வயதுடையவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சாஜித் மொஹமட் சரான், நலிந்த வீரதுங்க, ரவீந்திர வீரதுங்க, ருவன் சஞ்ஜீவ, மருதன் நந்தகுமார் மற்றும் சந்திரசேகரன் விஜயகாந்த் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டது.
இது தண்டனை அல்ல. கொடுக்கப்படும் தண்டனைகள் மக்கள் மத்தியில் மிருகவதை பற்றிய எண்ணங்கள் கூட எழாத வண்ணமாக அமைய வேண்டும் அளவு இருக்க வேண்டும். மனிதனைத் கொன்றால் மட்டும் தான் தண்டனைகளும் தீர்ப்புகளும் பயங்கரமாக வேண்டுமா? காரணம் புரியவில்லை அனைத்தும் உயிர் தானே எனும் எண்ணம் மனித மனத்தில் விதைக்கப்பட வேண்டும்.
இதேவேளை, காட்டு விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காலம் கனிந்துள்ளது.
30 வருடங்கள் பழமையான வனஜீவராசிகள் சட்டத்தை, முழுமையாக திருத்த வேண்டும்.மனிதர்களைப் போன்று, மிருகங்கள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அப்படி மாற்றங்கள் உருவாக்கப்படும் எனின் வெறுமனே வாழ்ந்தோம் இறந்தோம் என வாழும் மனிதம் எதிர்காலத்திற்காக எதையாவது விட்டு செல்லும் அது நாளைய பசுமையாக அமையப் பெறும் என்பதில் மட்டும் எவ்வித ஐயமுமில்லை.
கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும், உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் செல்லக்கூடிய நாடாகவும் பிரான்ஸ் இருந்து வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக அமைந்துள்ள பிரான்ஸ் அண்மைய நாட்களில் அதிகளவான தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் இலக்காக பிரான்ஸ் மாறியுள்ளது என்றே கூறலாம். அந்தளவுக்கு அந்நாடு மீது கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரான்ஸை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 230 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7ஆம் திகதி “சார்லி ஹெப்டோ” என்ற ஊடக நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நேற்றைய தினம் வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
குறித்த ஊடக நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பாரிஸ் நகரில் வைத்து பெண் ஒருவர், சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் அல்ஜீரியாவை சேர்ந்த சையத் அகமது என்பவர் கைது செய்த பொலிஸார், அவருக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இப்படி சிறிது சிறிதாக இடம்பெற்ற தாக்குதல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாரிஸ்சில் பாரிய தாக்குதலாகவே நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்த தாக்குதல் இடம்பெற்று முழுமையா ஒரு வருடம் கூட கழியாத நிலையில் நேற்றைய தினம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்திர் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது லொறியினை மேத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 84 பேர் வரை கொலை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறிதும் பெரிதுமாக மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இழக்காகி இது வரைக்கும் 230க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தன் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரான்ஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பானது தனது தாக்குதலை மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளகூடிய வாய்ப்புள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் எயிட்ஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரதன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக்க வேண்டுமென உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அழைப்பாளர் அசேல சம்பத் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள், பால் தேனீர், தேனீர் போன்றவற்றின் விலைகளை ஹோட்டல் உரிமையாளர்கள் காட்சிப்படுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
அநேகமான ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலைகள் வித்தியாசப்படுகின்றன.இதனால் ஹோட்டலுக்குச் செல்லும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இப்போது பால் தேனீரை எடுத்துக் கொண்டால் 35, 40 மற்றும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விலை நிர்ணயம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.தமக்கு விரும்பிய விரும்பிய விலைகளில் பால் தேனீரை விற்பனை செய்ய முடியாது.
முட்டை அப்பம், ரோல்ஸ், முட்டை ரொட்டி, பெடிஸ் போன்றனவும் இவ்வாறே ஓர் விலை நிர்ணயத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை.
எனவே அனைத்து ஹோட்டல்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
மரக்கறி வகைகளையும் அத்தியாவசியப் பண்டங்களாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், நான் நீ என்று பிரதமர் பதவிக்குப் போட்டி நிலவாமல், நான் இல்லை, நான் இல்லை என்று பலரும் களத்திலிருந்து விலகிய அசாதாரண சூழல் ஏற்பட்டது என்பதுதான்.
பிரதமர் பதவி என்பது, பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளராக இருக்கும் தெரஸா மேயின் மடியில் வந்து தானாகவே விழுந்தது என்பதுதான் உண்மை.
போட்டியில் இருப்பவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் போட்டியிலிருந்து விலகி, அவர் தேர்ந்தெடுக்கப்படும் தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.
