”யுனிக் பிங்க்” (Unique Pink) எனப் பெயரிடப்பட்டுள்ள மிக அரிதான இளஞ்சிவப்பு வைரம் 31.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு வைரங்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை இது நிலைநாட்டியுள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஏலத்தில் ஆசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடும் போட்டிக்கு மத்தியில் 15.38 காரட் எடையுள்ள இந்த இளஞ்சிவப்பு வைரத்தை ஏலத்தில் எடுத்தார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கோரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இதனை விற்பனை செய்தது. சோத்பி எனும் நிறுவனம் ஏலத்தை நடத்தியது.
இதற்கு முன் இந்த ரகத்தில் 16.08 காரட் எடையுள்ள ஸ்வீட் ஜோசபைன் என்ற வைரம் 28.5 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது.
யுனிக் பிங்க் வைரமானது தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக காணப்படும் என்றும் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் இன்று ஆக்ரோசமான புயல்காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறிப்பாக இலங்கையைச் சுற்றிலும் உள்ள கடல்பிராந்தியத்தில் கடுமையான காற்றும், பாரிய அலைகளும் காணப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஓரளவுக்கு கடுமையான காற்று வீசக்கூடும்.
கொழும்பு தொடக்கம் மன்னார் வரையான மேற்குக்கரையோர கடல் பிராந்தியத்தில் மிகவும் ஆக்ரோசமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்திலும் காற்றின் தாக்கம் பலமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் காற்று மணித்தியாலமொன்றுக்கு அறுபது மைல் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் வடமேற்குப் பிராந்தியத்தில் இன்றும் ஓரளவு கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 132 பேர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைக் குறித்த எதுவித தகவல்களும் இல்லாத நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
காணாமல் போனவர்களில் 128 பேர் மிகப்பெரும் மண்சரிவு அனர்த்தம் நிகழ்ந்த அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக 28பேர் கடுமையான காயங்களினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலை வரை சுமார் நான்கு லட்சத்து இருபதினாயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் மூன்று லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் பேர் 594 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றனர்.
மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 288 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3057 வீடுகள் பகுதிவாரியாக சேதத்துக்குள்ளாகி இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இயற்கைச்சீற்றம் காரணமாக அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கொலன்னாவை பிரதேசத்தில் மட்டும் ஒரு லட்சம் பேரளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.
எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.
அசாதாரண காலநிலைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் யாரேனும் இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவர்களின் பணியை ஏனைய அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மாவனல்ல, அரநாயக்க பாரிய மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
மண்சரிவில் புதையுண்ட 14 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது என மண்சரிவு மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த சடலங்களில் 9 சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்றைய தினம் அரசாங்க அதிகாரிகளும் பிரதேச மக்களும் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது, ஒன்பது பேரின் இறுதிக் கிரியைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் தலையீட்டுடன் இன்று ஒரே இடத்தில் இந்த மண் சரிவில் உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளனர்.
அரநாயக்க பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, அரநாயக்க மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணப்பட்ட கிராமங்களின் மேல் 30 அடிக்கு மேல் மண் மூடியுள்ளதாகவும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை சீர்கேட்டினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை(20.05.2016) இடம்பெறாது என்று கொழும்பு அரசின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று மதியம் செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.
இருப்பினும், வடக்கு மாகாணத்தில் காலநிலை சீராக இருப்பதால், வடக்கிலுள்ள சகல பாடசாலைகளும் நாளையதினம் வழமை போன்று இயங்கும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்ததாக ஒரு செய்தி சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனை கொண்டு கேட்ட போது, வடமாகாண பாடசாலைகள் நாளை(20.05.2016) இடம்பெறாது எனத் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கடைசி வரை கடுமையாகப் போராடித் தோல்வியைத் தழுவினார்.
இத்தொகுதியில் அவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மிக மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் இருந்ததால் எப்படியாவது வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார்.
