வடமத்திய மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தின் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று (02.05) முதல், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை நண்பகல் 12 மணி வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வெப்பம் காரணமாக வட மத்திய மாகாணத்தின் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை 12 மணியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டி.ஏ. மானெல் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமக மாணவர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக வகுப்பறைகளிலும், வெளியிலும் நடமாட முடியாமையாலும், பாடசாலைகளை மூடுமாறு பொலன்னறுவை மாவட்ட இடர்முகாமைத்துவத்தும் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினால் மாகாண கல்வியமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன் பிரகாராம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டி.ஏ. மானெல் சுட்டிக்காட்டினார்.
தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அது தொடர்பான விவரங்கள் வருமாறு:-
தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி.
தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.
தெட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.
தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல… தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.
சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.
அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
சித்தமதை தினம் உழைப்பில் தந்தவரை
சிந்தையிலே கொள்ளும் ஓர் நாளாம்.
நித்தமவர் உடல் வருத்தி பிறர் வாழ
நித்திரை, பசி மறந்து உழைத்தார்.
முத்தமிட்டு அவர்கரங்கள் உயர்வாய்
முத்தமிழால் போற்றிடுவோம்எந்நாளும்.
வறுமையது வாழ்வாகி நாளும் துன்பம்
வளமின்றி பசியால் உழல்தல் நன்றோ.
சிறுமையது பணம் பதுக்கும் என்றும்
சினமுறவே வெகுண்டெழுவர் புரட்சி
நன்றே.
பெருமையது நமக்காய் உழைப்போர் வாழ்
பெருமையுடன் காத்தல் நல்லோர்
பண்பே.
தூய்மையது திறம்படவே காப்போர்
வாழ்வு
துன்பமாக இழிவுடனே நோக்கல்
பாவம்.
வாய்மையது சிறப்புறவே பெருமனதாய்
நோக்கில்
வளமாக நம் வாழ்வைத் தந்தவரே
சிறந்தோர்.
தாய்மை போலே தாய் நாட்டை
தரமாய்க் தமைக் கொடுத்துக்
காப்போர்
தன்நிறைவாய் காத்தல் உயர்வே.
அமெரிக்காவில் அமைந்துள்ள Ibiza தீவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பொது இடத்தில் வைத்து தண்ணீர் அருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
San Antonio நகரில்அமைந்துள்ளது Ibiza தீவு, மனதிற்கு மிகவும் அமைதி தரும் தீவு என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர்.
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள்,பொது இடங்களில் வைத்து மது அருந்திவிட்டு பிரச்சனைகளில் ஈடுபடுவதாக அதிகமான புகார்கள் பொலிசாருக்கு வந்துள்ளது.
ஆனால் கையில் பாட்டில்களை வைத்து குடிப்பதால் அவர்கள் மது அருந்துகிறார்களா அல்லது தண்ணீர் அருந்துகிறார்களா என்று கண்டுபிடிப்பதில் பொலிசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை நிர்வாகம், பொது இடங்களில் வைத்து மது, குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர்கூட அருந்த கூடாது என அறிவித்துள்ளது, அதனை மீறி அருந்தினால் $850 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஆனால், கோடைகாலங்களில் இந்த தீவு அதிக வெப்பம் மிகுதியாக இருக்கும், இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர், எனவே இந்த சட்ட அமலாக்கம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கட்சி கவுன்சிலர் ஜோஸ் சாலா கூறியுள்ளார்.
ஹரியானாவில் துப்பாக்கியை தலையில் வைத்திருப்பது போல் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், எதிர்பாராத விதமாக தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா அருகே உள்ள பதன்கோட் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், செல்ஃபி எடுக்க முயன்றுள்ளான்.
கைத் துப்பாக்கியை தலையில் வைத்தவாறு செல்ஃபி எடுக்க ஆசைபட்ட அவன், ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தையின் கைத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளான்.
அப்போது செல்போனில் உள்ள பட்டனை அழுத்துவதற்கு பதிலாக, துப்பாக்கியை தெரியாமல் அழுத்தியதால் சிறுவன் பலத்த காயமடைந்துள்ளான்.
வீட்டில் பெற்றோர்கள் இல்லாததால், தகவல் அறிந்த உறவினர்கள் அச்சிறுவனை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அச்சிறுவன் செல்ஃபி எடுத்தபோது அவனது சகோதரி உடன் இருந்துள்ளார். தற்போது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் மிரட்டுகிறார். இந்த டீசர் லைக்ஸ் 1.2 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருந்தது.
ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் அப்டேட் ஆகும் என கூறப்பட்டுள்ளது.தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அப்டேட் ஆகி 16 லட்சம் ஹிட்ஸ் வரை வந்துள்ளது.
வட மாகாண சபையின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பம் செய்தவர்களில் 250 விண்ணப்பதாரிகள் பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண சபையில் அலுவலக உதவியாளர் பதவிக்காக 40 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தது.
