வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா கடந்த 11.06.2016 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
4வது ஆண்டாக இந்நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நெற் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆலய அபிவிருத்தி நிதிக்காக அதிஷ்ரலாபச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு 12.06.2016 அன்று குலுக்கல் மூலம் அதிஷ்ரசாலிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இதனடிப்படையில் வெற்றிபெற்றோர் விபரம் வருமாறு..
1ம் பரிசு – Hero பிளசர் மோட்டார் சைக்கிள் – உ.ரஞ்சினி – பூந்தோட்டம்
2ம் பரிசு -32 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி – K.பிருந்தா -மகாறம்பைக்குளம்
3ம் பரிசு – துவிச்சக்கர வண்டி – பிரபா- சிவன்கோவில் வீதி திருநாவற்குளம்
வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று முன்தினம் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் முன்னிலையில் அனுசரணையாளர்களால் வழங்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நேற்று (16.06.2016) கல்லுரியின் அதிபர் திரு.ரவீந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் மாணவர்களின் இனியம் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகின.
தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இணைந்து திறந்துவைத்தனர்.
இதில் சிறப்புரையை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வழங்கினார். அவர் தனதுரையில்..
இன்று இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வு கூடத்தினை திறந்துவைப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. எமது பிரதேசம் கொடிய யுத்தத்தின் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. எமது மண்ணில் மீண்டும் தமது சொந்த முயற்சியில் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒவ்வொரு கல்விமான்களும் உழைக்கின்றனர்.
ஒரு தமிழன் என்ற வகையிலும் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்க போராடி துணை ஆசிரியர் என்ற நியமனம் பெற்றுக்கொடுத்து வெற்றி பெற்றவர் கல்வி இராஜாங்க அமைச்சர். எனவேதான் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க ஆவண செய்யவேண்டும்.
அது போன்று நீண்ட காலமாக முன்பள்ளிகளில் சிறு வேதனத்துடன் கல்வி கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும்.
சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரின் தலையீடுகள் நிறுத்தப்பட்டு கல்வித் திணைக்களங்களிடம் முன்பள்ளிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தோனேஷிய கடற்கரையில் அநாதரவாக இருக்கும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஈழத்தமிழ் அகதிகள் 44 பேரையும் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்துள்ள நிலையில், படகை விட்டு வெளியேற முற்பட்டவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அச்சுறுத்தி தடுத்துள்ளனர்.
இந்தோனேஷிய கடற்கரையில் தரையிறங்க இடமளிக்காவிட்டால் தம்மை சுட்டுக்கொல்லுமாறு, ஈழத்தமிழ் அகதிகளில் பெண்ணொருவர் கூச்சலிடும் காட்சி அனைவரினதும் மனங்களை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரும் நோக்கில், ஈழத்தமிழ் அகதிகள் 44 பேர் பயணித்த படகொன்று, கடந்த யூன் மாதம் 11 ஆம் திகதி மோசமான காலநிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தின் கடற்கரையில் கரையொதுக்கப்பட்டது.
அகதிகளின் படகை, இந்தோனேஷிய மீனவர்கள் முதலில் கண்டுபிடித்த நிலையில், பின்னர் இதனை தடுத்து வைத்துள்ள இந்தோனேஷிய கடற்படையினர் குறித்த படகிலுள்ள ஈழத்தமிழர்களை தரையிறங்க அனுமதிக்காது தடுத்து வருகின்றனர்.
குறித்த படகில் கர்ப்பிணித்தாய் ஒருவரும் 9 குழந்தைகளும், 20 ஆண்களும் 14 பெண்களும் உள்ளனர்.
