கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே – ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
48,000 தாய்மார்களிடம் சுமார் மூன்று வருடங்கள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரத்னசிறி ஹேவாகே தெரிவித்துள்ளார்.
எனவே பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் கர்ப்பிணிகள் வைத்தியரிடம் உரிய ஆலோசனை பெருவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொண்டது.
முன்னதாக லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம் வீழ்ந்தது.
இந்தநிலையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றது.
முதலில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்து, ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 232 ஓட்டங்களைப் பெற்றது.
அடுத்ததாக 233 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லகிரு திருமானே மற்றும் தில்ஷான் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அணியின் முக்கிய வீரரான குமார் சங்கக்கார ஏழு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொடுக்க திமுத் கருணாரத்ன 23 ஓட்டங்களை எடுத்து வௌியேறினார்.
இந்தநிலையில் ஜோடி சேர்ந்த மஹெல ஜெயவர்த்தன மற்றும் மத்தியூஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.
தொடர்ந்து மஹெல ஜெயவர்த்தன 100 ஓட்டங்களுடனும் மத்தியூஸ் 44 ஓட்டங்களுடனும் வௌியேறினர்.
இவ்வாறு சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இலங்கை அணியை அடுத்ததாக களமிறங்கிய திஸர பெரேரா அதிரடியாக ஆடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இவர் 26 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம் மற்றும் ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 47 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.
இதன்படி 48.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 236 ஓட்டங்களைக் குவித்து இலங்கை வெற்றியைத் தனதாக்கியது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக மஹெல தெரிவுசெய்யப்பட்டார்.
பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியின் 20.02.2015 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது வருகை தந்திருந்த கல்லூரியின் பழைய மாணவனும் சக்தி வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளருமான தேவசகாயம் செல்டன் அன்டனி கல்லூரியில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்ற மாணவர்களுக்கு ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை சக்தி எப் எம் வானொலியின் சார்பில் கல்லூரி அதிபர் கே தனபாலசிங்கத்திடம் கையளித்தார்.
மேலும் கல்லூரியின் விளையாட்டு போட்டியின் நிறைவில் உரையாற்றிய செல்டன் வெற்றி என்பது பெற்றுகொள்ள தோல்வி என்பது கற்றுகொள்ள என்றும் மாணவர்கள் வெற்றி தோல்வி என்பவற்றை சமமாக ஏற்று கொள்கின்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் தோற்றம் பெறவேண்டும் எனவும் கல்வி தான் எம் எல்லோரையும் வாழ்வின் உயர்வுக்கு கொண்டு செல்லக்கூடியது .அத்தகைய கல்வியை கற்பதற்கு நாம் இறக்கும் வரைகல்வியை கற்றுகொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார் .
தன்னுடடைய பாடசாலை காலங்களை நினைவு கூர்ந்ததோடு இன்று அகில இலங்கையில் தானும் ஒரு அறிவிப்பாளனாக திகழ்வதற்கு இந்தபாடசாலையின் முன்னாள் அதிபர் திரு சி.வி .பேரம்பலம் அவர்கள் தனக்கு தந்தைக்கு தந்தையாக நின்று பல்வேறுபட்ட உதவிகளை செய்தமைமையை என் வாழ்நாளில் எப்போதும் மறவேன் எனவும்.அப்படிப்பட்ட அதிபரின் காலத்தில் நாமெல்லாம் பட்டை தீட்டிய வைரங்களாய் இந்தபாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளோம். அது மட்டுமல்லாமல் அன்று எங்களுடனும் இன்று உங்களுடனும் இருக்கின்ற எங்களது அன்புக்குரிய ஆசான்கள் தான் இன்றும் எம்மையெல்லாம் வாழிவினில் உயர்த்திய உத்தம சிற்பிகளாகவே என் கண்களுக்கு புலப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய செல்ரன் பலமுனைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் வவுனியா விபுலானந்தா கல்லூரி தனது வெற்றிப் பயணத்துக்கு ஒரு மைதானம் இல்லாததுதான் பெரும் குறையாக உள்ளதாகவும் அதனை பூர்த்தி செய்ய மேடையில் அமர்ந்திருந்த பிரதி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்தோடு பழைய மாணவர்கள் பெற்றோர் வர்த்தகபெருமக்கள் அனைவரும் செயல்திறன் கொண்ட கல்லூரியின் புதிய அதிபரான தனபாலசிங்கம் அவர்களோடு கைகோர்த்து கல்லூரிக்கு மைதானம் ஒன்றை பெறக்கூடிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுகொண்டார் .