மொத்தமாக இந்தப் பதவிக்காக 8460 பேர் நாற்பது பதவிகளுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பதாரிகளில் 250 பேர் பட்டதாரிகள் எனவும் அதில் ஒருவர் வியாபார முகாமைத்துவ விசேட பட்டம் பெற்றுக் கொண்டவர் எனவும் அவர் அலுவலக உதவியாளர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மத்திய வங்கியின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் வேலையற்றோர் தொகை கடந்த ஆண்டில் 4.3 வீதமாக காணப்பட்டதுடன் இந்த ஆண்டு அந்த தொகை 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது.
நாளைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்குமாறு இலங்கைத் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தொழில் அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் (அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த) பொது விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளார்.
தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்படுவதனால் இவ்வாறு பொது விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளார்.
விடுமுறை வழங்குமாறு தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களும் தம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை பொது விடுமுறை கிடையாது என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுடிக்கப்பட்டாலும் நாளை பொதுவிடுமுறை வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு மற்றும் வெசாக் பௌர்ணமி தினத்தின் போது இவ்வாறு விசேட விடுமுறைகள் வழங்கப்பட்ட போதிலும் மே தினத்திற்காக இவ்வாறு விடுமுறை வழங்கப்படாது என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் கட்டுக்கடங்காமல் ரவுடிகளின் அடாவடித்தனம் தொடர்ந்து செல்வதாக பொது மக்களினால் விசனம் வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வடமராட்சிகிழக்கு, நாகர்கோவில் பகுதியில் நடந்தேறியுள்ள சம்பவம் குறித்து இங்கு தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறையில் இருந்து ஆழியவளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை நாகர்கோவில் சந்தியில் மறித்த ரவுடிக்கும்பல் நடத்துனரை இழுத்து விழுத்தி தாக்கியதுடன், தட்டிக் கேட்ட இளைஞனையும் கொட்டன்களால் தாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
பருத்தித்துறையிலிருந்து ஆழியவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மாலை 6 மணியளவில் நாகர்கோவில் சந்தியை நெருங்கிய போது சந்தியில் 20-25 வரையிலான இளைஞர் குழு ஒன்று வீதியை மறித்து படுத்திருந்தது.
சாரதி பேருந்தை நிறுத்திய போது கையில் கொட்டன்களுடன் பேருந்தின் இரு கதவுகள் ஊடாகவும் சடுதியாக ஏறிய இளைஞர் குழுவினர், உடுத்துறையைச் சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குமாறு உரத்த குரலில் சத்தமிட்டனர்.
அதன்போது, அவர்களை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட நடத்துனரை பிடித்து இழுத்து வீழ்த்தி சேட்டைக் கிழித்ததுடன், தொலைபேசியையும் பறித்து எறிந்து அவரின் தங்கச் சங்கிலியையும் அறுத்து அடாவடித்தனம் புரிந்தனர்.
இதனை பேருந்துக்குள் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நடத்துனரை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்ட போது, குறித்த இளைஞரின் தலையிலும் அவர்கள் கொட்டன்களால் தாக்கினர்.
இதனால் தலையில் அடிபட்ட அந்த இளைஞரும் மயங்கி விழுந்தார். வீழ்ந்தவரையும் சரமாரியாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட பேருந்தின் சாரதி, பேருந்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கொண்டு சென்று நிறுத்தி பொலிஸாருக்கு விடயத்தைக் கூறியதுடன், காயமடைந்தவரை மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது அந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும், பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து வடமராட்சி கிழக்கிற்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையினை பகிஷ்கரிப்புச் செய்தன.
தமக்கும் பேருந்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாது என அவர்கள் கூறி பேருந்து சேவையை முற்றாக பகிஷ்கரித்தனர்.
இது விடயம் புலனாய்வுப் பிரிவு மூலம் மேலிடத்திற்கு தெரியவரவே பொலிஸார் உடனடியாக தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக காயமடைந்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டதுடன், தனியார் பேருந்து சங்கத்தினருடனும் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திரு க.கனகேஸ்வரன் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என உறுதி மொழி வழங்கப்பட்டதாக தனியார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை நண்பகலிலிருந்து பேருந்து சேவையில் ஈடுபடப்போவதாக தெரிவித்த அவர்கள் ஏதேனும் இடை யூறுகள் ஏற்பட்டால் பொலிஸாரும், பிரதேச செயலருமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினர்.
