யாழ். நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவியுடன் துர்நடத்தையில் ஈடுபட முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரையும், சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவியின் முறைப்பாட்டை அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும், அதனைப் பொலிஸாருக்கு அறிவிக்காத குற்றச்சாட்டில் மற்றொரு ஆசிரியை விசாரணையில் உள்ளார் என்று யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரானிஸ்லஸ் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுவலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தியிருந்தனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் அந்தப் பாடசாலை அதிபருக்கு முறைப்பாடு செய்தபோதும், அதுபற்றி பொலிஸாருக்கு ஏன் அறிவித்திருக்கவில்லை என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னரே அந்த ஆசிரியை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் யாழ். பிராந்திய மூத்தபொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதேபோன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் தென்மராட்சி வலயப் பாடசாலை ஒன்றைச்சேர்ந்த ஆசிரியர் மற்றும் சம்பவங்களை மறைத்த குற்றச்சாட்டில் அதிபர், உப அதிபர் மற்றும் 2 ஆசிரியைகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க் டவர் (US Bank Tower) உள்ளது. நகரிலேயே மிக உயரமான இந்தக் கட்டிடத்தின் 70 மற்றும் 69 ஆவது மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக மேல் இருந்து கீழ் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சறுக்குப் பாதை மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
சுமார் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப் பாதை அமைந்துள்ளது. இந்த கண்ணாடி சறுக்குப் பாதை எவ்வித இயற்கை சீற்றங்களுக்கும் பாதிக்கப்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தமையானது இலங்கையின் கடன் வாங்கல் மற்றும் பங்குசந்தையின் சமச்சீர் தன்மையில் பாரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரேப்பிய ஒன்றியத்தில் நிலைப்பதா பிரிவதா என்பது தொடர்பன சர்வஜன வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் 52 வீதமானவர்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதை ஆதரித்திருந்தனர்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துச் செல்வதானது சர்வதேச பொருளாதாரத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்த கூடும் என்று உலகலாவிய பொருளாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.
இலங்கையை பொருத்தமட்டில் 2008ம் ஆண்டு உலக அரங்கில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது உருவான நிதி நெருக்கடியை போன்றதொரு நிலையை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்ற கருத்துக்கள் வலுவடைந்துள்ளன.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் அமெரிக்க டொலரை மிதக்க விடப்பட்டிருப்பதால் சமச்சீரற்ற பங்குச்சந்தையாக இலங்கையின் பங்கு சந்தை உள்ளது.
இதனால் சுமார் 3 பில்லியன் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் மீள கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கையின் ஏற்றுமதியில் 28 வீதமானவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த 28 வீத ஏற்றுமதியில் பிரிட்டனுக்கு மாத்திரம் 10 வீதமான ஏற்றுமதி இதுவரை காலம் இடம்பெற்று வந்தது.
அதாவது, வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி நாடாக பிரிட்டன் காணப்பட்டதனாலேயே இலங்கை அரசு பிரிட்டன் பிரிவதை ஆதரிக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆண்டொன்றுக்கு 1,500 கோடி வருவாயைப் பெறக் கூடும் என்று நிதி அரசு சுட்டிக்காட்டியிருந்தது.
அதேவேளை, ஜி.எஸ்.பி. சலுகை மீள கிடைக்கும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரக் கூடும் என்று ஆரூடம் கூறப்பட்டது.
ஆனால், பிரிட்டன் பிரிந்தமையானது இந்த இரண்டு விடயத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையின் ஆடை ஏற்றுமதியின் முக்கிய நாடாகவும் பிரிட்டன் இத்தனை காலமும் விளங்கியது.
இனிவரும் காலங்களில் பிரிட்டன் வகுக்கும் புதிய பொருளாதார, வர்த்தக கொள்கைகளுக்கு அமையவே இலங்கையும், பிரிட்டனுக்கு ஏற்றுமதிச் செய்துவந்த நாடுகளும் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இங்கிலாந்து- இலங்கை மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.
இரு அணிகளும் மோதிய போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பெரேரா (37) மற்றும் குணதிலக(22) ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிகபட்சமாக தரங்க 53 ஓட்டங்களும் சந்திமால் 52 ஓட்டங்களும் குவித்தனர்.