கடைசியில் வாழ்கையில் எவரேனும் எந்த கீழ்மட்டத்தில் இருந்தாலும் அல்லது வறுமையில் வாடினாலும் நம்பிக்கை என்ற ஒன்று இருக்குமானால் உங்களால் எப்போது சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு வந்து சேரமுடியும் .நம்பிக்கையோடு செயல்படுங்கள் நாளை உங்கள் கைகளில் எனவும் கூறிசென்றார் .
ஊர்காவற்றுறை சென்.மேரிஸ் மகளிர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இடம்பெற்ற விநோத உடைப் போட்டியில் தற்போது யாழ்ப்பாணத்தின் நிலையைப் பிரதிபலித்து வந்த ‘கழிவெண்ணெய் அரக்கன்’ வேடம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் போட்டியில் முதலிடத்தையும் தட்டிச் சென்றது.
யாழ்.சுன்னாகம் பகுதியிலுள்ள அனல் மின்சார உற்பத்தியால் அப்பகுதிகளைச் சூழவுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்து மக்கள் பாவனைக்கு உதவாத அசௌகரிய நிலையை வலியுறுத்தி பல்வேறு மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கு இடம்பெற்று வருவது தெரிந்ததே.
சக்தி தொலைக்காட்சியின் “U-Report” செயலமர்வு நாளை (22.02.2015) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்பாடல் துறையில் இணைவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரையும் சக்தி ஊடக நிறுவனத்தினர் அழைப்பு விடுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு..
பா.கதீசன்
077 2661413
075 8363898
அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டவர்களை இல்லாது ஒழிக்க நாம் முன்வந்துள்ளோம் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்போட்டியின் பிரதம அதிதியாக நேற்று (20.02) மாலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்த பாடசாலையில் பௌதீக வளங்கள் போதியளவில் இல்லை. ஆனால் நாங்கள் அலரிமாளிகையை பார்க்கும்போது ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக அபிவிருத்தி செய்வதாக சொன்னவர்கள் அலரியமாளிகையை அபிவிருத்திசெய்துள்ளனர்
எங்களுடைய பணத்தையே அவர்கள் சூறையாடி கொண்டு சென்று வைத்திருந்தனர். போர் முடியும் காலத்தில் எங்களுடைய மக்களினுடைய பணத்தையும் நகைகளையும் கென்டெய்னர்களில் சூறையாடி ஆனால் எங்களுடைய சிறார்களுக்குப் படிப்பதற்கு கட்டிடம் இல்லை.
இவற்றுக்கெல்லாம் யார் உடந்தையாக இருந்தார்கள். எங்களை எங்கள் மண்ணில் இருந்த அகற்றுவதற்கு எங்களுடைய மக்கள் சிலரே அரசாங்கத்துடன் கைக்கூலிகளாக இருந்து வந்தார்கள். இன்று இந்த கைக்கூலிகளை முற்றாக அழிப்பதற்கு நாங்கள் முன்வருகின்றோம்.
இவர்களால் தான் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இவர்களின் வழிகாட்டலில்தான் தெற்கில் இருந்து அரசாங்கம் வந்து எம்மை தாக்கியது. ஆகவே இந்த சொற்றப ஆசைக்காக துணைபோகாது எமக்காக செயற்படவேண்டும்.
பாடசாலை ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது இப்பாடசாலை அதிபருக்கோ அல்லது வேறு பாடசாலை அதிபருக்கோ பிரச்சனை இல்லை. அவர்களை மாற்றம் செய்யும் போது பதிலீட்டு ஆசிரியர்களை கொடுக்கவேண்டும். ஆனால் அவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வழங்க மாட்டார்கள்.
அவர்களுக்கு எந்த எந்த பாடசாலையில் இருந்து ஆசிரியர்களை மாற்றம் செய்திருக்கின்றோம் மாற்றம் செய்யப்போகின்றோம் என்பது தெரியாது.