26 ஆண்டு இடைவெளியில் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு, தெரஸா பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்று இருக்கிறார்.
கருத்து வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திய போரிஸ் ஜான்ஸன் பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்குவதற்கு முன்பே, தான் போட்டியில் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இன்னொரு “பிரெக்ஸிட்’ ஆதரவாளரான மைக்கேல் கோவ், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டார். விளைவு, தெரஸா மே பிரதமராக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
நீண்ட நாள் அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் கொண்ட தெரஸா மேயின் செயல்பாடுகளும், கொள்கை முடிவுகளும் பலராலும் அவரை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிட வைக்கின்றன.
அவர் உள்துறை செயலராக இருந்த ஆறு ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை.
அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புகள், எல்லைப் பிரச்னைகள், காவல் துறை சீரமைப்பு போன்றவை பரவலான பாராட்டைப் பெற்றன.
வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது குறித்த அவரது கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும், கருத்து வாக்கெடுப்பு நடந்தபோது, பிரதமர் கேமரூனைப் போலவே, தெரஸா மேயும் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தை வற்புறுத்தினார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை பிரிட்டன் அனுமதிக்கக் கூடாது என்கிற கருத்துடைய தெரஸா மே உள்துறைச் செயலாளராக இருந்தபோது, ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வெளிநாட்டவரை அனுமதிக்கக் கூடாது என்கிற வரம்பை நிர்ணயிக்க முற்பட்டார் என்றாலும், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் பிரிட்டனின் நுழைவு அனுமதி (வீசா) கேட்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் 3,000 பவுண்டு வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், தங்களது கல்விக் கடனை அடைப்பதற்கு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகும் தங்கி இருந்து வேலை பார்க்க அனுமதி கிடையாது என்றும்கூட உத்தரவு பிறப்பிக்க இருந்தார் என்பதை மறந்து விட முடியாது.
ஒருபுறம், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்றும், இன்னொரு புறம் பிற நாட்டவர் பிரிட்டனில் குடியேறுவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர் தெரஸா மே என்பதால்தான் “பிரெக்ஸிட்’ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரு சேர இவருக்கு ஆதரவாக இருந்தனர்.
தாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற சூழலில், பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடருமா என்று பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், “பிரெக்ஸிட் பிரெக்ஸிட்தான்’ என்பது.
அதேநேரத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த தெரஸா மே தொடர்ந்து கூட்டமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பும் நல்லுறவும் தொடர முயற்சி மேற்கொள்ள கூடும்.
இனிமேல்தான் பிரிட்டன், எப்படி அதிக பாதிப்பு இல்லாமலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடனான நட்புறவு பலவீனப்படாமலும், அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறது என்பது தெரிய வரும்.
ஐரோப்பிய கூட்டமைப்புடனான பிரிட்டனின் நாற்பதாண்டு உறவைத் துண்டித்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. இது பிரிட்டனின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடும்.
அப்படி பாதிக்குமானால், இப்போது வெளிநாட்டினரின் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய பிரிட்டிஷ் குடிமக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவார்கள்.
அதைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் தெரஸா மே எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியபோது, பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்டது போன்ற மிகப்பெரிய சவால்கள், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தெரஸா மேயையும் எதிர்கொள்கிறது.
பிரெக்ஸிட் தீர்ப்பால் பிளவுபட்டுக் கிடக்கும் பிரிட்டனை ஒற்றுமைப்படுத்தும் பணி மிகப்பெரிய சவால்.
அதைவிடப் பெரிய சவால் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும்.
கன்சர்வேடிவ் கட்சி ஒற்றுமையாக இருக்குமா, அவரது தலைமையை ஒருமனதாக ஏற்று நடக்குமா என்பதைப் பொறுத்துத்தான், தெரஸா மேயின் எதிர்காலமும், பிரிட்டனின் வருங்காலமும் அமையும்.
ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை ராணுவத்தின் ஒரு பகுதியினர் கவிழ்த்து நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளதற்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அரசை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள ராணுவம், அங்கு ராணுவ சட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளதோடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளரான பான் கி மூன், துருக்கி மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டுமின்றி கள நிலவரத்தை உடனடியாக தெரிவிக்கும்படியும் கோரியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, துருக்கியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் புது வெளிவிவகாரத்துறை செயலரான போரிஸ் ஜான்ஸன், துருக்கியில் நடைபெற்றுவரும் நிலவரம் கவலை கொள்ளும்படி உள்ளது எனவும், நிலைமை சீரடையும் வரை பிரித்தானிய நாட்டவர்கள் பொது இடங்களில் செல்வதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல், இதுவொன்றும் லத்தீன் அமெரிக்க நாடல்ல, அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளவர்கள் தங்களது ராணுவ குடியிருப்புகளுக்கு செல்லவும் என்றுள்ளார்.