அணியின் தலைவர் மத்யூஸ் 54 பந்துகளை சந்தித்து 44 ஓட்டங்கள் குவித்தார். 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 254 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் Plunkett மற்றும் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
255 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 34.1 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது.
இங்கிலாந்து தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய Roy 95 பந்துகளில் 112 ஓட்டங்கள் குவித்தார். Hales 110 பந்துகளை சந்தித்து 133 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான Eastern Securities குவைத்தில் உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத குழுவினரிடம் இருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் நிறுவனங்கள் மோப்ப நாய்களையும் பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, Eastern Securities நிறுவனத்தில் பயன்படுத்திய மோப்ப நாய்களை மொத்தமாக கொன்று தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்வத்தை அடுத்து மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமானது குறைந்தபட்சம் 24 நாய்களையாவது கொன்று குவித்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு நிறுவனம் மீது வழக்கு பதிய வேண்டும் என வாதிட்டுவரும் மிருக ஆர்வலர் ஒருவர், அந்த நிறுவனம் 90 நாய்கள் வரை கொலை செய்திருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.
நாய்களின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கொலை செய்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாய்கள் அனைத்தையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த நிறுவனமானது விலங்குகள் நல குழுவினரிடம் அந்த நாய்களை தத்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக தலைநகரமான சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19) மற்றும் சினேகா(19) என 3 மகள்கள். சின்னராசுவின் முதல் மனைவி இறந்துவிட்டதால் சந்தன வீனா (36) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் இவர்கள் அனைவரும் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று சென்னைக்கு திரும்பியுள்ளனர். கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது வீடு மூடியே இருந்துள்ளது.
மேலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார் இன்று காலை வீட்டை சோதனை செய்தபோது, வீட்டிற்குள் 4 பேரும் நிர்வாணமாக கிடந்துள்ளனர்.
குடும்பத்தலைவரான சின்னராசு தலைமறைவாகியுள்ளார். எனினும், அவரை தேடி கண்டுபிடித்து விசாரணை செய்த போது அவர் தான் இக்கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவியின் நடத்தை சரியில்லாததால் இக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதே தினத்தில் சென்னை முகப்பேரில் ஒரு பெண்ணும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 6 கொலைகள் நடந்துள்ளது சென்னைவாசிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கல்வியகத்தில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது காலாவதியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார்.
மாணவர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை. ரோஜெருக்கே கூட இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. காகிதம் சுற்றப்படாத ட்வின்கியை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து மூடினார்.
எத்தனை நாட்களில் காலாவதியாகும் என்பதை நேரடியாகப் பார்த்துவிடலாம் என்பது அவரது திட்டம். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை!
உலகிலேயே மிகப் பழமையான ட்வின்கி என்ற பெயருடனான கேக், 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருக்கிறது!
இன்று கூட ட்வின்கியை 25 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிறது தயாரிப்பு நிறுவனம்.
“நாங்கள் உணவு குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தோம். இந்த ட்வின்கியை பரிசோதனைக் கூடத்தில் வைத்துவிட்டோம். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜெர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு இந்தப் பரிசோதனை என்னிடம் வந்து சேர்ந்தது. இதுவரை யாரும் இதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இது தாக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம்.
எனக்குப் பிறகு வருகிறவர்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து, பாதுகாத்தால் எங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்!’’ என்கிறார் இங்கே பணிபுரியும் லிபி ரோஸ்மியர். 40 ஆண்டுகளாகக் கெட்டுப் போகாத கேக் குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது.
பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம்ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் பெரியகுளம், தெற்கிலுப்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு சிறு வியாபார முயற்சிக்கான ஊக்குவிப்பிற்காகவும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களது அலுவலகத்தில் வைத்து தொழில்த்துறைத் திணைக்களத்தின் உதவியுடன் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுடன் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகளும் அலுவல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் சற்று முன் தீ விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் இன்று (24.06.2016) சற்றுமுன் மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
உடனடியாக செயற்ப்பட்ட வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மின் இணைப்பினைத் துண்டித்து தீ அணைப்புக் கருவியின் மூலம் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொருட்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அவர் பதவி விலகவுள்ளார்.
