வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் பழையமாணவர் சங்க யாப்பு தொடர்பான திருத்தங்களும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது .
வவுனியா கோயில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கென தயாரிக்கப்பட்ட யாப்பின் வரைபினை இத்துடன் இணைத்துள்ளோம்.(யாப்பை பார்வையிட ) இதனை நன்கு ஆராய்ந்து ஏனைய நண்பர்களுடனும் பகிர்ந்து செய்ய வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வரும் பொதுக்கூட்டத்திற்குமுன் அறியத்தருமாறு தயவன்புடன் வேண்டிநிற்கின்றோம். கூட்டத்திற்கும் தவறாது சமூகம் தரவும்.வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கென தயாரிக்கப்பட்ட யாப்பினை ஆராய்ந்து அங்கீகரிப்பதற்கும்,புதிய யாப்பிற்கமைவாக நிர்வாகசபைக்குரிய மேலதிக உறுப்பினர்களை தெரிவுசெய்வதும் முக்கிய அம்சங்களாகும் .
மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திர தின வைபவத்தில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் வடமாகாண முதலமைச்சர் கூறினார்.
அதேவேளை, ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களால் பார்க்கக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக ஜனாதிபதியின் தலைமையில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடற்படைத் தளபதி மற்றும், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர், உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட உயர் மட்ட கூட்டத்தில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை பாக் நீரிணையில் இரு நாட்டு அரசாங்கங்களும் தடை செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆலோசனை கூறியுள்ளார்.
இழுவைப்படகில் மீன்பிடிப்பவர்களை அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற் பரப்புக்களில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என்றம், அவ்வாறு செய்வதன் மூலம், இருநாட்டு மீனவர்களும் பாக் நீரிணையில் தமது பாரம்பரிய கடற்தொழிலை எதுவித பாதிப்புகளும் பிரச்சினையுமின்றி மேற்கொள்ளலாம் என தான் இந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த யோசனையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடமாகாண ஆளுனர் பலிஹக்கார ஆகியோர் வரவேற்றுள்ளதாகவும், இந்த யோசனையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என வடமாகாணா ஆளுனர் குறிப்பிட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதையடுத்து, இந்தியப் பிரதமருடன் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கு வசதியாக விபரங்களைக் கேட்டறியும் வகையில் இந்த உயர் மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது, என அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலவாய் கிராம சேவைப்பிரிவு J/284க்கு சொந்தமான 220 ஏக்கர் காணி மீள கையளிக்கப்படும்.
இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் என 1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும் எனவும் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் எனவும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர்,
மிகுதி 780 ஏக்கர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை இராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றது. தற்போதுள்ள 6152 ஏக்கர் நிலத்திலிருந்தே குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்கென 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை – கிழக்கு மாகாணத்தில் விமானப்படை உயர்பாதுகாப்பு வலயமான பானம பிரதேசத்தில் தற்போது கட்டிடங்கள் நிர்மானிக்கப்படுகின்ற 25 ஏக்கர் நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தவிர்ந்த சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு கீழ் உள்ளன.
எனவே அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இப்பிரதேச மக்களதும் நிலங்களை வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் தேவையற்ற விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்து அக்காணிகளை அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு மீளக் கையளிப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதி அளித்திருந்தனர்.
அதற்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தின் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் 1000 ஏக்கர்களால் குறைக்கப்படவுள்ளது
அமெரிக்காவில் உள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த கல்யாண ரணசிங்க ஆவார். ஓராண்டு காலத்திற்கு முன்னதாக கல்யாண ரணசிங்க திடீர் விபத்தொன்றில் உயிரிழந்தார்.
குறித்த வீதிக்கு கல்யாண ரணசிங்க என பெயரிடப்பட்டுள்ளதாக குறித்த நகரின் மேயர் பில் டி பிலேசியோ, ரணசிங்கவின் மனைவி தம்மிக்கா கன்னங்கர மற்றும் மகள் திமுது ரணசிங்க ஆகியோரிடம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்த இலங்கையர் ஒருவரின் பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட முதலாவது வீதி இதுவென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஜந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக ஹற்றன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண்ணை குறித்த மதுபான நிலையத்திற்கு மறைவாக கொண்டு சென்றதாகவும் இவர்களை கைது செய்யும் வேளையில் இவர்கள் அதிகமான போதை நிலைமையில் இருந்ததாகவும் ஹற்றன் பொலிசார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை ஒரு புனிததலம் எனவும் அங்கு செல்லும் யாத்திரைகள் போதை நிலைமையில் செல்லக் கூடாது எனவும் மதுபானம் மற்றும் ஏனைய போதை பொருட்களை கொண்டு செல்லுதல் சட்டவிரோதம் எனவும் யாத்திரைகள் அமைதியாக, பக்தியான நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டும் என பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.