முன்னாள் துருக்கி பிரதமர் அஹ்மத், துருக்கி ஒரு ஜனநாயக நாடு, ஆட்சியை கவிழ்க்கும் இந்த முயற்சி வெற்றிபெறும் என நான் நம்பவில்லை என்றார்.
ஜேர்மனி அதிபர் அஞ்சலா மெர்க்கல், துருக்கியில் ஜனநாயகத்தை உடனடியாக நிலை நாட்ட ஆவன செய்ய வேண்டும், பொதுமக்களின் உயிர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் நேரக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.
தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் பலவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சதிப்புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ராணுவ சதிப்புரட்சி என்று குறிப்பிட முடியாது என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துருக்கிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராணுவத்தினரால் பணயக் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் எங்கும் ராணுவத்தினர் மற்றும் தாங்கிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், ராணுவத் தலைமை மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் 6 வயது தோழியை, 30 வயதான நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யதுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் ஸ்ரீனிவாஸ் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், குற்றவாளி ஸ்ரீனிவாஸ் தனது மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் காந்தி நகரில் வசித்துவந்துள்ளார். அருகிலுள்ள வீடுகளில் இருக்கும் ஸ்ரீனிவாஸ் மகளின் தோழிகள் சிலர் தினமும் ஸ்ரீனிவாஸ் வீட்டில் உறங்குவது வழக்கம்.
சம்பவத்தன்று வியாழக்கிழமை இரவு ஸ்ரீனிவாஸ் மது போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி, மற்ற குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தன்னுடைய நான்கு குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு வீட்டை விட்டுச்சென்றுள்ளார்.
இதைதொடர்ந்து,ஸ்ரீனிவாஸ் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகளில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மறுநாள் காலை பாதிக்கப்ட்ட சிறுமி தனது தந்தையிடம் சம்பவத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து சிறுமியின் தந்தை பொலிசில் அளித்த புகாரை தொடர்ந்து பொலிசார் ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ஸ்ரீனிவாஸ் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா கோமரசன்குளம் பகுதியில் இன்று(15.07.2016) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று பிற்பகல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த விமலாதாஸ் தயாகரன் என்ற 14 வயது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் இன்று காலை கோமரசன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிலின் பின்னால் அமர்ந்திருந்து சென்றபோது முச்சக்கரவண்டியினை முந்தி செல்ல முற்பட்டபோது செலுத்திய மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் மோட்டார் சைக்கில் செலுத்தியவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தான் நன்றியுள்ள மிருகம் என்பதை உறுதி செய்ய நாய் ஒன்று, 4 பாம்புகளை கொன்று தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டம் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்த திபாகர் ரய்தா என்பவர் தனது வீட்டின் காவலுக்காக டாபர்மேன் வகையை சேர்ந்த நாய் ஒன்றினை வளர்த்து வந்தார்.
இந்த நாயும் தனது காவல் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த யூலை 11ம் திகதி காட்டில் இருந்து வந்த 4 பாம்புகள் திபாகர் ரய்தா வீட்டினுள் நுழைய முற்பட்டன.
இதை கண்ட நாய் 4 பாம்புகளுடனும் பயங்கரமாக சண்டை போட்டு பாம்புகளை கொன்று வீட்டிற்குள் இருந்த 8 பேரின் உயிரை காப்பாற்றியது.
இந்நிலையில், பாம்புகள் தாக்கிய விஷம் நாயின் உடலில் அதிகமாக இருந்ததால் நாயும் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதை கண்ட திபாகர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் வீர மரணம் அடைந்த நாயின் உடலை தகனம் செய்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த குழந்தையை பையொன்றி போட்டு எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இராகலை பொலிஸார் இந்த யுவதியை நேற்று கைது செய்துள்ளனர்.
தங்கவேல் தயந்தி என்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதி ஒருவர் குழந்தையை பையில் இட்டு எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்தே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
யுவதி சுகவீனமான நிலையில் இருப்பதால், பொலிஸார் அவரை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யுவதி சம்பவம் குறித்து எதனையும் கூறவில்லை எனவும் யுவதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
வழமையாகவே தனது சிகையலங்காரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள மகேந்திர சிங் டோனி, தற்போது தனது தாடி அமைப்பிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார்.
பிரான்ஸின் நீஸ் நகரில் லொரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தீவிரவாத தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே, தனது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸின் நீஸ் நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு பொது நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லொரியை அதிவேகமாக செலுத்தியதில் 77 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விபரங்களை பிரான்ஸ் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
பிரான்ஸில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.