அதேவேளை இச்சம்பவம் பற்றி வினவிய போது உடுத்துறைப் பகுதியில் விளையாட்டு நிகழ்வு ஒன்று நடைபெற்றதாகவும், அங்கு நடந்த விளையாட்டுப் போட்டியில் நாகர்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குழுவினர் தோல்வியடைந்ததாகவும், அதனைப் பொறுக்கமாட்டாத குழுவினரே இந்த அடாவடித்தனம் புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் நாகர்கோவில் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளதாகவும், ஏனையோர்கள் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை அளிக்குமாறு, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் வருடம் மே தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் இதன்பொருட்டு நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் பெரும்பாலான மக்கள் தம்மிடம் கோரியுள்ளதாகவும் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் நாளை அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என, சுதேச விவகார அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (30.04.2016) மாலை இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பம்பரக்கலை தோட்டத்தில் பிறந்தநாள் வைபவம் ஒன்றில் இடம்பெற்ற வீட்டில் மது அருந்திவிட்டு உறவின பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் ஒருவரை அப்பெண்ணின் கணவர் தாக்கியதன் மூலம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் நபரை தாக்கியவர் உட்பட மேலும் இருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிறந்தநாள் வைபவத்தில் மது அருந்திய நிலையில் ஆட்டம், பாடல்களுடன் சந்தோஷகளிப்பில் இருந்த வேளையில் நபர் ஒருவர் தனிமையில் இருந்த திருமணம் முடித்த பெண் ஒருவரிடம் தகாத உறவை மேற்கொள்ள முயற்சித்திருப்பதாகவும், இது தொடர்பாக அப்பெண் கணவரிடம் முறையிட்டதன் பின்னர் இந்த கைகலப்பு சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வன்னி சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, தொழிலாளர்கள் விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி, அங்காடிகள் வியாபாரிகள் சங்கம், சிறு தொழிலாளர்கள், ஆகியோர் இணைந்து நடாத்திய மே தின நிகழ்வுகள் இன்று(01.05.2016) வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மத்திய பேரூந்து தரிப்பிடம் ஊடாக மணிக்கூட்டுக் கோபுர வழியாக பஸார் வீதி சென்று அங்கிருந்து நீதிமன்றம் வழியாக வவுனியா நகரசபை மண்டபத்தினை வந்தடைந்தது,
தொடர்ந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இம் மேதினப் பேரணியிலும் கூட்டத்திலும் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் இன்று (01.05.2016) புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய புரட்சிகர மேதின பேரணியானது சூசைப்பிள்ளையார் வீதி – இரண்டாம் குருக்குத்தெரு வீதி – வவுனியா பேரூந்து தரிப்பிடம் – புகையிரதநிலைய வீதி – பூங்கா வீதியுடாக 11.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.
இப் பேரணியில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், மைத்திரி ரணில் அரசே தேர்தல் வாக்குறுதி என்னாச்சு, அரசியல் கைதிகளை விடுதலை செய், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என பல கோசங்கள் எழுப்பப்பட்டன.
அரசே அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் எனும் வாசகத்துடன் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கும் பேரணி வாகனம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
1977ஆம் ஆண்டு சட்டப்படி 5 வயது முதல் 14 வயது வரையிலான பிள்ளைகள் பாடசாலைக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதனை 16 வயது வரையில் அதிகரிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர பிள்ளைகளின் பாடசாலை வரவுகள் தொடர்பில் கண்காணிக்கும், பொறுப்பு வலய கல்வி அதிகாரிகளை கொண்ட குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளது. இவர்கள் பாடசாலை இடைவிலகல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
இந்தக் குழு, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் பிரதமர் ஹைதர் அல் அபாதியின் அரசுக்கு எதிராக போராடிவரும் அதிருப்தியாளர்கள் பாக்தாத் நகரில் உள்ள பாராளுமன்றத்துக்குள் புகுந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து, சூறையாடினர்.
ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி சமீபத்தில் அந்நாட்டு ஆட்சிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முயன்றார். அமெரிக்காவின் ஆலோசனைப்படி, அமைச்சரவைகளில் அரசியல் கட்சியினரின் ஆதிக்கத்தை குறைத்து கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை புதிய அமைச்சர்களான நியமிக்க அவர் முடிவு செய்தார்.
இந்த முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈராக்கில் வாழும் ஷியா பிரிவினரின் மூத்த தலைவரான மக்தாதா அல்-சதர் என்பவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு 5 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினரின் நிராகரிப்பால் பாராளுமன்றத்தின் ஒப்புதலைபெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நஜாப் நகரில் ஷியா பிரிவு மதத்தலைவர் மாக்தாதா அல்-சதர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், அரசியலில் நிலவிவரும் முட்டுக்கட்டைக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த பேட்டிக்கு பின்னர், அடுத்த சிலநிமிடங்களில் பாக்தாத் நகரில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆவேசமாக திரண்டனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள பசுமை பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்ததால் எம்.பி.க்கள் யாருமில்லாத நிலையில், பாராளுமன்ற கட்டிடத்தின் உள்ளே இருந்த நாற்காலி, மேஜை, விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
பாராளுமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் தீயிட்டு பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
அவர்கள் பாராளுமன்றத்துக்கு அருகாமையிலேயே முகாமிட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.