கைது செய்த ஜந்து இளைஞர்களையும் ஒரு யுவதியையும் வைத்திய பரிசோதனையின் பின் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதாக ஹற்றன் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இவர்களை கைது செய்யும் போது கைது செய்ய வேண்டாம் எனவும் இச்சம்பவத்தை மறைக்குமாறும் கைது செய்யப்பட்டவர்கள் வேண்டுக்கோள் விடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எத்தகைய வலியையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
காயத்தால் அவதிப்பட்டு வந்த மலிங்க கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போட்டிகளில் ஏதும் கலந்து கொள்ளவில்லை. பல மாத இடைவெளியின் பின்னர் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடர் பற்றி மலிங்க கூறுகையில், எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத் தொடரின், முதலாவது போட்டியில் எமது அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.
அந்தப் போட்டியில் விளையாடும் அளவிற்கு நான் உடல் தகுதி பெற்றுள்ளேன். என்னால் எவ்வளவு தூரம் வேகமாக பந்து வீச முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், சீரான முறையில் பந்து வீசி அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
டெங்கு ஒழிப்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை வவுனியா சந்தைப் பகுதியில் தெருவோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய போது அப் பகுதியில் மரக்கறி கொள்வனவில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தனது கையடக்க தொலைபேசியில் அதனை புகைப்படம் எடுக்க முற்பட்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாடு பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.
இந் நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார் விடுதலை செய்து நகரசபை ஊழியர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையை கண்டித்தும், பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் இன்றி 12 மணிநேரம் தடுத்து வைத்திருந்தமை, நகரசபை ஊழியர்களை அச்சுறுத்தியமை, நியாயம் கேட்டு வந்த அரச உத்தியோகத்தர்களை அவமதித்தமை மற்றும் குறித்த இளைஞனை விசாரணை இன்றி விடுவித்தமை என்ற காரணங்களை முன்வைத்து காலவரையறையற்ற உண்ணா விரதப்போராட்டத்தில் நேற்று காலை முதல் வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து இன்றைய தினம் நகரசபைக்கு சென்ற வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் பக்கச் சார்பின்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நகரசபையினா் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நகரசபையின் செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் பொலிசார் உதவிகளை செய்து வந்ததைப் போன்று இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்ததுடன் போராட்டத்தை கைவிடுமாறும் கோரியிருந்தார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தன்னுடன் காதல் தொடர்பு வைத்துள்ள 13 வயது சிறுமியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை முச்சக்கரவண்டியில் தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று சந்தேகநபர் இவ்வாறு பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனது நான்கு வயது மகனை கத்தியால் குத்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெயங்கொட – தடகமுவ பகுதியில் இன்று (12.02) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக் குத்துக்கு இலக்கான நான்கு வயது சிறுவன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 31 வயதுடைய தாயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த மற்றுமொரு சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலைகள் தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து சர்வதேச விசாரணை அவசியம் எனவும், வடமாகாண சபையில் நேற்று பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தினரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக, தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது என, இது குறித்து கருத்து வௌியிட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வட மாகாணத்தின் இவ்வாறான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன.
இதில் கிரிக்கெட் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் பிரபலங்களின் பேச்சு, இசைமழை, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.
ஆரம்பவிழா ஒருநாள் முன்னதாக இன்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரிலும் இலங்கைநேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் ஜாம்பவான்கள் கலந்து கொள்கின்றனர்.
முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து தொடக்க விழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொப் பாடகிகளான ஜெசிகா மௌபோய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நியூசிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்களான ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பூகம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காண்பிக்கப்படுகிறது.
நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இறுதியில் கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது . போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், 8,25,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில் சனிக்கிழமை இடம்பெறும் இரு போட்டிகளில் ஒரு போட்டியான நியூசிலாந்து, இலங்கை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதேபோல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்குரிய டிக்கெட்டுகள், கடந்த ஆண்டு விற்பனை தொடங்கிய 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சாள்ஸ் விளையாட்டு கழகத்தின் அணிக்கு ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் கிரிகெட்போட்டி வருகின்ற 14/02/2015 மற்றும் 15/02/2015 திகதிகளில் வவுனியா நகர சபை மைதானத்தில் புதுமை digital image நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுகிறது .
அணிக்கு ஆறுபேர் ஐந்து ஓவர்களை கொண்ட இந்த போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூபா .600.00 ஆகும் . எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டு கழகங்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கழகங்களை பதிந்து கொள்ளமுடியும் .
வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக நடந்து கொண்டதாகவும் நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சந்தை அமைந்துள்ள நகர பகுதிகளில் நகரசபை அனுமதியின்றி வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றியுள்ளனர். இதன் போது அப் பகுதியில் மரக்கறிகளை கொள்வனவு செய்த இளைஞன் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் அச் சம்பவங்களை படம்பிடித்துள்ளார்.
இதன் போது இருபகுதியினருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞனை நகரசபை வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இருவரதும் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.
இதன் போது நகரசபையினரால் தான் தாக்கப்பட்டதாக இளைஞன் முறைப்பாடு செய்ததையடுத்து தாக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் தாக்குதல் நடத்தியமை மற்றும் இளைஞனை பிடித்து தமது வாகனத்தில் ஏற்றி கொண்டுவந்தமை தொடர்பில் நகரசபை உத்தியோகத்தர்கள் ஆறு பேரை கைது செய்து தடுத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 12 மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பொலிசாரின் இச் செயற்பாட்டை கண்டித்தே நகரசபையினர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த நகரசபை உத்தியோகத்தர்களை கடமையை செய்யவிடாது சட்டவிரோதமாக கைது செய்தமை, 12 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக உணவு, நீரின்றி தடுத்து வைத்திருந்தமை, கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காது விடுவித்தமை, உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியமை மற்றும் அவதித்மை என தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சுலோக அட்டைகளை ஏந்தியுள்ளனர்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாக்குதலுக்குள்ளான இளைஞன் இன்று வீடு திரும்பியுள்ளார்.
இவ் கவனயீர்ப்பு போராட்டதிற்கு ஆதராவாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் திரு. தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் திரு.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா வர்த்தக சங்க தலைவர் ராஜேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தியேக செயலாளர் திரு.சத்தியசீலன், வரியிறுப்பாளர் சங்க தலைவர் திரு.சந்திரகுமார், தமிழ் தேசிய இளைஞர் கழக பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தியேக செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்கள் வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரன் உடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியிருந்தார்.
அதனைதொடர்ந்து முதலமைச்சர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தி யேக செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்களிடம் எடுத்துரைத்தார்.
எனினும் தொடர்ந்து நாளைய தினமும் போராட்டம் நடைபெறும் என நகரசபை ஊழியர்கள் தெரிவித்தார்.
இலங்கை – சிம்பாப்வே அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட் சட்கில்பி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டி யில் இலங்கை – சிம்பாப்வே அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன் படி களமிறங்கிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணிசார்பாக கருணாரத்ன 58 ஒட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
சிம்பாப்வே அணி சார்பாக பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிங்கிய சிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது.
சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை 45.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
சிம்பாப்வே அணி சார்பாக மசஹட்ஸா ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை டெய்லர் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
வவுனியா பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்றுமுதல்(11.02) கால வரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த நகர சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் தொடர்பாக, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நகர சபை ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘கடந்த 9ஆம் திகதி நாங்கள் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டபோது, வீதியோர மரக்கறி வியாபாரிகளை அகற்றினோம். இதன்போது தனிநபரொருவர் அதனை புகைப்படமெடுத்தார்.
இது தொடர்பாக நாங்கள் விளக்கம் கோரியபோது, புகைப்படமெடுத்தவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இதனால் குறித்த நபரை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.
ஆனால், குறித்த நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வவுனியா பொலிஸார் அதற்கு மாறாக சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சென்ற எங்களை முற்பகல் 11 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் கூட வழங்காது தடுத்து வைத்திருந்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில் சந்தேகநபரை விடுவித்து, நகர சபை ஊழியர்களை தடுத்து வைத்திருந்த வவுனியா பொலிஸாரை கண்டித்தும் குறித்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.
நகரசபை ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவமதித்தமை, கடமைகளை செய்யவிடாமல் தடுத்தமை, 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் நீராகாரமுமின்றி தடுத்து வைத்திருந்தமை, சந்தேகநபரை விசாரணையின்றி விடுவித்தமை ஆகிய ஐந்து விடயங்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பிரிவினரும் கலந்துகொண்டுள்ளனர்.