இரண்டு உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை 1958 ஆம் ஆண்டு உருவாக்கின.
இந்த அமைப்பில் 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் உறுப்பு நாடாக இணைந்தது.
1993 ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் பெயர் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என மாற்றியமைக்கப்பட்டது. இதில் தற்போது 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலத்தில் வலுப்பெற்றது.
இதனால், அது தொடர்பில் நாட்டு மக்களிடையே நேற்று பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பின் முடிவில் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என மக்கள் விரும்புகின்றமை தெரியவந்துள்ளது.
அண்ணளவாக 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரத்தினாலே 4 பேரும் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ராஜ். அங்குள்ள ஒரு இனிப்புக் கடையில் இனிப்பு செய்பவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
காரைக்குடி அருகேயுள்ள திருப்பத்தூர் கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது38). இவரது மகள்கள் பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) இதில் பரிமளாவும், பவித்ராவும் இரட்டையர்கள்.
பாண்டியம்மாளுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர் மனைவி மற்றும் மகள்களை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாண்டியம்மாள் தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சின்ராஜ் வேலை பார்க்கும் இனிப்புக் கடைக்கு பாண்டியம்மாள் அடிக்கடி சென்று வந்தார். அப்போது சின்ராஜுக்கும், பாண்டியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
சின்ராஜுக்கு திருமணம் ஆகவில்லை. எனவே அவர் பாண்டியம்மாளுடன் குடும்பம் நடத்த விரும்பினார்.
நாம் கணவன்-மனைவி போல வாழலாம் என்று சின்ராஜ், பாண்டியம்மாளுக்கு ஆசை காட்டினார். அதற்கு பாண்டியம்மாள் எனக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.
எனவே ஒன்றாக குடித்தனம் நடத்த முடியாது என்று கூறி மறுத்தார். அதற்கு சின்ராஜ் உனது மகள்களை எனது மகள்களைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு பாண்டியம்மாள் காரைக்குடியில் நாம் ஒன்றாக வசித்தால் உறவினர்களும், தெரிந்தவர்களும் கேலி பேசுவார்கள் என்றார்.
இதையடுத்து சின்ராஜ், பாண்டியம்மாளிடம் உன்னையும், 3 மகள்களையும் சென்னைக்கு அழைத்து செல்கிறேன். அங்கு நாம் ஒன்றாக குடும்பம் நடத்தலாம் என்றார். இதற்கு பாண்டியம்மாள் சம்மதித்தார்.
இதையடுத்து பாண்டியம்மாளையும், அவரது 3 மகள்களையும் சின்ராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்தார்.
ராயப்பேட்டை முத்து தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்கள். அக்கம் பக்கத்தினரிடம் சின்ராஜ், பாண்டியம்மாள் இருவரும் தாங்கள் கணவன்- மனைவி என்றும், பரிமளா, பவித்ரா, சினேகா 3 பேரும் எங்கள் மகள்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பாண்டியம்மாளை சின்ராஜ் மனைவியாகவும்,அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகியோரை தனது மகள்களாகவும் ஏற்றுக் கொண்டார். குடும்ப செலவு மற்றும் பாண்டியம்மாள் மகள்களின் படிப்புச் செலவையும் சின்ராஜே ஏற்றுக் கொண்டார்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் சின்ராஜ் சுவீட் இனிப்பு செய்வதற்கு வேலைக்கு சேர்ந்தார். அதில் வரும் வருமானத்தில் கடந்த 4 வருடமாக அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.
இந்த நிலையில் தான் தான் இதுவரை மகள்களாக நினைத்தவர்களில் மீது சின்ராஜுக்கு காம ஆசை ஏற்பட்டது. மூத்த மகள்களில் ஒருவரை சின்ராஜ் அடைய விரும்பினார்.
அந்த மகளின் பெயரை பாண்டியம்மாளிடம் குறிப்பிட்டு அவளை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நீ சம்மதித்து எனக்கு திருமணம் செய்துவை என்றார். இதைக் கேட்டதும் பாண்டியம்மாள் இதுவரை என்னுடன் கணவர் போல குடும்பம் நடத்தி விட்டு என் மகளை திருமணம் செய்ய நினைக்கிறாயா என்று ஆவேசமானார்.