மிகவும் மோசமான கஷ்டங்களுக்கு மத்தியில் கடல் பயணத்தை மேற்கொண்டு நிர்க்கதியாக வந்துள்ள இந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு, தரையிறங்க அனுமதி பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என ஸ்ரமா அமைப்பின் ஆசியபசுபிக் பிராந்திய பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்தோனேஷிய அரசு நிர்க்கதியாக இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் 44 பேரையும் பொறுப்பேற்காது, மீண்டும் இந்து சமூத்திரத்திற்குள் தள்ளிவிடுமோ என்று சர்வதேச மன்னிப்புச் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று ஆச்சே கடற்கரையில் கரையொதுங்கியுள்ள படகிலுள்ள ஈழத் தமிழர்கள் 44 பேரும் படகிலிருந்து தரையிறங்க முற்பட்ட போது, இந்தோனேஷிய கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து அச்சுறுத்தி அகதிகளை தரையிறங்கவிடாது தடுத்துள்ளனர்.
பல ஆபத்துக்களை கடந்து தமது குழந்தைகளுடன் வந்துள்ள தம்மை, தரையிறங்க அனுமதிக்காவிட்டால் தம்மை சுட்டுக்கொல்லுமாறு ஈழத் தமிழர்கள் கோஷமிட்டனர்.
இதேவேளை ஆபத்தானப்படகு பயணத்தால் மிகவும் சோர்வடைந்துள்ள இவர்கள், தமது குழந்தைகளை கையில் ஏந்திய வண்ணம் “இந்தக் குழந்தைகளின் நிலை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா” என்றும் இந்தோனேஷிய கடற்படையினரிடம் ஈழத்தமிழர்கள் கேள்வி எழுப்பினர்.
படகிலிருந்து தரையிறங்க அனுமதித்தால் ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள நேரிடும் என்பதாலேயே, இந்தோனேஷிய கடற்படையினர் இவ்வாறு மோசமாக நடந்துகொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதேவேளை, இந்தோனேஷியாவின் துணை ஜனாதிபதி யூசுப் கல்லாஹ், ஈழத் தமிழர்களை படகிலிருந்து தரையிறங்க அனுமதி அளித்துள்ள போதிலும், கடற்படை அதிகாரிகள் தொடர்ந்தும் தடுத்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த 15 ஆம் திகதி ஆச்சே பிராந்திய துணை ஆளுநர் முசாக்கிர் மனாப் ஈழத்தமிழ் அகதிகளின் படகில் ஏற முற்பட்டபோதும், கடற்படையினர் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு ஈழத்தமிழ் அகதிகள் விடயத்தில் இந்தோனேஷிய அதிகாரிகளும் கடற்படையினரும் மிக மோசமாக நடந்துவருவது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சியை புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான சுரேஸ் யோகிம் ஆரம்பித்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சாதனை முயற்சியை ஆரம்பித்துள்ளார்.
250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் முயற்சியை ஆரம்பித்துள்ள சுரேஸ் யோகிம் யாழ்ப்பாணம் அச்சுவேலியை சொந்த இடமாகவும் வவுனியாவை பிறப்பிடமாகவும் கொண்டவராவார்.
இவர் இலங்கையில் 1996 ஆம் ஆண்டு 1000 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து சாதனை படைத்திருந்தார். இது மாத்திரமின்றி இவர் 5 கண்டங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
தற்போது 250 மணித்தியாலங்கள் ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள சுரேஸ் யோகிம் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் 197 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்ததே இதுவரை சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா சென்சுலான் முன்பள்ளியின் வருடாந்த கல்விக் கண்காட்சி இன்று(17.06.2016) காலை முன்பள்ளியில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.ஜெயகெனடி, முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி. சுபாஸ்கரன் தர்சினி, திருமதி. சுபாசினி சதீஸ்வரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் ஆக்கங்களும் கண்காட்சியில் இடம்பெறறது.
வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.டி.கசுன் விஜயசுந்திர (வயது 35) பொகஸ்வவ பகுதியிலுள்ள சமுர்த்தி வங்கியில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
கடந்த வாரம் சமுர்த்திக் கொடுப்பனவுகள், வாழ்வாதார உதவிகள் வறுமைக் கோட்டிலிருக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு நின்ற சிலர் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அதற்கான காரணத்தை குறித்த உத்தியோகத்தரிடம் கேட்டுள்ளனர்.
