இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்டுள்ளது. இம்மீனின் இரு வாய்களும் உட்புறத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் ஏரியொன்றில் இம்மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
“மேற்படி மீனின் மேற்புற வாய் திறந்து மூடுகிறது. ஆனால் கீழ் புறத்திலுள்ள வாய் நிரந்தரமாக திறந்தவாறு உள்ளதைப் போல் தென்படுகிறது” என இம்மீனை பிடித்த கெரி வார்விக் என்பவர் கூறியுள்ளார்.
வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சரண்யா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனகராயன் குளம் – மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான எஸ்.சரண்யா கடந்த மாதம் 27ம் திகதி மரணமானார். கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.
இவர் சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு குறிப்பிட்டது.
எனினும், சிறுமியின் மரணத்திற்கான காரணம் இருதய மற்றும் மூளை தொடர்பான பாதிப்பு என குறித்த வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு மேலும் தெரிவித்தது.
எனினும், இந்தச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். இதனை பெண் அடிமைத்தனம் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்.
சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உட்பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான். இது பெண்களின் நன்மைக்காகத்தான்.
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுமார் 25 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிணற்று நீர் விஷமானதாலேயே இவர்கள் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாடசாலைக் கிணற்றில் இனந்தெரியாத சிலர் கிருமிநாசினியைக் கலந்துள்ளமையே இந்த சம்பவத்துக்கு காரணம் என, குறித்த பாடசாலை அதிபரால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மாணவர்கள் வழமைபோல் பாடசாலைக்குச் சென்று நீர் அருந்தியுள்ளதோடு, அதில் உயர்தர மாணவன் ஒருவர், அதிபரிடம் சென்று நீரில் கிரிமிநாசினி வாசனை வருவதாக முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே பாடசாலை தரப்பினரால் விரைந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் நேற்று (18.03) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, முன்னாள் உபபீடாதிபதி திரு.தெய்வேந்திரன், வவுனியா தெற்கு உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன்,
முன்னாள் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பாலசிங்கம், செட்டிக்குளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.யேசுதன் ஆகியோரும், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர் மத்திய நிலைய வளவாளர்கள், ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தனது உரையில்,
வவுனியா கல்விக்கோட்டத்தில் 43 பாடசாலைகளைச்சேர்ந்த 20,620 மாணவர்களும், 1,384 ஆசிரியர்களும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், 42 பாடசாலைகள் இன்றைய போட்டியில் கலந்துகொண்டதாகவும், 20 வீதம் அளவிலான மாணவர்கள் பங்களித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, வலயக்கல்வி பணிப்பாளர், 42 பாடசாலைகளினதும் அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பை பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.
பத்து வருடங்களுக்கு பின்னர், வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வௌியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் என கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என பிபிசி கூறியுள்ளது.
“ஶ்ரீ லங்கா மாதா..” என்ற சுதந்திர இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் ஆனந்த சமரக்கோன் இயற்றி இருந்தார். “பின்னர் ஶ்ரீ லங்கா தாயே..” என இதனை இலங்கைக் கவிஞர் எம்.நல்லதம்பி தமிழில் மொழி பெயர்த்தார்.
பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டு வந்தது.
பல தசாப்தங்களாக இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2009ம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜாதிக ஹெல உறுமய போன்ற, தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிங்களக் கட்சிகள் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடைசெய்ய வலியுறுத்தின.
இதன்படி 2010ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உள்விவகார அமைச்சராக இருந்த ஜோன் செனவிரத்ன தமிழில் தேசிய கீதத்தைப் பாட அனுமதிக்க முடியாது என்ற வகையில், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.
அத்துடன் தமிழர் தரப்பில் தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பல்வேறு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பதை மேற்கோள் காட்டி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டும் வந்தன.
இந்தநிலையில் இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் மாதம் 07ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
சிட்னியில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், கிளிநொச்சியில் தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கேலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வாள்வெட்டு இடம்பெற்றது. வாள்வெட்டுச் சம்பவத்தில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
முழங்காவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.
இலங்கை அணி தனது காலிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
இலங்கை அணியில் இவர்கள் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது ஜோடி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது.
குமார் சங்கக்கார
இடது கை ஆட்டக்காரரான இவர் இதுவரை 403 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,189 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும், 93 அரைசதங்களும் அடங்கும். சங்கக்கார இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வகிக்கிறார்.