திருமாவளவன் தோல்வி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியனரை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் என்றாலே பெரும் தலைவர்கள் சில உருள்வது சகஜம்தான். இந்த சட்டசபைத் தேர்தலிலும் சில பெரும் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். உருண்ட மற்றும் உருண்டு கொள்ள தலைவர்களின் பட்டியல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் – உளுந்தூர்ப்பேட்டை
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் – காட்டுமன்னார்கோவில்
பாமக தலைவர் ஜி.கே.மணி – மேட்டூர்
நாம் தமிழர் தலைவர் சீமான் – கடலுார்
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் – விருகம்பாக்கம்
பாஜக வானதி சீனிவாசன் – கோவை தெற்கு
பாஜக எச். ராஜா – தியாகராய நகர்
அதிமுக-அமைச்சர் கோகுல இந்திரா
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் – நெய்வேலி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் – திருச்செந்துார்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா – ராமநாதபுரம் மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் – ஈரோடு கிழக்கு
சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி – பெரம்பலுார்
விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் – பண்ருட்டி
தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி – பல்லாவரம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு ‘ரோனு” என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
இதேவேளை, மழை பெய்யும் பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக கடலில் பிரயாணம் செய்வோர், மீன்பிடிக்காக கடலுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அத்திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
பாரிஸில் இருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட MS 804 விமானம் வெடித்துச் சிதறியதாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி பாரிஸில் இருந்து 59 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
எகிப்து வான்வெளியில் சுமார் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு 2.45 மணியளவில் விமானம் ராடாரில் இருந்து துண்டிக்கப்பட்டு தொடர்புகளற்று மாயமானது.
3 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் தரையிறங்காததால், அதனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த விமானம் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நயினாமடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக் கிராமமே பெரியமடு இக்கிராமத்தில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தை தமது பிரதான தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.
இக்கிராமத்தில் இரண்டு பிரதான சிறிய நீர்ப்பாசன குளங்களும் இரண்டு பாவனைக்கு உட்படுத்த முடியாத நீர்ப்பாசனக் குளங்களும் அமைந்துள்ளன.
கடந்த நான்கு நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இக்கிராமத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளமான வண்ணாங்குளத்திற்கு நீரைக்கொண்டுவருவதற்காக புதிதாக கடந்த வருடம் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இந்தவருடம் முற்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாயுடன் கூடிய இரண்டு கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட அணைக் கட்டானது உடைப்பெடுத்துள்ளது.
இதனால் வண்ணாங்குளத்திற்கான பிரதான நீர்வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் இதனை திருத்தியமைப்பதற்கு கமக்கார அமைப்பும் கமநல சேவை திணைக்களமும் விரைந்து செயற்பட்டு திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இக்கிராமத்தை ஊடறுத்து முத்தையன் கட்டுகுளத்திற்கு நீரைக்கொண்டுசெல்லும் பிரதான ஆறாக கருதப்படும் கரடியான் ஆறு பெருக்கெடுத்துப்பாய்வதனால் பெரியமடுவில் இருந்து வண்ணாங்குளம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வண்ணாங்குளம் கிராமத்திற்கு ஆரம்பகாலம்முதல் இன்றுவரை ஆற்றை மறித்து பாலம் அமைக்கப்படாத காரணத்தால் மக்கள் தமது உயிர்களை பணையம்வைத்தே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆயிலடிச் சந்தியிலிருந்து பெரியமடு ஊடாக வண்ணாங்குளம் செல்லும் ஐந்து கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதான வீதியானது 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை புணரமைக்கப்படாமையால் வீதியானது குண்றும் குழியுமாக போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுவதனால் பாடசாலை மாணவர்களும் கிராம மக்களும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.
இது தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, நெடுங்கேணி பிரதேசசபை, உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதி திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இவ் அடைமழை காரணமாக மக்களின் வீட்டுத்தோட்டப் பயிர்களான பப்பாசி, மிளகாய், முருங்கை போன்ற பயிர்களும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே நாளை 20 ஆம் திகதி(20.05.2016) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று(19.05) காலை வவுனியா பத்தினியார் மகிழங்குளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பொது மக்களின் ஒத்துழைப்புடன் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளத்தை அண்மிய பகுதியிலிருக்கும் பத்தினியார்மகிழங்குளம் குளக்கட்டில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட வவுனியா கமநலத் திணைக்கள சிரேஷ்ட பொறியியலாளர் இக்குளம் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததுடன் இன்று இப்பணிகளை மேற்கொள்ள இருந்தபோதே இக்குளம் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் அப்பகுதிக்கு விரைந்த கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் குளம் உடைப்பு ஏற்பட்டதை பார்வையிட்டதுடன் மேலதிக பணிப்புரைகளை வழங்கி, அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் மண்மூட்டைகள் அணைக்கப்பட்டு நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
குளத்தில் எட்டு அடி தண்ணீர் உள்ளதாகவும் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார் தெரிவித்தார்.
23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார்.
இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்