ஒரு பத்திரிகையில் நான் கண்ணுற்றேன் ஓய்வு பெற்ற ஆசிரியரையும் இடமாற்றம் செய்திருக்கின்றார்கள் என. வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு தெரியாது இவர் ஓய்வு பெற்றுவிட்டாரா படிப்பித்துக்கொண்டிருக்கின்றாரா என தெரியாது.
இதற்கும் அப்பால் கடந்த ஞயிற்றுக்கிழமை வவனியாவில் இருந்து ஆசிரியா ஒருவர் அதிகாலை 6 மணிக்கு எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் கதைத்தபோது அவர் 55 வயதுடையவர் என தெரியவந்தது.
ஒரு சிறு பிள்ளைக்கும் தெரியும் ஒரு பாடசாலையில் 25 வருடமல்ல 30 வருடம் சேவையாற்றியிருந்தாலும் 55 வயதுடையவர் என்றால் இடாற்றம் செய்யமுடியாது என்பது. அது தொடர்பில் சுற்றுநிருபமும் உள்ளது. எனினும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் நான் வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது அவர் இச் சுற்றுநிருபத்தை மதிப்பதாக இல்லை. ஆனால் வலயக்கல்விப் பணிப்பாளாரிடம் நான் சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யவேண்டாம் அல்லது வேறு எதுவும் சொல்லவில்லை.
இவ்வாறான சுற்றுநிருபம் இருக்கும்போது இடமாற்றம் செய்யமுடியாது என்றே சொல்லியிருந்தேன். ஆனால் அவர் சுற்றுநிருபம் ஒரு பக்கத்தில் இருக்க இடமாற்றம் செய்வேன் என்றே எனக்கு அவர் கூறியிருந்தார்.
அன்று வட மாகாண ஆளுனரை சந்தித்தபோது இது தொடர்பில் அவரிடம் சொல்லியிருந்தேன். மக்கள் பிரதிநிதிகளான எம்மையே மதிக்காது சுற்று நிருப்பத்திற்கு மாறாக பணியாற்றுபவர்கள் எவ்வாறு ஆசிரியர்களுடன் செயற்படுவார்கள் என. இது தொடர்பில் ஆளுனரும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த ஆசிரியருக்கு சம்பளமும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தனது சொந்தக்காரனுக்காக பழிவாங்கப்படுகின்றாரா அல்லது பாடசாலை முன்னேறக்கூடாது என்பதற்காக பழிவாங்கப்படுகின்றதா என நினைத்துப்பார்க்க முடியாத கட்டமாக உள்ளது என்று தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவில் நபர் ஒருவர் 30 பெண்களை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆபிரிக்காவில் காட்டங் மாகாணத்தில் உள்ள டெம்பிசா பகுதியை சேர்ந்த நபர் அல்பட் மோராக்கே(35)
இவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பலாத்காரம், கடத்தல், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீதான வழக்குகளை விசாரித்த ஜோகன்ஸ்பர்க் நீதிமன்றம் அனைத்து குற்றங்களையும் உறுதி செய்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 30 பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு 30 ஆயுள் தண்டனையும், திருட்டுக்கு 360 ஆண்டுகளும், கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு பல நூறு ஆண்டுகள் என மொத்தம் 1,535 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் 175 குற்றச்சாட்டுகளிலிருந்து அல்பர்டை விடுவித்த நீதிபதி, மற்ற தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அல்பர்ட் கொடூரமானவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் கடும் தண்டனையை விதித்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏசுநாதர் சிலையிலிருந்து கண்ணீர் வடியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டின் அஸ்புரோகாம்போஸ் நகரிலுள்ள சென் நிகோலஸ் என்ற தேவாலயத்தில் இருக்கும் ஏசுநாதர் சிலையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் கண்ணீர் போன்ற திரவம் வடிந்துக்கொண்டே இருப்பதாக அங்குள்ள பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி நகர் முழுவதிலும் பரவியதால், இந்த அதிசயமான காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு படையெடுத்தனர்.