சங்கக்கார 7 இன்னிங்சில் 541 ஓட்டங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும்சங்கக்கார விக்கெட் காப்பாளராகவும் சிறந்து விளங்கினார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் 402 பிடியெடுப்பு மற்றும் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
மஹேல ஜயவர்தன
வலது கை ஆட்டக்காரரான மஹேல ஜயவர்தன இதுவரை 447 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,646 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 77 அரை சதங்கள் அடங்கும். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தன 5 இன்னிங்சில் விளையாடி 125 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தனவால் சோபிக்க முடியவில்லை.
ஏமாற்றமாக உள்ளது: சங்கா
‘தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், போட்டியில் இதுவும் ஒரு பகுதிதான். உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எண்ணியிருந்தோம். இது நடக்காமல் போனது, என்றார்.
திருப்தியை தருகின்றது: மஹேல
இலங்கை அணியில் இடம்பிடித்தது முதல் இன்று வரை நிறை அனுபவங்களையும் நண்பர்களையும் பெற்றுள்ளேன். இலங்கை வீரர்களுடன் ‘டிரசிங் ரூமில்’ மகிழ்ச்சியாக இருந்தது திருப்தியை தருகின்றது, என்றார்.
சச்சின் வாழ்த்து
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சங்கக்கார மற்றும் ஜயவர்தனவுக்கு இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுகல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக நீண்டநாட்களாக விளையாடியுள்ளனர். இவர்களை இழந்தது இலங்கை அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையினால் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் முரண்பட்டிருந்த ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினர் இலங்கை வரவுள்ளார். இது எமது குற்றமற்றத் தன்மையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, அதற்கு பணம் வழங்குவதை நிறுத்துவது, கறுப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் அதனோடு தொடர்புடைய தரப்புக்களை தடுப்பதற்கான சட்டவிதிமுறைகள் 2012 ஆம் ஆண்டு ஐ.நா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான் அறிக்கை அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்புக்களை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆயுதங்கள் கொள்வனவு, பணம் வழங்கல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கேற்றவாறு ஐ.நா மற்றும் ஜனநாயக சரத்துக்களுக்கு இலங்கை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆசிய பசுபிக் குழு கறுப்புப் பணம் பறிமுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாகவும் டிசம்பர் பிரகடனம் 1267 மற்றும் 1373 இன் கீழ் பாதுகாப்பு சபையில் தீர்மானம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கையின் மத்திய வங்கியிலும் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.பணம் கொடுக்கல் வாங்கல் திருத்தங்கள் தொடர்பில்
இலங்கையின் சட்டவரைவுக்குள் சர்வதேச நிதி மற்றும் பயங்கரவாத தடைக்கு ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது நாட்டிலும் நீண்ட காலமாக பிரச்சினை தலைதூக்கியிருந்தது. இதனை இன நெருக்கடி என்ற அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.
ஐ.நா சபை 60 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. நாம் அவ் அமைப்பில் 1955 ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்புரிமை பெற்று வருகிறோம். அத்தோடு ஐ.நா சட்டங்களை மதித்து எமது சட்ட வரையறைக்குள் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த கால ஆட்சியாளர்கள் ஐ.நாவுடன் மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நெருக்கடியில் நாட்டை தள்ளிவிட்டிருந்தது.
சர்வதேச ரீதியில் நட்புறவுகள் பேணப்படவில்லை. எனவே ராஜதந்திர உறவுகள் விரிசலடைந்திருக்கின்றது.
அந்த நாடுகள் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவு வழங்கவில்லை.அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கத்தில் ஐ.நா உட்பட சர்வதேச நாடுகளுடன் நட்புறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளோம்.
ராஜாந்திர உறவுகள் மேம்பட்டுள்ள எமது அபிவிருத்திற்கு உதவி வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளன.கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான நட்புறவுகளை முன்வராத காரணத்தினால் தான் எமக்கெதிராக ஐ.நா வில் தொடர்ச்சியாக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.
இன்று இறையாண்மை கொண்ட எமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு சர்வதேசத்துடன் நட்புறவுகள் பேணப்பட்டு வருகின்றது.ரோமர் பிரகடனத்தில் நாம் கையெழுத்திடவில்லை.
எனவே மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எமது நாட்டு சட்டப்பிரகாரமே கையாள்கிறோம்.அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். உள்ளகப் பொறிமுறை ஊடாக எமது நாட்டின் பெயரை பாதுகாத்து வருகின்றோம். நாம் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்படவில்லை. மாநாடு எமது மக்களின் கோரிக்கைகளை ஏற்றே விசாரணைகளை நடத்துகின்றோம்.