வறுமைக்கோட்டிலுள்ள, கணவனை இழந்த, விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தமக்கும் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர் இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
தனது பணியினை நிறைவு செய்துவிட்டு வவுனியா காரியாலயத்திற்குச் சென்று கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பொகஸ்வவ, பேகரதன்ன பகுதியில் ஆறு பேர் கொண்ட குழுவினர் சமுர்த்தி உத்தியோகத்தரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தலைக்கவசத்தினாலும் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் நாடிப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டபோது கடந்த சில நாட்களாக கொழும்பில் கூட்டத் தொடர் ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா வந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் உள்ள பெண்கள் படகிலிருந்து அந்த நாட்டின் தரை இறங்குவதற்கு எதிராக எச்சரிக்கை துப்பாக்கி வேட்டு நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோத படகுப் பயணம் மேற்கொண்டிருந்த 44 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷியாவின் அச்சே கடற்பிராந்தியத்தில் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிர்க்கதிக்குள்ளாகினர்.
கடந்த 11 ஆம் திகதி முதல் இந்தோனேஷிய அதிகாரிகளால் படகு கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சுகவீனமுற்ற பிள்ளையொன்றுடன் தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு ஐந்து பெண்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆயினும், கடவுச் சீட்டுக்களோ அல்லது பயண ஆவணங்களோ இன்றி இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான எவரையும் தமது நாட்டிற்குள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கொள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தரையிறங்குவதற்கும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்திப்பதற்கும் அனுமதிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அச்சேவிலுள்ள பொது அமைப்பு என்பன கூட்டாக இந்தோனேஷிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, படகிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலை குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும், அவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகளாகவே கருதுவதாகவும் இந்தோனேஷிய குடிவரவுத்துறை தலைமை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையின் கீழ், புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷிய கடலில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்களின் பயண முடிவிடம் குறித்து அவர்களே தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கியுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள சிங்கங்கள் சரணாலயத்தை வாகனத்தில் சென்று சுற்றிப் பார்த்தபோது, அவரும், அவரது மனைவியும் வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும் ஜடேஜா சுமார் 12 அடி பின்னணியில் சிங்கத்துடன் நிற்கும் வகையிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கிர் காடுகளில் சிங்கங்கள் வசிக்கும் பகுதிகளில் வாகனத்தில் இருந்து இறங்கக் கூடாது என விதி இருக்கும் போது, ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வன சட்டங்களை ஜடேஜா மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் மழை வேண்டி கிராம மக்களுடன் சேர்ந்து நிர்வாணமாக ஊர்வலம் சென்று சிறப்பு பூஜை செய்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது.
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூன் 10ம் திகதி குறித்த சிறப்பு பூஜை நடந்துள்ளது.
குறித்த வீடியோவில், மழை வேண்டி கிராம மக்கள் கடவுளுக்கு பூஜை செய்து, சிறுவனை நிர்வாணமாக ஊர் முழுவதும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
பின்னர், சிறுவனுக்கு புதிய ஆடைகள் வழங்கப்படுகிறது, சம்பவத்தை குறித்து கிராமவாசிகள் கூறியதாவது, மழை வேண்டி ஊர் மக்கள் ஒன்றாக கூடி செய்யும் சடங்கிற்காக கிராமத்தில் உள்ள ஒரு இளம்வயது பையன் தேர்வு செய்யப்படுவது கிராமத்தின் வழக்கம் என தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் கோவில் பாதுகாவலர்கள் திறமையாக பெண்னை கண்டறிந்து பொலிஸ் உதவியுடன் பிடித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்களை தவிர பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்பது பாரம்பரிய மரபு. இந்நிலையில் நேற்று நீளக்காட்சட்டை, சட்டை அணிந்து சந்தேகிக்கும் வகையில் ஒருவர் கோவிலுக்கு வந்துள்ளார்.