அதன் பிறகு சின்ராஜை பாண்டியம்மாள் வீட்டுக்குள் படுக்க அனுமதிக்கவில்லை. வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்ததும் சின்ராஜை வெளியில் படுத்துக் கொள்ளுமாறு கூறினார். இல்லாவிட்டால் வேறு எங்காவது வெளியில் சென்று தங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறு ஏற்படத் தொடங்கியது.
கடந்த வாரம் சின்ராஜ் – பாண்டியம்மாள் உள்பட அனைவரும் சொந்த ஊரான காரைக்குடி சென்றனர். கடந்த 20 ஆம் திகதி மீண்டும் அவர்கள் சென்னை திரும்பினார்கள். அன்று இரவு மகளை திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியம்மாளிடம் சின்ராஜ் கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சின்ராஜ் ஆவேசமானார். எனக்கு திருமணம் செய்து வைக்கா விட்டால் உங்கள் யாரையும் உயிருடன் விடமாட்டேன் என்று மிரட்டினார்.
அதற்கு பாண்டியம்மாள் செவிசாய்க்கவில்லை. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றார். இதனால் சின்ராஜுக்கு கொலை வெறி ஏற்பட்டது. வீட்டை உள்பக்கமாக பூட்டிய சின்ராஜ் இரும்பு கம்பியால் பாண்டியம்மாளை ஓங்கி தாக்கினார். கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார்.
அதன் பிறகு அவரது கொலை வெறி பாண்டியம்மாளின் மகள்களின் மீது திரும்பியது. பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 3 பேரையும் ஒருவர் பின் ஒருவராக துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் 4 பேரும் இறந்ததை உறுதி செய்ததும் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த கொலை தொடர்பாக சின்ராஜை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் பொறியியலாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மின்சார ரயில்கள் செல்லும் நடைமேடையில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இன்று காலை 6.30 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்தார்.
ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தபடியே அந்த இளம்பெண், ரயிலின் வருகையை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தார்.
அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அங்கு வந்தார். அவர் நேராக சென்று இளம்பெண்ணிடம் பேசினார். பேச ஆரம்பித்த உடனேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இளம்பெண் கோபத்துடன் ஏதோ பேசினார். இதனால் வாக்குவாதம் முற்றியது. இதை தொடர்ந்து இளம்பெண் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார்.
இந்த நேரத்தில் இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டாக் கத்தியை எடுத்து திடீரென இளம்பெண்ணை வெறிபிடித்தவர் போல வெட்டினார்.
இதில் அப்பெண்ணின் கழுத்து, தாடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இரத்தம் பீரிட்டு வந்தது. இதனால் நிலை குலைந்து போன அப்பெண், சம்பவ இடத்திலேயே சத்தம் ஏதும் போடாமலேயே மூச்சடங்கி போனார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இக்கொடூர கொலை சம்பவத்தை அங்கிருந்த பயணிகளால் தடுக்க முடியவில்லை.
கொலையாளியின் கையில் நீளமான கத்தி இருந்ததால், பயந்துபோய் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். யாரும் அருகில் செல்லவில்லை. பீதியில் உறைந்த பயணிகள் பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் இளம் பெண்ணை கொன்ற இளைஞர் எந்தவித தடங்கலுமின்றி இரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் எழும்பூர் ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் பெண்ணின் கைப்பை கிடந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்தனர். அதில் அடையாள அட்டை இருந்தது. அதனை வைத்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரது பெயர் சுவாதி (வயது 24). சென்னை சூளைமேடு தெற்கு கங்கையில் வசித்து வந்தார். தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன். கணணிப் பொறியியலாளரான சுவாதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
தினமும் காலை 6 மணி அளவில் சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்படும் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலமாக பணிக்கு செல்வது வழக்கம்.
இன்று காலையிலும் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சுவாதி ரயில் நிலையத்துக்கு வந்தார். கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோதுதான் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுவாதியை கொலை செய்த இளைஞர் திட்டம் போட்டு அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. காதல் தகராறு காரணமாகவே இக்கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேக்கிறார்கள்.