எமது இராணுவத்தினர் ஒழுக்கமுள்ளவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள் எனவே இன்று ஐ.நா சமாதானப் படையிலும் அங்கம் வகிக்கின்றது. கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் தேவைக்காக விடுதலைபுலிகள் தொடர்பான புரளி கிளப்பப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும் பீதி கிளப்பட்டது.எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் இலங்கை வரவுள்ளார்.
அவ் விஜயம் எமது நாட்டின் குற்றமற்றத் தன்மையை வெளிப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.அல்கைதா மற்றும் தலிபான் அமைப்புக்களுக்கு எதிராக ஐ.நா நிறைவேற்றிய இரு தீர்மானங்களையும் அமுல்படுத்தும்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலி காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குகநேசபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் இருந்து 07.15 மட்டக்களப்பு நோக்கி வந்த “மீனகயா” கடுகதி புகையிரதத்திலயே புனானை புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை காகித நகர் புகையிரதத்திற்கும் இடையில் புதன்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் 310ம் மைல் கல்லுக்கு அருகில் இவ் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை புகையிரத திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்..
வவுனியா பிரதேச செயலகத்திற்கு காணிப்பிரச்சினை தொடர்பாக வவுனியா, சமணங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்றதாகவும், அது தொடர்பாக உதவி பிரதேச செயலாளருடன் கதைத்த போது அவர் தனக்கு சார்பாக செயற்படாததால் கோபமடைந்த குறித்த நபர் உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியபடி பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறமுற்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு நின்ற சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை தடுக்க முற்பட்ட வேளை அவரது கையில் கடித்துவிட்டு தப்ப முயன்ற நிலையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்த குறித்த நபா் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதேவேளை கடித்ததால் காயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்து அண்மையில் வருகை தந்தவர் என தொிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இன்று (18.03) தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றய தினம் இரவு சிதம்பரபுரம், பழைய கற்குளம் பகுதியில் வசிக்கும் விஜயரட்ணம் சபீஸ்வரி என்ற 13வயது மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடா்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப்பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் வட்ஸ் அப்பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் பொலிஸில் புகார் செய்தார்.
சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை.
அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனவே அந்த பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று சென்று, மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்கள் பல தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் விளைவாக வலி.கிழக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட 250 ஏக்கர் பரப்பளவிலான காணி வளலாயில் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.
25 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வாழும் வளலாய் மக்கள் விடுவிக்கப்பட்ட தங்கள் காணிகளைப் பார்வையிடச் சென்றபோது பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இராணுவத்தினர் தங்களது தேவைகளுக்கெனப் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனையவை யாவும் இருந்த இடம் தெரியாமல் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்குக் காணிகள் பற்றைகளால் மூடிக் காணப்படுகிறது.
தங்கள் காணிகள் விடுவிக்கப்பட்டபோதும் அவற்றில் உடனடியாகக் குடியேறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் வளலாய் மக்கள் இதுதொடர்பாக வடக்கு மாகாணசபையினரிடம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வளலாய் பகுதிக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டுள்ளனர்.
மக்களின் முறைப்பாடுளைக் கேட்டறிந்துகொண்ட முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஊடாக உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு ஆவனம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
வளலாய்க்குச் சென்றிருந்த குழுவில் வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ச.சுகிர்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது.
இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
லீக் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடிய சங்கக்கார, தொடர்ந்து 4 சதங்களையும் விளாசி சாதனை படைத்ததோடு, அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.
இந்நிலையில், இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் சங்கக்கார 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் தொடர்ந்து 5வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டார். நல்ல நிலையில் இருந்த சங்ககார, மற்ற வீரர்களின் சொதப்பலால், வேறு வழியில்லாமல், அடித்து ஆடத் தொடங்கி ஆட்டமிழந்தார்.
சங்கக்கார ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்ததும், திடீரென மழை கொட்டத் தொடங்கியது. இந்த மழை சங்கக்காரா ரசிகர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துள்ளது.
சங்ககார உலகத்தரம்வாய்ந்த வீரர் மட்டுமின்றி, மனித நேயம் உள்ளவராகும். எனவே, அவர் ஆட்டமிழக்கும் போது, வருண பகவானே மழை தூவி வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.