அந்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் அவரை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளனர். பம்பையில் இருந்து அவர் சபரிமலைக்குள் நுழையும்போது, பாதுகாவலர்கள் பொலிஸ் உதவியுடன் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்த நபர் ஆண் இல்லை என்பதும், இளவயது பெண் எனவும், கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மொட்டை அடித்து ஆண் வேடம் தரித்து கோவிலுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது
பொலிஸ் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என்ற லெட்சுமி எனவும், 18 வயது ஆனவர் எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர், கோவில் பாதுகாவலர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி கோவிலின் நடைமுறைகளை எடுத்துரைத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
ரஜினிகாந்த் தற்போது ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். கபாலி, 2.ஓ ஆகிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால், ரஜினி கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
இதையடுத்தே, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து இணையதளம் ஒன்று வதந்தியை பரப்பியது.
இதையடுத்து, அந்த செய்தி சமூக இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்தவுடன் ரஜினி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரஜினி உடல்நிலை குறித்து வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளனர்.
அவர் அமெரிக்காவில் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்த செய்திகளை யாரும் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஜுன் இறுதி வாரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்புவார் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், ரஜினி உடல்நிலை குறித்து தவறான செய்தி வெளியிட்ட இணையதளத்தின் மீது சைபர் கிரைமில் புகாரும் கொடுத்துள்ளனர்.
தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தின் கிராம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த இராச்சத பல்லி வீட்டின் முன்பகுதியல் இருந்துள்ளது. கொட்ஸில்லா என்ற ஆங்கில திரைப் படத்தில் வரும் ஒரு வகை இராட்சத பல்லி இனம் போன்று இது இருந்ததாக அந்நாட்டு வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சில மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளதாக அந்நாட்டு இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே தனி அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த வசதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் கிடைக்கிறது.குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு செல்ல முடியும்.
இந்த அறைகளை முன்பதிவு செய்து விட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் அமர்ந்து வாய்விட்டும், மனம்விட்டும் அழுதுவிட்டு போகின்றனர்.கண்ணீர் வராதவர்களுக்கும் அருவியாக கண்ணீரை சுரக்க வைக்கும் சாதனங்களும் இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சோகத்தை வரவழைக்கக்கூடிய கார்ட்டூன் மற்றும் சினிமா படங்களையும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டலுக்கு சென்று அழுது விட்டு வருகிறார் என்பது வெளி உலகுக்கு தெரியாத வகையில், அழுது, ஒப்பாரி வைத்து முடிந்தவுடன் கண்களில் இட்டுக்கொள்ளும் ‘ஐ லைனர்’ உள்ளிட்ட மேக்கப் சாதனங்களும் இங்குண்டு
ரஜினி முருகன் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அடுத்து இவர் நடிப்பில் ரெமோ, தொடரி ஆகிய படங்கள் வரவுள்ளது.இதை தொடர்ந்து விஜய்-60 படத்திலும் நடித்து வருகிறார்.
இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்க்கெட் உள்ளது.அப்படியே எப்போது பாலிவுட் என்று கேட்டால், ‘அதெல்லாம் நமக்கு எதுக்குங்க, தென்னிந்தியாவில் நம்பர் 1 ஹீரோயினாக வரவேண்டும், அது போதும்’ என்று கூறுகிறாராம்.
நயன்தாரா தமிழ் சினிமாவில் குயின். இவர் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ஹிட் வரிசையில் இருக்கின்றன. 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை.இப்படி படங்கள் மூலம் வெற்றிகொடி பிடித்து வரும் நயன்தாராவால் காதலில் ஜெயிக்க முடியவில்லை. இவருடைய முதல் காதல் சிம்புவுடனும், இரண்டாவதாக பிரபுதேவாவுடன் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது நமக்கு தெரியும்.
அண்மையில் இவர் நானும் ரவுடித்தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.ஆனால் தற்போது இந்த காதலும் நிலைக்கவில்லை. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டு பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.