அங்கு சிலுவையில் அறையப்பட்டுருந்த ஏசுநாதர் கண்களிலிருந்து வாசனையற்ற கண்ணீர் போன்ற திரவம் வழிந்துக்கொண்டே இருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கிரீஸ் சம்பரதாயப்படி அங்குள்ள தேவாலயத்தில் தலைமை மதகுரு முன்னிலையில் தான் பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்வது தான் வழக்கம்.
ஆனால் புதிய பிரதமராக பதவியேற்ற அலெக்சீஸ் ஸ்பைரஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் இந்த வழக்கத்தை உடைத்தெரிந்து விட்டு அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவரது இச்செயல் ஏசுநாதருக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளதா என தேவாலயத்தில் திரளும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த தேவாலயத்தின் மதகுரு தெரிவித்தபோது, சரியான ஆதாரங்கள் மற்றும் பரிசோதனைகள் இல்லாமல் உறுதியான முடிவுகளுக்கு வர முடியாது என்றும் இந்த சூழ்நிலையை பற்றி கீரிஸ் தலைமை தேவாலயத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கீரிஸில் உள்ள ஒரு பிரபலமான ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவது சாதாரணம்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால் சிலுவையில் உள்ள வண்ண சாயங்கள் கரைந்து வடிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள் அதிகம் விரும்பும் 11 வீரர்கள் அடங்கிய அணியை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளில் இருந்து தலா 3 வீரர்களும், இலங்கையை சேர்ந்த இருவரும், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேச அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் இருந்து யாரும் வீரர்களும் தெரிவு செய்யப்படவில்லை. அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் ஜம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்தும் யாரும் இடம் பெறவில்லை.
மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஏலம் எடுக்க கூட ஆள் இல்லாமல் இருந்த தென் ஆபிரிக்க வீரர் ஹசிம் அம்லாவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை, துணை அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் விக்கெட் காப்பாளர் வரிசையில் அணித்தலைவர் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 11 வீரர்கள் விவரம்..
1.ஹசிம் அம்லா- தென் ஆபிரிக்கா
2.பிரண்டன் மக்கலம்- நியூசிலாந்து
3.குமார் சங்கக்கார- இலங்கை
4.விராட் கோஹ்லி- இந்தியா
5.ஏபி டி வில்லியர்ஸ்- தென் ஆபிரிக்கா
6.ஸ்டீவ் ஸ்மித்- அவுஸ்திரேலியா
7.சாகீப் அல் ஹசன்- வங்கதேசம்
8.ஜேம்ஸ் பக்னர்-அவுஸ்திரேலியா
9.மிட்சல் ஜோன்சன்- அவுஸ்திரேலியா
10.ஸ்டெயின்- தென் ஆபிரிக்கா
11.லசித் மலிங்க- இலங்கை
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து வீரர் கொரி அன்டர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார்.
இதனையடுத்து அதிரடியாக விளையாடிய அன்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு, அந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் தன்மையையே மாற்றக் கூடிய பிடியெடுப்பை ஜீவன் மெண்டிஸ் நழுவிட்டதோடு இல்லாமல் சிரித்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு, ரசிகர்ளுக்கும், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் இடையே பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.
இந்நிலையில் அவர் ஏன் அந்த மோசமான நிலையிலும் அவ்வாறு சிரித்தார் என்பதன் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது அவர் பிடியெடுக்கும் போது பந்து கைகளிருந்து நழுவி அவரின் மர்ம உறுப்பில் பட்டுள்ளது. இதனால் தான் அவர் சிரித்ததாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் கிரைஸ் சேர்ச் மைதானத்தில் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் கெயில், ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ஓட்டங்களிலும், ஸ்மித் 23 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பிராவோ, ராம்டின் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பிராவோ 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மறுமுனையில் இருந்த ராம்டின் (51) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதம் அடித்த சிமன்ஸ் அரைசதம் அடிக்க, ரசல் அதிரடியாக விளையாடி 13 பந்திற்கு 42 ஓட்டங்கள் சேர்க்க, மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
நசீர் (0), ஷீஹசட் (1), யூனிஸ் கான் (0), ஹரீஸ் சொஹாலி (0) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.