அது தொடர்பாகவே பொலிஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சுவாதியை கொலை செய்த வாலிபர், ஒருதலையாக அவரை காதலித்து வந்திருக்கலாம் என்றும் தனது காதலை ஏற்க மறுத்ததால் அவர் சைகோவாக மாறி சுவாதியை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொலையாளி யார் என்பது தெரியவில்லை. அவரை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சுவாதி கொலை தொடர்பாக எழும்பூர் ரயில்வே பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அவர்கள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
சுவாதி பணிபுரியும் நிறுவனத்தில் அவருக்கு நெருக்கமான தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுவாதியின் கைபேசியை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், கொலையாளியின் கைபேசி எண் உள்ளதா? என்பது பற்றியும் பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதன் மூலமாக சுவாதியை கொலை செய்த வாலிபரை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், விரைவில் கொலையாளியை கைது செய்து விடுவோம் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலை 6.30 மணி அளவில் கொலையுண்ட சுவாதியின் உடல், 8.30 மணிக்கு பிறகே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதுவரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே சுவாதியின் உடல் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
அருகில் நடைமேடையில் இரத்தமும் வழிந்தோடி காணப்பட்டது. இதனை பயணிகள் பீதியுடன் பார்த்துச் சென்றனர்.
இதைப் பார்த்து சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் எனது மகளை இப்படி கண்காட்சி மாதிரி ஆக்கிட்டாங்களே என்று கூறி கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இக்கொலை சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
சேலத்தின் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது 39).
இவர் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறார், சமீபத்தில் கருத்தரித்த மாடு ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது.
பசு மாட்டிற்கு இருப்பதை போலவே கன்றுக்கும் மடி இருந்துள்ளது. ஆரம்பத்தில் இதை அவர் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள் பால் கறப்பதற்காக பசு மாட்டின் அருகில் சென்ற போது, கன்றின் மடியில் இருந்து பால் சொட்டு சொட்டாக கொட்டியுள்ளது.
இதை பார்த்து அதிசயித்த அவர் கன்று குட்டியின் மடியில் பாலை கறந்து உள்ளார், அப்போது அந்த கன்றுக்குட்டி அரைலிட்டர் பால் கறந்தது.
இதை கேள்விப்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கன்றுகுட்டி பால் கறப்பதை அதிசயமாக பார்த்து சென்றனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், ஹார்மோன் பிரச்னையால் இதுபோன்று லட்சத்தில் ஒன்று நடக்கும், நாளடைவில் சராசரி கன்றுகுட்டியாக மாறும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 6 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தின் பயணத்தை ரத்து செய்து விமானத்தை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்களின் பயணப் பைகளில் மொத்தம் 3 கிலோ 600 கிராம் எடையுள்ள பிரவுன்சுகர் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்துக்குள் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையை மீறி போதைப் பொருள் கொண்டு வந்தது எப்படி என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்தபோது, இலங்கை இளைஞர்களின் பைகளை சோதனை செய்யாமல் தற்காலிக ஊழியர் ஒருவர் எடுத்து செல்வது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் பொது இடத்தில் புகைப்பிடித்த நபர் ஒருவருக்கு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றத்தில் 2500 ரூபா தண்டப்பணம் குற்றமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின்போது ஆலய சூழலில் புகைப்பிடித்த நபர் ஒருவரை அங்கு கடமையிலிருந்த ஓமந்தை பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சன் தலைமையில் சென்ற குழுவினர், பொது இடத்தில் ஆலய சூழலில் ஆலய சுகாதாரத்திற்கு ஊறுவிழைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த புதன்கிழமை வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 2500 ரூபாவினை தண்டமாக செலுத்துமாறு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே இடத்தில் இரு வியாபார நிலையத்தில் இனிப்புப் பண்டங்களை திறந்த நிலையில் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவருக்கு தலா 5000 ரூபா குற்றப் பணமாக செலுத்துமாறு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளதாவுகம், ஆலய உற்சவ காலத்தில் கடமையிலிருந்த ஓமந்தை பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியே இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
இதன் காரணாமாக எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் ஈடுபடவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டதுடன் மேலும் பல அமைப்புகளின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.