நிலக்கரி அனல் மின்நிலையம் அமைப்பதற்காக பறிக்கப்பட்ட பூர்வீக நிலம் சம்பூர் மக்களுக்கு மீளக் கையளிக்கப்படவேண்டும். இவ் அனல்மின் நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படப்போகும் பாரிய அச்சுறுத்தலைத் தவிர்க்க அத்திட்டத்தைக் கைவிடவேண்டும்.
இதன் மூலம் சம்பூர் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் அணிதிரள வேண்டும் என வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் சு.டொன்பொஸ்கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர்மேலும் தெரிவிக்கையில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சம்பூர் மக்களின் 505 ஏக்கர் பூர்வீக நிலம் இந்தியக் கம்பனி ஒன்றினால் நிலக்கரி அனல்மின்நிலையம் அமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலம் மீன்பிடி, விவசாயம், காட்டுவளம் நிறைந்த பகுதியாகும். இப்பிரதேசத்தில் 110 ஏக்கர் வயல்காணிகளும், 8 குளங்கள், 41 குடியிருப்பு காணிகள், மீன்பிடி பகுதிகள், காடுகள் அடங்குகின்றன.
இவற்றை நம்பி வாழ்ந்த விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியினர், தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கின்றனர். ஆகவே அவர்களுடைய வாழ்கையைக் கட்டியெழுப்ப அவர்களுடைய நிலங்கள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்படவேண்டும்.
இவ் நிலக்கரி மின் நிலையம் இயங்கும்போது நிலக்கரியிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளும், அதிகூடிய காபனீர் ஒக்சைட்டும் சுவாச நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. சூழல் வெப்பமடையும் ஆபத்தும் உள்ளது.
இதனால் இப்பகுதியைச் சூழவுள்ள 5 கி.மீ பிரதேசத்தின் நிலை மிகமோசமாக பாதிக்கப்படும். இங்கு சுமார் 5000 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்படும். இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
அதுமட்டுமன்றி பருவக்காற்றினால் வடகிழக்கு, வடமத்திய மாகாண பிரதேசங்களுக்கு சாம்பற் கழிவுகள் கொண்டுசெல்லப்படும் அபாயமும் உள்ளது.
ஆகவே, இவை பற்றி சிந்திப்பது அவசியமாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் அந்நியக் கம்பனிகளின் இலாபவெறிக்காக நாட்டுமக்களின் வாழ்க்கையை பாழடிப்பதா?
புவி வெப்பமடைவது தடுப்பதற்காக உலக நாடுகள் நிலக்கரி அனல் மின்நிலையங்களை மூடுகின்றனர். ஏன், இந்தியாகூட தற்பொழுது தன்னுடைய நிலக்கரி அனல்மின்நிலையங்களை மூடிவருகின்றது.
இந்நிலையில் நிலக்கரி மின் நிலையம் ஏன் இங்கு நிறுவப்படவேண்டும். அந்நியக்கழிவுகள் கொட்டப்படும் இடமாக நமது நாடு மாறிவிட்டதா! இந்தியா நிலக்கரியை பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைக்கு தயங்குகின்றது. எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்க மறுகின்றது. இதேவேளையில் சம்பூர் மக்கள் பூர்வீக நிலத்தைக் கோரியும், சூழல் மாசடைவதற்கு எதிராகவும் போராடுகின்றனர். அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக நாங்களும் குரல்கொடுங்கின்றோம்.
அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி ஷஷபசுமைத் திருமலை|| அமைப்பினருடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும், ஏனைய பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து 25.06.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பஸ்நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
அப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், என அனைவரையும் இன, மத பேதங்களைக் கடந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



















