1 ஓட்டங்களை மட்டும் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. பின்னர் வந்த அணித்தலைவர் மிஸ்பாவும் 7 ஓட்டங்களில் நடையை கட்ட, 25 ஓட்டங்கள் என்ற நிலையில் 5 முக்கிய விக்கெட்டுகளை பாகிஸ்தான் பறிகொடுத்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த சோகிப் மக்சூட், உமர் அக்மல் பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்க போராடினர். சோகிப் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 59 ஓட்டங்களில் உமர் அக்மல் வெளியேறினார்.
அப்ரிடி 28 ஓட்டங்களில் அவுட்டானார். வஹாப் (3), சொஹாலி கான் (1), முகமது இப்ரான் (2) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலே சகல விக்கெட்டையும் பறிகொடுத்து 160 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 13 பந்துகளில் 42 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த ரசல் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பூவரசங்குளத்திலுள்ள பூவரசு ஆரம்பப் பாடசாலையில் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து முகாமிட்டு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திவரும் விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றுமாறு புதிய அரசாங்கத்திடம் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடையம் தொடர்பாக காவல்துறை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச்செயலாளருக்கும் கடந்த 16.02.2015 அன்று கண்டித்தும் வலியுறுத்தியும் ஆனந்தன் எம்.பி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19.02.2015) இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள மேற்படி பாடசாலைக்காணி, கட்டடங்களிலிருந்து விசேட அதிரடிப்படையினர் அதிரடியாக வெளியேறிச்சென்றுள்ளனர்.
சிறீலங்காவின் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலும் ஆனந்தன் எம்.பி, விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றி பூவரசு ஆரம்ப பாடசாலையின் கல்வி அபிவிருத்தி, வளஅபிவிருத்தி உட்பட பல்வேறு விடையங்களை செயல்படுத்துமாறு பாராளுமன்றத்திலும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். கல்விச்சமுகமும், பூவரசங்குளம் மக்களும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டமையால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள பாடசாலையின் கல்வி சமுகத்தினர் இன்று காலை அங்கு சென்று, பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். ஆனந்தன் எம்.பியும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனந்தன் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,
இதேபோன்று இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து அரச, தனியார் காணிகள் கட்டடங்களிலிருந்தும் இராணுவத்தினரை வெளியேற்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு புதிய அரசு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விசேட அதிரடிப்படையினர் பாடசாலை காணி கட்டடங்களை விட்டு வெளியேறும் போது, அங்கிருந்த கட்டடங்களின் கூரை ஓடுகள், கூரைத்தகடுகள், தீராந்திகளை கழற்றி கொண்டு சென்றுள்ளதையும் காண முடிந்ததாகவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் நந்தமித்ர என்ற பெயரில் புதிய கிராமமொன்றை அமைத்துள்ள இராணுவத்தினர் அதனை மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த கிராமத்தை ஓய்வுபெற்றுச் சென்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து, தெரிவுசெய்யப்பட்ட மக்களிடம் கையளித்துள்ளார்.
329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த நந்தமித்ர கிராமம், சிங்கள பௌத்த மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான துட்டகெமுனு மன்னனின் பத்து இராணுவத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த ஒருவரான நந்தமித்ர என்பரை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நந்தமித்ர என்ற துட்டகெமுனு மன்னனின் இராணுவத் தளபதி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா பிரதேசத்திலேயே வாழ்ந்ததாகவும் கூறும் இராணுவம், அதனாலேயே இந்தக் கிராமத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்தக் கிராமத்தின் வாயிலில் நந்தமித்திரவின் பிரமாண்டமான உருவச் சிலையொன்றையும் இராணுவத்தினர் நிர்மாணித்துள்ளனர்.
அத்துடன் இந்தக் கிராமத்தில் யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
329 வீடுகளில் நூறு வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவையும் விரைவில் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. பாடசாலை, நூலகம், விளையாட்டு மைதானம், மருந்தகம், விகாரை உட்பட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்தார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது.
பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
அனைவரையும் மெய்மறக்கச் செய்த ஸ்பூர்த்தி மக்கள் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை வென்றுள்ளார்.
இதில் ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா இரண்டாவது இடத்தை பெற்று 1 கிலோ தங்கத்தையும், ஹரிபிரியா மூன்றாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பரிசாக வென்றனர்.
வெற்றிபெற்ற அனைவர்க்கும் உலகத் தமிழர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.